வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

November 29, 2015

நிழல் செய்யும் மாயை



இயற்பியல் விதிகளின்படி ஒளியின் வேகத்தை விட அதிக வேகமாக எதுவுமே நகரமுடியாது என்பது இன்று உள்ள முடிவு. ஆனால் நான் இப்போது சொல்லப் போவதைப் படித்துப் பாருங்கள். கொஞ்சம் தலையைச் சுற்றும். கொஞ்சம் ஏமாற்றுவது போலத் தோன்றும். ஆனாலும் புரிகிறதாவென்று பாருங்கள்.

ஒளி, ஒரு பொருளில் படும்போது அந்தப் பொருளின் நிழல் நிலத்திலோ, சுவரிலோ விழுகிறது. சரி இப்படி வைத்துக் கொள்ளுங்கள். சூரிய ஒளி உங்களின் மேல் படும்போது, உங்கள் நிழல் நிலத்தில் விழுகிறது. சூரிய ஒளி உங்கள் உடலில் பட்ட அந்தக் கணத்திலேயே நிழலும் நிலத்தில் தோன்றிவிடுகிறது. சூரிய ஒளி மறையும் அந்தக் கணத்தில் நிழலும் இல்லாமல் போய்விடும். இதிலிருந்து, ‘ஒளி என்ன வேகத்தில் பயணம் செய்கிறதோ, அதே வேகத்தில் நிழலும் பயணம் செய்கிறது’ என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.




இப்போது, நான் சொல்லப் போகும் இந்தக் கேள்வி அல்லது சந்தேகம், உங்கள் மனதில் தோன்றியிருந்தால், நீங்கள் இயற்பியலில் அல்லது அறிவியலில் வல்லமையுள்ளவராக இருப்பவர் என்று அர்த்தம் கொள்ளலாம். வரவில்லையென்றாலும் பரவாயில்லை. அதுதான் இப்போது தெரிந்துவிடப் போகிறதே! அந்தக் கேள்வி இதுதான். ஃபோட்டான் என்னும் சிறு துகள்கள் பயணம் செய்வதைத்தான் நாம் ஒளி என்கிறோம். அதாவது ஒளிக்குப் பயணம் செய்வதற்குரிய துகள்கள் இருக்கின்றன. ஆனால் நிழல் என்பது ஒளியில்லாத இடம்தானே! அதாவது பயணம் செய்யப் ஃபோட்டான்களோ, வேறு எதுவோ இல்லாத ஒன்று அது. ஒன்றுமேயில்லாத ஒன்று எப்படி நகர முடியுமா? அப்படியென்றால், நிழலுக்கு எப்படி வேகம் இருக்க முடியும்?”

உண்மையைச் சொல்லுங்கள், இந்தக் கேள்வி உங்கள் மனதில் தோன்றியதா? ஆம் என்றால், உங்கள் தோளில் நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள். சரி விசயத்துக்கு வரலாம். நிழலுக்கு வேகம் உண்டா என்று கேட்டால், ஒளி நகரும் வேகத்தில் நிழலும் நகர்வதை நாம் கண்கொண்டு பார்க்கிறோம். இதை ஒரு மாயையென்று நாம் சொல்லப் போகிறோமா? பலரிடம் ஒரு கருத்து உண்டு. இருட்டு என்ற ஒன்று இல்லை. ‘ஒளி இல்லாத இடம்தான் இருட்டு’ என்பார்கள். ஆனால், இந்தக் கூற்றுத் தவறானது. பிரபஞ்சத்தில் ஆரம்பத்தில் இருந்தது இருள்தான். அதன் பின்னர்தான் ஒளியே தோன்றியது. இப்போதும் கூட, பிரபஞ்சத்தின் 95 சதவீதமான பகுதி இருட்டுத்தான். மத வேதங்களும் இதையே வலியுறுத்துகின்றன. ஒளி வருவதற்கு முன்னரே இருப்பது இருட்டு என்றால், ஒளி இல்லாத இடம்தான் இருட்டு என்னும் கருத்துத் தவறுதானே! சரி, நாம் எங்கேயோ வந்துவிட்டோம்.

நுண் துகள்கள் எதுவும் இல்லாமல், ஒன்றும் நகர முடியாது என்னும் கருத்தை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டுப் பார்ப்போம். இப்போது, ஒளி நகரும் வேகத்தில்தான் நிழலும் நகருகிறது என்பது கண்களால் நாம் புரிந்து கொள்ளும் ஒரு செயலாகத் தெரிகிறது. அதாவது ஒளி ஒரு செக்கனுக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்தால், நிழலும் மூன்று லட்சம் கிலோ மீட்டர்கள் செக்கனுக்குப் பயணம் செய்கிறது. என்ன சரிதானே!

இதிலிருந்து ஒளியைவிட, நிழல் சற்றே வேகமாகப் பயணம் செய்கிறது என்று எடுக்கலாமா? அதாவது இயற்பியல் விதி மீறப்படுகிறது. இல்லை இதுவும் மாயைதானா?

நிழலும், ஒளியும் ஒரே வேகத்தில் நகர்கின்றன அல்லவா? இயற்பியல் விதி என்ன சொல்கிறது, ஒளியின் வேகத்தை மிஞ்சி எதுவும் நகரவே முடியாது. என்றல்லவா?. நிழலும் ஒளியின் வேகத்தை மிஞ்சிவிடவில்லை. இப்போது, நான் சொல்லப் போவதைக் கவனியுங்கள். ஒளி எப்போதும் உங்கள் மேல் பட்டுக் கொண்டிருக்கிறது. நீங்கள் மாறவில்லை. ஆனால், உங்கள் நிழல் பெரிதாகிக் கொண்டிருக்கிறது. ஒளி படும் அதே கணத்தில் நிழல் தோன்றி, அந்த நிழல் பெரிதாக வேண்டுமென்றால், அது ஒளியைவிடச் சற்றே வேகமாக நகர்ந்திருக்க வேண்டுமல்லவா? என்ன, நான் சொல்வது புரிகிறதா? உங்கள் சிறிய உருவத்தை ஒளி நிரப்பும் நேரத்தை விட, உங்கள் உருவத்தைப் போல இருமடங்கு பெரிதான நிழலை நிரப்ப, அது ஒளியைவிட வேகமாக நகர்ந்திருக்க வேண்டுமல்லவா?

-ராஜ்சிவா-


November 3, 2015

சிவப்புப் பறவைகள்

ஏலியன்கள் பூமிக்கு வந்திருக்கலாம் என்பதை அடிப்படையாகக் கொண்டு 'இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?' என்னும் ஒரு தொடரை எழுதியிருந்தேன். அது உயிர்மைப் பதிப்பகமூடாகப் புத்தகமாக வெளிவந்து, நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.


அந்தத் தொடர் வெளிவந்ததிலிருந்து 'ஏலியன்கள்' என்று சொன்னாலே, என்னையும் அங்கே உள்ளே இழுத்துவிடுவது பரவலாக நடைபெறும் நிகழ்வுதான். ஏலியன்கள் சம்மந்தமாகச் சந்தேகங்கள் கேட்டுப் பலர் எழுதிய அஞ்சல்களும் எனக்கு வந்திருக்கின்றன. அப்படி வந்த அஞ்சல்களில் பொதுவாக இருக்கும் கேள்வி, "ஏலியன்கள் ஏன் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்குலக நாடுகளிலேயே தோன்றுகின்றன. இலங்கை, இந்தியா போன்ற நம் நாடுகளுக்கு வருவதில்லை?" என்பதாக இருக்கும். அப்போது அவர்களுக்கு நான் விளக்கமான பதில் சொல்லியிருந்தாலும், அந்தப் பதில்களைத் திடமான நிலைக்குக் கொண்டுவரும் சம்பவங்கள் கடந்த வாரத்தில் நடைபெற்றிருக்கின்றன. அந்தச் சம்பவங்கள் உண்மையெனின், அந்த உண்மையும் மறைக்கப்பட்டிருக்கிறது. முதலில் அந்தச் சம்பவம் என்னவென்று பார்ப்போம்.



ஏலியன்கள் நம் நாடுகளுக்கு ஏன் வருவதில்லையென்று கேட்டவர்களை, ஆச்சரியமும், அச்சமும் உச்சத்தில் கொண்டுசென்று வைக்கப் போகும் சம்பவம் இது. இது உண்மையில் நடந்ததா? இல்லையா? என்று யாரும் என்னிடம் கேட்காதீர்கள். நடந்ததாக அடித்துச் சொல்கிறது ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ (Hindustan Times). வேறுபல ஊடகங்களும் அதை உறுதிப்படுத்துகின்றன. இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி என்பதால் அந்தச் சம்பவம் இந்தியாவில் நடைபெறிருக்கலாம் என்ற உங்கள் ஊகம் சரியானதுதான். அந்தச் சம்பவம் என்ன தெரியுமா?

கடந்த ஒரு வாரமாக ஏலியன்கள் என்று சொல்லப்படும் வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும்தட்டுகள் (UFO) டில்லியில் வந்து சென்றிருக்கின்றன. டில்லியில் எங்கு வந்து சென்றிருக்கின்றன தெரியுமா? இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தின் (Indira Gandhi International) அஓடுபாதைகளுக்குள் வந்து சென்றிருக்கின்றன. ஒரு தடவை, இரண்டு தடவைகள் அல்ல, ஐந்துக்கும் மேற்பட்ட தடவைகள் வந்து சென்றிருக்கின்றன. ஏலியன்கள், பறக்கும்தட்டுகள் வந்தன என்று சொன்னாலே போதும், வாய்விட்டுச் சிரித்துப் பகடி பண்ணப் பலர் இருக்கிறார்கள். அவர்களிலும் தப்பு இல்லை. காரணம் ஏலியன்களைக் கண்டதாகச் சொல்லும் பலர் கதையளந்து விட்டுச் சென்றதால், அனைத்துமே கேலிக்குரியதாகி விடுகின்றன. ஆனால், இம்முறை நடந்த சம்பவங்கள் அமெரிக்காவிலோ, மெக்சிக்கோவிலோ, பெல்ஜியத்திலோ நடைபெற்றவையில்லை, சிரித்துவிட்டு நகர்ந்து போக. இந்தியாவில், அதுவும் தலைநகரின் மிகமுக்கியமான இடத்தில். ஏலியன்கள் வந்து போயிருக்கிறார்கள். உங்கள் அருகிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பதால், இவை உண்மையானவைதானா? இல்லை பொய்யானவையா? என்று அறிவதில் உங்களுக்கு எந்தப் பிரச்சனையும், சிரமமும் இருக்கப் போவதில்லை.

