வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

March 29, 2015

பேரண்ட விரிவின் பேராச்சரியங்கள் - பகுதி 3

முன்னுரை:

'விகடன் இயர் புக் 2015’ (Vikatan Yearbook 2015) இல் வெளிவந்த இந்தக் கட்டுரை, கருந்துகள் (Dark Matter), கருஞ்சக்தி (Dark Energy) ஆகிய இரண்டையும் விரிவாக எடுத்துச் சொல்வதற்காக எழுதப்பட்டது. இவை இரண்டைப்பற்றியும் ஆரம்பத்திலிருந்து முழுமையாகப் புரிய வைக்க வேண்டுமென்பதனால், நான் முன்னரே பல கட்டுரைகளில் சொன்ன தகவல்களும் இதில் அடங்கியிருக்கின்றன. அதனால், 'ஏற்கனவே இதைப் படித்திருக்கிறேன்' என்ற உணர்வு உங்களுக்கு இடையிடை தோன்றலாம். ஆனால் கட்டுரையின் முழுமை கருதியே அவை இடம்பெறுகின்றன. மேலும், இந்தக் கட்டுரை மிக நீண்டதொரு கட்டுரை. அதை நீங்கள் தொடர்ச்சியாகப் படிப்பதற்குச் சிரமம் இருக்குமென்பதால், மூன்று பகுதிகளாகப் பிரித்து இங்கு பதிவிடுகிறேன். நன்றி.

-ராஜ்சிவா-


பேரண்ட விரிவின் பேராச்சரியங்கள் - பகுதி 3




ஆரம்பப் பெருவெடிப்பின் பின்னர் அண்டத்தில் நடைபெற்ற காட்சிகளையெல்லாம் நம்மால் இப்போதும் பார்க்கக் கூடியதாகவே இருக்கின்றது. பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததையெல்லாம் நம்மால் மீண்டும் பார்க்க முடியும். "என்ன, அவைதான் நடந்து முடிந்து போனவையாயிற்றே! இறந்த காலத்தை நம்மால் எப்படிக் காண முடியும்?" என்று நீங்கள் சிந்திப்பது புரிகிறது. ஆனால் நிஜத்தில் எப்போதும் நாம், 'நிகழ்காலத்தில் நின்றுகொண்டு, இறந்தகாலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்'. இறந்தகாலத்தை நோக்கி நம்மால் நகர முடிவதில்லையேயொழிய, நம் இரண்டு கண்களாலும் அதைப் பார்க்க முடியும். இப்போது நீங்கள் ரொம்பக் குழம்பிப் போயிருப்பீர்கள். அதனால், இதைக் கொஞ்சம் விரிவாகவே நாம் பார்க்கலாம். உங்கள் நண்பனிடம் "உன் வெற்றுக் கண்களால் உன்னால் எவ்வளவு தூரம் பார்க்க முடியும்?" என்று கேட்டுப் பாருங்கள். அவன் ஒரு குறித்த அளவுத் தூரத்தை, அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக் காட்டிப் பதில் சொல்வான். அந்தப் பதில் சரியானது போலவும் உங்களுக்குத் தோன்றும். ஆனால், உண்மையில் நம் கண்களால் நாம் எவ்வளவு தூரத்தில் உள்ள பொருட்களைப் பார்க்கிறோம் தெரியுமா? பல பில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களையெல்லாம் நம் கண்களால் பார்க்கிறோம். சூரியன் தவிர்ந்து, நமக்கு மிக அருகாமையில் இருப்பது 'அல்பா செண்டாரி A', 'அல்பா செண்டாரி B' என்னும் இரட்டை நட்சத்திரங்கள். இவை பூமியிலிருந்து 4.3 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கின்றன. அதற்கு அப்புரம் 25 ஒளியாண்டுகள், ஐம்பது ஒளியாண்டுகள், நூறு ஒளியாண்டுகள் தூரத்திலெல்லாம் நட்சத்திரங்கள் இருக்கின்றன. பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள காலக்ஸிகளும் நம் கண்களுக்குத் தெரிகின்றன. ஒளியானது ஒரு நொடிக்கு 3 இலட்சம் கிலோமீட்டர்கள் பயணம் செய்யக் கூடியது. அப்படியென்றால், ஒளி ஒரு ஆண்டுக்கு எத்தனை கிலோமீட்டர்கள் பயணம் செய்யும் என்பதை நாம் கணிப்பிடலாம். கணக்கிட்டு வருவது எத்தனை கிலோமீட்டர்களோ அதுவே ஒரு ஒளியாண்டுத் தூரம் ஆகும். இப்போது, பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் காலக்ஸிகள் எத்தனை கிலோமீட்டர்களாக இருக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இதை இப்படியும் பார்க்கலாம். நான்கு ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் நட்சத்திரத்திலிருந்து, ஒளி நம் கண்களை வந்தடைய வேண்டுமென்றால், நான்கு ஆண்டுகள் தேவை. அதாவது அந்த நட்சத்திரம் தெரிய ஆரம்பித்து நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் நம் கண்களுக்குத் தெரியும். தற்போது நீங்கள் ஒரு நட்சத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால், அந்த நட்சத்திரம் 25 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்குமானால், நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது 25 வருடத்துக்கு முன்னால் இருந்த நட்சத்திரத்தை. இன்று உள்ள நட்சத்திரத்தை அல்ல. அதாவது 25 வருடத்தின் முன்னரான இறந்த காலத்தையே அந்த நட்சத்திரத்தில் காண்கிறீர்கள். அப்படிப் பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள காலக்ஸியொன்று உங்கள் கண்களுக்குத் தெரிந்தால், நீங்கள் பில்லியன் வருடத்துக்கு முன்னால் உள்ள இறந்த காலத்தைப் பார்க்கிறீர்கள். இப்போது அந்த நட்சத்திரம் அங்கு இருக்கிறதா? அல்லது வெடித்துச் சிதறிவிட்டதா? என்று கூட உங்களுக்குத் தெரியாது. இப்போ புரிகிறதா, நீங்கள் நிகழ்காலத்தில் நின்று கொண்டு இறந்தகாலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று. நமது சூரியன் கூட எட்டேகால் நிமிடங்களின் பின்னர்தான் நம் கண்களுக்குத் தெரிகிறது. நாம் பார்க்கும்போது தெரியும் சூரியன், எட்டேகால் நிமிடங்களுக்கு முன்னரான சூரியன். சூரியனிலிருந்து ஒளி நம்மை வந்தடைய எட்டேகால் நிமிடங்கள் ஆகிறது. நாம் பார்க்கும் அனைத்தும் இப்படித்தான். ஒரு மீட்டர் தூரத்தில் இருக்கும் உங்கள் மனைவியைக் கூட, நானோ செக்கன்கள் இடைவெளிகளின் பின்னர்தான் பார்க்கிறீர்கள். அதே கணத்திலல்ல. நம் கண்களால் பார்ப்பவை எல்லாமே இறந்தகாலம்தான். இதன்படி பார்த்தால், மனிதன் கண்டுபிடித்த தொலைநோக்கிக் கருவிகள்தான், உலகின் முதன்முதலான 'கால இயந்திரம்' (Time Machine) என்று சொல்லலாம். இன்று கண்டுபிடிக்கப்பட்ட நவீன தொலைநோக்கிக் கருவிகளின் தொழில்நுட்பம் வார்தைகளால் விவரிக்க முடியாதது. அப்படிப்பட்ட தொலைநோக்கிக் கருவிகளில் சிலவற்றை விண்வெளிகளில் கூட மிதக்கவிட்டுள்ளார்கள். பூமியின் அட்மாஸ்பியர் என்னும் வளிமண்டலத்தின் வெப்பக்கதிர்த் தடைகள் ஏதும் இல்லாமல் வானிலையை ஆராய்ச்சி செய்வதற்கு இது உதவுகின்றது. இந்தத் தொலைநோக்கிக் கருவிகள்மூலம், பெருவெடிப்பிற்கு 480 மில்லியன் வருடத்தின் பின்னுள்ள 'குழந்தை அண்டத்தைப்' (Baby Universe) புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. அதாவது 13 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த அண்டங்களைக் கூட நம்மால் பார்க்க முடிகிறது. யாருக்குத் தெரியும், பெருவெடிப்பின் கணத்தையும் மனிதன் ஒருநாள் பார்த்தாலும் பார்க்கலாம். ஆனால் இன்றுள்ள சூழ்நிலையில் அதைப் பார்க்கவே முடியாது. நவீன தொலைநோக்கிக் கருவிகள்மூலம் பெருவெடிப்பின் விரிவு நடந்த காலங்களைப் படிப்படியாக ஆராய்ந்து கொண்டு வந்த போதுதான் அந்த ஆச்சரியத்தை விஞ்ஞானிகள் கண்டுகொண்டனர். 



பெருவெடிப்பின் பின்னர் உருவான கோடிக்கணக்கான காலக்ஸிகளெல்லாம் அண்டத்தின் விரிவால் விலகிச் சென்ற போதும், காலக்ஸிகளுக்குள் இருக்கும் நட்சத்திரங்களும், கோள்களும் தமக்குள் விலகாமல், ஒரு ஈர்ப்புவிசையுடன் பிணைக்கப்பட்டு. ஒன்றாகவே இருந்து வந்தன. அப்படியொரு விலகல் ஏற்படுமேயானால், பூமி எப்போதோ சூரியனை விட்டு விலகிச் சென்றிருக்கும், அல்லது சூரியன் வேறு நட்சத்திரத்துடன் மோதியிருக்கும். ஆனால், ஒவ்வொரு காலக்ஸியையும் ஒன்றாக இணைத்தும், அதை விண்வெளியுடன் சேர்த்தும், ஏதோ ஒரு சக்தி வைத்திருப்பதை விஞ்ஞானிகள் அவதானித்தனர். அந்தச் சக்தி எதுவென்றே ஆரம்பத்தில் தெரியவில்லை. ஆனால் கண்ணுக்குத் தெரியாத கருமையான ஒரு சக்தியாகவே, அந்தச் சக்தி இருப்பது மட்டும் புரிந்தது. இந்த நேரத்தில்தான் ஐன்ஸ்டைன் கண்டுபிடித்துச் சொல்லிய ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்கு உதவியது. விண்வெளியில் இருப்பவைகளின் ஈர்ப்புவிசையின் பலத்தினால், ஒளிகூட வளையும் என்று சொல்லியிருந்தார். இதைக் 'ஈர்ப்பு வில்லை' (Gravitational Lensing) என்பார்கள். இதை வைத்துக் கொண்டு விண்வெளியை ஆராய்ந்தபோது, கறுப்பு நிறத்திலான ஏதோ ஒன்று காலக்ஸிகளை ஒன்று சேர்த்து வைத்திருப்பதைக் கண்டு கொண்டார்கள். அந்தக் கருப்பு நிறப்பொருளையே 'கரும்பொருள்' (Dark Matter) என்று பெயரிட்டு அழைக்கின்றனர். பேரண்டம் முழுவதும் 23% அளவில் இந்தக் கருப்பு சக்தி பரவியிருப்பதை இப்போது கணித்திருக்கிறார்கள். வாயகன்ற ஒரு பாத்திரத்தில் மோட்டார் வாகனத்துக்குப் பயன்படுத்தும் டீசல் எண்ணெய்யை ஊற்றிவிட்டு, அதன் மேற்பரப்பில் மரத்தூளை நீங்கள் தூவினால், எப்படிக் கருத்த டீசல் எண்ணெய் அந்த மரத்தூள்களை சேர்த்து வைத்திருக்கிறதோ, அப்படிக் கரும்பொருளும், காலக்ஸிகளை தன்னுடன் இழுத்து வைத்தபடி இருக்கின்றது. நவீன தொலைநோக்கிகள்மூலம் அவதானித்தபோது, பெருவெடிப்பின் பின், இந்த டார்க் மாட்டரானது காலக்ஸிகளை ஒன்றாக இழுத்து வைத்து அண்டத்தைச் சீராக விரிவடையச் செய்துகொண்டிருந்தது. ஆனால், இந்தச் சீரான விரிவு 9 பில்லியன் ஆண்டுகள் வரைதான் இருந்தது. அதன் பின்னர் நடந்தது இன்னுமொரு பேராச்சரியம்.



விண்வெளி விரிவதை ஆராய்ந்து கொண்டிருந்த விஞ்ஞானிகள் பெரும் ஆச்சரியத்தைத் திடீரெனக் கண்டுகொண்டார்கள். அண்டத்தின் எல்லையில் உள்ள காலக்ஸிகள் சிலவற்றில் காணப்பட்ட சுப்பர்நோவா நட்சத்திரங்களுக்கிடையேயுள்ள தூரங்களை அளந்து எடுத்துக் கொண்டார்கள். அவற்றைக் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் அளந்து கொண்டு வந்தபோது, அந்த ஆச்சரியம் உறுதிசெய்யப்பட்டது. அதாவது, பேரண்டமானது ஒரு குறித்த வேகத்தில் விரிவடைவதற்குப் பதிலாக வேகவளர்ச்சியுடன் (Acceleration) கூடிய மிகை வேகத்துடன் விரிந்து கொண்டே போய்க்கொண்டிருக்கிறது. ஒரு பந்தை, வானத்தை நோக்கி எறிந்தால், அந்தப் பந்தின் வேகம் படிப்படியாகக் குறைந்து பூச்சியமாக வேண்டுமல்லவா? அதற்கு மாறாக, அந்தப் பந்து மேலும் மேலும் வேகவளர்ச்சியடைந்து மேல் நோக்கிச் சென்று கொண்டேயிருப்பது நம்பமுடியாத ஒன்றல்லவா? தொலைநோக்கிக் கருவிகள்மூலம் இதை ஆராய்ந்து பார்த்தபோது, கடந்த நான்கு பில்லியன் வருடங்களாகத் திடீரென இந்த வேகவளர்ச்சி அண்டத்தில் ஏற்பட்டிருப்பது தெரிந்தது. அது எப்படி? எது இந்த வேக வளர்ச்சியைக் கொடுக்கிறது? 'டார்க் மாட்டர்' காலக்ஸிகளை ஒன்றாக இழுத்து வைத்துக் கொண்டிருக்கும்போது, இன்னுமொரு சக்தி அவற்றை வேகவளர்ச்சியுடன் விலகச் செய்கிறதே! இந்த ஆச்சரியத்துக்கு என்ன காரணம்? யாருக்குமே இன்றுவரை விடை தெரியாத மர்மம் இது. அண்டத்தை வேகமாக விரிவடையச் செய்யும் அந்தச் சக்தியைத்தான் 'கரும்சக்தி' (Dark Energy) என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்தக் கரும்சக்தி, அண்டம் எங்கும் பரவி, அண்டத்தை நினக்கவே முடியாத அளவு பெரிதாக்கி, முடிவிலியை நோக்கி விரிவடைந்து கொண்டேயிருக்கிறது. இந்தச் சக்தியின் விரிவும் ஒரு நாள் முடிவடைந்து மீண்டும் குறைவடையுமா? அல்லது மேலும் மேலும் விரிவடைந்து கொண்டு போய், ஒரு நிலையில் அந்த விரிவைத் தாங்க முடியாமல், அண்டம் மீண்டும் கட்டுடைந்து உறைந்து போகுமா? எதுவும் தெரியவில்லை. இப்படி விரிவடைந்து கொண்டு சென்று ஒருநாள் அதன் தாக்கம் தாங்க முடியாமல் உருக்குலைந்து போவதை, 'பெரும் குளிர்ச்சி' (Big Chill) என்கிறார்கள். நான் ஆரம்பத்தில் கூறிய பலூனின் முதல் நிலை இதுதான்.




கரும்பொருள், கரும்சக்தி ஆகிய இரண்டுமே இன்றைய விஞ்ஞானிகளுக்குச் சவால் விடும் இரண்டு சக்திகள், இதுவரை இவை எவையென மனிதனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதுவாக இருக்கலாம், இதுவாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் மட்டும்தான் உள்ளனவேயொழிய, உன்மையில் இவை என்னவென்று தெரியவே தெரியாது. இன்றுள்ள கணிப்பின்படி, அண்டம் முழுவதும் உள்ள நட்சத்திரங்கள், கோள்கள், காலக்ஸிகள், கருந்துளைகள், க்வேஸார்கள் இன்னபிற பொருட்களெல்லாம் சேர்ந்து, அண்டத்தின் 4% அளவும், கரும்பொருள் என்னும் டார்க் மாட்டர் 23% அளவும், கரும்சக்தி எனப்படும் டார்க் எனர்ஜி 73% ஆகக் காணப்படுகின்றன. கரும்சக்திதான் அதிகமாக அண்டம் முழுவதும் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது. 


