வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

March 6, 2015

நியூட்ரீனோ (Neutrino) என்னும் பிசாசு - பகுதி 5




நியூட்ரீனோக்களைக் கைப்பற்றுவது சாத்தியமேயில்லாத ஒன்றாக இருக்கும்போது, அதை எப்படித் தமிழ்நாட்டில் ஆய்வகம் அமைத்துக் கைப்பற்றப் போகிறார்கள்? என்ற கேள்வி இப்போது நமக்கு வருகிறது. அல்ஃபா செண்டௌரி நட்சத்திரம் செல்லும் தூர அளவு ஈயத்துக்கு நாம் எங்கே போவது? ஆனாலும், நியூட்ரீனோக்களைக் கைப்பற்றுவதென்றில்லாமல், அவற்றைக் கண்டுகொள்ளச் சில வழிகள் உண்டு. அதற்கு அடர்த்தியான பாறைகளுள்ள மலைகள் வேண்டும். அதுவும் மிகப்பழமையானதும், அடர்த்தியுள்ளதுமான, ‘சார்னோக்கைட்’ (Charnockite) கனிமவகைக் கற்களையுடைய மலைகளே நியூட்ரீனோக்களைக் கண்டுகொள்ளத் தேவையானவை. அந்த வகைக் கனிமம் உள்ள மலைகளின் கீழே ஒரு கிலோமீட்டருக்கு அதிகமான ஆழத்தில் சுரங்கங்கள் அமைத்து, அங்கு நியூட்ரீனோக்களை இனம் காணும் கருவிகளைப் பொருத்த வேண்டும். "அதுசரி, மலைகள் இங்கெதற்கு, சாதாரண நிலத்தின் கீழ் ஏன் சுரங்கம் அமைக்கக் கூடாது?" என்று நீங்கள் கேட்கலாம். சொல்கிறேன்.

பூமியின் மேல்பகுதியில் நியூட்ரீனோக்கள் பற்றிய ஆராய்ச்சிகளைச் செய்யலாம். அதிலொன்றும் சிரமமில்லை. ஆனால், விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் காஸ்மிக் கதிர்களையும், நியூட்ரீனோக்களையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. நியூட்ரீனோக்கள் சென்று கொண்டிருக்கும்போது, அவற்றை இனம்காணும் கருவிகள், காஸ்மிக் கதிர்களையும் சேர்த்தே இனம் கண்டுகொள்கின்றன. அதனால் காஸ்மிக் கதிர்களையும், வேறு பல கதிர்களையும் முதலில் வடிகட்டிப் பிரிக்க வேண்டும். அதற்குத்தான் நமக்கு அந்தக் கனிமவகை மலைகள் தேவைப்படுகின்றன. இந்தக் கனிமவகைப் பாறைகள், நியூட்ரீனோக்களுடன் சேர்ந்து பயணம் செய்யும் காஸ்மிக் கதிர்கள் உட்பட அனைத்துக் கதிர்களையும் ஊடறுத்துச் செல்ல விடாமல் தடுத்துவிடும். நம்ம கதாநாயகன் நியூட்ரீனோதான் பெரும் வீரனாச்சே! (அதனால்தான் அவன் இவர்களுக்குத் தேவைப்படுகிறானா?). அவனை இந்த மலைகளால் தடுக்க முடியாது. அதனால், மலைகளையும் ஊடுருவிக்கொண்டு சுரங்கப்பாதைக்குள் நுழைவான். அங்கு அவனைக் கண்டுகொள்ளும் பொறிகளுடன் விஞ்ஞானிகள் காத்திருப்பார்கள். அந்தப் பொறிகள் என்ன விதமானவை என்பதைப் பின்னர் சொல்கிறேன்.

சார்னோக்கைட் வகை விசேசமான பாறைகளுள்ள மலைகள் எங்கேயிருக்கின்றன என்று தேடிப் பார்த்ததில் அது தேனி மாவட்டத்தில் இருக்கும் பொட்டிபுரம் கிராமத்தில் இருப்பதாகக் கணித்திருக்கிறார்கள். ஆனால், 'இவை தமிழ்நாட்டிலுள்ள் பொட்டிபுரத்தில்தான் இருக்கிறதா அல்லது இந்தியாவின் வேறு இடங்களிலும் இருக்கிறதா?' என்று பார்த்தால், இதுபோன்று வேறு பல மலைகள் இந்தியாவில் இருக்கின்றன என்றே தெரியவருகிறது. அப்புறம் ஏன் தேனி? மற்ற இடங்கள் ஏன் தேர்வில்லை? என்னும் கேள்விகளுக்கு என்னிடம் பதிலில்லை. அது அரசியல் சார்ந்தது. அரசியல் சார்ந்து நான் எதுவும் பேசப் போவதில்லையென்று முன்னரே சொல்லியிருக்கிறேன். ஆனாலும், அரசியல் சாராமல் சில தகவல்களைச் சொல்லிவிடுகிறேன்.

ஒரு மலையின் கீழ், ஒரு கிலோமீட்டருக்கு அதிகமான ஆழத்தில் சுரங்கம் அமைத்து அங்கு நியூட்ரீனோவை கண்டுகொள்ளும் டிடெக்டர்களை அமைக்க வேண்டுமென்றால், சில ஆயிரம் தொன்களுடைய பாறைகள் வெடிவைத்து உடைத்தெறியப்பட வேண்டும். நியூட்ரீனோவைக் கண்டறியும் ஆய்வகம் ஒரு கிலோமீட்டருக்கு (அல்லது இரண்டு) அதிகமான பரப்பளவைக் கொண்டதாக இருக்க வேண்டும். இவையெல்லாம் பொட்டிபுரத்தில் சாத்தியமா, இல்லையா? என்று சத்தியமாக எனக்குத் தெரியாது. பொட்டிபுரம் என்னும் ஊரைப் பற்றியும் தெரியாது. அதிகம் ஏன், தேனி என்பதையே பாரதிராஜா பிறந்த ஊர் என்ற வகையில்தான் நான் முதலில் அறிந்து கொண்டேன்.

இந்தத் தொடரின் இரண்டாவது பகுதியில், தம்பி சதீஷ் (Sathish Boju) இட்ட கமெண்டில், பொட்டிபுரம் தன்னுடைய கிராமம் என்று சொல்லியிருந்தார். அவரிடம்தான் நான் கேட்டறிய வேண்டும்.

- தொடரும்




No comments:

Post a Comment