நம்நாட்டு ஊடகங்களெல்லாம் நடிகர்சங்க தேர்தலிலும், மாட்டுக்கறி விவாதத்திலும் முழ்கிப் போயிருக்க, அந்தச் சோற்றுக்குள் இந்த ஏலியன் பூசனிக்காய் மறைக்கப்பட்டிருக்கிறது. எந்தத் தொலைக்காட்சியும் இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. இனியும் வாய் திறக்காமல் இருக்கப் போகின்றனவா என்று பார்க்கலாம்.



நடந்தது இதுதான்…………!


கடந்த வாரம், அக்டோபர் மாதம் 27ம் தேதி காலை 7:30 மணியளவில், இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் பணிபுரியும் ஒரு பணியாளர் 29ம் இலக்க ஓடுபாதைக்கு (Runway) மேலே ஒரு இனம் தெரியாத ஏதோவொன்று வானத்தில் மிதந்துகொண்டிருந்ததைக் கண்டார். அவருக்கு அது என்னவாக இருக்குமென்பதில் பெரும்குழப்பமிருந்தது. அதனால் அந்தச் சம்பவம் எந்தவிதமான சலசலப்புமிலாமல் அன்றைய தினம் அடங்கிப் போனது. ஆனால், அடுத்தநாள் புதன்கிழமை இரவு 10:15 மணியளவில், அதே 29ம் இலக்க ஓடுபாதைக்கு வந்து சேர்ந்த ‘எயார் விஸ்டாரா’ (Air Vistara) விமானத்தின் விமானி, ‘நான் விமானத்தை இறக்கும்போது, லேசர் வெளிச்சக் கற்றைகள் பாய்ச்சப்பட்டதால் தடுமாற்றத்துடன் விமானத்தைத் தரையிறக்க வேண்டியிருந்தது’ என்று முறையிட்டார். தரையிலிருந்து யாரோ லேசர் ஒளியைச் செலுத்துகிறார்களென்றுதான் விமானி நினைத்திருந்தார். ஆனால், அந்த விமான நிலையத்தின் சுற்றுவட்டாரத்தில் அப்படியொரு சம்பவம் தரையிலிருக்கும் மனிதர்களால் ஏற்படுத்தியிருக்கச் சாத்தியமேயில்லை என்று தெரிந்ததும், டில்லியில் அதிகாரிகளிடையே சிறிது பதட்டம் தொத்திக் கொண்டது.

இவற்றின் உச்சக்கட்டமாக, 30ம் தேதி வெளிக்கிழமையன்று மூன்று தடவைகள் மூன்று வெவ்வேறு நேரங்களில், அதே விமானநிலையத்தில் பறக்கும்தட்டுகள் தெரிந்தன.

காலை 10:44 மணியளவில், விமானப் பறப்புகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கட்டுப்பாட்டு அறையில் (Air Traffic Controller - ATC) அமர்ந்திருந்த இந்திய விமானப்படை அதிகாரியொருவர் (IAF) ஓடுபாதை 9-27 இற்கு மேலாக ஒரு பறக்கும்தட்டு பறந்து கொண்டிருப்பதாக முறைப்பாடு செய்தார். அத்துடன் தொடர்ச்சியாக, 10:50 மணிக்கு ஒன்றும், 10:55 மணிக்கு ஒன்றுமாக மூன்று பறக்கும்தட்டுகளை அவர் கண்டதாக அறிவித்தார். உடனடியாக விமானநிலையத்திலிருந்த இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரொன்று பறக்கும்தட்டுகளை நோக்கி அனுப்பப்பட்டது. ஆனால் ஹெலிகாப்டர்கள் எந்தப் பறக்கும்தட்டுகளையும் காணாமல் திரும்பி வந்தன.





காட்சிபடுத்தக்கூடிய எந்தவொரு சாட்சியும் இல்லாதபட்சத்தில் எதையும் செய்ய முடியாமல் போய்விட்டாலும், Intelligence Burereau, Central Industrial Security Force (CISF), Bureau for Civil Aviation Security ஆகியவற்றுடன் டில்லிப் போலீஸாரையும், இந்திய விமானப்படையையும் இறுக்கமான கண்காணிப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்துமாறும், சந்தேகப்படும்படியாகத் தெரியும் எந்தப் பொருளையும் சுட்டு வீழ்த்துமாறும் மேலிடத்திலிருந்து கட்டளை கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




இந்த நிலையில் இன்னுமொரு அதிர்ச்சியான செய்தி வேறொரு இடத்திலிருந்து வந்திருக்கிறது. இம்மாதம் 1ம் தேதி, அதாவது முந்தாநேற்றுப் பிற்பகல் 2 மணியளவில், கர்னாடகா மாநிலம் மைசூரின் சிறிய கிராமமொன்றில் சிவப்பு நிறத்தில் பறக்கும்தட்டு இறங்கியதை அந்தக் கிராம மக்கள் கண்டிருக்கிறார்கள். ஏழு வெவ்வேறு கிராமவாசிகள் கண்டதற்கான சாட்சிகளாக உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த மக்களுக்கு ஏலியன் என்னும் ஒன்று இருப்பதே தெரியாத நிலையில், அதைப்பற்றி சிந்திக்கக் கூட முடியாத நிலையில். வேற்றுலகவாசிகளைக் கண்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். அந்தச் சிவப்புப் பறக்கும்தட்டிலிருந்து இறங்கியவர்கள் மனிதர்களைப் போலவே இருந்ததாக நேரில் பார்த்த பெண்ணொருவர் சொல்லியிருக்கிறார்.

நம்நாடுகளுக்கு ஏலியனே வராதா? என்று கேட்டவர்களுக்கு பதில் சொல்லும் விதமாக இந்தச் சம்பவங்கள் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. இவை அனைத்துமே பொய்யாகவும், இட்டுக்கட்டிய கதைகளாகவும் இருக்கலாம். ஆனால் இந்தியாவுக்கு ரொம்பத் தூரத்தில் ஜேர்மன் நாட்டில் வசிக்கும் நான் இந்த விபரங்களை, உண்மையா? பொய்யா? என்று அறிந்து கொள்வதைவிட, இந்தியாவிலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் உங்களுக்கு அந்த உண்மையை அறிய அதிகச் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அதனால், இனி இந்த உண்மைகலைக் கண்டறிந்து சொல்லும் பொறுப்பு உங்களுக்கானது.

தற்செயலாக இந்தச் செய்திகள் உண்மையாக இருக்கும்பட்சத்தில், “இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்பட்டன?” என்பதையும் கண்டறியுங்கள். ஊடகங்கள் இவற்றை ஏன் இருட்டடிப்புச் செய்கின்றன என்றும் பாருங்கள்.

சரி, இனியாவது எழுதுகிறார்களா பார்க்கலாம்.

-ராஜ்சிவா-

குறிப்பு: இந்தப் பதிவு இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் செய்தியை அடிப்படையாகக் கொண்டது.


October 28, 2015

விர்கா - நனைக்கா மழை

மழையில் குடையில்லாமல் நிற்கும்போது நனையாமல் இருக்கமுடியுமா?

"குடையில்லாவிட்டால் என்ன, மழைக்கோட்டுடனோ, மரங்களின் கீழோ, வாகனத்தினுள்ளோ இருந்தால் ஏன் நனைய வேண்டும்?" என்று எதிர்க் கேள்விகள் கேட்பீர்கள்.

நான் கேட்பது, "நேரடியாகவே மழைபெய்யும்போது அதன் கீழ் நின்றால் நனையாமல் இருக்க முடியுமா?"

முடியும். சோவெனப் பெய்யும் மழையில் கீழ், நனைவோம் என்று நினைத்து நாம் நின்றால், நனையவே மாட்டோம்.

மழை பெய்யும்..... ஆனால், பெய்யாது....

நம்மை நனைக்காமல் பெய்யும் மழையொன்று உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா? அந்த மழைக்குப் பெயர் 'விர்கா' ((Virga). மீண்டும் சரியாகப் படித்துக்கொள்ளுங்கள். வயாக்ரா அல்ல விர்கா.


'விர்கா' என்னும் மழையின் நீர்த்துளிகள் நிலத்தை வந்தடைவதற்கு முன்னர் காற்றுவெளியிலேயே ஆவியாகிவிடுகின்றன. அதன் எந்தவொரு துளியும் நிலத்தில் விழுவதில்லை. அல்லது அதை இப்படியும் சொல்லலாம். மழை பெய்யும்போது, மழைத்துளிகள் நிலத்தை அடைவதற்கு முன்னரே ஆவியாகினால் அந்த மழையை 'விர்கா' என்பார்கள்.

குறைந்த ஈரப்பதம் (Humidity), அதிக வெப்பம் ஆகியவை இருக்கும் சமயங்களில், சிறிய துளிகளாக உருவாகும் மழையே, நிலத்தை வந்தடைவதற்கு முன்னர் ஆவியாகிவிடுகிறது.

இனி யாராவது விர்கா மழையைச் சந்தித்தால் சொல்லுங்கள்.

-ராஜ்சிவா-


October 22, 2015

இயற்பியலில் நடன நாயகன்


1980ம் ஆண்டு அளவில், கப்பலில் பணிபுரிந்துவிட்டு வந்த நண்பரொருவர் மூலமாக, எனக்கு 'சொனி வாக்மான்' (Sony Walkman) ஒன்று கிடைத்தது. முதன்முதலாக அப்படியானதொரு பாடல் கேட்கும் கருவியை நான் அன்றுதான் பார்த்தேன். இசை உலகைப் புரட்டிப்போடப்போகும் கண்டுபிடிப்பாக அது இருந்தது. நண்பர் வாக்மானுடன் ஒரு காசட்டையும் சேர்த்தே எனக்குக் கொடுத்தார். பிரமிப்புடன் அதைக் காதில் மாட்டிக் கேட்டேன்.