இன்றைய அறிவியலின்படி கரும்சக்தியும், கரும்பொளும் இருக்கின்றன என்னும் முடிவுக்கு மட்டுதான் நாம் வந்திருக்கின்றோம். இவையிரண்டும் ஒன்றுக்கொன்று வேவ்வேறு எதிர்ச் செயல்களைச் செய்தாலும், இவை ஒன்றோடு ஒன்று தொடர்பானவையா? அல்லது வெவ்வேறானவையா? என்பது தெரியவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் சொல்லலாம். இந்துமதத்தின் சிவனும், சக்தியும் போல இவை இரண்டும் இருப்பது என்னவோ நிஜம். இவை இரண்டும் கருமையாக இருப்பது அந்த நினைப்புக்குகான இன்னுமொரு பலம். இதனால் நான் இந்துமதத்தை இங்கு வலியுறுத்துகிறேன் என்று யாரும் தப்பாக நினைத்துவிட வேண்டாம். இந்தச் சக்திகள்பற்றி ஏற்கனவே தெரிந்திருந்த நம் அறிவுள்ள மூதாதையர்கள், இதை ஏதோ வகையில் குறித்துச் சொல்லியிருக்க, நாம் அதை இந்த விதத்தில் அர்தப்படுத்தியும் இருக்கலாம். எது எப்பிடியிருந்தாலும், கண்களுக்குத் தெரியாத இந்த இரு மாயசக்திகளும் இந்தப் பேரண்டத்தையே வழிநடத்திச் செல்கின்றன என்பதுதான் தற்போதய நிஜம். இப்பகுதியுடன் இந்த கட்டுரை முற்றுபெறுகிறது.


-ராஜ்சிவா-


பேரண்ட விரிவின் பேராச்சரியங்கள் - பகுதி 2

முன்னுரை:

'விகடன் இயர் புக் 2015’ (Vikatan Yearbook 2015) இல் வெளிவந்த இந்தக் கட்டுரை, கருந்துகள் (Dark Matter), கருஞ்சக்தி (Dark Energy) ஆகிய இரண்டையும் விரிவாக எடுத்துச் சொல்வதற்காக எழுதப்பட்டது. இவை இரண்டைப்பற்றியும் ஆரம்பத்திலிருந்து முழுமையாகப் புரிய வைக்க வேண்டுமென்பதனால், நான் முன்னரே பல கட்டுரைகளில் சொன்ன தகவல்களும் இதில் அடங்கியிருக்கின்றன. அதனால், 'ஏற்கனவே இதைப் படித்திருக்கிறேன்' என்ற உணர்வு உங்களுக்கு இடையிடை தோன்றலாம். ஆனால் கட்டுரையின் முழுமை கருதியே அவை இடம்பெறுகின்றன. மேலும், இந்தக் கட்டுரை மிக நீண்டதொரு கட்டுரை. அதை நீங்கள் தொடர்ச்சியாகப் படிப்பதற்குச் சிரமம் இருக்குமென்பதால், மூன்று பகுதிகளாகப் பிரித்து இங்கு பதிவிடுகிறேன். நன்றி.

-ராஜ்சிவா-


பேரண்ட விரிவின் பேராச்சரியங்கள் - பகுதி 2



இயற்பியல் மற்றும் கணித விதிகளின்படி, மறுக்க முடியாத கோட்பாடுகளை (Theory) அமைத்து, தனக்கென ஒரு தனிவழியில் குவாண்டம் இயற்பியல் சென்றுகொண்டிருக்கிறது. குவாண்டம் இயற்பியல் நிறுவும் கோட்பாடுகள் அனைத்துமே மந்திரங்கள் நிறைந்ததொரு மாய உலகில் வசிப்பது போன்ற பிரமையையே நமக்கு ஏற்படுத்தும். நம்பவே முடியாத ஆச்சரியங்களும், வியப்புகளும், மர்மங்களும் நிறைந்தது குவாண்டம் உலகு. நாம் வாழ்வதாக நினைத்துக் கொண்டிருப்பதே, அண்டவெளியில் இருக்கும் கருந்துளைகளிலிருந்து வெளிவரும் ஹோலோகிராம் (Hologram) காட்சிகள்தான் என்கிறது குவாண்டம். அதுமட்டுமில்லை, 'யூனிவேர்ஸ்' (Universe) என்று சொல்லப்படும் 'ஒரே அண்டம்' என்று சொல்வதே தப்பு, நம் அண்டத்தைப் போலக் கோடிக்கணக்கான அண்டங்கள் உள்ளன என்கிறது குவாண்டம். அதனை 'மல்ட்டிவேர்ஸ்' (Multiverse) என்றும் அழைக்கிறது. சமுத்திரத்தில் உள்ள நீரில் எவ்வளவு நீர்க்குமிழிகள் இருக்கின்றனவோ, அதைவிட அதிக அளவில் அண்டங்கள் இருக்கின்றன என்கிறது. நம்முடைய அண்டத்தை அப்படியே காப்பியடித்தது போலப் பல அண்டங்களும் இருக்கின்றன என்கிறது. அந்த அண்டங்களிலும் நாம், இங்கு வாழ்வது போல, அங்கும் வாழ்ந்து கொண்டிருப்போம் என்கிறது. "என்ன இது சுத்தப் பேத்தலாக இருக்கிறது. இவர் ஏன் இப்படி உளறுகிறார்?" என்று நீங்கள் இப்போது நினைக்கலாம். ஆனால் இவை அனைத்தும் கணிதச் சமன்பாடுகளைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் கோட்பாடுகள். உலகில் உள்ள விஞ்ஞானிகளில் பெரும்பான்மையினர் ஏற்றுக் கொண்ட கோட்பாடுகள்தான் இவை. குவாண்டத்தின் முடிவுகள் ஒவ்வொன்றைப் பற்றியும் சொல்லும் போதும், அவை தனித்தனியே பிரமிக்க வைக்கும் மர்மக் கதைகள்போல இருக்கும். படிக்கப் படிக்கச் சுவாரஷ்யமாக இருக்கும். ஆனால், இந்தக் கட்டுரை குவாண்டம் பற்றிச் சொல்வதற்கானதல்ல. பிறிதொரு சமயத்தில் அதற்கான வாய்ப்புகள் அமையும் பட்சத்தில் குவாண்டம் பற்றி நாம் விரிவாகவே பார்க்கலாம். இப்போது, நம் கட்டுரைக்கான அளவுக்குக் குவாண்டம் என்ன சொன்னதோ அதை மட்டும் பார்த்துவிட்டு மேலே செல்வோம்.


குவார்க்குகளையும் பிரித்து, அதனுள் என்ன இருக்கின்றது என்ற ஒரு கோட்பாட்டைக் குவாண்டம் இயற்பியல் வெளியிட்டது. அந்தக் கோட்பாடுதான் மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்திய 'அதிர்விழைக் கோட்பாடு' (String Theory) ஆகும். அறிவியலையே தலைகீழாகப் புரட்டிப் போட்ட கோட்பாடு அது. அதன் தாக்கத்தை இன்றும் பல விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ள முடியாமல்தான் இருக்கிறது. இப்போது நாம் அதிர்விழைக் கோட்பாடுபற்றி முழுமையாகப் பார்க்காவிட்டாலும், அதன் அடிப்படையைப் பார்த்துவிடலாம். 'அதிர்விழைக் கோட்பாடு' என்ன சொல்கிறதென்றால், அணுவில் உள்ள மிகச் சிறிய குவார்க்கைப் பிரித்துப் பார்த்தால், பெரும்பாண்மையான பகுதி வெற்றிடமாக இருக்க, அதனிடையே மிகச்சிறிய இழைகள் அதிர்ந்தபடி (இசைத்தபடி) மிதந்து கொண்டிருக்கின்றன. அதாவது ஒரு வீணையின் தந்திக் கம்பிகள் அதிர்வது போல, மிக நுண்ணிய இழைகள் அங்கே அதிர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த 'அதிர்விழை' (String) மனிதனால் அளவிடவே முடியாத ஆகச்சிறிய அளவான 'பிளாங்க் அளவைக்' (Planck length) கொண்டது. ஒன்றுடன் 32 பூச்சியங்கள் சேர்த்தால் வரும் இலக்கத்தின் ஒரு பங்கு மில்லிமீட்டர்தான் ஒரு 'பிளாங்க் அளவு' என்கிறார்கள். அதாவது தசமப் புள்ளியுடன் 32 பூச்சியங்களைச் சேர்த்து வரும் எண் அது. 'மாக்ஸ் பிளாங்க்' (Max Planck) என்னும் ஜேர்மன் இயற்பியலாளரால் கண்டுபிடிக்கபட்ட ஒரு மாறிலி எண்தான் இந்த 'ப்ளாங்க் அளவு' என்று சொல்லப்படுகிறது. குவாண்டம் இயற்பியலின் செயற்பாடுகள் கூட இந்தச் சிறிய அளவீட்டுத் தளத்திலேயே ஆரம்பமாகின்றது. அண்டம் எந்த அளவுக்குப் பிரமாண்டமானதோ, அதற்கு எதிரான அளவில் குவாண்டம் மிக நுண்ணியது. ஆனால் ஆச்சரியமாக, அண்டத்தில் நட்சத்திரங்கள், கோள்கள், காலக்ஸிகள், கருந்துளைகள் எனக் கோடானகோடி பொருட்கள் இயங்குவது போல, அணுவுக்குள் குவாண்ட அளவில் கோடானகோடி உபஅணுத்துகள்கள் (Subatomic Particles) இயங்கிக் கொண்டிருக்கின்றன. சொல்லப் போனால், அணுவுக்குள்ளும் ஒரு அண்டம் இருக்கிறதாகச் சொல்கிறார்கள். "அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும்" என்று நம்முன்னோர்கள் இதைத்தான் சொன்னார்களோ தெரியவில்லை. குவாண்டம் சொல்வதைப் போல, அணுவுக்குள் இருப்பதெல்லாம் மிகமெல்லிய பிளாங்க் அளவுள்ள அதிர்விழைகள்தான் என்றால், பொருட்களோ, மனிதனோ என்று யாருமே இல்லை. எல்லாமே அதிர்விழைகள்தான். அதாவது எல்லாமே இசைதான். இந்தப் பூமியும், ஒட்டு மொத்த அண்டமும் அதிர்விழைகளால், இசையாக அதிர்ந்து கொண்டிருக்கின்றன. 'ஓம்' என்னும் பிரணவ மந்திரமே பிரபஞ்சம் முழுவதும் பரந்திருக்கிறது என்று இந்து மதம் சொல்வதும், 'முதலில் வார்த்தை இருந்தது' என்று பைபிள் சொல்வதும் இங்குப் பொருந்துகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளலாம். இங்கு நான் சொல்ல வருவது, அறிவியல், ஆன்மீகத்தை சிலசமயங்களில் தொட்டுச் செல்கிறது என்பதைச் சுட்டிக்காட்டத்தான். நம்முன்னோர்களுக்கு அறிவியலின் ஆழமான கருத்துகளை 'யாரோ' சொல்லிக் கொடுத்திருக்கின்றனர் என்பதைத்தான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அந்த 'யாரோ', யாரென்பதில்தான் அறிவியலும், ஆன்மீகமும் வேறுபட்டுக் கொள்கின்றன. இனி நாம் மீண்டும் ஆரம்பப் பெருவெடிப்புக்கு வரலாம். 





பெருவெடிப்பின் ஆரம்பப் புள்ளியானது குவார்க்குகளாக இருக்கலாம் என்று சொல்லியிருந்தேன். இப்போது குவாண்டம் இயற்பியலின்படி அது மேலும் நுண்ணியதான அதிர்விழைத் துண்டுகளாகவும் இருக்கலாம். அப்படியிருக்கலாமெனில், அந்தப் புள்ளியானது குண்டூசி முனையளவானதாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அப்ப்டியிருந்தாலும், அந்தப் புள்ளி முடிவில்லாத எடையையும், முடிவில்லாத அடர்த்தியையும் கொண்டிருந்திருக்கும். அதன் எடையின் கனத்தினாலும், அடர்த்தியினாலும் உருவான பெரும் வெப்பத்தினால் நிலைகுலைந்து, திடீரென அது வெடித்திருக்கலாம். அந்தப் புள்ளி வெடித்த கணத்திலிருந்து முதல் மூன்று நிமிடங்கள்வரை மிகப்பெரிய அணுஉலையைப் போல, அங்குச் செயல்பாடுகள் இருந்திருக்கின்றன. அங்கு நடந்தது எல்லாமே கதிர்வீச்சுகளாகத்தான் இருந்தன. பின்னர் மெல்ல மெல்ல ஒவ்வொரு உபஅணுத்துகள்களும் உருவாகத் தொடங்கின. மூன்று இலட்சத்து எண்பதினாயிரம் ஆண்டுகளின் பின்பு முதல் எலெக்ட்ரான், ஐதரசன் அணுக்கருவுடன் இணைந்து, அண்டத்தின் முதலாவது அணுவை உருவாக்கியது. அதன் பின்னர் படிப்படியாக நட்சத்திரங்கள், கோள்கள் அனைத்தும் உருவாகத் தொடங்கின. இவையனைத்துமே பெருவெடிப்பின் மூலம் உருவான, பெருவிரிவின் வேகத்துடனே நடந்து கொண்டிருந்தன. பெருவெடிப்பின் வீரியத்தால் விரிவடையத்தொடங்கிய அண்டம் இன்றுவரை விரிவடைந்து கொண்டேயிருக்கிறது.




பேரண்டம் இப்போதும் விரிவடைந்து கொண்டிருக்கிறது என்பதை 1929ம் ஆண்டில் 'எட்வின் ஹபிள்' (Edwin Hubble) என்பவர் கண்டுபிடித்தார். தொலைநோக்கிக் கருவியினால் விண்வெளியை ஆராய்ந்து கொண்டிருந்த ஹபிள், அண்டத்தின் எல்லையில் காணப்பட்ட 'காலக்ஸிகள்' (Galaxies) ஒன்றையொன்று விலகிச் செல்வதை அவதானித்தார். பலூன் ஒன்றில் பேனாவின் மூலம் சுற்றிவரப் புள்ளிகளையிட்டுப் பின்னர் அந்தப் பலூனைப் படிப்படியாகப் பெரிதாக ஊதும்போது, அதில் உள்ள புள்ளிகள் எப்படி ஒன்றை ஒன்று விட்டு விலகிச் செல்லுமோ அப்படி, அண்டத்தின் எல்லைகளில் இருக்கும் காலக்ஸிகளும் விலகிச் செல்கின்றன என்று கண்டுபிடித்தார். மிகத் தொலைவிலிருந்து வரும் ஒளி, நம்மை நோக்கி வந்தால் அது நீலநிறமாகவும், விலகிச் சென்றால் சிவப்பு நிறமாகவும் ஒளிப்பிரிகையடையும் என்னும் கருதுகோள் ஒன்று உண்டு. அதைச் 'செந்நிற விலகல்' (Red Shift) என்று சொல்வார்கள். ஹபிள், நட்சத்திரக் கூட்டங்களை அவதானித்தபோது, அவை சிவப்பு நிற ஒளியுடன் விலகுவது தெரிந்தது. தற்கால விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளும் இதைச் சுப்பர் நோவாக்களின் (Supernova) விலகலை வைத்து உறுதிசெய்து கொண்டார்கள். ஆனால், அண்டம் இன்றும் விரிவடைந்து செல்வதற்கு ஆரம்பப் பெருவெடிப்பின் வீரியம்தான் காரணம் என்று நம்பி வந்த விஞ்ஞானிகளுக்குப் பேரதிர்ச்சியொன்று காத்திருந்தது. பெருவெடிப்பின் வீரியம் எந்த அள்வு பெரிதாக இருந்தாலும், என்றாவது ஒருநாள் அது பூச்சியமாக வந்துதான் ஆக வேண்டும் என்று விஞ்ஞானிகளுக்குத் தெரியும். ஒரு கிரிக்கெட் பந்தை என்னதான் பலம் கொண்ட அளவுக்கு மேல்நோக்கி எறிந்தாலும், புவியீர்ப்புவிசைக்கெதிராக மேலே செல்லும் பந்து, ஒரு குறித்த இடம்வரை சென்று, மீண்டும் ஈர்ப்புவிசையால் கீழே விழ ஆரம்பிக்கும். அதுபோல, பெருவெடிபினால் ஏற்பட்ட விரிவும் ஒரு நாள் தன் எல்லையை அடைய வேண்டும் என்று விஞ்ஞானிகள் நம்பினார்கள். அதன்பின்னர், அண்டத்தில் உள்ள காலக்ஸிகளின் ஈர்ப்புவிசையினால், அவை ஒன்றையொன்று இழுக்க, மீண்டும் அண்டம் சுருங்க ஆரம்பிக்கும். அப்படிப் படிப்படியாகச் சுருங்கி மீண்டும் ஆரம்பப் புள்ளியின் நிலையை அண்டம் அடையும் என்று கருதினார்கள். இதற்குப் 'பெரிய சுருக்கம்' (Big Crunch) என்று பெயரும் வைத்திருக்கிறார்கள். இந்த நிலைதான் நான் ஆரம்பத்தில் சொன்ன பலூனின் இரண்டாவது நிலை. "எப்படி அண்டம் வெடித்து விரிந்து பெரிதாகியதோ, அதேபோலச் சிறுத்துச் சுருங்கி மீண்டும் புள்ளியாகும்" என்பதுதான் இயல்பு. ஆனால், நடந்ததோ வேறு. நம்பவே முடியாத ஆச்சரியம். இன்றுவரை உலகில் உள்ள அனைத்து அறிவியலாளர்களையும் பிரமிப்புக்குள் வைத்திருக்கும் விடை தெரியாத மர்மம் அது.