பெண்ணின் குரல்போன்ற கீச்சுக் குரலில், 'Dont stop till you get Enough' என்னும் ஆங்கிலப் பாடல் காதில் அதிர்ந்தது. கேட்ட மறுவினாடியே அந்தக் குரல் என்னை மயக்கியது என்றே சொல்ல வேண்டும். இதுவரை நான் கேட்டேயிராத வாக்மானின் துல்லியமான இசைத்தூறலில், அந்த இளைஞனின் குரல் வழிந்தோடியது. நான் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கே சென்றேன். அயல்நாட்டுப் பொருட்களின் வணிகம், விரல் நுனியில் இருக்கும் இன்றைய காலம்போல அல்ல அந்தக் காலம். ட்ரான்ஸ்சிஸ்டர் ரேடியோதான் நாம் கைகளில் வைத்திருந்த அதிகபட்ச தொழில்நுட்பக் கருவியாக இருந்த நேரம் அது. வாக்மான் எல்லாம் ‘ஐபோன்6’ ஐவிடப் பெறுமதியானவை.


பெண்குரல்போல ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரனான அந்த இளைஞனின் பெயர், 'மைக்கேல் ஜாக்‌ஷன்' என்று தெரிந்துகொண்டேன். கறுப்பு நிறம், வெள்ளை உடை, கூடைபோன்ற தலைமுடி ஆகியவற்றுடன் ஆடியோ காசெட்டில் சிரித்தபடி காட்சியளித்தான் அவன். அன்றிலிருந்து அவன் பாடல்களை விரும்பி ரசிக்கும் பலரில் நானும் ஒருவனானேன். பின்னாட்களில் மைக்கேல் ஜாக்‌ஷன், நடனத்திலும் உலகைக் கொள்ளையடித்தது தனிக்கதை.


இப்போது நான் மைக்கேல் ஜாக்‌ஷ்னை நினைவுகொள்வதற்கு ஒரு காரணமுண்டு. மைக்கேல் ஜாக்‌ஷனின் ‘லைஃப் ஷோ’ ஒன்றின் காணொளியை நான் மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் நேற்றுப் பார்க்க நேர்ந்தது. அதன் தொடர்ச்சியாக வந்த நினைவுகளே மேலே நான் எழுதியிருப்பவை. ஆனால், மைக்கேல் ஜாக்‌ஷனைப்பற்றி நான் சொல்லும் சாதாரணமான தகவல்களில் என்ன சுவாரஷ்யம் இருக்கப்போகிறது? அதனால், அறிவியலுடன் மைக்கேல் ஜாக்‌ஷன் இணைந்துகொண்ட ஒரு அரிய தகவலை இங்கு நான் உங்களுடன் பகிர்ந்து கொண்டால், அது சுவாரஷ்யமாக இருக்குமல்லவா? அதுவும் ஒரு இயற்பியல் சாதனையைச் செய்தார் என்றால் ஆச்சரியமாக இருக்குமல்லவா?


"என்ன மைக்கேல் ஜாக்‌ஷன் இயற்பியலில் சாகசம் செய்தாரா? மைகேல் ஜாக்‌ஷனுக்கும் அறிவியலுக்கும் என்ன சம்மந்தம்?" என்று வியப்பு வருகிறதல்லவா?


சரி...... அது என்னவென்று நாம் இப்போ பார்க்கலாம்.




ஆம்! அனைவரும் ஆச்சரியப்படும், இயற்பியலில் நடைபெறக் கடினமான ஒரு செயலைத் தனது மேடைகளில், சாகசமாக மைக்கேல் செய்துகாட்டியதை, உலகம் முழுவதும் வியந்தது என்னவோ நிஜம்.


1992ம் வருடங்களில் மைக்கேல் ஜாக்‌ஷன் ‘Smooth Criminal’ என்னும் பாடலை மேடைகளில் அற்புதமான நடனத்துடன் பாடிக்காட்டுவார். மேடை நிகழ்ச்சிகளில் மைக்கேல் ஜாக்‌ஷன் எப்படி நடனமாடுவார் என்பதை நீங்கள் நன்றாகவே அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடலின்போதும் ‘லீன்’ (Lean) என்னும் ஒரு வித நிலையில் மைக்கேல் ஜாக்‌ஷன் திடீரென நிற்பது அனைவரையும் வியப்பின் உச்சிக்குக் கொண்டுசென்றது. அதாவது பாடலின்போது, நடனமாடிக்கொண்டிருக்கும் மைக்கேல் ஜாக்‌ஷன், யாரும் எதிர்பார்க்காதபோது, நின்ற நிலையியே முன்னோக்கி 45 பாகை கோணத்தில் நிலத்தை நோக்கிச் சாய்வார். அப்போது அவரின் உடம்பு நேராக இருக்கும். ஒரு மனிதனால் புவியீர்ப்பு சக்திக்கு எதிராகச் செயப்படவே முடியாத ஒரு நிலை அது. ஒரு அதிசயச் செயல் என்றும் சொல்லலாம். அதாவது, புவியெதிர்ப்பு (Anti Gravity) விசையுடன் மைக்கேல் ஜாக்‌ஷன் தொழில்படுவதாக பலர் நினைக்கும் வண்ணம் அது இருந்தது. இதைப் பார்த்தவர்கள் அனைவரும் மைக்கேல் ஜாக்‌ஷன் மாஜிக் கலையைக் கற்று, இப்படிச் செய்கிறாரோ என்று நினைத்தனர். சிலர், மேடையில் கண்ணுக்குத் தெரியாத கறுப்புக் கயிறுகளின் உதவியுடன் அவர் இதைச் செய்கிறார் என்று கருதினார்கள். ஆனால் யாருக்கும் மைக்கேல் ஜாக்‌ஷன் உண்மையில் என்ன செய்தார் என்பது பல காலங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதனால், அவர் அணியும் அழகான காலணியை ‘ஈர்ப்புவிசையெதிர்ப்புக் காலணி’ (Anti Gravity shoe) என்று அழைத்தனர்.


புவியீர்ப்புக்கு எதிரான விசையுடன் ஒருவர் செயற்படுவது இயற்பியலில் ஒரு முக்கிய நிகழ்வு. இதைச்செய்வது அறிவியலில் எந்த அளவுக்குச் கடினம் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆனால், மைக்கேல் ஜாக்‌ஷன் தனக்கெனப் பிரத்தியேகமாக ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கி அதைச் செய்திருக்கிறார் என்பது பின்னர்தான் தெரியவந்தது. 45 பாகைக் கோணத்தில் சாய்ந்தபடி புவியீர்ப்புக்கெதிராக நிற்கும் நிலைக்கு உதவியது, மைக்கேல் ஜாக்‌ஷன் தனக்கென உருவாக்கிய சிறப்பான காலணிதான். அவர், தனது காலணியில் செய்த ஒருவகை நுட்பமான அறிவியல் தயாரிப்பின்மூலம், இந்தச் செயலைச் செய்யக் கூடியதாக இருந்தது.




தன் காலணியின் பாதப்பகுதியின் அடிப்பாகத்தை முக்கோண வடிவில் வெட்டியெடுத்து, அந்தப் பகுதியை மிகவும் பலமான பகுதியாக மாற்றி அமைத்துக்கொண்டார். மேடையில் நடனமாடும் வேளைகளில், அந்த மேடையி பதிந்திருக்கும் பலமான ஆணியென்று அந்த முக்கோணப்பகுதியில் இறுக்கமாக பொருந்திக்கொள்ள மைக்கேல் நின்று கொள்வார். அவர் அப்படி நிற்பதற்குத் தேவையான சில நொடிகள் நேரத்திற்கு, அவர் பார்வையிலிருந்து மக்களைத் திசைதிருப்ப வேறு ஒரு நிகழ்வு அந்த மேடையில் நடைபெறும். அந்த ஆணியில் காலணி பலமாகப் பொருந்தியதும், அதன் வலிமையைப் பயன்படுத்தி மைக்கேல் கீழ்நோக்கிச் சரிவார். அவரைக் கீழே விழாதவாறு, அவரது காலணியும், மேடையில் பொருத்தப்பட்ட ஆணியும் வைத்துக் கொள்ளும். பல மேடைகளில் இதைச் சக கலைஞர்களுடன் சேர்ந்தும் செய்வார். இது சாதாரணமாகச் செய்யக் கூடிய ஒரு செயலல்ல. மிகுந்த பயிற்சி அதற்குத் தேவை. அத்துடன் அதற்கென வடியமைக்கப்படும் காலணியும் மிகவும் பலமுள்ளதாக இருக்க வேண்டும். மேடையிலுள்ள ஆணியும் குறித்த நேரத்துக்கு மட்டும் மேலே வந்து, பின்னர் கீழே செல்லக் கூடியதாக அமைக்கப்பட வேண்டும். இவையெல்லாவற்றையும் மிக நேர்த்தியாகச் செய்துகாட்டி மேடைகளில் பெரும் பாராட்டுகளைப் பெற்றார் மைக்கேல். இயற்பியல் விதிகளுக்கு எதிராகச் செயல்படுகிறார் என்ற பெருமையையும் பெற்றார்.




மைக்கேல் தனது லீன் நிலைக்கு ஏற்பதாகத் தயாரித்த காலணியை, தயாரித்ததோடு மட்டும் விட்டுவிடவில்லை. அதைத் தான் மட்டுமே பயன்படுத்தலாமென்பதற்காகப் பிரத்தியேகமாகக் காப்புரிமையும் (Patent) பெற்றிருந்தார்.


அந்த அற்புதமான மாபெரும் கலைஞனையும், யாரோ ஒரு கும்பல் ஏதோவொரு காரணத்துக்காகக் கொலைசெய்திருக்கிறார்கள் என்பதுதான் மிகுந்த வேதனையையளிக்கும் விசயமாகும்.


-ராஜ்சிவா-


October 20, 2015

கருஞ்சூரியனைச் சந்திக்கத் தயாரா?



இதுவரை நமக்குத் தெரிந்த சூரியன், மிகப்பிரகாசமான, நெருப்பைப்போல ஒளியை உமிழும் ஒரு சூரியன் அல்லவா? இந்தச் சூரியன் கருப்பான சூரியனாக மாறுவதை உங்களால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா? கற்பனைசெய்து பார்க்கவே பயமாக இருக்கிறதல்லவா? ஆனால், இந்தப் பயம் சில அறிவியலாளர்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது. “சூரியன் படிப்படியாகக் கருஞ்சூரியனாக மாறப் போகிறதா?” என்னும் கேள்வி இப்போது விஞ்ஞானிகளால் கேட்கப்பட்டு வருகிறது. ஏன் இப்படிக் கேட்கிறார்கள்? ஆம்! அதற்கு ஒரு காரணம் உண்டு.




சமீபத்தில், சூரியனில் மிகப்பெரிய கரியபள்ளங்கள் தோன்றியிருக்கின்றன. சூரியனின் வடக்குத் துருவத்திலும், தெற்குத் துருவத்திலும் ஒவ்வொன்றாக இரண்டு கருங்குழிகள்போல இவை உருவாகியிருக்கின்றன. இதைக் ‘கோரோனல் குழிகள்’ (Coronal Holes) என்பார்கள். சூரியனின் மின்காந்தப் புலங்களினூடாக அணுக்கதிர்த்துகள்கள், நொடிக்கு 500 மைகள் வேகத்தில் சூரிய மேற்பரப்பிலிருந்து வீசியெறியப்படும்போது உருவாகியிருப்பதே இந்தக் கொரோனல் குழிகள். சூரியனைப் பொறுத்தவரை இது சாதாரணமாக நடைபெறுவதுதான். ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் குழிகள் சிறிய குழிகள் அல்ல. சூரியனின் மேற்பரப்பின், பத்திலொரு பங்கு அளவுக்கு இந்தக் கருங்குழிகள் இருக்கின்றன. இவை மேலும் பெரிதாகுமா? இல்லை அப்படியே சிலகாலங்கள் இருந்து இல்லாமல் போகுமா? என்று தெரியவில்லை. சூரியனின் மேற்பரப்பின் பத்திலொரு பகுதியென்பது சாதாரண அளவு அல்ல.


சூரிய வடதுருவத்தில் தோன்றியிருக்கும் பள்ளம், சற்றே நீளமான நிலையில் 3.8 பில்லியன்கள் சதுரமைல் அளவு பெரிதாக இருக்கிறது. 3.8 பில்லியன்கள் சதுரமைல் என்பது எவ்வளவு பெரிதென்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? சரி, இந்த வடதுருவக் கரும்பள்ளத்தைவிடப் பலப்பல மடங்குகள் பெரியது, தெற்குத் துருவத்தில் தோன்றியிருக்கும் கருங்குழி. அது, 142 பில்லியன் சதுரமைல் பரப்பளவு பெரியதாக இருக்கின்றது. உங்களால் இத்தனை பெரிய நிலப்பரப்பைக் கற்பனையே பண்ணமுடியாது. இவையிரண்டும் சேர்த்து, சூரியனின் மேற்பரப்பின் பத்திலொரு பங்காக இப்போது இருக்கின்றது. இப்படியான கருங்குளிகளைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே நாஸா அவதானித்து வந்துகொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் சிறிதாக இருந்து இப்பொது இவ்வளவு பெரிதாக ஆகிவிட்டிக்கிறது. இதை அவதானிப்பதற்கென்றே நாஸா தனிப்பட்டதொரு தொலைநோக்கி ஆய்வுநிலையத்தையும் வைத்திருக்கிறது. அதை 'SDO' என்பார்கள் அதாவது, Solar Dynamics Observatory.






சாதாரணமாகச் சூரியனில் இப்படிக் கரும்பள்ளங்கள் தோன்றிப் பின்னர் மறைந்து போவது வழமைதான். அப்படிப் பார்த்தால், இப்போது தோன்றியிருக்கும் பெரியகுழி மறைவதற்கு ஐந்து வருடங்களுக்கு அதிகமான காலம் எடுக்கும். ஆனால், இதுவே இன்னும் பெரியதாக மாறவும் சாத்தியமுண்டு. அப்படிப் பெரியதாக ஆகும் பட்சத்தில், பூமிக்கு இதனால் பெரிய பாதிப்புகள் உருவாகும் அபாயமும் இருக்கின்றது. இப்போதுகூட, பூமியின் காலநிலையில் மாபெரும் மாற்றங்கள் தோன்றும் என்றுதான் சொல்கிறார்கள். சூரியனிலிருந்து வரும் மின்காந்தப் புயலைச் சந்திப்பதற்கு, பூமியைப் பாதுகாத்துக்கொண்டிருக்கும், ‘வான் அலன் பட்டி’ (Van Allen Belt) எந்த அளவுக்கு வலிமையாகவும் வீரியமாகவும் இருக்கப் போகின்றது என்பதைப் பொறுத்து, நமக்கு ஏற்படும் அபாயத்தின் அளவும் அமையும். ‘வான் அலன் பட்டி’ என்பது, நம் பூமியைச் சுற்றிப் பூமியின் வளிமண்டலப் (அட்மாஸ்பியர்) படலத்துக்கு மேலே மூன்று பகுதிகளாகப் பிரிந்து, ஒரு 'வடை' போன்ற அமைப்பில் (அவர்கள் உதாரணத்திற்கு ‘டோனட்’ என்பார்கள். நாம் ‘வடை’ என்போம்), காந்தப்புலன்கள் நிறைந்த ஒரு பாதுகாப்புப் படையாகும். சூரியனிலிருந்தும், விண்வெளியிலிருந்தும் வரும் ஆபத்தான காஸ்மிக் கதிர்களைப் பூமியினுள் ஊடுருவவிடாமல் பாதுகாத்துக்கொண்டிருப்பவை இந்த வான் அலன் பட்டிகள்தான்.


எவ்வளவுதான் வான் அலன் பட்டியாலும் பூமியைப் பாதுகாக்க முடியும் சொல்லுங்கள்? ஒரு அளவுக்கு மேல் சூரியனினால் உமிழப்படும் சூரியப் புயல்களிலிருந்தும், கொரோனோ வீச்சுகளிலிருந்தும், அதனால் பூமியைப் பாதுகாக்க முடியாமல் போய்விடும். எனவே, இனி வரப்போகும் சில மாதங்களில் பூமி பெரிய அனர்த்தங்களைச் சந்திக்க நேரிடலாம். அதைச் சந்திக்க நீங்களும் தயாராகுங்கள்.




ஆனால், இதையே சாக்காக வைத்து, “பூமியானது மக்களால் வெளிவிடும் நச்சுக் காற்றுகளினால் மேலும் வெப்பமடைகின்றது” என்று சொல்லி, நம்மிடம் மேலும் வரியாகப் பணத்தை வசூலிக்க ஒருகூட்டம் தயாராகிக் கொண்டிருக்கும். அவர்களிடம் நாம் ஏமாறுவதை எப்படித் தடுப்பது என்பதுதான் தெரியவில்லை. இப்போதுகூட, நாம் உபயோகிக்கும் கணணியின் பிரிண்டரில் பயன்படுத்தும் மையின் நச்சுத்தன்மையால பூமி மாசடைகிறது என்றொரு புதிய புரளியைக் கிளப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தக் காலகட்டங்களில் கணணியின் பிரிண்டர் இல்லாத வீடுகளே இல்லை என்னும் நிலையில், அவர்களுக்கு இது நல்லதொரு வாழைப்பழமாக அமைந்திருக்கிறது. கணணி வரி என்று ஒரு வரியைப் போட்டாலும் ஆச்சரியமில்லை. இது எங்கே கொண்டுபோய் முடியப் போகிறதோ தெரியவில்லை.


நம்மை அழிக்கப்போவது சூரியனல்ல. சூரியன் நம்மை அழிப்பதைவிட, நாம் வாழவே அதிகப் பயன்களைத் தந்துகொண்டிருக்கிறான். ஆனால், நம்முடனே வாழ்ந்து நம்மையே சுரண்டிக்கொண்டிருக்கும் இவர்கள்தான் நம்மை மொத்தமாகக் காலிசெய்யப் போகிறவர்கள்.



-ராஜ்சிவா-


October 15, 2015

‘காப்ரேகர் எண்கள்’ (Kaprekar Numbers)


எச்சரிக்கை: உங்களுக்கு அறிவியலிலும், கணிதத்திலும் சிறிதாவது ஈடுபாடில்லையா? தயவுசெய்து இந்தப் பதிவைப் படிப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.


'காப்ரேகர்' (Kaprekar) என்னும் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இவர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவரோ, வேறு தேசத்தைச் சேர்ந்தவரோ கிடையாது. இவர் ஒரு இந்தியர். மும்பாயின் ஒரு கிராமத்தில் பிறந்தவர். 'ராமச்சந்திர காப்ரேகர்' என்பது இவரின் முழுமையான பெயர். இவர் ஒரு கணித மேதை. மேற்குலகம் வியப்புடன் பார்க்கும் ஒரு ஆச்சரியமான கணிதவியலாளர். டிஜிட்டல் இந்தியா என்றதும் பரவசப்படும் இளைஞர்களில் பலருக்கு, மேற்குலகமே வியந்து பாராட்டிக்கொண்டிருக்கும் இந்திய அறிவியலாளர்கள்பற்றி அதிகம் தெரிந்திருப்பதில்லையென்பதே மறுக்க முடியாத உண்மை. அந்த அறிவியலாளர்களுக்கு அரசியலில் எந்தவொரு ஆளுமையும் இல்லாமல், அறிவியலில் மட்டும் ஆளுமை இருந்ததால், தன் சொந்த நாட்டில், சொந்த இடத்தில் மறக்கப்பட்டவர்களாகிவிடுகின்றனர்.


காப்ரேகர் கண்டுபிடித்த ‘காப்ரேகர் எண்கள்’ (Kaprekar Numbers) என்பது கணிதத்தில் பிரபலமானது. உதாரணமாக, 703 என்பது ஒரு காப்ரேகர் எண்ணாகும். இதன் விசேசத்தன்மை என்னவென்றால், இந்த எண்ணின் வர்க்கம், அதாவது இந்த எண்ணை இதே எண்ணால் பெருக்கிவரும் பெரிய எண்ணை, இரண்டு பகுதிகளாகப் பிரித்து, அவற்றை ஒன்றுடன் ஒன்று கூட்டினால், ஆரம்ப எண் வரும். சரி இதைப் பாருங்கள்.


703X703=494209 அல்லவா? இதில் வரும் 494209 என்பதை எடுத்து, அதை 494 மற்றும் 209 ஆகப் பிரியுங்கள். இப்போது, இவையிரண்டையும் கூட்டுங்கள்.


494+209=703. மீண்டும் ஆரம்ப எண்ணான 703 மீண்டும் வருகிறதல்லவா? எனவே 703 ஒரு காப்ரேகர் எண்ணாகும்.