- தொடரும்


பேரண்ட விரிவின் பேராச்சரியங்கள் - பகுதி 1

முன்னுரை:

'விகடன் இயர் புக் 2015’ (Vikatan Yearbook 2015) இல் வெளிவந்த இந்தக் கட்டுரை, கருந்துகள் (Dark Matter), கருஞ்சக்தி (Dark Energy) ஆகிய இரண்டையும் விரிவாக எடுத்துச் சொல்வதற்காக எழுதப்பட்டது. இவை இரண்டைப்பற்றியும் ஆரம்பத்திலிருந்து முழுமையாகப் புரிய வைக்க வேண்டுமென்பதனால், நான் முன்னரே பல கட்டுரைகளில் சொன்ன தகவல்களும் இதில் அடங்கியிருக்கின்றன. அதனால், 'ஏற்கனவே இதைப் படித்திருக்கிறேன்' என்ற உணர்வு உங்களுக்கு இடையிடை தோன்றலாம். ஆனால் கட்டுரையின் முழுமை கருதியே அவை இடம்பெறுகின்றன. மேலும், இந்தக் கட்டுரை மிக நீண்டதொரு கட்டுரை. அதை நீங்கள் தொடர்ச்சியாகப் படிப்பதற்குச் சிரமம் இருக்குமென்பதால், மூன்று பகுதிகளாகப் பிரித்து இங்கு பதிவிடுகிறேன். நன்றி.

-ராஜ்சிவா-


பேரண்ட விரிவின் பேராச்சரியங்கள் - பகுதி 1



உங்கள் உள்ளங்கையில் பொத்தி வைத்தபடி, சுருங்கிய நிலையில் ஒரு பலூன் இருக்கிறது. அதை எடுத்து ஊதுகிறீர்கள். நிறையக் காற்று ஊதக்கூடிய பலூனாக இருந்தாலும், ஓரளவு பெரிதாகிய பின்னர் ஊதுவதை நிறுத்திவிடுகிறீர்கள். அதற்குமேல் ஊதினால் வெடித்துவிடலாமென்ற பயம் காரணமாகவோ அல்லது ஊதிய பருமன் போதுமென்று நினைத்ததாலோ, ஊதுவதை நிறுத்திவிட்டிருப்பீர்கள். சரி, இப்போது அந்தப் பலூனுக்கு என்ன நடக்கும்? அந்தப் பலூன் அந்தப் பருமனிலேயே நிலையாக இருக்க வேண்டுமென்று நீங்கள் நினைத்தால், அதன் வாயை இறுக்கக் கட்டிவிடுவீர்கள். பலூனின் பருமன் மாறாமல் நிலையாக அப்படியே இருக்கும். இதுதான் வழமையும் கூட. ஆனால், இதைவிட வேறு இரண்டுவிதமான சம்பவங்களும் அந்தப் பலூனுக்கு நடக்கலாம். ஒன்று, அந்தப் பலூனை உங்களால் முடிந்தளவு ஊதிக்கொண்டே போவது. அது பருமனாகிப் பருமனாகி, ஒருநிலையில் காற்றின் அழுத்தம் தாங்க முடியாமல் வெடித்துச் சிதறும். இரண்டாவது, ஊதியது போதும் என்ற நிலையில் பலூனிலிருந்து வாயை எடுக்க, அதில் ஊதப்பட்ட காற்று, படிப்படியாக வெளியேறிச் சுருங்கியதொரு பலுனாகப் பழைய நிலைக்கு மாறும். இந்த மூன்று சம்பவங்களையும் கொண்ட செயற்பாடுகளைப் பலூன் உள்ளடக்கியிருக்கிறது. இதைப் பற்றிச் சொல்லும்போது, சிறுபிள்ளைத்தனமாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், விரிவடையும் பேரண்டத்திற்கே இது உதாரணமாகச் சொல்லப்படுகிறது. விரிவடையும் பேரண்டம் மர்மங்களையும், ஆச்சரியங்களையும் கொண்டது. "அண்டம் விரிவடைவதில் ஆச்சரியம் இருக்கலாம். அதிலென்ன மர்மம் இருக்கப் போகிறது?" என்று நீங்கள் நினைப்பீர்கள். அது என்ன மர்மமென்று சொல்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். அதுமட்டுமல்ல, அந்த மர்மம் ஏதோ ஒரு வகையில் ஆன்மீகத்தையும் தொட்டுச் செல்வது இன்னுமொரு ஆச்சரியம். அந்த மர்மம் என்னவென்று நாம் இப்போது பார்க்கலாம். அதற்கு முன்னர், பேரண்டம் என்னும் சுருங்கிய நிலையில் இருந்த பலூன், எப்படிப் பெரியதொரு பலூனாக ஊதப்பட்டது என்பதைப் பார்த்துவிடலாம்.



'காலம்' (Time), 'இடம்' (Space) ஆகிய இரண்டுமேயில்லாத ஒரு இடத்தில், நீங்கள் இருப்பதாக உங்களால் கற்பனை செய்யமுடியுமா? இந்தக் கேள்வியே எவ்வளவு அபத்தமாக இருக்கிறது பாருங்கள். 'இடம்' இல்லாத ஒரு இடத்தில் எப்படி இருக்க முடியும்? சரி, இந்தக் கேள்வியை இப்படிப் புரிந்து கொள்வோம். உங்கள் வீட்டில் நீங்கள் இப்போது இருக்கிறீர்கள். உங்கள் வீடு சென்னையில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். சென்னையிலிருக்கும் வீட்டில் நீங்கள் இருப்பதை உங்களால் கற்பனை பண்ண முடியுமல்லவா? சென்னை, இந்தியாவில் இருக்கிறது. இந்தியா பூமியிலும், பூமி சூரியக் குடும்பத்திலும் இருக்கிறது. சூரியக் குடும்பம் பால்வெளிமண்டலத்திலும், பால்வெளிமண்டலம், பேரண்டத்திலும் இருக்கிறது. இப்பொழுது யோசித்துப் பாருங்கள். இந்தப் பேரண்டத்தில் எங்கோவொரு மூலையில் நுண்ணியதொரு புள்ளியாக நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள் என்பது புரியும். திடீரென ஒருகணத்தில், பேரண்டமே காணாமல் போய்விடுகிறது. பூமி மட்டும் சுற்றிக் கொண்டிருக்கிறது. பூமியைத் தவிர எங்கும், எதுவும் இல்லை. இந்த நிலையைக்கூட, உங்களால் கற்பனை பண்ணிப் பார்க்க முடியும். இப்போது பூமியும் படிப்படியாக மறையத் தொடங்குகிறது. உங்களைச் சுற்றியுள்ள அனைத்துமே மறைந்து போகின்றன. இறுதியில் உங்கள் வீடும், நீங்கள் நிற்கும் தரையும் இல்லாமல் போகின்றது. ஆனால் நீங்கள் மட்டும் இருக்கிறீர்கள். உங்களைச் சுற்றியோ, மேலேயோ, கீழேயோ எதுவுமில்லை. எதுவுமில்லையென்றால், எதுவுமேயில்லை. முழுமையான வெற்றிடம். அதை வெற்றிடம் என்று கூடச் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அங்கு வெற்றிடம் என்ற ஒன்று இருக்கிறது என்றாகிவிடும். அதனால் வெற்றிடம் கூட அங்கில்லை. அது என்ன நிலையென்றே சொல்ல முடியாத ஒரு நிலை. அந்த நிலையில் நீங்கள் நிற்கிறீர்கள். எந்தச் செயலையும் செய்ய முடியாத ஒரு உறைந்த நிலையாக அது இருக்கும். நீங்கள் நடக்க முடியாது. நடப்பதற்குத்தான் இடமில்லையே! பார்க்க முடியாது. பார்ப்பதற்கு ஒளியுமில்லை, பொருட்களுமில்லை. பேச முடியாது. பேச்சைக் கடத்தும் காற்று அங்கில்லை. அதேபோல, எதையும் கேட்கவும் முடியாது. மொத்தத்தில் எதுவும் செய்ய முடியாது. அங்குக் காலம் (நேரம்) என்பது கூட இல்லை. காலம் என்பதற்கான எந்த அர்த்தமும் அங்கில்லை. இப்போது முதலில் நான் கேட்டிருந்த கேள்வியை மீண்டும் பாருங்கள். காலம், இடம் இரண்டுமில்லாத ஒரு நிலையில் நீங்கள் இருப்பதாக உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லையல்லவா? ஆனால் கற்பனையே பண்னமுடியாத அப்படியானதொரு நிலை உண்மையில் இருந்துதானிருக்கிறது. இன்றிலிருந்து கிட்டத்தட்ட 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நிலை இருந்திருக்கிறது. அந்த நிலையில் பேரண்டம், ஒரு அணுவைவிடச் சிறிய புள்ளியாகச் சுருங்கி இருந்திருக்கிறது. பேரண்டம் சிறுபுள்ளியாகச் சுருங்கியிருந்த நிலையை 'ஒருமை நிலை' (Singularity) என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.





13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன், மிகமிகச்சிறியதொரு புள்ளியாக ஒடுங்கியிருந்த ஏதோவொன்று, ஒரு குறித்த கணத்தில் திடீரெனப் பிரமாண்டமாக வெடித்துச் சிதறியது. வெடிப்பு என்றால் வெடிப்பு. மனிதனால் கற்பனையே பண்ணிக் கொள்ள முடியாதவொரு பெருவெடிப்பு. கோடானகோடி அணுகுண்டுகளை ஒன்றாய்ச் சேர்த்து வெடித்தது போல இருந்த அந்தப் பெருவெடிப்பைத்தான் 'பிக்பாங்க்' (Bigbang) என்கிறார்கள். வெடித்த அடுத்த நொடியிலேயே அது பேரண்டமாக விரிவடைந்தது. மிகச் சிறியதொரு புள்ளி ஒரு நொடிக்கும் குறைந்த நேரத்துக்குள் பேரண்டமாக விரிவடைந்தது. அதனாலேயே பல விஞ்ஞானிகள் இதைப் 'பெருவெடிப்பு' என்று சொல்வதற்குப் பதில் 'பெருவிரிவு' (Expansion) என்கிறார்கள். வெடிக்கும் கணத்தில் அந்த இடத்திலிருந்த வெப்பநிலை என்ன தெரியுமா? ஒன்றுடன் 32 பூச்சியங்களைச் சேர்த்தால் எவ்வளவு பெரிய இலக்கம் வருமோ, அந்தளவு சதமபாகை (°C) வெப்பநிலை அங்கேயிருந்தது. நம்பவே முடியாத வெப்பநிலை. திடீரென வெப்பநிலை உயர்ந்து, சடுதியாக வெடித்து, விரிவடைந்த அண்டம் அதே வேகத்தில் குளிரடையவும் ஆரம்பித்தது. வெடித்த ஒன்றரை நிமிடத்தில் வெப்பநிலை பில்லியன் சதமபாகையாகக் குறைந்துபோனது. தொடர்ந்து 56,000 வருடங்களின் பின்னர் 8700°C ஆகக் குறைந்தது. இன்றும் அண்டம் முழுவதும் அந்த வெப்பநிலை பரந்துபோய் இருக்கிறது. இன்று அதன் வெப்பநிலை -270°C ஆகக் குறைந்திருக்கிறது. பேரண்டம் இப்படித்தான் உருவாகியது என்று அறிவியல் சொல்லும்போது, பலரால் நம்ப முடியாமல் இருக்கிறது. கோடிக்கணக்கான நட்சத்திரக் கூட்டங்களையும், நட்சத்திரங்களையும், கோள்களையும் கொண்ட இந்தப் பேரண்டம், ஒரு சிறுபுள்ளியாக எப்படிச் சுருங்கியிருந்திருக்க முடியும் என்ற கேள்வி சந்தேகமாக அவர்களால் முன்வைக்கப்படுகிறது. ஆனால், அறிவியல் இந்தச் சந்தேகங்களைச் சுலபமாகத் தீர்த்துவைக்க முயன்றாலும், சிக்கலான அறிவியல் விளக்கங்களைப் புரிந்துகொள்ளச் சிலரால் முடிவதில்லை. அந்த விளக்கம் என்னவென்று நாமும் பார்த்துவிடலாம். தமிழால், எந்தச் சிக்கலான அறிவியலையும் இலகுவாகப் புரியவைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. 








 உங்களுக்கு முன், நூறு கிலோ எடையுள்ள சதுரமான இரும்புத்துண்டு ஒன்று இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த இரும்புத்துண்டு, இரும்பு அணுக்களால் உருவானது என்பது உங்களுக்குத் தெரியும். அந்த இரும்புத் துண்டை உடைத்துச் சிதைத்து வரும் மிகமிகச்சிறிய துகளைத்தான் 'இரும்பு அணு' (Fe) என்கிறோம். செங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக வரிசையாக அடுக்கி அழகியதொரு வீடு கட்டுவது போல, கோடிக்கணக்கான இரும்பு அணுக்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்த இரும்புத்துண்டு. நாம் அதில் ஒரு இரும்பு அணுவை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு அணுவில், அணுக்கருவும் (Nucleus), அதைச் சுற்றியபடி எலக்ட்ரான்களும் (Electron) இருக்கும். சரி, அந்த அணுவை ஒரு கிரிக்கெட் மைதானமளவு பெரியது என்று இப்போது கற்பனை செய்து கொள்ளுங்கள். அபடியெனில், அதன் அணுக்கரு அந்த மைதானத்தின் நடுவே கிடக்கும் ஒரு கிரிக்கெட் பந்தின் அளவாகத்தான் இருக்கும். ஒரு அணுவின் பருமனில் கோடி மடங்கைவிடச் சிறியதாகவே அணுக்கரு இருக்கும். அணுக்கருவுக்கும் எலெக்ட்ரான்களுக்குமிடையில் இருப்பது மிகப்பெரிய வெற்றிடம். எலெக்ட்ரான்களுக்கு எடை கிடையாது. அதனால், அணுவின் எடை அணுக்கருவிலேயே இருக்கிறது. இப்போது இந்த உதாரணத்தின்படி பாருங்கள். ஒரு கிரிக்கெட் மைதானத்தின் மொத்த எடையும், அதன் மையத்தில் உள்ள கிரிக்கெட் பந்தில்தான் உள்ளது. அதாவது ஒரு அணுவின் எடை என்பது அந்த அணுவின் கோடி மடங்கு சிறிய அணுக்கருவில்தான் இருக்கிறது. இப்போது, மேலே சொல்லப்பட்ட நூறு கிலோ இரும்புத்துண்டை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பேச்சுக்கு அந்த நூறு கிலோ இரும்புத்துண்டில் மொத்தமாக ஒரு கோடி இரும்பு அணுக்கள் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் (மீண்டும் சொல்கிறேன் ஒரு பேச்சுக்குத்தான்). இரும்புத்துண்டின் மொத்த எடையும், கோடி இரும்பு அணுக்களில்தான் இருக்கும். அதாவது, கோடி இரும்பு அணுக்கருக்களில் இருக்கும். இப்போது நாம் அந்தக் கோடி அணுக்கருக்களையும் ஒன்று சேர்த்தோமென்றால், ஒரு குண்டூசி முனையளவைவிடச் சிறியதாகவே இருக்கும். ஆனால் அந்தக் குண்டூசி முனையளவிருக்கும் அணுக்களை நம் கைகளால் தூக்கவே முடியாது. காரணம் அது நூறு கிலோ எடையுள்ளதாக இருக்கும். அதோடு மிகவும் அடர்த்தியானதாகவும் இருக்கும். இப்போது, அண்டத்தில் உள்ள அனைத்து அணுக்களையும் எடுத்து, அவற்றில் உள்ள எலெக்ட்ரானை அகற்றிவிட்டுப் பார்க்கும்போது, எஞ்சுவது கைமுனையளவு அணுக்கருக்களாகத்தான் இருக்குமென்பது புரிகிறதா? ஆனால், அறிவியல் தன் விளக்கத்தை இத்துடன் முடித்துவிடவில்லை. அது அணுக்கருக்களையும் பிரித்து, அங்கு உள்ளவை அனைத்தையும் மேலும் கண்டு கொள்ள முயன்றது. 



நூறு ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு பொருளைப் பிரித்தால் வரும் மிகச்சிறிய பகுதியை 'அணு' (Atom) என்று கண்டுபிடித்தார்கள். அணுவைப் பிரிக்கவே முடியாதென்றுதான் ஆரம்பத்தில் நினைத்தார்கள். ஆனால் அணுவைப் பிளந்து, அதனுள் அணுக்கருவும், இலத்திரனும் இருக்கின்றன என்று கண்டுபிடித்தார்கள். பின்னர் அணுக்கருவுக்குள் புரோட்டான் (Proton) என்னும் துகளும், நியூட்ரான் (Neutron) என்னும் துகளும் இருக்கின்றன என்று கண்டுபிடித்தார்கள். ஆனால், அறிவியலின் தாகம் அத்தோடு தீர்ந்துவிடவில்லை. அந்தப் புரோட்டானையும், நியூட்ரானையும் கூடப் பிரித்துப் பார்த்தது அறிவியல். புரோட்டான், நியூட்ரான் ஆகிய இரண்டுமே குவார்க் (Quark) என்றழைக்க்கப்படும் மிகநுண்ணிய துகள்களால் உருவாக்கப்பட்டிருக்கிறன என்று சமீபத்தில் கண்டுபிடித்தார்கள். குவார்க்குகளில் இதுவரை ஆறுவகைக் குவார்க்குகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், புரோட்டானிலும், நியூட்ரானிலும் இரண்டு வகையான குவார்க்குகளே இருக்கின்றன. அவை 'மேல்க்குவார்க்' (Up Quark), கீழ்க்குவார்க் (Down Quark) எனப் பெயரிடப்பட்டிருக்கின்றன. ஒரு புரோட்டானில் இரண்டு மேல்க்குவார்க்குகளும், ஒரு கீழ்க்குவார்க்குமாக மொத்தமாக மூன்று குவார்க்குகள் காணப்படுகின்றன. இதுவே தலைகீழாக, நியூட்ரானில் இரண்டு கீழ்க்குவார்க்குகளும், ஒரு மேல்க்குவார்க்கும் காணப்படுகிறது. பூமியிலிருக்கும் பொருட்கள் யாவும் அணுக்களால் உருவானவை என்று நமக்குத் தெரியும். அதனால் இப்போது நாம் பொருட்களெல்லாம் குவார்க்குகளாலானவை என்று சொன்னால் தப்பேயில்லை. ஒரு பொருளுக்கு எடையைக் கொடுப்பது அணுக்கருவென்பதாலும், அதனுள் புரோட்டானும், நியூட்ரானும் இருப்பதாலும், ஒரு பொருளுக்கு எடையைக் கொடுப்பது குவார்க்குகள்தான் என்னும் முடிவுக்கு நாம் வரலாம். இந்தக் குவார்க்குகளின் பருமன் என்ன தெரியுமா? ஒன்றிற்கு அருகே 17 பூச்சியங்களுடன் வரும் இலக்கத்தின் ஒருபங்கு, மில்லிமீட்டர். அதாவது 0.00000000000000001மிமீ நுண்ணளவுடையது. 800 கிலோமீட்டர் வட்டமான நிலப்பரப்பைக் கொண்ட மிகப்பெரிய மாநிலத்தை, ஒரு அணுவாக நீங்கள் எடுத்துக் கொண்டால், நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்தக் கட்டுரையில் இருக்கும் ஒரு தமிழ் எழுத்தின் அளவுதான், ஒரு குவார்க்கின் அளவாக இருக்கும். குவார்க் என்பது எந்த அளவு சிறியது என்பதை நீங்கள் இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள். இந்தப் பேரண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களின் குவார்க்குகளையும் ஒன்று சேர்த்தால், பிக்பாங்க் பெருவெடிப்பின் ஆரம்பப் புள்ளியின் சிறிய அளவை உங்களால் இப்போது புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். எல்லாக் குவார்க்குகளும் ஒன்றாகச் சேர்ந்து, ஒரு புள்ளியாகிப் பெருவெடிப்பாக வெடித்தது என்றுதான் அறிவியல் சொல்கிறது. இந்த இடத்தில்தான் நவீன அறிவியல் 'குவாண்டம்' (Quantum) என்னும் புதியதொரு பரிமாணத்தை எடுத்தது. குவாண்டம் அணுவின் அடிவேரையே ஆராயத் தொடங்கியது. 



- தொடரும்


March 27, 2015

வெரோனிக்காவின் முக்காடு - (பகுதி 6)




'லியார்னாடோ டா வின்சி' பல ஓவியங்களை வரைந்திருக்கிறார். அவரின் ஒவ்வொரு ஓவியமும் இன்றைய நிலையில் விலைமதிக்க முடியாத பொக்கிசங்களாகவே கருதப்படுகின்றன. குத்துமதிப்பாய் அவற்றுக்கு ஒரு விலையை நிர்ணயம் செய்து வைத்திருக்கிறார்களேயொழிய, இன்றிருக்கும் சந்தையில் அவை விற்பனைக்கென்று வந்தால், நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை வீசியெறிந்து வாங்கிக்கொள்ளப் பல கோடீஸ்வரர்கள் வரிசையாகக் காத்திருக்கிறார்கள். டா வின்சியால் வரையப்பட்ட ஓவியங்களில், முழுமையாக வரையப்பட்ட ஓவியங்களிருந்தாலும் முடிக்கப்படாத, முழுமையடையாத ஓவியங்களும் அதிகம் இருக்கின்றன. அந்த முடிக்கப்படாத ஓவியங்களுக்கும் கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்து வாங்கத் துடிக்கிறார்கள். 'டா வின்சி' என்னும் மனிதனின் பெயருக்கு அவ்வளவு மதிப்பைக் கொடுக்கிறார்கள். அவரின் மதிப்பை நாம் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், இப்போது நான் சொல்லப் போவதைத் தெரிந்து கொண்டாலே போதும். 'லியார்னாடோ டா வின்சி', தன் வாழ்வில் நடந்தவை, கண்களால் பார்த்தவை, ஆராய்ந்தவை போன்றவற்றை ஒரு குறிப்புப் புத்தகத்தில் (Notebook) விரிவாக எழுதியும், படங்களாக வரைந்தும் வைத்திருக்கிறார். அவர் நினைக்கும், பார்க்கும் அனைத்தையும் கோட்டோவியமாக, அந்தக் குறிப்புப் புத்தகத்தில் வரைந்திருக்கிறார். அந்தக் குறிப்புப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் சிறிய பெரிய கோட்டோவியங்களாகப் பல படங்களை 'டா வின்சி' வரைந்திருக்கிறார். அப்படி அவர் வரைந்து வைத்திருந்த குறிப்புப் புத்தகமொன்றில் ஆறாயிரம் பக்கங்கள் இருக்கின்றன. லண்டனில் அது பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்தக் குறிப்புப் புத்தகத்தின் இன்றைய விலை என்ன தெரியுமா?


'லியர்னாடோ டா வின்சி' எழுதிய குறிப்புப் புத்தகத்திலிருக்கும் ஒவ்வொரு பக்கமும் (சரியாகப் படியுங்கள் ஒவ்வொரு பக்கமும்) ஒரு மில்லியன் டாலர்களுக்கு அதிகமான விலையுடையது என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதன்படி பார்க்கும்போது, ஆறாயிரம் பக்கங்களைக் கொண்ட அந்தக் குறிப்புப் புத்தகம் என்ன விலை வரலாம் என்பதை நீங்களே கணித்துக் கொள்ளுங்கள். மொத்தமாகப் பதின்மூன்றாயிரம் (13000) பக்கங்கள் கொண்ட குறிப்புகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. பல கிடைக்காமல் அழிந்துவிட்டன. ஐநூறு வருடங்களுக்கு முன்னர் 'டா வின்சி' எழுதிவிட்டுச் சென்ற குறிப்புகள், இன்றைய அறிவியலைக்கூட ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கின்றன. உடலியல், கட்டுமானவியல், கண்டுபிடிப்புகள், இயற்கை ஆகியவற்றைப் பற்றி விரிவாக அவர் ஆராய்ந்து குறித்திருப்பது ஆச்சரியங்களின் உச்சம். அந்தக் குறிப்புகளை அவர் எழுதி வைத்திருக்கும் விதம்தான் நம்மை இன்னும் ஆச்சரியத்துக்குள்ளாக்குகின்றது. அந்தக் குறிப்புகளை தன்னைத்தவிர வேறு யாரும் படித்துவிடக்கூடாது என்பதற்காக அவற்றை நிலைக்கண்ணாடியில் தோன்றும் மாற்று விம்பமாக எழுதியிருக்கிறார். சாதாரணமாக இடமிருந்து வலமாகத்தான் நாம் எழுதுகிறோம். ஆனால், 'டா வின்சி' தன் குறிப்புகளை வலமிருந்து இடமாக எழுதி வைத்திருக்கிறார். இதனாலேயே, பல ஆண்டுகளாக அவர் என்ன எழுதி வைத்திருக்கிறாரென்று கண்டுபிடிக்கப்படாமலேயிருந்தது. இதனால் மிகவும் மர்மமான ஒரு மனிதனாகப் பார்க்கப்படுகிறார் டா வின்சி. இவர் தன் படைப்புகள் ஒவ்வொன்றிலும் இதுபோன்ற உருமறைப்புகளைச் செய்துதான் படைத்திருக்கிறாரென்று பலர் நம்புகிறார்கள். அவரால் வரையப்பட்ட ஓவியங்களை, நமக்கு ஏதோ செய்திகளைச் சொல்லும் குறியீடுகளாகவே இப்போது பார்க்கின்றனர். அவரின் ஓவியங்கள் ஒவ்வொன்றிலும் அடையாளங்களையும், குறியீடுகளையும் ஒளித்து வைத்தே வரைந்திருக்கிறார் என்று சந்தேகப்படுகிறார்கள். இப்படிச் சந்தேகப்படும் ஓவியமொன்றுதான், சென்ற பகுதியில் நான் குறிப்பிட்டிருந்த 'கடைசி இராப்போசனம்' (The Last Supper) என்னும் ஓவியம். 









கடைசி இராப்போசன ஓவியத்தில் மிக அதிகமான குறியீடுகளை 'டா வின்சி' ஒளித்துவைத்து வரைந்திருக்கிறாரென்று சொல்லப்படுகின்றது. இதில் எந்த அளவுக்கு உண்மைகள் இருக்கின்றன என்று தெரியவில்லை. டா வின்சியின் ஓவியங்களில் பல, பைபிளில் சொல்லப்படும் காட்சிகளைக் குறிப்பவையாகவே இருக்கின்றன. கடைசி இராப்போசன ஓவியமும், இயேசுநாதரின் இறுதி நாளில் அவர் தன் பன்னிரண்டு சீடர்களுக்கும் விருந்து வைத்த காட்சியையே சொல்கிறது. மிகவும் தத்ரூபமாக, மிகவும் அழகாக அந்த ஓவியம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இப்படிப் பார்க்கும்போது, கத்தோலிக்க மதத்திற்குக் கீழ்ப்படிந்த, கடவுள் நம்பிக்கையாளராகவே டா வின்சி காணப்படுவார். ஆனால், அவரின் தனிப்பட்ட வாழ்வில் செய்த செயல்கள் அனைத்தும் மதநம்பிக்கைகளுக்கு எதிரான செயல்களாகவே இருந்ததாக வரலாறு சொல்கிறது. கத்தோலிக்க மதபீடத்துக்குத் தன் குறிப்புகள் கிடைத்துவிடக் கூடாதென்பதற்காகத்தான் அவர் தலைகீழ் விம்பத்தில் எழுதினார் என்று சொல்கிறார்கள். இறந்தவர்களின் உடல்களை தன் ஆராய்ச்சிச்சாலைக்கு எடுத்துச் சென்று ஒவ்வொரு பாகங்களாக வெட்டியெடுத்து, உள்ளுடல் உறுப்புகளின் ஒவ்வொரு பாகங்களையும் அச்சுஅசலாக 'டா வின்சி' வரைந்திருக்கிறார். இறந்தவர்களென்றால், எப்போதோ இறந்தவர்களையல்ல, எந்தக் கணத்தில் ஒருவர் இறந்தாரோ, அதற்கு மறுகணத்தில் அந்த உடலைப் பெற்றுக்கொண்டு வெட்டிப் பார்த்திருக்கிறார். மனிதனின் இரத்த ஓட்டம் நின்று போவதற்கு முன்னர் அவற்றைப் பற்றி அறிவதற்கு, வெட்டியெடுத்துப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அவருக்கிருந்திருக்கிறது. மனிதனின் இரத்த நாளைங்கள் ஒவ்வொன்றையும் காலிலிருந்து தலைவரை, அவை எப்படியெப்படியெல்லாம் செல்கின்றன என்னும் விபரங்களுடன் பல படங்களாக வரைந்திருக்கிறார். இப்படி இறந்துபோய் வெட்டப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டவர்களில் குழந்தைகள், வயோதிபர்கள், கர்ப்பினிகள் எனப் பலருண்டு. மனித இதயத்தைக் கூட இறந்து போன சில கணங்களில் வெட்டியெடுத்து அப்படியே வரைந்திருக்கிறார். உடலுறுப்புகள், எலும்புத் தொகுதிகள், தசைத் தொகுதிகள், இரத்த நரம்புகளென அனைத்தும் முழுவிபரமாக அவரின் குறிப்புப் புத்தகத்தில் காணப்படுகின்றன். மனிதன் மட்டுமல்ல, மிருகங்கள், பறவைகள்கூட இவரிடமிருந்து தப்பவில்லை.






இதுபோன்ற செயல்களெல்லாம் அந்தக் காலங்களில் கத்தோலிக்க மதபீடத்தினால் தடை செய்யப்பட்டவையாகும். இந்தச் செயல்களைச் செய்பவர்களுக்குத் தயங்காமல் மரண தண்டனையை அளித்து வந்தனர். கிருஸ்தவ மதத்திற்கே, இந்தச் செயல்கள் எதிரானவையென்று கருதினார்கள். ஆனால், ஒருபுறம் பைபிளிலுள்ள கடவுளர்களின் காட்சிகளை அழகாக வரைந்துகொண்டு, மறுபுறம் மதக் கோட்பாட்டிற்கெதிராகவும் செயல்பட்டு வந்திருக்கிறார் லியர்னாடோ டா வின்சி. ஆராய்ச்சிகள், அறிவியல் ஆகியவற்றில் ஈடுபட்டு மதத்துக்கெதிரான கருத்துகளைச் சொன்ன பல அறிஞர்கள் மரணத்தைச் சந்தித்த காலமது. வெளிப்படையாகவே பலர் கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த 'கலிலியோ' (Galileo Galilei) கூடத் தன் கண்டுபிடிப்பை மாற்றி எழுதிவைக்கும்படி வற்புறுத்தப்பட்டார். இல்லாவிட்டால் அவரும் மரணத்தையே சந்தித்திருந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட காலங்களில் 'டா வின்சி', இந்தளவுக்குப் புரட்சிகரமான ஆராய்ச்சிகளை யாருக்கும் தெரியாமல் செய்திருப்பதே பெரும் ஆச்சரியம்தான். 'இவ்வளவு மர்மமாக இயங்கிய ஒருவர், மதக்கோட்பாடுகளை மதிப்பவராக இருந்திருக்க முடியுமா? என்ற கேள்வி பலரிடமிருக்கிறது. 


மதக்கட்டுப்பாடுகளாலேயே டா வின்சி தன் ஓவியங்கள் அனைத்துக்கும் பின்னால் பல மர்மமுடிச்சுகளை குறியீடுகளாகக் கொடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. கடைசி இராப்போசன ஓவியத்தில்கூட மேரி மக்டலேனாவை மர்மமாக டா வின்சி வரைந்திருக்கிறாரென்ற குற்றச்சாட்டை எடுத்து வைத்தார் எழுத்தாளரான டான் பிரௌன். அந்த ஓவியத்தில் இயேசுநாதருக்கு வலது பக்கத்தில் அமர்ந்திருப்பவரை 'ஜான்' என்னும் சீடரென்றே சொல்வார்கள். ஆனால், அது ஜானல்ல, மேரி மக்டலேனாதானென்று 'டான் பிரௌன்' சொல்கிறார். இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கலாம் என்று டா வின்சி வந்து சொன்னால் மட்டுமே தெரியக்கூடும். "இங்கு எதற்கு மரிய மக்டலேனாவை டா வின்சி வரைந்திருக்க வேண்டும்" என்று கேட்டால், அதற்குக் கிடைக்கும் பதில் நம் தலையையே சுற்ற வைப்பதாக இருக்கிறது. இப்போது உலகில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது, உண்மையாக இருக்குமோவென்று, கொஞ்சம் பயம் வரத்தான் செய்கிறது.


டான் பிரௌன் சொல்லும் கதை இதுதான். இயேசுநாதர், மரிய மக்டலேனாவைத் திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு 'சாரா' என்றொரு மகளும் இருந்தார், இதை இயேசுநாதரின் சில சீடர்கள் விரும்பவில்லை. அதனால், இயேசுநாதரின் பின்னர் மரிய மக்டலேனாவும், அவரது குழந்தையும் உயிராபத்துக்குள்ளானார்கள். ஆனால், இயேசுநாதரின் பரிசுத்தமான பரம்பரையைக் காப்பாற்ற, ஒரு இரகசிய இயக்கமொன்று தயாராகியது. அந்த இயக்கத்திற்குப் பெயர்தான் 'நைட் டெம்லர்' (Knight Templar). பைபிளில் குறிப்பிடப்படும் சாலமன் இராஜா அமைத்த கோவிலிலிருந்து நைட் டெம்லர்களின் கதை ஆரம்பிக்கிறது. இவர்களே 'இலுமினாட்டிகள்' (Illuminatti) என்றும், 'ஃபிரீ மேசன்கள்' (Free Masons) என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த இயக்கத்தில் ஐசாக் நியூட்டன் உட்படப் பல அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவராக லியர்னாடோ டா வின்சியும் இருந்திருக்கிறாரென்று சொல்லப்படுகிறது. இதனாலேயே 'கடைசி இராப்போசன' ஓவியத்தில் மரிய மக்டலேனாவை டா வின்சி வரைந்து வைத்திருந்தாரென்றும் சொல்லப்படுகிறது. ஃப்ரீ மேசன்களென்றாலே மர்மம்தான். ஃப்ரீ மேசன்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் தனியானதொரு புத்தகம் எழுதும் அளவுக்குச் சொல்லிக்கொண்டே போகலாம். இன்றும்கூட ஃப்ரீ மேசன்களே உலகை ஆட்சி செய்துவருகிறார்களென்ற 'சூழ்ச்சிக் கோட்பாடு' (Conspiracy Theory) இருக்கிறது. ஃபிரீ மேசன்கள் இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கிறார்கள். உண்மையைச் சொல்லப் போனால், அவர்களொன்றும் ஒளித்து வாழ்வில்லை. வெளிப்படையாகவே தங்களை ஃப்ரீ மேசன்களென்று கூறிக்கொள்கிறார்கள். அவர்கள் கூடும் இடங்களையும் நாம் இலகுவாக அறிந்து கொள்ளலாம். ஆனால் அவர்களின் நடவடிக்கைகளில்தான் மர்மங்களுண்டு என்று சொல்லப்படுகிறது. இதில்கூட எந்த அளவுக்கு உண்மை இருக்கிறதென்று சொல்ல முடியவில்லை.