இப்படி 9, 45, 55, 99, 297….. என்பவை வரிசையாக காப்ரேகர் எண்களாகும். நீங்களே இவற்றின் வர்க்கத்தை எடுத்துச் செய்துபாருங்கள்.


ஆனால், நான் இங்கு சொல்ல வந்தது காப்ரேகர் எண்களைப்பற்றியல்ல. காப்ரேகரின் புகழைச் சொல்வது, ‘காப்ரேகர் எண்கள்’ மட்டுமல்ல, ‘காப்ரேகர் மாறிலி’ (Kaprekar’s Constant) என்பதும்தான். 'காப்ரேகர் மாறிலி' என்பது மிகவும் ஆச்சரியமான ஒரு எண். இந்த எண்ணை அடிப்படையாக வைத்து, எழுத்தாளர் ‘சுதாகர் கஸ்தூரி’ (Sudhakar Kasturi), '6174' என்று ஒரு அருமையான நாவலையும் எழுதியிருக்கிறார்.


அந்த எண் 6174.






'6174' ஒரு அதிசய எண். இந்த அதிசய எண்ணைக் கண்டுபிடித்தவர் காப்ரேகர். 'சரி இந்த எண்ணில் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது?' என்றறிய ஆவலாக இருக்கிறதா?

அதைப் பார்க்கலாம் வாருங்கள்……..


காப்ரேகர் சொன்னது இதுதான், "6174 என்னும் எண்ணில் உள்ள இலக்கங்களை முதலில் இறங்குவரிசையாகவும், ஏறுவரிசையாகவும் வரும் எண்களாக மாற்றி எழுதிக்கொள்ளுங்கள். பின்னர் இறங்குவரிசை எண்ணிலிருந்து ஏறுவரிசை எண்ணைக் கழியுங்கள். அப்போது மீண்டும் அதே 6174 என்னும் எண் வரும்".


அது என்ன இறங்குவரிசை எண், ஏறுவரிசை எண்? பெரிய இலக்கத்திலிருந்து சின்ன இலக்கம்வரை வரிசையாக எழுதுவது இறங்குவரிசை எண். சின்ன இலக்கத்திலிருந்து பெரிய இலக்கம்வரை வரிசையாக எழுதுவது ஏறுவரிசை எண். அவ்வளவுதான். இதன்படி, 6174 இன் இறங்குவரிசை எண் 7641, அதன் ஏறுவரிசை எண் 1467.


காப்ரேகர் சொன்னதுபோல, இறங்குவரிசை எண்ணிலிருந்து, ஏறுவரிசை எண்ணைக் கழிப்போம்.


7641-1467=6174.


அதாவது 6174 என்னும் எண்ணின் இ.வ. எண்ணிலிருந்து, ஏ.வ.எண்ணைக் கழித்தால் அதே 6174 மீண்டும் வரும்.


இத்துடன் முடிந்துவிடவில்லை '6174' தரும் ஆச்சரியங்கள்.


நான்கு இலக்கங்களைக்கொண்ட எந்த இலக்கத்தையும் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். சரி, உதாரணமாக 8539 என்னும் எண்ணை எடுத்துக் கொள்வோம். அதை இ.வ.எ, ஏ.வ.எ என மாற்றிக் கழித்துக்கொள்வோம்.


9853-3589=6264


இப்போது 6264 என்பதை மீண்டும் இ.வ.எ, ஏ.வ.எ ஆக மாற்றிக் கழித்துக்கொள்வோம்.


6642-2466=4176


இந்த எண்ணுக்கும் அதேபோலச் செய்தால்,


7641-1467=6174


இறுதியாக நாம் பெறுவது 6174 என்னும் எண்ணாகவே இருக்கும். இப்போது 6174 ஐ நாம் வரிசைப்படுத்தினால், அது 6174 ஆகவே இருக்கும். இந்த எண் மீண்டும் மீண்டும் நம்மை அதன் சுழலில் இழுத்துக்கொண்டிருப்பதால், இதைக் 'கருந்துளை எண்' (Blackhole) என்றும் சொல்வார்கள்.


நீங்கள் 9999 க்குக் கீழே உள்ள நான்கு இலக்கங்களைக் கொண்ட எந்த எண்ணை எடுத்தும் (1111, 2222, 3333.......9999 எண்கள் இவற்றில் அடங்காது) அதனை இ.வ.எண், ஏ.வ.எண் ஆகப் படிப்படியாக மாற்றினால் உங்களுக்கு இறுதியில் கிடைப்பது 6174 என்னும் எண்ணாகவே இருக்கும். அதிகப்படியாக ஏழாவது படியில் 6174 எண் உங்களுக்கு விடையாகக் கிடைக்கும். முடிந்தவரை பல எண்களை இப்படி முயற்சிசெய்து பாருங்கள். எப்போதும் 6174 என்னும் எண் வந்து உங்களை அணைத்துக் கொள்ளும். அதனால்தான் '6174' என்பதை 'காப்ரேகரின் மாறிலி' என்பார்கள்.


மூன்று இலக்க எண்களுக்கான காப்ரேகரின் மாறிலி எண் 495 ஆகும்.


என்ன புரிகிறதா?

-ராஜ்சிவா-


July 15, 2015

பென்டா குவார்க்





அணு ஒன்றைப் பிரித்து, அதற்குமேலும் பிரிக்க முடியாமல், மிகச்சிறிய உபஅணுத்துகளாக எஞ்சி இருப்பவை குவார்க்குகள் (quarks) என்று சொல்லப்படுகின்றன. இதுவரை ஆறுவிதமான குணநலன்களைக்கொண்ட குவார்க்குகள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவை, 1. அப்குவார்க் (upquark), 2. டவுன்குவார்க் (downquark), 3. ஷார்ம்குவார்க் (charmquark), 4. ஸ்ட்ரேஞ்ச்குவார்க் (strangequark), 5. டாப்குவார்க் (topquark), 6. பொட்டம்குவார்க் (bottomquark) என்பனவாகும். இந்த ஆறு குவார்க்குகளுக்கும் எதிர்க்குணங்களையுடைய ஆன்டிகுவார்க்குகளும் (antiquarks) உண்டு. அதாவது ஆன்டிஅப்குவார்க், ஆன்டிடவுன்குவார்க், ஆன்டிஷார்ம்குவார்க், ஆன்டிஸ்ட்ரேஞ்ச்குவார்க், ஆன்டிடாப்குவார்ல், ஆன்டிபாட்டம்குவார்க் என்பவை இவற்றில் அடங்கும்.


இந்தக் குவார்க்குகள் ஒன்று சேர்ந்துதான் பல அடிப்படை அணுத்துகள்களை உருவாக்கியிருக்கின்றன. இரண்டு அப்குவார்குகளும், ஒரு டவுன்குவார்கும் சேர்ந்து புரோட்டானை (proton) உருவாக்குகின்றன. அதுபோல, இரண்டு டவுன்குவார்க்குகளும், ஒரு அப்குவார்க்கும் சேர்ந்து ஒரு நியூட்ரானை (neutron) உருவாக்குகின்றன. இப்படி மூன்று குவார்க்குகள் ஒன்று சேர்வதை பேரியான்கள் (baryons) என்று ஒரு வகையாகப் பிரித்துவைத்திருக்கின்றனர். 


மேலே நான் குறிபிட்டிருந்த குவார்க்குகளில், ஒரு குவார்க்கும், ஒரு ஆன்டிகுவார்க்கும் ஒன்றாகச் சேர்ந்தால், அதை மேசோன்கள் (mesons) என்று வேறொரு வகையாகப் பிரித்து வைத்திருக்கின்றனர். அதாவது ஒரு மேசோனில் இரண்டு குவார்க்குகள் மட்டும் இருக்கும். 





இரண்டு குவார்குகள் ஒன்று சேர்ந்து உருவாகியவை மேசோன்கள் எனவும், மூன்று குவார்க்குகள் ஒன்று சேர்ந்து உருவாகியவை பேரியான்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. இதுவரை இரண்டு குவார்க்குகளும், மூன்று குவார்க்குகளும் சேர்ந்து உருவாக்கிய துகள்களை மட்டுமே அறிவியல் உலகம் கண்டுபிடித்து வைத்திருந்தது. ஆனாலும், நான்கு குவார்க்குகள் ஒன்று சேர்ந்தும், ஐந்து குவார்க்குகள் ஒன்று சேர்ந்தும் உபஅணுத்துகள்களை உருவாக்குமெனக் கோட்பாட்டு ரீதியாக அனுமானிக்கப்பட்டிருந்தது.


2014ம் ஆண்டு சுவிஸ் நாட்டில் சேர்னில் (CERN) அமைக்கப்பட்டிருக்கும் ‘ஹட்ரான் மோதியில்’ (Large Hadron Collider) செய்யப்பட்ட ஆராய்ச்சியின்போது, நான்கு குவார்க்குகளால் உருவாக்கப்பட்ட ‘டெட்ரா குவார்க்’ (tetraquark) என்னும் புதிய துகள் உத்தியோகபூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 








இதன் தொடர்ச்சியாகச் சமீபத்தில் சேர்ன் ஹாட்ரான் மோதி அதிக வலு ஊட்டப்பட்டு, இரட்டைச் சக்தி அதிகரிக்கப்பட்டு இயக்கப்பட்டதில், நேற்றைய தினம் (14.07.2015) ‘பெண்டா குவார்க்’ (pentaquark) என்னும் ஐந்து குவார்க்குகளைக் கொண்ட புதிய துகளைக் கண்டுபிடித்துச் சாதனை செய்திருக்கின்றனர். மூன்று குவார்க்குகளைக் கொண்ட பேரியான் ஒன்றும், இரண்டு குவார்க்குகள் கொண்ட மேசோன் ஒன்றும் ஒன்றாக இணைந்து இந்தப் பெண்டா குவார்க்கை உருவாக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். 