டா வின்சியின் பெயரைச் சொன்னதும் நம் அனைவரின் ஞாபகத்தில் வருவது ஒன்றுதான். அதுதான் 'மொனா லிசா' (Mona Lisa) ஓவியம். இந்த ஓவியமும் இப்போது மர்மமாகவே பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் ஓவியத்தில் காணப்படும் மொனா லிசாவின் சிரிப்பைத்தான் 'மர்மமான புன்னகை' என்று வர்ணித்தார்கள். இப்போது ஓவியமே மர்மமாகிவிட்டது. லியார்னாடோ டா வின்சியின் பெரும்பாலான ஓவியங்கள் ஏன், எப்போது, எதற்காக வரையப்பட்டது என்ற குறிப்புகளுடன் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் இந்த 'மொனா லிசா' ஓவியம் மட்டும் எந்தக் குறிப்புமில்லாமல் நம்மைத் திகைக்க வைக்கிறது. "யார் இந்த மொனா லிசா?" என்ற கேள்விக்குக் கூட மழுப்பலான, சந்தேகத்துக்குரிய பதில்தான் கிடைக்கிறது. உண்மையாக அது யாருடைய ஓவியமென்று எவருக்கும் தெரியவில்லை. 'பிரான்செஸ்கோ' (Francesco del Giocondo) என்னும் வணிகர் ஒருவனின் மனைவியாக இந்த 'மொனா லிசா' இருக்கலாமென்று ஒரு கதையுண்டு. ஆனாலும் அதற்கு வேண்டிய ஆதாரங்கள் எவையுமில்லை. அந்தக் காலங்களில் இத்தாலியின் பெருநகரங்களை ஆட்சி செய்து வந்தவர்கள் வணிகர்கள்தான். அப்படியொரு பெரும் வணிகர்களில் ஒருவரான பிராஞ்செஸ்கோ தன் மனைவியை ஓவியமாக வரைந்து தரும்படி, லியார்னாடோ டா வின்சியைக் கேட்டிருந்தாரென்றும், அதற்குப் பெருந்தொகையான பணத்தைக் கொடுத்தாரென்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இதிலும் ஒரு பெரும் ஆச்சரியம் இருந்தது. 'மொனா லிசா' ஓவியத்தை 'டா வின்சி' எப்போது வரைந்தாரோ, அப்போத்திலிருந்து அவர் மரணமடையும்வரை அந்த ஓவியம் அவருடனேயே இருந்திருக்கிறது. பல இடங்களில் அவர் இடம்மாறித் தப்பி வந்தபோதும், அவருடன் கூடவே இந்த 'மொனா லிசா' ஓவியத்தையும் எடுத்துச் சென்றிருக்கிறார். இதனாலேயே 'மொனா லிசா' என்பவர் டா வின்சியின் காதலியாகத்தான் இருக்க வேண்டுமென்று சந்தேகப்படுபவர்களும் உண்டு. 'டா வின்சி' இறக்கும்வரை திருமணமே செய்து கொள்ளவில்லை. அவர் காதலித்த பெண்தான் இந்த மொனா லிசாவென்றும், அதனாலேயே அவர் கடைசிவரை தன்னுடன் இந்த ஓவியத்தை காதலியின் ஞாபகமாக வைத்திருந்தாரென்றும் சொல்வார்கள். ஆனால் உண்மையாக 'டா வின்சி' ஏன் இந்த ஓவியத்தைத் தன்னுடன் கடைசிவரை வைத்திருந்தாரென்று யாருக்கும் தெரியவில்லை. பெருந்தொகை கொடுத்து, வணிகர் பிரான்செஸ்கோ அதை வரையச் சொல்லியிருந்தால், அந்த ஓவியம் பிரான்செஸ்கோவிடமல்லவா இருந்திருக்க வேண்டும்? அது எப்படி டா வின்சியிடமே இருந்தது? யாரோ ஒரு பெண்ணின் ஓவியத்தை வரைந்துவிட்டு, இவர் எப்படித் தன்னுடன் எடுத்துச் செல்ல முடியும்?





மேற்படி காரணங்களால் 'மொனா லிசா' என்னும் பெண் நிச்சயம் டா வின்சியின் காதலியாகத்தான் இருப்பார் என்பவர்களை, நம்மால் நினைத்தே பார்க்க முடியாத காரணமொன்றைச் சொல்லி மறுக்கிறார்கள்கள் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள். டா வின்சியின் காதலியாக, 'மொனா லிசா' இருக்க முடியாதென்று அவர்கள் முன்வைக்கும் காரணம் உங்களை முகஞ்சுளிக்க வைக்கலாம். டா வின்சியும் காதலித்துத்தான் இருக்கிறார். அவர் தன் 67 வயதில் திருமணமாகாமல் இறந்தாலும், காதல் செய்துகொண்டேதான் இருந்திருக்கிறார். ஆனால், 'டா வின்சி' காதலித்தது ஒரு பெண்ணை அல்ல, ஒரு ஆண்மகனை. 'லியார்னாடோ டா வின்சி' ஒருபால் விரும்பியா (Homosexual) என்பது சரியாகத் தெரியாவிட்டாலும், அவர் ஒருபால் விரும்பிதானென்றே பலர் சந்தேகம் கொள்கின்றனர். அவரிடம் ஓவியம் கற்றுக்கொள்ள வந்த இளைஞனான 'சலை' (Salai) என்பவனுடன் அவருக்குத் தொடர்பிருந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். டா வின்சியின் ஓவியங்கள் சிலவற்றுக்கு மாடலாக இந்த சலையே நின்றிருக்கிறான். இதனால், மொனா லிசாவென்னும் காதலி, டா வின்சிக்கு இருந்திருக்க முடியாதென்று மறுக்கிறார்கள். 'அப்படியென்றால் இந்த மொனா லிசா யார்?' என்ற கேள்விக்குப் பதில் மர்மமாகவே இருக்கிறது. பாரிஸிலுள்ள 'லூவ்ரெ' (Louvre) கண்காட்சிச்சாலையில் மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டுவருகிறது மொனா லிசா ஓவியம். இன்று யாருமே நெருங்கி அதைக் களவாட முடியாத அளவுக்குப் பாதுகாப்புடன் 'மொனா லிசா' ஓவியம் இருந்தாலும், முன்னர் ஒருமுறை இதே லூவ்ரெ கண்காட்சிச்சாலையிலிருந்து களவாடப்பட்டிருக்கிறது. 


1911ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி பெரூக்கியா (Vincenzo Perrugia) என்பவனால் 'மொனா லிசா' ஓவியம் களவாடப்பட்டது. இத்தாலி நாட்டைச் சேர்ந்தவன் இந்தப் பெரூக்கியா. 'மொனா லிசா' ஓவியத்தைத் திருடிவிட்டு இரண்டு வருடங்களாக மறைத்து வைத்திருந்து, பின்னர் பிடிபட்டான். நல்ல வேளையாக ஓவியத்துக்கு எதுவும் நடைபெற்றிருக்கவில்லை. "ஓவியத்தை ஏன் திருடினாய்?" என்று கேட்டதற்கு, "இத்தாலியின் ஓவியம் பிரான்ஸ் நாட்டிலிருப்பதை நான் விரும்பவில்லை. அதனால் அதை இத்தாலிக்கே கொடுப்பதற்குத்தான் திருடினேன்" என்று பதில் சொன்னான். அவன் நாட்டுப்பற்றைச் சிலர் பாராட்டினாலும், 'அவன் விற்பனை செய்வதற்காகத்தான் திருடியிருக்கிறான். நல்ல முறையில் விற்பனைசெய்ய முடியாமல் பிடிபட்டதும், இப்படிச் சொல்கிறான்' என்றுதான் பலர் சொல்கிறார்கள். ஆனால், இவன் இந்த 'மொனா லிசா' ஓவியத்தை திருடியதும் ஒரு நல்ல விசயம் நடப்பதற்குத்தான். 'மொனா லிசா' ஓவியம் திருடப்பட்ட காலப்பகுதியில் ஒரு மனிதரால் ஒரு ஓவியமொன்று கொண்டுவந்து ஒப்படைக்கப்பட்டது. அந்த ஓவியத்தைப் பார்த்த அனைவருமே திகைப்பின் உச்சிக்குச் சென்றனர். இதுவரை அப்படியொரு ஆச்சரியத்தை அவர்கள் கண்டதே இல்லை. அந்த மனிதர் ஒப்படைத்த ஓவியத்தில் இருந்தது வேறு யாருமல்ல, அதே மொனா லிசாதான். எந்த 'மொனா லிசா' ஓவியம் திருடப்பட்டதோ அதை அப்படியே நகலெடுத்ததுபோல வேறொரு மொனா லிசாவின் ஓவியத்தை அவர் ஒப்படைத்திருந்தார். இரண்டு ஓவியங்களிலுள்ள மொனா லிசாக்கள் ஒன்றாகக் காணப்பட்டாலும், பல வித்தியாசங்கள் அவற்றுக்கிடையில் காணப்பட்டன. ஆனால், அந்த இரண்டாவது மொனா லிசாவை வரைந்தவரும் லியார்னாடோ டாவின்சிதான் என்றே நம்ப முடிந்தது. இதுவரை உலகில் ஒரேயொரு மொனா லிசா ஓவியம்தான் உண்டு என நினைத்திருந்தவர்கள் திகைப்பின் உச்சிக்கே சென்றார்கள். புதிதாக வந்த 'மொனா லிசா' சற்று இளமையாகவும் காணப்பட்டார்.

- தொடரும்


March 25, 2015

வெரோனிக்காவின் முக்காடு - (பகுதி 5)



'அனைத்தையும் அறிய விரும்பிய மனிதன்' (The Man who wanted to know everything) என்றுதான் லியர்னாடோவைப் பற்றி வரலாற்று அறிஞர்கள் சொல்கிறார்கள். 'லியர்னாடோ டா வின்சி', 1452ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் தேதி இத்தாலியிலுள்ள 'ஃபுளோரன்ஸ்' மாநகரத்தில் இருக்கும் 'வின்சி' என்னும் ஊரில் பிறந்தார். வின்சியில் வசித்து வந்த 'பியரோ' என்னும் சட்டத்தரணிக்கும், 'கத்தரினா' என்னும் பணிப்பெண்ணுக்கும் முறையற்ற வகையில் பிறந்தவர்தான் லியர்னாடோ. அதனாலேயே, அவருக்குச் சிறுவயதில் முறையான கல்வி கிடைக்காமல் போனது. ஆரம்பத்தில் கல்வி மறுக்கப்பட்டாலும், தன்னைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு விசயங்களையும் நுணுக்கமாக அவதானிப்பதில் சிறுவன் லியர்னாடோ வல்லவனாக இருந்தான். நீரோட்டத்தின் பாய்ச்சல்களையும், நிலத்தில் ஊர்ந்து செல்லும் ஜீவராசிகளையும், வானத்தில் பறந்து செல்லும் பறவைகளையும் மிகச்சரியான முறையில் அவதானிக்க ஆரம்பித்தான். பறவைகள் பறப்பதிலுள்ள அனைத்து நுணுக்கங்களையும் அவன் கண்டுகொண்டான். இன்றுள்ள 'காற்றியக்கவியல்' (Aerodynamics) துறைக்கு, முன்னோடியான பல கருத்துகளை அப்போதே சொல்லப் போகிறோமென்று அன்று அந்தச் சிறுவன் அறிந்திருக்கவில்லை. பின்னாட்களில் 'ரைட் சகோதரர்கள்' விமானத்தைக் கண்டுபிடித்திருந்தாலும், அதற்கான முதல் படிநிலைகளை லியர்னாடோ டா வின்சியே கண்டு வைத்திருந்திருந்தார் என்பது இன்று உலகமே வியக்கும் விசயம். செயற்கையாக உருவாக்கப்பட்ட மிகநீண்ட இறக்கைகளைக் கைகளால் இயக்குவதன் மூலம், பறவைகள் சிறகடிப்பது போல அசையச் செய்து, காற்றில் பறக்கலாமென்பதை விளக்கங்களுடன் கூடிய படங்களாகத் தன் குறிப்பேட்டில் வரைந்து வைத்திருந்தார் லியர்னாடோ டா வின்சி. வானத்தில் மனிதன் பறப்பது சம்மந்தமாக அவரால் எழுதப்பட்ட குறிப்புகள் பொக்கிசம்போல இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.1490ம் ஆண்டு 'Omithopter' என்னும் தனிமனிதன் சிறகையடித்துப் பறக்கும் மாடல் ஒன்றை உருவாக்கினார் லியர்னாடோ. அதுவே விமானத்தின் சரித்திரத்தின் முதல் காலடியாக இப்போது கணிக்கப்படுகிறது.




லியர்னாடோவின் காற்றியக்கவியல் கருவிகளின் கண்டுபிடிப்பு வெறும் விமானங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அதற்கும் மேலே ஒருபடி போய், அவர் ஆராய்ந்திருப்பதை இப்போதும் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறார்கள். இன்று 'உலங்கு வானூர்தி' என்றழைக்கப்படும் 'ஹெலிகாப்டர்' (Helicopter) என்பதைக் கூட லியர்னாடோ டா வின்சி கண்டுபிடித்திருந்தார். அதைத் தன் குறிப்பேட்டில், அழகான வரைபடங்களாக அதற்குரிய குறிப்புகளுடன் வரைந்திருக்கிறார். உலகில் இப்படியானதொரு சிந்தனையாளர், கண்டுபிடிப்பாளர், அவரது சிறுவயதில் கல்வி மறுக்கப்பட்ட ஒருவரென்று தெரிய வரும்போது வியப்பை அடக்க முடியவில்லை. விமானத்தை மட்டுமோ அல்லது உலங்கு வானூர்த்தியை மட்டுமோ அவர் தனது கண்டுபிடிப்புக் குறிப்பேட்டில் வரைந்திருந்தால், 'சரி, ஏதோ கண்டுபிடித்துவிட்டார். இது ஒரு தற்செயலான விசயம்' என்று விட்டுவிடலாம். ஆனால் லியர்னாடோ டா வின்சி, வானத்தில் பறப்பதற்கு மட்டும் வழியைச் சொல்லவில்லை. வானத்திலிருந்து குதிப்பதற்கும் வழியைச் சொல்லியிருக்கிறார். 'என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?' ஆம்! லியர்னாடோ அப்போதே பாராசூட் (Parachute) என்னும் விண் மிதவையையையும் தனது குறிப்பேட்டில் வரைந்திருக்கிறார். இவர் எப்படிபட்ட மனிதராக இருந்திருக்க வேண்டுமென்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.


பிரமிட் வடிவத்தில் லியர்னாடோவினால் வரையப்பட்டிருந்த பாரசூட், அவர் குறிப்பிட்டிருப்பதுபோலத் தொழிற்பட்டிருக்குமாவென்ற சந்தேகம் இப்போதுள்ள சிலருக்கு வராமலில்லை. அதனால், லியர்னாடோவின் பிரமிட் வடிவப் பரசூட்டைப் பரிசோதனை செய்து பார்ப்பதென்று துணிச்சலான முடிவொன்றுக்கு இரண்டு இளையவர்கள் வந்தார்கள். 'ஏட்ரியன்' (Adrian) என்பவரும் அவருக்குத் துணையாகக் கதரீனா (Katarina) என்னும் பெண்மணியுமே அந்த இருவர். நவீன காலத்துப் பொருட்களில்லாமல், லியர்னாடோவின் காலத்தில் பெறக்கூடிய பொருட்களைக் கொண்டு அந்தப் பாரசூட்டை இவர்கள் தயாரித்தனர். சொல்லப்போனால் அதுவொரு விபரீத விளையாட்டென்றே சொல்லலாம். பத்தாயிரம் அடிகளுக்கு மேலிருந்து, இந்தப் பாரசூட்டுடன் குதிப்பதற்கு ஏட்ரியன் தயாராகினார். அதன்படி குதித்தார். ஏட்ரியனின் இந்தத் துணிச்சலான நிகழ்வு, லியர்னாடோ மிகச்சரியாகவே அனைத்தையும் கணித்து, வடிவமைத்திருக்கிறார் என்பதை நிரூபித்தது. ஏட்ரியன் எந்தச் சிக்கலுமில்லாமல் பாரசூட்டில் மிதந்து பூமியை நோக்கி வந்தார். லியர்னாடோ ஒரு மிகச்சிறந்த கண்டுபிடிப்பாளரென்பதை உலகம் புரிந்து கொண்டது.






பதினான்கு வயதுச் சிறுவனாக இருந்த லியர்னாடோவை, அவரது தந்தை ஃபுளோரன்ஸ் நகரத்துக்கு அழைத்துச் சென்றார். ஐரோப்பிய வரலாற்றில் மறுமலர்ச்சி ஏற்பட்ட காலம் அது. இத்தாலியின் பல நகரங்கள் கட்டடங்களால் மீளக்கட்டமைக்கப்பட்டுப் பெருவளர்ச்சியை நோக்கி நகரத் தொடங்கிய நேரம். இந்தக் காலங்களில்தான் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டார். லியர்னாடோவை நல்லதொரு மேற்படிப்பில் ஈடுபடுத்த முடியாத நிலையில், அவரை ஓவியம் வரையக் கற்றுக் கொள்ளும் கலைக்கூடத்தில் பயிற்சி மாணவராக சேர்த்துவிடுவதற்கு தகப்பனார் முயன்றார். மிகப்பிரபலமான ஓவியரும், சிற்பியுமான 'அந்த்ரே டெல் வெரோக்கியோ' (Andrea del Verrocchio) என்பவரிடம் லியர்னாடோ மாணவராகச் சேர்க்கப்பட்டார். லியர்னாடோவின் தகப்பனாரின் சினேகிதராக வெரோக்கியோ இருந்ததால் அது சாத்தியமாயிற்று. லியர்னாடோவின் வாழ்வில் நடைபெற்ற மிகச்சிறந்ததொரு ஆரம்பமாக அது இருந்தது. தனது இளமைக் காலங்களை வெரோக்கியோவின் கலைக்கூடத்திலேயே கழித்தார் லியர்னாடோ டா வின்சி. உலகத்துக்கு மாபெரும் கலைப்படைப்புகளைக் கொடுக்க வெண்டுமென்ற வெறி இளைஞனான லியர்னாடோவிற்கு இருந்து வந்தது. அந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்யக்கூடிய முதல் சம்பவம் அவரது இருபதாவது வயதில் நடந்தேறியது.




இயேசுநாதர், யோவான் ஸ்நானனிடம் ஞானஸ்னானம் பெறும் காட்சியை, வெரோக்கியோ அழகிய ஓவியமாக வரைந்து கொண்டிருந்தார். அந்த ஓவியத்தின் இடது பக்கத்தில் இரண்டு தேவதைகள் அந்த ஞானஸ்னானக் காட்சியைப் பார்ப்பதுபோல, அந்த ஓவியம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த ஓவியத்தின் முக்கிய உருவங்களை வரைந்தது என்னவோ வெரோக்கியோதான். ஆனாலும், அவர் அந்த ஓவியத்தை முழுமையாக வரைந்து முடிக்கவில்லை. இருபது வயது இளைஞனான லியர்னாடோவை அழைத்து, அந்தத் தேவதைகளில் ஒன்றை வரையும்படி பணித்தார். இது லியர்னாடோவிற்குக் கிடைத்த மாபெரும் அதிர்ஷ்டமென்றே சொல்லலாம். யாருக்கும் வாய்க்க முடியாத ஒரு சந்தர்ப்பம். லியர்னாடோ அந்தத் தேவதையை வரைய ஆரம்பித்தார். ஆனால் வெரோக்கியோ வரைந்ததுபோல அவர் வரையவில்லை. அவர் பாவனை செய்த வர்ணக் கலவைகளையும்கூட அவர் பயன்படுத்தவில்லை. முட்டையின் மஞ்சள் கருவுடன், நிறங்களைக் கலந்து வரைவதையே வெரோக்கியோ வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் அதைத் தவிர்த்துவிட்டு, முதன்முதலாக எண்ணெய் வர்ணத்தைப் (Oil Painting) பயன்படுத்தி அந்தத் தேவதையை வரைந்து முடித்தார் லியர்னாடோ டா வின்சி. இந்த முயற்சி தோற்கும் பட்சத்தில் லியர்னாடோவின் மிகப்பெரிய முட்டாள்தனமாக அது இருந்திருக்கும். ஆனாலும், எந்தக் கவலையும் இல்லாமல், எந்தச் சிந்தனையுமில்லாமல் இளம் லியர்னாடோ, அதை ஆயில் வர்ணங்களினாலேயே வரைவதென்ற முடிவையெடுத்து வரைந்தான். ஓவியத்தைப் பார்த்த வெரோக்கியோ பிரமித்துப் போய்விட்டார். அப்படியொரு அழகான உயிரோடமுள்ள தேவதையை அவர் அந்த ஓவியத்தில் கண்டார். தேவதையின் கூந்தல் அலையலையாக நிற வித்தியாசங்களுடன் இறங்கிவருவது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அனைத்துச் சீடர்களையும் அழைத்துக் காட்டினார். அவரின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லாமல் இருந்தது. அந்த ஓவியம் 'The Baptism of Christ' என்னும் பெயரில் ஃபுளோரன்ஸில் இருக்கும் 'உஃபிட்சி' (Uffizi) கண்காட்சிச்சாலையில் இன்றும் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.



எப்போது அந்தத் தேவதையின் முகத்தை லியர்னாடோ டா வின்சி அவ்வளவு அழகாக வரைந்தாரோ, அப்போதிருந்தே அங்கிருக்கும் அனைத்து ஒவியங்களிலுள்ள முகங்களையும் அவரே வரைய வேண்டுமென வெரோக்கியோ கேட்டுக் கொண்டார். அதுமட்டுமில்லாமல், அதன்பின்னர் எந்தவொரு ஓவியத்தையும் வெரோக்கியோ வரையவில்லை. அனைத்தையும் லியர்னாடோவே வரையவேண்டுமென்று முடிவெடுத்தார். லியார்னாடோவின் புகழ்பெற்ற ஓவியங்கள் பிறப்பதற்கான அடிக்கல் அங்கு நாட்டப்பட்டது. தனது முப்பது வயது வரை ஃபுளோரன்ஸிலேயே வாழ்ந்தவர், அதன்பின்னர் 'மிலான்' (Milan) நகருக்குக் குடிபெயர்ந்தார். மிலான் அந்தக் காலங்களில் போருக்கான அறிகுறிகளைக் கொண்டவொரு இடமாக இருந்தது. மிலானின் தலைவனிடம் லியர்னாடோ பணிக்கமர்ந்து கொண்டார். படிப்படியாக, மிலானிலுள்ள பல கட்டடங்களை வடிவமைப்பதற்கும், போர்ச் சாதனங்களை வடிவமைப்பதற்கும் உதவினார். இந்தக் காலங்களில்தான் பல எந்திரங்களை வடிவமைக்கும் தன்மைகளுடன் வரைந்து முடித்தார். கண்ணுக்கும், சூரியவொளிக்குமிடையில் நடைபெறும் நிகழ்வுகளையும் சரியாகக் கணித்துக் கொண்டார். ஒளியானது கண்களுக்குள்ளாக ஊடுருவிப் பின், அது மூளைக்கு அனுப்பப்படுகின்றது என்பதைப் படங்கள் மூலமாகக் குறித்து விளக்கியிருந்தார். அத்துடன் சூரியவொளி கண்ணாடியில் பட்டு நிறங்களாகப் பிரிகிறது என்பதையும் அவதானித்தார். அறிவியலில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்து விசயங்களையும் லியர்னாடோ முயன்று பார்த்திருக்கின்றார். அதில் குறிப்பாக மிலானில் நடைபெற்ற போரின்போது பயன்படுத்துவதற்காக 'யுத்தத் தாங்கி' (War Tank) ஒன்றையும் வடிவமைத்திருந்தார் என்றால் அவரின் கண்டுபிடிக்கும் திறமையைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். மிலானில் லியர்னாடோ டா வின்சி வசித்த காலங்களில், பலவித கண்டுபிடிப்புகளைப் பற்றிய குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறார். 




மிலானுக்குத் தலைவனாக இருந்தவன், மிகப்பெரிய வேலையைச் செய்யும்படி லியர்னாடோவிற்குக் கட்டளையிட்டான். அதுவே இன்று மிகவும் பிரபலமாகவும், மர்மங்கள் நிறைந்ததாகவும் சொல்லப்படும் படைப்பாக இருக்கிறது. 1494ம் ஆண்டளவுகளில், இயேசுநாதரின் 'கடைசி இராப் போசனம்' (The Last Supper) என்னும் ஓவியத்தை அங்குள்ள மண்டபத்தின் சுவரில் வரையும்படி லியர்னாடோவுக்குச் சொல்லப்பட்டது. கிட்டத்தட்ட 9 மீட்டர்கள் நீளமும் நான்கரை மீட்டர்கள் உயரமும் கொண்ட மிகப்பெரிய ஓவியமாக அந்த இராப் போசன ஓவியத்தை வரைவதற்கு முடிவெடுத்தார் லியர்னாடோ. மிகத்திறமையாகவும், அழகாகவும், தத்ரூபமாகவும் அந்த ஓவியத்தை வரைந்து முடித்தார். ஆனால், எத்தனையோ திறமைகள் வாய்ந்த செயல்களை முன்கூட்டியே கணித்துச் செய்திருந்த லியர்னாடோ, சறுக்கிவிட்ட இடமாக அந்த ஓவியத்தைச் சொல்வார்கள். மிலானிலுள்ள 'சாந்தா மரியா' தேவாலயத்தின் சுவரில் வரையப்பட்ட அந்த ஓவியத்தின் ஸ்திரத்தன்மையைப் பற்றித் தவறான கணிப்பை, லியர்னாடோ போட்டுவிட்டாரென இப்போது விமர்சிக்கிறார்கள். வழமையாக ஓவியங்கள் துணிகளிலேயே வரையப்படுகின்றன. ஆனால், இந்த ஓவியமோ சுவரில் வரையப்பட்டது. இத்தாலியின் காலநிலை மாற்றங்களினால் சுவர்களில் ஏற்படும் மாற்றங்கள் ஓவியத்தையும் பாழடித்துவிடும் என்பதைக் கணிக்கத் தவறிவிட்டார் லியர்னாடோ. இதுபோன்ற பல சுவரோவியங்களை அவர் வரைந்திருந்தாலும், குறிப்பிட்ட இந்தச் சுவரில் வரைந்த ஓவியம் அதிகக் காலம் தெளிவாக இருக்கவில்லை. ஓவியம் வரைந்த நான்கைந்து ஆண்டுகளிலேயே அது பழுதடையத் தொடங்கிவிட்டது. இப்போது மிகவும் மோசமான நிலையில் அந்த ஓவியம் இருந்தாலும், கூடியவரை அதற்கான பாதுகாப்புக் கொடுத்துப் பார்த்துக் கொள்கிறார்கள். கடைசி இராப் போசன ஒவியம் பழுதடைந்தாலும், அது ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. இந்த ஓவியத்தின் அடிப்படையிலேதான், டான் பிரவுன், 'டா வின்சி கோட்' என்னும் நூலை எழுதிக் கத்தோலிக்க மதத்தினரின் நம்பிக்கையில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினார். லியர்னாடோ அந்த ஓவியத்தில் பல மர்மங்களைக் குறியீடுகளாகத் தெரிவித்திருக்கிறார் என்று தன் புத்தகத்தின் மூலம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.. பன்னிரண்டு சீடர்களும் மூவர் மூவராகப் பிரிக்கப்பட்டு அந்த ஓவியத்தில் காணப்படுகிறார்கள். அங்கு காணப்படுவது பன்னிரண்டு சீடர்களல்ல, பதினொரு சீடர்கள் மட்டுமேயென்றும், பனிரெண்டாவதாக இருப்பது ஒரு பெண்ணென்றும். அவர்தான் மரிய மக்டலேனா என்றும் சந்தேகங்களை இந்த ஓவியத்தின்மூலம் எழுப்பியிருக்கிறார். இந்த மர்மங்கள் லியர்னாடோவின் மேலும் பல ஓவியங்களிலும் இருப்பதாகவே சொல்லப்படுகின்றது. அத்துடன், ஏன் மூவர் மூவராக சீடர்களைப் பிரித்து வரைந்தார்? என்ற கேள்வியும் கேட்கப்படுகிறது.


கேட்கப்படும் கேள்விகளுக்கும், சொல்லப்படும் மர்மங்களுக்கும் இயன்றவரை விரிவான விளக்கத்தை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.


- தொடரும்


March 22, 2015

இன்று ”தினகரன்” நாளிதழில் நான் கருந்துளை பற்றி எழுதிய கட்டுரை

இன்று “தினகரன்” நாளிதழில் நான் கருந்துளை ஆராய்ச்சி பற்றி எழுதிய கட்டுரை வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அதன் பிரதியும் உங்கள் பார்வைக்கு




March 20, 2015

கருந்துளைகளை (Blackholes) மனிதனே உருவாக்குவது சாத்தியம்தானா?




கருந்துளைகளை (Black Holes) நாம் உருவாக்கப் போகின்றோமா?'இணை அண்டங்கள்' (Parallel Universe) இருக்கின்றன என்பது உண்மைதானா? இயற்பியலில் இதுவரை பெரும் மர்மமாக இருந்துவந்த இரண்டு மையப்பொருட்களை முன்னிலைப்படுத்திக் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகளுக்கான பதில்களை, எதிர்வரும் மாதங்களில் ஆராய்ந்து கண்டுபிடிக்க ஆயத்தமாகின்றது அறிவியல் உலகு. 2012ம் ஆண்டு, 'கடவுள் துகள்’ என்று செல்லப் பெயரிட்டு அழைக்கப்பட்ட ‘ஹிக்ஸ் போஸான்’ (Higgs Boson) என்னும் நுண்ணிய துகள் கண்டுபிடிக்கப்பட்டது. சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் அமைக்கப்பட்டுள்ள ‘சேர்ன்’ (Cern) ஆராய்ச்சி மையத்தில்தான் ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிக்கப்பட்டது. "பேரண்டத்தின் ஆரம்பப் பெருவெடிப்பின் (Bigbang) மூலமாக உருவான ஹிக்ஸ் துகள்கள், உண்மையில் இருக்கிறனவா? இல்லையா?" என்னும் சந்தேகத்துடனேயே அதுவரை விஞ்ஞானிகள் இருந்து வந்தார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது சேர்ன்.


சேர்ன்' என்னும் ஆராய்ச்சி மையம், நிலத்திற்குக் கீழே 175 மீட்டர்கள் ஆழத்தில், 27 கிலோமீட்டர்கள் சுற்றளவுள்ள வட்டப்பாதையில் நீண்ட குழாய்களை இணைத்து அமைக்கப்பட்டுள்ளது. வட்டமாக அமைக்கப்பட்ட நீண்ட குழாய்களினூடாக எதிரெதிர்த் திசைகளில், ஒளியின் வேகத்தில், குறித்த சக்தியுடன் முடுக்கிவிடப்படும் ‘ஹாட்ரான்’ (Hadron) துகள்கள், ஒன்றுடனொன்று மோதுவதால், வெடித்துச் சிதறி வெளிப்படும் அடிப்படைத் துகள்களைக் கண்டுகொள்வதே இந்த ஆராய்ச்சி மையத்தின் பயன்பாடு. இதைப் ‘பெரிய ஹாட்ரான் மோதி’ (Large Hadron Collider) என்பார்கள். சுருக்கமாக LHC





நான் மேலே கூறியவற்றை அறிவியலில் பரீட்சயமுள்ளவர்களும், இயற்பியல் ஆர்வலர்களும் இலகுவாகப் புரிந்துகொள்வார்கள். ஆனால், சாதாரண வாசகனுக்கு, 'ஹாட்ரான்' என்பதும், 'இணையண்டம்' என்பதும், கண்ணைக் கட்டி கருந்துளையில் விட்டதுபோல இருக்கும். அதனால், அனைத்துக்கும் விளக்கமளிக்க முடியாவிட்டாலும், முடிந்தளவு விளக்கங்களைக் கூறிச் செல்கிறேன்.

முதலில் ஹாட்ரான் என்றால் என்னவென்பதைப் பார்க்கலாம். பல வருடங்களுக்கு முன்வரை, அணுவைப் பிரிக்க முடியாதென்றே நம்பிவந்தனர். மேலும் பிரிக்க முடியாத மிகச்சிறிய துகள்தான் அணு என்றார்கள். அதற்கப்புறம் அறிவியல் வளர வளர, அணுவைப் புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் என்று பிரித்தார்கள். அத்துடன் முடிந்தது கதையென்றுதான் நினைத்தோம். ஆனால் பிரித்தல், உடைத்தல் அத்துடன் முடிந்துவிடவில்லை. புரோட்டான்களும், நியூட்ரான்களும் மேலும் பிரிக்கப்பட்டு, அவை குவார்க்குகள் (Quarks) என்னும் நுண்துகள்களாலானவை என்று கண்டுபிடிக்கப்பட்டது. புரோட்டானும், நியூட்ரானும் தனித்தனியே, மூன்று குவார்க்குகளால் உருவானவை. குவார்க்குகள் ஆறுவகைப்படும். அவற்றில், 'மேல் குவார்க் (Up Quark), 'கீழ் குவார்க்’ (Down Quark) என்னும் இருவகைகளினால் புரோட்டானும், நியூட்ரானும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒரு புரோட்டானுக்குள் இரண்டு மேல் குவார்க்குகளும், ஒரு கீழ்க்குவார்க்கும் உண்டு. அதுபோல, ஒரு நியூட்ரானுக்குள் இரண்டு கீழ்க்குவார்க்குகளும், ஒரு மேல் குவார்க்கும் உண்டு. இந்தக் குவார்க்குகளால் உருவாக்கப்பட்ட துகள்களையே, ‘ஹாட்ரான்’ (Hadron) என்கிறார்கள். 