-ராஜ்சிவா-


June 25, 2015

சக்கர நாற்காலியில் சுழலும் பிரபஞ்சம்


My goal is simple. It is a complete understanding of the universe, why it is as it is and why it exists at all - Stephan Hawking


உலகிலேயே மிகப்பிரபலமான, இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், இன்றிலிருந்து சரியாக ஆறு வருடங்களுக்கு முன்னர் ஒரு வினோதமான சம்பவம் நடைபெற்றது. அதாவது, 2009ம் ஆண்டு யூன் மாதம் 28ம் தேதியன்று அந்தச் சம்பவம் நடைபெற்றது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் விழா மண்டபம் மிகவும் அழகாக, ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. உயர்தர விருந்துக்குத் தேவையான உணவுவகைகளும், குளிர்பானங்களும் அங்கே பரிமாறுவதற்கேற்பத் தயாராகியிருந்தன. ஷாம்பெய்ன் பாட்டில்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. பல விருந்தினர்களை எதிர்பார்த்து அந்த விருந்துபசாரம் ஏற்பாடாகியிருந்தது. விருந்தில் கலந்துகொள்ளவிருக்கும் விருந்தினர்களை வரவேற்கத் தயாரான நிலையில், விருந்தை ஏற்பாடு செய்தவர் பதட்டத்துடன் காத்திருந்தார். விருந்துக்கான நேரமான மதியம் 12 மணி நெருங்கிக் கொண்டேயிருந்தது. யாரும் அதுவரை விருந்துக்கு வந்துசேரவில்லை. விருந்தை ஏற்பாடு செய்தவரின் முகத்தில் ஏமாற்ற ரேகைகள் படர்ந்துகொண்டிருந்தது. கடைசியில் 12 மணியும் ஆகியது. விருந்தில் கலந்துகொள்வதற்கு ஒருவர்கூட வரவில்லை. விருந்துக்கு அழைப்பிதழ் கொடுத்திருந்தால்தானே யாரும் அந்த விருந்துக்கு வருவார்கள். ஆம்! இவ்வளவு தடல்புடலாக ஏற்பாடாகியிருந்த விருந்துக்கு, யாருக்கும் அழைப்புக் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. அப்படியென்றால் யார்தான் விருந்துக்கு வருவார்கள்? விருந்துக்கு ஏற்பாடு செய்தவர் எப்படி விருந்தாளிகளை எதிர்பார்த்தார்? அவர்கள் வரவில்லையென்றதும் அவர் ஏன் அந்தளவுக்குப் பதட்டப்பட்டார்? அழைக்காத விருந்துக்கு வரும் வழக்கம் இங்கிலாந்தில் யாருக்குமே இருந்ததில்லை. அப்படியிருக்க, இவ்வளவு செலவளித்து விருந்தொன்றை ஏற்பாடு செய்து, யாருக்கும் அழைப்பிதழ் கொடுக்காமல் இருந்தது ஏன்? 'விருந்துக்கான அழைப்பிதழ் அச்சடிக்கப்படவில்லையா?' என்று பார்த்தால், அங்கும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. தேவைக்கு அதிகமாகவே அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டிருந்தன. சொல்லப் போனால், ஒன்றல்ல, இரண்டு விதங்களில் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டிருந்தன. ஆனால் யாருக்குமே அந்த அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை. "அட! இது என்ன கோமாளித்தனம்?" என்றுதானே யோசிக்கிறீர்கள். "விருந்துக்கு அழைத்தவர் நிச்சயம் ஒரு முட்டாளாகத்தான் இருக்கவேண்டும்" என்றும் இப்போது நினைப்பீர்கள். ஆனால் உண்மை அதுவல்ல. அழைத்தவர் மிகையறிவுடைய ஒரு புத்திஜீவி. இன்றைய உலகில் முதல்தர அறிவியல் மேதையாகக் கருதப்படுபவர். அல்பேர்ட் ஐன்ஸ்டைனுக்குப் பின்னர் அவரின் இடத்தை நிரப்பக் கூடியவரென்று கருதப்படுபவர். அந்த நபர் வேறு யாருமல்ல, அவர்தான் ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking). சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, தன் கணிதச் சமன்பாடுகளால் ஒட்டுமொத்தப் பிரபஞ்சதையே அளந்து கொண்டிருப்பவர். 


"அட! ஸ்டீபன் ஹாக்கிங்கா இப்படியொரு முட்டாள்தனமான வேலையைச் செய்தார்?" என்று நினைப்போம். அவர் அந்த விருந்தை ஒரு காரணத்தை முன்னிட்டே ஏற்பாடு செய்திருந்தார். ஹாக்கிங் அந்த விருந்தைச் சாதாரண மனிதர்களுக்காக ஏற்பாடு செய்திருக்கவில்லை. விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் அனைவருமே எதிர்காலத்தில் வசிப்பவர்கள். அதாவது பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் பூமியில் வாழ்ப்போகும் நம் எதிர்காலச் சந்ததியினர், 'காலப் பயணம்' (Time Travel) மூலமாக இறந்தகாலத்திற்கு வந்து, இந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கேற்ப, விருந்து மண்டபத்தின் வாசலில் அவர்களை வரவேற்கும் விதமாகப் பெரிய பதாகையொன்றும் வைக்கப்பட்டிருந்தது. அதில் 'நல்வரவு காலப் பயணிகளே!' (Welcome Time Travellers) என்றும் எழுதப்பட்டிருந்தது. 'அப்படியென்றால் ஸ்டீபன் ஹாக்கிங் செய்தது ஒரு முழுமையான கோமாளித்தனம்தானே!' என்று நாம் நினைப்போம். ஆனால், உண்மையில் ஒரு பரிசோதனைக்காகவே ஸ்டீபன் ஹாக்கிங் அப்படியொரு விருந்தினை ஏற்பாடு செய்திருந்தார். அதனால்தான் விருந்து நடைபெறும்வரை யாருக்கும் அழைப்பிதழே கொடுக்கப்படவில்லை. எதிர்காலச் சந்ததியினர் என்றாவது ஒருநாள் இந்த அழைப்பிதழைக் கண்டுகொள்ளலாம், அப்போது அவர்கள் தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருந்துக்குக் கால இயந்திரத்தினூடாக அல்லது 'புழுத்துளை' (Wormhole) ஊடாக வந்து கலந்துகொள்ளலாம். இது ஒருவிதமான பரிசோதனைதான். 




ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு சாதாரண மனிதரல்ல. மனிதனின் அறிவியல் வளர்ச்சியில், குறிப்பாகக் கணித, இயற்பியல் வரலாற்றில் ஐசாக் நியூட்டன் மிகப்பெரிய விஞ்ஞானியாக அறியப்பட்டார். அவருக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், அல்பேர்ட் ஐன்ஸ்டைன் என்பவர் பெரும் மேதையாக உருவெடுத்தார். ஐன்ஸ்டைனுக்குப் பின்னர், இன்றைய காலகட்டங்களில் அப்படிப் பார்க்கப்படுபவர் ஸ்டீபன் ஹாக்கிங்தான். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கல்விகற்று, இயற்பியலில் டாக்டர் பட்டம்பெற்று, அங்கேயே விரிவுரையாளராகவும் கடைமையாற்றியவர். எல்லையில்லா இந்தப் பிரபஞ்சவெளியில் இயங்கிக் கொண்டிருக்கும் கோள்கள், நட்சத்திரங்கள், காலக்ஸிகள், கருந்துளைகள் என அனைத்துமே நான்கு அடிப்படை விசைகளினாலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றன. பிரபஞ்சம் உருவாகக் காரணமாகவிருந்த ஆதிப் பெருவெடிப்பின்போது (Bigbang), இந்த நான்கு விசைகளும் ஒன்றாகி, ஒருபுள்ளியில் அமைதியாக ஒடுங்கியிருந்தன என்று ஐன்ஸ்டைன் நம்பினார். அதனடிப்படையில், இந்த நான்கு விசைகளையும் ஒரே கணிதச் சமன்பாட்டிற்குள் கொண்டுவரலாமென்றும் அவர் நம்பியிருந்தார். ஐன்ஸ்டைன் தன் இறுதிக் காலங்களை அந்தச் சமன்பாடு எதுவெனக் கண்டிபிடிக்கும் முயற்சியிலேயே செலவிட்டார். ஆனால், அதைக் கண்டுபிடிக்காமலேயே இறந்தும் போனார். அந்தச் சமன்பாட்டைத்தான், 'Theory of everything' என்பார்கள். ஐன்ஸ்டைனின் மறைவுக்குப் பின்னர் இந்தச் சமன்பாட்டைக் கண்டுபிடிப்பதற்குப் பல இயற்பியல் விஞ்ஞானிகள் முயன்றார்கள். அதில் முக்கியமானவர்களில் ஒருவர் ஸ்டீபன் ஹாக்கிங் ஆவார். அதனாலேயே சமீபத்தில் ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஹாலிவூட் திரைப் படத்திற்கு 'Theory of Everything' என்று பெயரிடப்பட்டிருந்தது. 

பேரண்டத்தின் ஆரம்பமான பெருவெடிப்பிற்கு முன்னால், ஒரு சிறுபுள்ளியாகப் பேரண்டம் முழுவதும் ஒடுங்கியிருந்தது. அப்படிச் சிற்புள்ளியாக ஒடுங்கியிருப்பதை 'ஒருமைப் புள்ளி' (Singularity) என்று அறிவியலில் அழைக்கிறார்கள். இந்த ஒருமைப்புள்ளிபற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த போதுதான் இதுபோன்ற பல ஒருமைப்புள்ளிகள் பேரண்டமெங்கும் நிறைந்திருக்கின்றன என்பது ஹாக்கிங்கிற்கு தெரியவந்தது. அந்த ஒருமைப்புள்ளிகள், அண்டத்தின் ஆரம்பப் புள்ளி போலல்லாமல், சற்று வேறுவகையானவை. 'பிளாக் ஹோல்' (Blackhole) என்று சொல்லப்படும் கருந்துளைகளின் மையமாக, இந்த ஒருமைப்புள்ளிகள் இருப்பதை அவர் தெரிந்து கொண்டார். அதனால், கருந்துளைகள் பற்றிய ஆராய்ச்சிகளில் தனது பெரும்பான்மையான நேரத்தைச் செலவிட்டார். அப்படி அவர் செலவிட்டது வீண்போகவில்லை. 'ஹாக்கிங் கதிர்வீச்சு' (Hawking Radiation) என்னும் புரட்சிகரமான கருத்தொன்றை அறிவியலுக்குச் சமர்ப்பித்தார். அந்தக் கதிர்வீச்சுக்கான இயற்பியல் சமன்பாடொன்றையும் உருவாக்கிக் கொடுத்தார். கருந்துளையென்றாலே, தனக்கருகே செல்லும் அனைத்தையும் தன் ஒருமை மையத்தை நோக்கி இழுதுக் கொள்ளுமென்றுதான் அதுவரை பலர் நம்பியிருந்தார்கள். எதையும் வெளியே செல்லவிடாமல் இழுத்துக் கொள்ளுமளவுக்கு மிகை ஈர்ப்புச்சக்தி கொண்டது கருந்துளை. ஒளிகூட அதன் ஈர்ப்பிலிருந்து தப்பிக்கொள்ள முடியாது. ஒளியும் இழுக்கப்பட்டுவிடுவதால்தான், அது கருமையான நிறத்துடன் காணப்படுகிறது என்றும் நம்பப்பட்டு வந்தது. ஆனால் ஹாக்கிங் சொன்னது அதற்குச் சற்றே மாறாகவிருந்தது. கருந்துளையினால் அதனருகே செல்லும் அனைத்துமே உள்ளிழுக்கப்படும்போது, அவை அணுத்துகள்களாகச் சிதைவதால் ஏற்படும் பெருவெப்பதால் உருவாகும் கதிர்வீச்சைக் கருந்துளைகள் வெளிவிட்டுக்கொண்டிருக்கிறன என்று ஹாக்கிங் கண்டுபிடித்தார். ஆரம்பத்தில் இதைப் பல விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. 'ஒளியையே வெளியேவிடாமல் இழுத்துவைக்கும் கருந்துளைகள், எப்படிக் கதிர்வீச்சை வெளிவிடமுடியும்?' என்ற சந்தேகம் அவர்களுக்கிருந்தது. ஆனால் ஹாக்கிங்கின் கோட்பாட்டைப் பின்னர் பலரும் ஏற்றுக் கொண்டனர். சமீபத்தில்கூட, 'கருந்துளைகள் கருமை நிறத்துடன் இருக்க மாட்டாது, அவை சாம்பல் நிறம் கொண்டவை' என்று வேறொரு புரட்சிகரமான கருத்தையும் ஹாக்கிங் வெளியிட்டிருக்கிறார். 