ஹாட்ரான் துகள்களுக்கு அதியுயர் சக்தி கொடுத்து, கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் முடுக்கி விடப்படுவதால், அவை அந்த நீண்ட குழாய்களில் எதிரெதிர்த் திசைகளில் மோதிக்கொள்கின்றன. அந்த மோதலை மிகநுண்ணிய கருவிகளினால் பதிவுசெய்து அவதானித்தபோது, 'ஹிக்ஸ் போஸான்’ என்று சொல்லப்படக்கூடிய துகள் வெளிப்பட்டதை 2012இல் கண்டுபிடித்தார்கள். அப்போது, ஹாட்ரான் மோதியினால் கொடுக்கப்பட்ட சக்தி, 7 முதல் 8 TeV (டெரா எலெக்ட்ரான் வோல்ட்) சக்தியாகும். ஹிக்ஸ் போஸான் கண்டுபிடித்ததன் பின்னர், கடந்த இரண்டரை வருடங்களாகச் சேர்ன் ஆய்வு மையம் தனது ஆராய்ச்சிகளை நிறுத்தி வைத்திருந்தது. காரணம், அதியுயர் சக்தியைத் துகள்களுக்குக் கொடுத்து மோதும்படி செய்வதற்கான ஆயத்தங்களை இடைக் காலங்களில் செய்து வந்ததே. இந்த ஹாட்ரான் மோதி, மீண்டும் 2015 மார்ச் 23ம் தேதி புதிய மோதல் பரிசோதனைகளுடன் இயங்க ஆரம்பிக்க இருக்கிறது. மார்ச் 23ம் தேதி ஆரம்பிக்கும் பரிசோதனைகள் படிப்படியாக உயர்த்தப்பட்டு, மே மாதமளவில் 13 முதல் 14 TeV சக்தியுடன் தொழில்பட ஆரம்பிக்கும். 14 டெரா எலெக்ட்ரான் வோல்ட் என்பது 'அதிசக்தி நிலயாக' (High energy level) கருதப்படுகின்றது. அதாவது கடந்த முறையைவிட இரண்டு மடங்கு சக்தியுடன் ஹாட்ரான்கள் இம்முறை மோதவிருக்கின்றன. இந்த மோதலின் மூலம், நம்மை மயக்க நிலையில் இதுவரை வைத்திருந்த பல இயற்பியல் மர்மங்களுக்கு விடைகள் கிடைக்குமென ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். குறிப்பாக, இந்த மோதலினால் உருவாகப் போகும் சில சம்பவங்கள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்த விஞ்ஞானிகளின் கருத்துகள் நம்மை வியப்பிலும், பயத்திலும் ஆழ்த்துகின்றன. வாட்டலூ பல்கலைக்கழகத்தைச் (Waterloo University) சேர்ந்த பேராசிரியர் ஃபைசல் (Prof.Mir Faizal) மற்றும் அஹ்மட் பராஹ் அலி, மொஹம்மட் ஹாலில் (Ahmed Farag Ali, and Mohammed M. Khalil) ஆகியோர் சேர்ந்து சமர்ப்பித்த ஆராய்ச்சிக் கட்டுரையே நம்மை ஆச்சரியத்துக்குள் கொண்டு செல்கின்றது.

ஹாட்ரான்கள் அதியுயர் சக்தியுடன் மோதும்போது, ஈர்ப்புசக்தியில் சிறிதளவு, அந்த இடத்திலிருந்து மாயமாக மறைந்து போகுமெனவும், அப்படி மறைந்து போகும் ஈர்ப்புசக்தி நம் அண்டத்திலிருந்து வேறு பரிமாணங்களுக்கே (Dimensions) செல்கின்றனவென்றும், அப்படிச் சென்றால், நம் அண்டத்துக்கு இணையான இன்னுமொரு அண்டம் (Parallel Universe) இருப்பது உறுதியாகுமெனவும், பேராசிரியர் ஃபைசலின் ஆராய்ச்சிக் கட்டுரை சொல்கிறது. அத்தோடு அந்தக் கட்டுரை நின்றுவிடவில்லை. "ஈர்ப்புவிசை மேலே சொன்னதுபோல மர்மமான முறையில் மறைந்துபோனால், அந்தக் கணத்தில் மிகச்சிறியளவிலான கருந்துளை தோன்றவும் வாய்ப்பிருக்கிறது" என்றும் சொல்கிறது. மிகச்சிறியது என்றால், எந்த அடிப்படைத் துகள்களும் உட்புகமுடியாத அளவுக்கு நுண்ணிய கருந்துளையாக அது இருக்கும். ஹாட்ரான் மோதியில் ஆராய்ச்சிகளைச் செய்ய ஆரம்பித்த காலகட்டங்களிலேயே, 'அதன்மூலம் கருந்துளைகள் உருவாகிப் பூமியையே அழித்துவிடும் அபாயம் உண்டென்ற' எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் கூட ஒருமுறை எச்சரிக்கையாகச் சொல்லியிருந்தார். கருந்துளைகள் அவ்வளவு ஆபத்தானவை. கருந்துளைகள் மிகவும் அதிகளவு ஈர்ப்புசக்தியைக் கொண்டிருப்பதால், அவற்றின் ஈர்ப்பிலிருந்து எதுவுமே தப்ப முடியாது. ஒளிகூட அதன் ஈர்ப்பிலிருந்து தப்ப முடியாதென்றால் பாருங்கள். ஒரு மீட்டருக்குக் குறைவான அளவிலுள்ள கருந்துளை, நம் பூமியை ஒரு நூடுல்ஸ் போல நீட்டி, லபக்கெனத் தனக்குள் இழுத்துக் கொள்ளும் ஆபத்து இருக்கிறது. சிறியதாக இருக்கும் கருந்துளைகள், ஒவ்வொன்றாகத் தன்னுள் இழுத்துக்கொள்வதால், படிப்படியாகப் பெரிதாகிக்கொண்டு வருமென்று சொல்கிறார்கள்.




கருந்துளையின் சக்திகள் எல்லாமே ஈர்ப்புவிசையிலேயே தங்கியிருக்கிறது. இதுவரை மனிதன் கணித்துக்கொள்ள முடியாமல் அவதியுறும் விசை, ஈர்ப்புவிசை மட்டும்தான். ஈர்ப்புவிசைக்கான அடிப்படைக் காரணங்கள் இன்னும் மர்மமாகவே இருக்கின்றன. ஐசாக் நியூட்டன், பூமி தன்னை நோக்கிப் பொருட்களை ஒரு விசையுடன் இழுத்துக் கொண்டிருக்கிறது. அதுவே 'புவியீர்ப்பு விசை' என்றார். ஆனால் அதன்பின்னர் வந்த ஐன்ஸ்டைன், சூரியன், பூமி போன்ற மிகப்பெரிய பொருட்கள் தாம் நின்றுகொண்டு சுழலும் காலவெளியை (Space time) தம் நிறைகளினால் கீழ்நோக்கி வளைப்பதால் ஏற்படுவதே, ஈர்ப்பு விசையென்றார். பல ஆராய்ச்சிகளின் பின்னர், ஐன்ஸ்டைன் சொன்ன கருத்துச் சரியென்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், நவீன இயற்பியலாளர்களால் இப்போது, ‘ஈர்ப்பு வானவில்’ (Gravity's rainbow) என்னும் புதிய ஈர்ப்புக்கொள்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது. காலவெளியானது, துகள்களின் சக்திவெளிப்பாட்டு நிறமாலை வித்தியாசங்களுக்கேற்ப வெவ்வேறு விதமாக அவற்றை வளைத்துக்கொள்கிறது என்கிறார்கள். இந்த ஈர்ப்பு வானவில் கோட்பாடு, பிக்பாங் என்னும் பெருவெடிப்பு என்ற ஒன்றே நடைபெறவில்லையென்று சொல்கிறது. இதைப்பற்றி இன்னுமொரு கட்டுரை மூலம் விளக்கமாக எழுதுகிறேன். இம்முறை நடைபெறப்போகும் ஹாட்ரான் மோதலின் மூலம் இந்த ஈர்ப்பு வானவில் விதி சரியானதென்று நிறுவப்படலாமென நம்புகிறார்கள். 




இதை நான் முன்னர் பலமுறை சொல்லியிருந்தாலும், இந்தக் கட்டுரையின் விளக்கத்திற்கான அவசியம் கருதி மீண்டும் ஒருமுறை….
ஐன்ஸ்டைனின் ஒருங்கமைக் கோட்பாட்டின் (Theory of Everything) அடிப்படையில், அதன் நீட்சியாக உருவாக்கப்பட்டது 'அதிர்விழைக் கோட்பாடு' (String Theory). இந்த அதிர்விழைக் கோட்பாட்டின் நீட்சியாக 'எம் கோட்பாடு' (M Theory) உருவாகியது. அதிர்விழைக் கோட்பாட்டையும், எம் கோட்பாட்டையும் நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் அதை உருவாக்கியவர்களுக்குக் கிடைக்கவில்லை. அந்தக் கோட்பாடுகள் பல விஞ்ஞானிகளால் விமர்சனத்துக்குள்ளாகியது. கற்பனாவாதிகள் என்று சிலரால் ஏளனமும் செய்யப்பட்டது. ஆனால், அந்தக் கோட்பாட்டைப் பலர் ஏற்றுக் கொண்டுமிருக்கிறார்கள். அதிர்விழைக் கோட்பாடு, எம் கோட்பாடுகளின்படி, நாம் வாழும் அண்டத்திற்கு மொத்தமாகப் பனினொரு பரிமாணங்கள் உள்ளன என்று நிறுவப்பட்டிருக்கின்றது. மனிதர்களான நம்மால் அதிகபட்சமாக மூன்றே மூன்று பரிமாணங்களைத்தான் புரிந்து கொள்ள முடியும். நீளம், அகலம், உயரம் (X,Y,Z,) என்பவையே அந்த மூன்று பரிமாணங்களுமாகும். நம் கண்ணால் பார்க்கும் காட்சிகளெல்லாம் முப்பரிமாண வடிவங்களாலானவை. மனிதன் மூன்று பரிமாணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால், ஒரு பரிமாணத்தில் வாழும் உயிரினங்களும், இரு பரிமாணங்களில் வாழும் உயிரினங்குகளும் பூமியில் இருக்கின்றன. உதாரணமாக நிலத்தில் அசையாமல் இருக்கும் ஒரு சிறிய புல் ஒரு பரிமாணத்தில் வாழ்வதாகவே நாம் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு, இடம் வலமாகவோ, முன் பின்னாகவோ அசைவதற்கான பரிமாணம் இல்லை. ஆனால் கீழ் மேலாக அது தன்னை வளர்த்துக் கொள்கிறது. அதனால் அதை ஒரு பரிமாணத்தில் வாழும் உயிரினமாகக் கொள்ளலாம். இது ஒரு உதாரணத்திற்கு மட்டுமே. அதுபோல, நிலத்தில் ஊர்ந்து செல்லும் எறும்பொன்றை இரு பரிமாணங்களில் வாழும் உயிரினமாகக் கொள்ளலாம். எறும்பு, முன் பின்னாகவும், இடம் வலமாகவும் அசைகிறது. ஆனால், அதனால், மேல் கீழாக அசைய முடிவதில்லை. ஆனால், ஒரு பறவையால் இடம் வலம், முன் பின், மேல் கீழ் ஆகிய மூன்று பரிமாணங்களில் பயணிக்க முடிகிறது. ஒரு எறும்பிடம் "மூன்றாவது பரிமாணமென்ற ஒன்று உண்டென்றும், அங்கு மனிதன் என்பவனும், பறவைகளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்றும் சொன்னால், அதனால் அதைக் கற்பனையே செய்து பார்க்க முடியாது. அதுபோல, நான்காவது பரிமாணம் உண்டென்று மனிதனிடம் சொன்னால், அவனாலும் அதை நம்ப முடிவதில்லை. கற்பனை செய்யவும் முடிவதில்லை. எம் கோட்பாடு, மொத்தமாகப் பதினோரு பரிமாணங்கள் உள்ளன என்று சொல்கின்றது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது, பதினோராவது பரிமாணங்களிலும் வெவ்வேறு வகையான உயிரினங்கள் வாழ்ந்துகொண்டிருக்கலாம். அவையே ஆவிகளாகவும், பேய்களாகவும், ஏலியன்களாகவும், அசுரர்களாகவும், தேவர்களாகவும், கடவுள்களாகவும் இருக்கலாம். ஒவ்வொரு பரிமாணங்களாக அதிகரிக்க அதிகரிக்க, அதில் வாழும் உயிரினங்களின் சக்திகளும் அதிகரித்துச் செல்லலாம். மூன்று பரிமாணங்களைவிட அதிகப் பரிமாணங்கள் உண்டென்று நிரூபிக்கப்பட்டால், அதில் வேறு வகையான உயிரினங்களும் வாழ்வதற்குச் சாத்தியங்களும் உண்டு என்பதும் உறுதியாகும். 

ஒருவேளை, ஹாட்ரான் மோதிப் பரிசோதனையில் கருந்துளையொன்று உருவாகினால், அது பிளாங்க் அளவுகளிலேயே (Planck Length) காணப்படுமென்றும். அவற்றால் மேலும் சுருங்கவோ, உள்ளே இழுக்கவோ முடியாது என்கிறார்கள். கருந்துளையால் ஆபத்து ஏதும் இல்லையென்னும் நிலையில், எதிர்வரும் மே மாதமளவில் கருந்துளையொன்று உருவாகும் பட்சத்தில், இதுவரை நம் கண்ணால் காணமுடியாத கடவுள்கள், தேவர்கள், அசுரர்கள், பேய்கள், ஆவிகள், ஏலியன்கள் வசித்துக் கொண்டிருக்கும் இடங்களான ஒவ்வொரு பரிமாணத்தையும் நாம் கண்டறிந்தவர்களாவோம். இயற்பியலில் அடைக்கப்படாத பல ஓட்டைகள் இதனால் படிப்படியாக அடைக்கப்படலாம். நம்பிக்கைகள்கூடத் திருத்தியெழுதப்படலாம். அல்லது அவற்றுக்குப் புது அர்த்தங்கள் உருவாக்கப்படலாம். 

அறிவியலில் புது வரலாறொன்று படைக்கப்படுவதற்கு சாட்சியமாகி, அந்த வரலாற்று முக்கியம் வாய்ந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களென்றும் பெயரை நாம் பெறப்போகிறோமா? இல்லையா? என்பதை இன்னும் சில நாட்களில் தெரிந்துகொள்வோம்.


March 14, 2015

ஹாய் கமலி…..!

பிப்பிரவரி மாதம் முதல் வாரத்தில் நான் ”ஜன்னல்” இதழுக்காக எழுதிய சிறுகதை ”ஹாய் கமலி....!” வாசகர்கள் வாசிப்பிர்க்காக.......



நான் இன்றைக்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதை மகிழ்ச்சியென்று சொல்ல முடியாது. இதற்குமேல் இதைத் தொடர முடியாதென்ற கட்டாயத்தில் எடுத்துவிட்ட முடிவால் உண்டான, ஒரு இறுக்கம் குலைந்த நிலையென்று சொல்லலாம். ஆம்! திலீபனிடம் எப்படியும் இன்று நான் கேட்டுவிட வேண்டும். பதினைந்து வருடங்களாக என் மனதுக்குள் பூட்டிவைத்துக் காத்திருக்கும் உணர்ச்சிகளுக்கு, ஒரு பதிலைத் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வளவு காலமும் எதையும் கேட்காமல், எதுவுமே சொல்லாமல் காலத்தைக் கழித்தது போதும். இன்று நானே அவனிடம் மனம் திறந்து பேசிவிட வேண்டும். முன்னர் திலீபன் என்னருகில் இல்லாத நேரங்களிலெல்லாம் தனிமையில்தான் நான் அதிகம் இருந்திருக்கிறேன். என்னுடனேதான் நான் பேசிக்கொண்டிருப்பேன். ஆனால், இப்பொது என் பேச்சைக் கேட்க நீங்கள் இருக்கிறீர்கள். இதுவரை உங்களுடன் என்னென்னவோவெல்லாம் பேசியிருக்கிறேன். ஆனால், என்னைப் பற்றி மட்டும் பேசியதில்லை. அதை எனக்கே எனக்கான இரகசியமாய்ப் பொத்திப் பாதுகாத்து வைத்திருந்தேன். இப்போது, உங்கள் மேல் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. என்னை, என் உணர்வை மிகச் சரியாக உங்களால் புரிந்துகொள்ள முடியுமென்ற நம்பிக்கை அது. இனி, என்னைப் பற்றி உங்களிடம் எந்தத் தயக்கமும் இல்லாமல் சொல்லலாம். 'நான் திலீபனிடம் என்ன கேட்டுவிடப் போகிறேன், நான் ஏன் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்னும் கேள்விகளுக்குப் பதிலை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். அதற்கு முன்னர் திலீபன் யாரென்று உங்களுக்கு நான் சொல்ல வேண்டும்.


என் பெற்றோர்கள் சொந்த நாட்டில் வாழமுடியாத சூழ்நிலையில், ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். முப்பது வருடங்களுக்கு முன்னரே தாங்கள் ஜேர்மனி வந்ததாக என் அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன். வடக்கு ஜேர்மனியிலுள்ள சிறு கிராமமொன்றில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கிய என் பெற்றோர் முப்பது வருடங்களாக வேறெங்கும் குடிபெயராமல் அங்கேயே வசித்து வருகிறார்கள். அந்தக் கிராமத்துக்கும், அவர்களுக்குமான தொடர்பு, ஏதோவொரு வகையில் தாய்மண் பாசம்போலப் பிரிக்க முடியாததாகிவிட்டது. ஜேர்மனியில் வேறு எத்தனையோ நகரங்கள் இருந்த போதும், எந்த நகரத்துக்கும் குடிபெயராமல் அந்தக் கிராமத்திலேயே அவர்கள் வாழ்ந்து வந்ததற்குக் காரணமும் இருந்தது. பெயருக்குத்தான் அது கிராமம். நகரத்துக்குரிய அனைத்து வசதிகளையும் கொண்ட அழகிய சொர்க்கமது. பனித்துளி படிந்த புல்வெளி, எங்கும் படர்ந்திருக்கும் அழகு பூமியது. வெள்ளைக் குதிரைகளில், ஜேர்மன் தேவதைகள் அந்தப் புல்வெளிகளூடாகப் பாய்ந்து செல்வதைப் பார்ப்பதே அதிஷ்டம்தான். ஐரோப்பாவிலேயே குதிரைக்குப் பெயர்போன இடம் எங்கள் கிராமம்தான். ஒலிம்பிக் போட்டிகளுக்குக் குதிரைகள் தயாராவது இங்குதான். வருடா வருடம் உலகலாவிய குதிரைக்கான போட்டிகள் நடைபெறுவதும் இங்குதான். இங்கிருக்கும் ஒவ்வொரு குதிரையின் விலையும் யானை விலை பெறும். சாதாரண யானையல்ல, தேவேந்திரனின் ஐராவதம் என்ன விலையோ அந்த விலை. இலட்சம் யூரோக்களுக்குக் குதிரை என்பது மிகச் சாதாரணம். மில்லியன் டாலர்களுக்கு குதிரைகள் இங்கே விலை போயிருக்கின்றன. குதிரைகள் வளர்க்கும் பண்ணைகள் வரிசையாக உள்ள கிராமம். ஆகமொத்ததில் பணக்கார ஜேர்மனியர்கள் வாழும் அழகிய கிராமம். பார்த்தீர்களா? நான் என் கதை சொல்ல வந்து குதிரையின் கதையைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.


எங்கள் கிராமத்தில் எங்கள் தாய்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் வேறு பல குடும்பங்களும் இருக்கின்றன. எங்கள் வீட்டிற்கு இரண்டு வீடுகள் தள்ளியுள்ள வீட்டில்தான் திலீபன் வாழ்ந்து வருகிறான். திலீபனின் பெற்றோரும், என் பெற்றோரும் ஒன்றாகவே ஜேர்மனிக்கு வந்ததால், இன்றுவரை ஒன்றாக, ஒரு கிராமத்தில் நட்புடன் பிரியாமல் வாழ்ந்து வருவதாகச் சொல்வார்கள். திலீபனும், நானும் இங்குதான் பிறந்தோம். என்னைவிடச் சிலமாதங்கள் முந்திப் பிறந்தவன் அவன். எனக்கு இப்போ இருபத்தியாறு வயதாகிறது. சிறுவயதிலிருந்து திலீபனுடனேயே சேர்ந்து விளையாடுவேன். எப்போதும், எங்கேயும் திலீபன்தான். என்னை விட்டுவிட்டுத் திலீபன் எங்கும் சென்றதில்லை. இருவர் படித்த பாடசாலையும் ஒன்றாகவே இருந்ததால், தூக்கம் தவிர்ந்து நாம் பிரிந்திருக்கும் சமயம் இல்லையென்றே சொல்லலாம். என்னைச் செல்லமாகக் 'கமலி' என்றுதான் திலீபன் அழைப்பான். என்பெயரை அவன் 'கமலி' என்று உச்சரிக்கும் போதெல்லாம், உள்ளங்க்காலிருந்து தலைவரை மின்சாரம் பாய்வதுபோல உணர்வேன். இவையெல்லாம் என் பதினான்கு வயது வரைமட்டும்தான். அதற்குப் பின்னர் எல்லாமே மாறத்தொடங்கியது.


என் உடலில் பருவமாற்றங்கள் படிப்படியாகத் தங்கள் கட்டமைப்புத் தொழிலை ஆரம்பிக்கத் தொடங்கின. என்னில் ஏற்பட்ட மாற்றங்கள் திலீபனிடமிருந்து மெதுமெதுவாய் என்னைப் பிரிக்கத் தொடங்கியது. ஆனால் திலீபனிடமிருந்து பிரிவதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. நான் திலீபனுடன் பழக விரும்புவது என் பெற்றோர்களுக்கும் பெரும் மனவேதனையைக் கொடுத்தது. என் பெற்றோர்கள் தங்களுக்குள் என்னைப் பற்றிப் பேசிக் கவலைப்படுவதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அப்பாவுடன் அழுதபடி பேசிக்கொண்டிருக்கும் அம்மா, நான் வருவதைக் கண்டதும் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சிரித்தபடி என்னை வரவேற்கும்போது, அந்த முகம் எனக்குப் பல கதைகளைச் சொல்லும். படிப்படியாக நிஜங்களைப் புரிய ஆரம்பித்தேன். திலீபனின் பெற்றொர்களும் நான் அவனுடன் பழகுவதை விரும்பவில்லை என்பதை மெல்லத் தெரிந்து கொண்டேன். திலீபன் கூட என்னை விட்டு ஒதுங்குவது போலவே தெரிந்தது. இருவரும் ஒரே பாடசாலையில் அப்போதும் படித்து வந்ததால், அவனால் என்னுடன் பேசாமல் இருக்க முடிந்ததில்லை. ஆனால் அவன் பேச்சில் முன்னர் இருந்த அந்தப் பழைய திலிபனைத் தொலைத்துவிட்டிருந்தான். வாலிபனாய் மாறிவிட்டிருந்த அந்த அழகிய திலீபனை என்னால் முன்னைவிட அதிகமாய் விரும்பாமல் இருக்க முடியவில்லை. வாழ்ந்தால் திலீபனுடன் மட்டும்தான் என்று முடிவெடுக்கும்படி அவனை மனதுக்குள் ஆராதிக்கவே தொடங்கினேன். என் ஒவ்வொரு செல்லிலும் திலீபனின் நினைவுகள் நிறையத் தொடங்கின. காதல் என்னும் உணர்வைத் திலீபன் என்னும் ஆண்மகன் மூலமாக முழுமையாக உணரத் தொடங்கினேன். ஆனால், என் காதலை நான் அவனிடம் சொல்லிவிடவில்லை. என் மனப்பெட்டியினுள் பத்திரமாய் அதைப் பூட்டியே வைத்திருந்தேன். திலீபன் தன் நண்பர்களுடன் அதிக நேரங்களைச் செலவிட ஆரம்பித்தான். மெல்ல மெல்ல என்னைத் தவிர்க்கவும் தொடங்கினான். அந்த நிகழ்ச்சி நடக்கும் வரை இது தொடர்ந்தது.


பாடசாலையின் மூலம் எங்கள் வகுப்பு மாணவர்கள், நீச்சல் குளத்துக்கு அழைத்துச் செல்லப்படுவது வழக்கம். நீச்சல்குளம் இருக்கும் கட்டடம் பாடசாலைக்கு மிக அருகிலேயே இருந்தது. பலவிதமான நீச்சல் போட்டிகள் நடைபெறும் நீச்சல் குளங்களையுடைய கட்டடமது. அருகருகே பத்துக்கும் மேற்பட்ட நீச்சல் குளங்கள் அந்தக் கட்டடத்தினுள் இருக்கின்றன. ஒவ்வொரு நீச்சல் குளமும் ஒவ்வொரு வகை. சிறுவருக்கானது, 'டைவ்' செய்வதற்கேற்ப ஆழமானது, ஆழமற்றது, சூடானது, குளிரானது எனப் பலவித நீச்சல் குளங்கள் அங்கிருக்கின்றன. வழமையாகப் பாடசாலையிலிருந்து வந்து போகும் நீச்சல் குளமென்பதால், யாரும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. மாணவர்கள் ஒவ்வொருவரும் தமக்கு விரும்பிய இடங்களில் குளிக்க ஆரம்பித்தார்கள். போட்டிக்கு நீந்துபவர்கள் ஒருபுறமும், 'டைவ்' செய்ய விரும்புபவர்கள் ஒருபுறமுமென பிரிந்து சென்றார்கள். திலீபன் தனியாக ஒரு நீச்சல் குளத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தான். நானும் அவனைப் பின் தொடர்ந்தேன். அவன் அந்த நீச்சல் குளத்தின் மறுகரையை அடைந்து, பாய்வதற்கான பலகையில் ஏறி நின்று கொண்டான். அவன் பாயும் அழகை ரசிப்பதற்காக அங்கிருக்கும் இருக்கையில் நான் அமர்ந்து கொண்டேன். நான் இருப்பதை திலீபன் காணவில்லை. ஒவ்வொரு நீச்சல் குளத்திற்கும் பாதுகாப்புக்குப் பொறுப்பாளராக ஒருவர் எப்போதும் நின்றுகொண்டிருப்பார். நாங்கள் நின்ற நீச்சல் குளத்தில் நின்றுகொண்டிருந்த பாதுகாவலரிடம் சென்ற மாணவியொருத்தி தனக்கு இடுப்புக்குக் கட்டும் பட்டி தேவையெனக் கேட்க, அதை எடுத்துவர அவர் தன் அறையை நோக்கிச் சென்றார். அந்தச் சமயத்தில் திலீபனும் நீச்சல் குளத்தில், தலை கீழ்நோக்கிய நிலையில் 'டைவ்' அடித்தான். மிகவும் அழகானதொரு பாய்ச்சல். தண்ணீர் பக்கங்களில் சிதறித் தெறிக்காமல், கூரான அம்புபோலப் பாய்ந்த பாய்ச்சல். சில நொடிகள் சென்றன, கீழே சென்ற திலீபன் மேலே வரவில்லை. என்னுடைய உள்ளுணர்வு எனக்கு எதையோ சொல்லியது. அடுத்த கணமே நான் நீச்சல் குளத்தினுள் பாய்ந்தேன். நீச்சல் குளத்தின் அடியில் திலீபன் ஏதோவொரு விபரீதமான நிலையில் அசைந்தபடி கிடந்தான். ஆபத்து என்னவென்று உடனே புரிந்தது. அவன் தலை முடியைப் பிடித்தபடி மேல்நோக்கி இழுத்து வந்தேன். என் பதட்டம் கண்டு தொடர்ச்சியாகப் பலர் குளத்தில் பாய்ந்தனர். திலீபனை மெல்லத் தரையில் கிடத்தினர். ஏதோவொரு காரணத்திற்காக, அந்த நீச்சல் குளத்தின் ஆழம் குறைக்கப்பட்டு அடித்தரை உயர்த்தப்பட்டிருந்திருக்கிறது. இதைச் சரியாகக் கணித்துவிடாமல் திலீபன் பாய்ந்திருக்கிறான். தலை நேராக ஆழம் குறைந்த தரையில் மோதி அரை மயக்கத்துக்குள்ளாகிவிட்டான். உடன் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டு எந்தப் பிரச்சனையுமில்லாமல் திலீபன் வீடு திரும்பினான். ஆனால் அவனது உயிரைக் காப்பாற்றியது நான்தான் என்ற பேச்சு மட்டும் எங்கும் பரவியது.


திலீபனின் அப்பாவும், அம்மாவும் என் கைகளைப் பற்றிக் கண்ணீர் வடித்தார்கள். கையெடுத்துக் கும்பிட்டார்கள். 'எங்கள் குலதெய்வத்தைக் காப்பாற்றிய பெருந்தெய்வம் நீ' என்றார்கள். அன்றிலிருந்து எல்லாம் மாறிப் போனது. நான் திலீபனைச் சந்திப்பதில் யாருக்கும் எந்த மனத்தடையும் அதற்குப் பின்னர் இருக்கவில்லை. தன்னுடைய உயிரைக் காப்பாற்றினேன் என்ற நன்றியோ, என்னவோ? திலீபனும் என்னுடன் பழைய திலீபன் போல நட்புடன் பேச ஆரம்பித்தான். சொல்லப் போனால் இன்னும் அதிக நட்புடன் பழக ஆரம்பித்தான். பதினேழு வயதில் கல்லூரிப் படிப்பிற்காக இருவரும் வேறுவேறு திசை நோக்கிப் பயணமானோம். அதன் பின்னரும் விடுமுறை நாட்களில் நாம் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். என் காதல் அதிகரித்துக்கொண்ட்டே சென்றது. ஆனால், என் காதலைச் சொல்வதற்கு எனக்குத் தைரியம் மட்டும் வந்ததில்லை. திலீபன் என்னைக் காதலிக்கின்றானா என்பதும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவன் என்னைக் காதலிப்பான் என்னும் நம்பிக்கை எனக்குள் இருந்தது. காலம் மெல்ல மெலக் கரையத் தொடங்கியது. நாம் மேற்படிப்பை முடித்துப் பட்டங்களுடன் வீடுகளுக்கு மீண்டும் வந்தாகிவிட்டது. திலீபனை வரன் கேட்டுப் பல இடங்களிலிருந்து ஆட்கள் வர ஆரம்பித்தனர். அவன் பெற்றோர்களும் அவனுக்குத் திருமணம் செய்து வைப்பதில் தீவிரம் காட்டினர். ஆனால் எதுவும் அமையவில்லை. திலீபனே அனைத்தையும் நிராகரிப்பதாகக் கேள்விப்பட்ட போதுதான் என் மனதில் அந்த நம்பிக்கைப் பூ, பூக்க ஆரம்பித்தது. "நான் அவனை விரும்புவது போல, அவனும் என்னை விரும்புகிறானோ? அதனால்தான் இத்தனை காலமாக அனைத்தையும் நிராகரிக்கிறானா?" கேள்விகளால் நிறைந்தேன் நான். மகிழ்ச்சியில் நனைந்தேன். இனி நானே என் காதலை அவனிடம் சொல்லிவிட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தேன். என்ன நடந்தாலும் பரவாயில்லை. யார் தப்பாக நினைத்தாலும் கவலையில்லை. என் காதல் சொல்லும் நேரம் இதுதானெனத் தீர்மானித்தேன்.


இதோ! இன்று திலீபனிடம் என் காதலைச் சொல்லச் சென்று கொண்டிருக்கிறேன். உறுதியாகச் சொல்லிவிடுவது என்ற தீர்மானத்திலேயே சென்று கொண்டிருக்கிறேன். இன்று சொல்லிவிடுவதென்று நான் எடுத்த முடிவினால், என் மனம் பாரம் குறைந்தது போல ஆகியிருக்கிறது. தெளிவடைந்துமிருக்கிறது. இப்படியே சென்று அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்தபடி என் காதலைச் சொல்ல வேண்டும். ஆனால், அவன் முகத்தைப் பார்ததும் அதற்கான தைரியம் எனக்கு வருமா? சிறுவயதிலிருந்து அவனுடனே சேர்ந்து, அவன் நினைவாகவே இருந்து, அவனுக்காகவே வாழ்ந்துவரும் என்னால், அவன் முகம் வாடிவிடுவதைப் பார்க்க முடியுமா? அப்படி அவன் முகம் வாடிவிட்டால், அப்புறம் நான் உயிருடன் இருக்கத்தான் முடியுமா?


குருட்டுத் தைரியத்தில் அவனைப் பார்த்துக் காதலிப்பதாகச் சொல்லச் செல்வதாக உங்களிடம் நான் கூறிவிட்டேன். ஆனால், நான் உங்களிடம் இதுவரை கூறாத ஒன்றும் இருக்கிறது. அவன் முகத்தைப் பார்த்ததும் காதலைச் சொல்லும் என் முடிவு மாறிவிடலாம். என் காதலைச் சொல்லாமலே நான் திரும்பலாம். நான் சாகும்வரை, சொல்லப்படாத காதலாகவும் என் காதல் மாறிப் போகலாம். 'கமலக்கண்ணன்' என்னும் பெயருடன் ஆணாகப் பிறந்தவன் நான். மெல்ல மெல்லப் பெண்மையை உணர்ந்து, பதினான்கு வயதில் முழுமையான பெண்ணாகவே என்னைப் புரிந்து கொண்டு, பின்னாட்களில் பெண்ணாகவே மாறிவிட்டவள். நான் பெண்ணாக மாறிவிட்டாலும், ஆணென்னும் என் பழைய அடையாளத்தை என்னுடன் பழகியவர்களால் மனதிலிருந்து அழிக்க முடியவில்லை. நான் ஆணாகப் பிறந்திருந்தாலும், என்றும் ஆணாக வாழ்ந்ததில்லை. மனதாலும், நினைவாலும் பெண்ணாகவே வாழ்ந்து வருகிறேன். பெண்களுக்குரிய எல்லா விருப்பங்களும், தேவைகளும் எனக்குமிருக்கிறது. கமலக்கண்ணனை, 'கமலி' என்று காரணமில்லாமல் திலீபன் அழைக்கத் தொடங்கியபோதே, என் பெண்மையைப் புரிய ஆரம்பித்துவிட்டேன். திலீபனை என் பெண் மனம் அப்போதே விரும்பத் தொடங்கி விட்டது. இன்று என் காதலை நான் சொல்லிவிடலாம். அதனால் என் திலீபன் காயப்படக் கூடாது. நான் என் காதலைச் சொல்வதோ, சொல்லாமல் விடுவதோ எதுவும் நடக்கலாம். 'அட! இதோ திலீபன் வந்துவிட்டான்.


'"ஹாய் கமலி…..!"