இயற்பியலிலும், வானியலிலும் நம்பவே முடியாத முடிவுகளை முன்னிறுத்திப் பல புத்தகங்களை எழுதி வெளியிட்டார் ஹாங்கிங். அவற்றில் முக்கியமான புத்தகங்களாகக் கருதப்படுபவை 'பெரும் வடிவமைப்பு' (The Grand Design), 'காலத்தின் வரலாற்றுச் சுருக்கம்' (A Brief History of Time) என்னும் இரண்டு புத்தகங்களுமாகும். 1988ம் ஆண்டில் வெளியிடப்பட்ட 'காலத்தின் வரலாற்றுச் சுருக்கம்' என்பது, இதுவரை பத்து மில்லியன் புத்தகங்களுக்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் வெளியாகும் 'சண்டே டைம்ஸ்' இதழின் சிறந்த புத்தக வரிசையில் தொடர்ச்சியாக, 237 வாரங்கள் முதலிடத்தில் இருந்து சாதனை படைத்தது இந்தப் புத்தகம். இவரின் புத்தகங்களைப் படிக்கும்போது, ஆச்சரியத்தில் நம் மனம் நிறைந்து போய்விடும். அவ்வளவு ஆச்சரியங்களை நமக்குக் கொடுத்த ஸ்டீபன் ஹாக்கிங், நிஜத்திலும் ஆச்சரியமானதொரு மனிதராகவே காணப்படுகிறார். தன் உடற்பாகங்கள் எதையுமே அசைக்க முடியாத நிலயில், ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு இவையனைத்தையும் சாதித்துக் காட்டியிருக்கும் ஒரே மனிதர் ஸ்டீபன் ஹாக்கிங் மட்டும்தான். பல்கலைக் கழகத்தில் கல்விகற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு வினோதமான நோயினால் பாதிக்கப்பட்டு, படிப்படியாக உடலுறுப்புகளின் அசைவுகளை இழந்துவந்தார் ஹாக்கிங். இறுதியில் அவரது கண் இமையையும், புருவத்தையும் மட்டுமே அசைக்கக் கூடிய நபராக முடங்கிப் போனார். முடங்கிப் போனது அவரது உடலுறுப்புகள் மட்டும்தான். ஆனால் அவரது மூளையோ சிந்தனை செய்வதில் விரிவடைந்துகொண்டே சென்றது. அவரது வற்றாத சிந்தனையினால் இன்றும் பல ஆராய்ச்சிகளைக் கண்டுபிடித்து, வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறார். அவர் சிந்திப்பதையும், கண்டுபிடிப்பதையும் நம்முடன் பகிர்ந்து கொள்வதற்கென்று பிரத்தியேகமாய் ஒரு கணணியை உருவாக்கியிருக்கிறார்கள். தனது கண், புருவ அசைவுகளால் என்ன சொல்ல நினைக்கிறார் என்பதை அந்தக் கணணி ஒலிவடிவமாகவே வெளிக்கொண்டு வருகிறது.

'Amyotrophic Lateral Sclerosis' என்றும், சுருக்கமாக 'ALS' என்றும் அழைக்கப்படும் ஒருவித உடலியல் பக்கவாத நோயினால் (Muscular dystrophy) ஸ்டீபன் ஹாக்கிங் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நோயை, 'லூ கேரிக் நோய்' (Lou Gehrig's disease) என்றும் சொல்வார்கள். 1923 முதல் 1939ம் ஆண்டு காலம்வரையில் அமெரிக்காவில் மிக மிகப்பிரபலமான பேஸ்பால் வீரராக இருந்தவர் லூ கேரிக். 1939ம் ஆண்டு அவர் இந்த உடலியல் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டார். அடுத்த இரண்டு வருடங்களில் அவரின் சகல உடற்பாகங்களும் செயலிழந்து இறந்து போனார். அமெரிக்காவில் மிகப்பிரபலமாக இருந்த ஒருவர் அப்படியொரு நோயினால் இறந்து போனது முழு அமெரிக்காவையே கவலைக்குள்ளாக்கியது. இதனாலேயே முதன்முதலாக அந்த நோய்பற்றி உலகம் முழுவதும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. அதனால், லூ கெரிக்கின் பெயரினாலும் இந்த நோய் அழைக்கப்படுகிறது. ஸ்டீபன் ஹாக்கிங்கையும் அவரது 21 வயதில் இந்த நோய் தாக்கியது. அடுத்த இரண்டு வருடங்களில் அவர் இறந்துவிடுவாரென்று டாக்டர்களால் அறிவுறுத்தப்பட்டார் ஹாக்கிங். ஆனால், அவற்றையெல்லாம் தன் மனோபலத்தின் மூலம் வென்று, 73 வயதுகள் கடந்து, இன்றுவரை வாழ்ந்துகொண்டிருக்கிறார். ஆனாலும் அவர் மனம் தளர்ந்து போன நாட்களும் உண்டு. 

வாழ்க்கையில் வெற்றிகண்ட மனிதர்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதே மனிதன் சில காலங்களின் பின்னர் தோல்வியுற்றதையும் அறிந்திருப்பீர்கள். ஆனால் ஒரே சமயத்தில் யாரும் அடைய முடியாத மாபெரும் வெற்றியையும், மிக மோசமான தோல்வியையும் காணமுடியாது. அப்படி ஒரே சமயத்தில் இரண்டையும் அனுபவித்த நபர் ஸ்டீபன் ஹாக்கிங் மட்டுமாகவே இருக்க முடியும். 1980ம் ஆண்டு முதல்1985ம் ஆண்டு வரையுள்ள காலங்களில் ஸ்டீபன் ஹாக்கிங்கின் புகழ் உலகமெங்கும் பரவத் தொடங்கியது. இங்கிலாந்திலிருந்து வேறு பல நாடுகளுக்கு அறிவியல் உரையாற்ற இவரை அழைக்கத் தொடங்கினர். அந்தக் காலகட்டங்களில்தான் தனது 'A Brief History of Time' புத்தகத்தை எழுதவும் ஆரம்பித்தார். கல்லூரிக் காலங்களில் அவரைக் காதலித்து, அவருக்கு உடலியல் பக்கவாத நோய் இருக்கின்றது என்று தெரிந்தும், அவரையே திருமணம் செய்து வாழ்ந்துவந்த 'ஜேன்' (Jane), இன்னுமொரு நபருடன் நெருங்கிய நட்பாக இருக்கிறார் என்பதை ஸ்டீபன் ஹாக்கிங் அறிந்து கொண்டது இந்தக் காலங்களில்தான். 1965ம் ஆண்டில் ஜேனைத் திருமணம் செய்து, மூன்று பிள்ளைகளுக்கு அப்பாவும் ஆகியிருந்தார் ஹாக்கிங். தன் உடல் மோசமான நிலையில் இருந்தாலும், மனைவி, பிள்ளைகளென மகிழ்ச்சியுடனே வாழ்ந்துவந்த ஹாக்கிங்கிங்கை, 'மனைவி இன்னொரு நபருடன் தொடர்பாக இருக்கிறார்' என்ற செய்தி தலைகீழாய்ப் புரட்டிப் போட்டது. தன் சோகத்தைக் கூட வெளிக்காட்டிக்கொள்ள முடியாமல், ஜடம் போல உள்ளுக்குள் உடைந்துகொண்டிருந்தார். தனிமையின் விரக்தி அன்றுதான் அவரைத் துரத்த ஆரம்பித்தது. 1985ம் ஆண்டு, ஒரு அறிவியல் மாநாட்டுக்குச் சென்றிருந்த வேளையில் மயக்கமடைந்து வீழ்ந்துவிடுகிறார் ஹாக்கிங். "அவரைக் காப்பாற்ற வேண்டுமென்றால் அவரது தொண்டையில் ஆபரேசன் மூலம் நிரந்தரமாகத் துளையிட வேண்டுமெனவும், அதன்பின்னர் ஹாக்கிங்கால் பேசவே முடியாது போய்விடும்" என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். அதுவரை சிரமப்பட்டாவது பேசிவந்த ஹாக்கிங்கிற்கு இரண்டாவது பேரிடியாக அது இறங்குகிறது. விரக்தியின் உச்சிக்கே செல்கிறார். அப்போதுதான் முதன்முதலாக ஹாக்கிங் தற்கொலை முயற்சிக்கு முயல்கிறார். வெற்றியின் உச்சியில் இருந்த மாபெரும் மனிதனொருவன் தற்கொலைக்கு முயற்சித்தார் என்ற செய்தி, மக்களால் நினைத்தே பார்க்க முடியாதவொன்றாக இருந்தது. அதுவும் அறிவியல் உலகிற்கு கிடைத்த ஒரு சுப்பர் ஸ்டார், அப்படியொரு நிலைக்குப் போவாரென்று யாராலும் நம்ப முடியவில்லை. அதை நினைத்து அனைவரும் மனம் கலங்கினர். தான் தற்கொலைக்கு முயன்றதாகப் பகிரங்கமாக ஹாக்கிங்கே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். 

கைகளையும், கால்களையும், உடலையும் அசைக்க முடியாத ஒருவரினால் எப்படித் தற்கொலை செய்யமுடியும்? அவரால் செய்ய முடிந்ததெல்லாம் தன் மூச்சை தானே அடக்கிக் கொள்வது மட்டும்தான். அதைத்தான் செய்து தற்கொலைக்கு முயன்றார் ஹாக்கிங். தன் மூச்சை அடக்கியபடி, அப்படியே இருந்தார் ஹாக்கிங். ஆனால் அவரது மூளை அதற்கு இடம்கொடுக்கவில்லை. அவரையும் மீறி உடைத்துக்கொண்டு வெளிவந்தது மூச்சு. தன் இஷ்டத்துக்குத் தற்கொலைகூடச் செய்ய முடியவில்லையே என்ற தனது நிலையை நினைத்தும், தனது தனிமையை நினைத்தும் தனக்குள்ளே அழ ஆரம்பித்தார் அவர். 1990ம் ஆண்டு அவரது மனைவி ஜேன் அவரைவிட்டுப் பிரிந்து சென்றார். அந்த நேரத்தில் அவருக்குத் தாதியாகப் பணிசெய்ய வந்திருந்த எலீனாவைத் (Elaine) திருமணம் செய்தார் ஹாக்கிங். அதன்பின்னர் தனிமை விரக்திநிலையிலிருந்து ஹாக்கிங் மெல்ல மெல்ல விடுவிக்கப்பட்டாரென்றுதான் சொல்ல வேண்டும். எலீனாவுடன் மொத்தமாகப் பதினொரு ஆண்டுகள் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தார் ஹாக்கிங். அந்த உறவும் 2006ம் ஆண்டு முடிவு நிலைக்கு வந்து, முறிந்து போனது. அதன்பின்னர் இன்றுவரை தனிமையிலேயே தன்வாழ்க்கையைத் தொடர்ந்துவந்த ஹாக்கிங், சமீபத்தில் பிபிசிக்குக் (BBC) கொடுத்த பேட்டியில் மீண்டும் தற்கொலை செய்வதுபற்றிப் பேசியது, மக்களை அவர்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. அந்தப் பேட்டியினாலேயே அவரைப்பற்றிக் கட்டுரை எழுத வேண்டுமென்ற அவசியம் ஏற்பட்டது. அப்படி அவர் என்னதான் பிபிசிக்குச் சொல்லியிருந்தார் தெரியுமா?



"என்னால் எதுவுமே செய்ய முடியாத நிலையில், அடுத்தவருக்குப் பாரமாக இருக்கும்பட்சத்தில், அவர்களின் உதவியுடன் நான் தற்கொலை செய்வதுபற்றிப் பரிசீலிப்பேன்" என்றி பிபிசிக்குக் கொடுத்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் ஹாக்கிங். இன்றைய அறிவியல் உலகில் அதிமுக்கிய நபராகக் கருதப்படும் ஒருவர், இப்படிப் பொதுவெளியில் வெளிப்படையாகப் பேட்டியளித்தது பலரை நெகிழ வைத்திருக்கிறது. எவ்வளவுதான் சாதனைசெய்திருந்தாலும், உடல்நலம் குன்றிய நிலையில் தன் இயலாமையைச் சுட்டிக்காட்டும் வண்ணம் அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பவை கண்கலங்கவைக்கும் நிகழ்வாகவேயிருந்தது. அறிவியலின் பல சிக்கல்களை இவர் தீர்த்து வைப்பார் என்று நம்பியிருக்கும் வேளையில், தனது மரணம்பற்றி அவர் பேசியது மிகமுக்கியமான செய்தியாகப் பலரால் பார்க்கப்படுகிறது. ஸ்டீபன் ஹாக்கிங் என்னும் மாமேதையை நாம் இழப்போமானால், அறிவியலில் அவரின் இடத்தை நிரப்புவதற்கு எவருமே இல்லாமல் போய்விடும். ஒரு சக்கர நாற்காலியில் அசையமுடியாமல் அமர்ந்திருக்கும் ஒருவர், தன் கண்ணசைவினால் மட்டும் இவ்வளவு சாதனைகளைச் செய்திருக்கிறாரென்றால், அவர் ஒரு சாதாரண மனித நிலையிலிருப்பவரல்ல. நம்பவே முடியாத கணிதச் சமன்பாடுகளையெல்லாம் இந்த நிலையிலேயே வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். அவர் 21ம் நூற்றாண்டின் மாபெரும் அதிசயம். அதுமட்டுமல்ல, மனித இனத்துக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிசமும்கூட. அப்படிப்பட்ட ஒருவர் இறந்துபோவதைக் கற்பனை செய்து பார்க்கும்போதே, பலரின் மனங்கள் கலங்கியதில் எந்த ஆச்சரியமும் இருக்க முடியாது. 

வாழ்க்கையில் வெறுமையடைந்து, எதுவுமே செய்ய முடியாமல், அடுத்தவர் தயவுடனே வாழ்வேண்டிய நிலையில், தற்கொலைசெய்ய ஒருவர் விரும்பும்போது, அதற்கும் இன்னுமொருவரின் உதவியே அவருக்குத் தேவைப்படுமாயின், அந்த மனிதன் மிகவும் பரிதாபமானவன் என்றுதான் சொல்லவேண்டும். அப்படிப்பட்டவர்களால் வாழ்க்கையில் வலியறிதலைத் தவிர, வேறு எதுவுமே செய்ய முடியாது என்று முடிவாகிவிட்டால், அவர்களை ஏன் கருணைக்கொலை செய்வதற்கு அனுமதிக்கக் கூடாது என்ற குரல் உலக நாடுகளில் பல இடங்களில் கேட்கத் தொடங்கிவிட்டன. இப்படிப்பட்டவர்களைக் கருணைக்கொலை செய்யலாமெனச் சட்டரீதியாகப் பல நாடுகள் அனுமதித்துக் கொண்டுமிருகின்றன. ஆனால், ஒருவனின் உயிரை எடுத்துக்கொள்ளக் கடவுளுக்கு மட்டும்தான் உரிமை உண்டு, வேறு யாருக்கும் அந்த உரிமை கிடையாது. அந்த மனிதனுக்கே தன்னை மாய்த்துக்கொள்ள உரிமை கிடையாது என்ற எதிர்க் குரல்களும் எழாமலில்லை. இதில் எது சரி, எது தவறு என்ற தீர்ப்புச் சொல்லும் நிலையில் நானும் இல்லை. ஆனால் இப்படிப்பட்ட நிலைமை ஒரு மனிதனுக்கு வருமானால் அதுவே கொடுமையின் உச்சம் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். உடல் வலியோ, மனவலியோ அவரவர் மட்டுமே உணர முடியும். ஒருவரின் வலியுடன் ஒப்பிட்டு அடுத்தவரின் வலியை எடைபோடவே முடியாது. வலிதாங்கும் மனமும், வலிமையும் மனிதனுக்கு மனிதன் வேறானதாகும். யாரும் ஒரு உயிர் போவதை விரும்புவதில்லை. அது என்ன காரணமாக இருந்தாலும். ஆனால் இதுபோன்ற நிர்ப்பந்தங்களுக்குள்ளாகும் மனிதர்களின் சமீபத்தில் எப்போதும் உடனிருந்து, குறைந்தபட்சம் அவர்களின் தனிமையைப் போக்க ஒவ்வொருவராலும் முடியும். தனிமையே பல தற்கொலை எண்ணங்களுக்கு வித்துகளையிடுகிறது. நிராகரிப்பைப் போல ஒரு மனிதனுக்குக் கொடுக்கும் பெருந்தண்டனை உலகில் வேறெதுவும் கிடையாது. பொதுவெளியில் பகிரங்கமாக, ஒரு மாபெரும் மனிதனே, "என்னைத் தற்கொலைக்கு அனுமதித்துக் கொன்றுவிடுங்கள்" என்று சொல்லுமளவுக்கு சூழ்நிலை உருவாகியிருப்பது, மனித சமுதாயமே வெட்கப்பட வேண்டிய துயரம். 

பிபிசியின் அந்தப் பேட்டியின்போது, "என்னுடன் பேசுவதற்கே பலர் பயப்படுகிறார்கள்" என்று ஸ்டீபன் ஹாக்கிங் சொல்லியிருந்தது, இன்னும் காற்றலைகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.




May 11, 2015

வெரோனிக்காவின் முக்காடு - (பகுதி 7)



சமீபத்தில் 'எனக்குள் ஒருவன்' என்றொரு படம் பார்த்தேன். அதில் சித்தார்த் இரண்டு விதமான வேடங்களில் நடித்திருக்கிறார். தமிழுக்குப் புதுமையானதொரு கதையைச் சொல்லும் படமது. அந்தக் கதையின் கரு இதுதான். ஏழையாக, அழகில்லாமல் இருக்கும் ஒருவன், தான் காணும் கனவில் அழகிய, பணக்காரனாக வருகிறான். நிஜத்தில் இருப்பதை விட, என்னவாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறானோ, அப்படியெல்லாம் கனவில் வருகிறான். ஒரே மனிதன் இருவேறு தளங்களில், வெவ்வேறு மனிதனாகக் காட்சி தருகிறான். ஆனால், படத்தின் முடிவில்தான் தெரிகிறது, நடந்தவை எல்லாமே தலைகீழானவையென்று. நிழல் நிஜமாகவும், நிஜம் நிழலாகவும் முடிவில் மாறிவிடுகிறது. ரொம்பக் குழப்புகிறேனா? படத்தை இதுவரை நீங்கள் பார்த்திருக்காவிட்டால், ஒருமுறை பார்த்துவிடுங்கள். நான் சொல்ல வருவது அப்போது புரியும். அதுசரி, அந்தப் படத்தைப்பற்றி இங்கு எதற்குச் சொல்கிறேனென்றுதானே யோசிக்கிறீர்கள். சொல்கிறேன். லியர்னாடோ டா வின்சி நிஜமான 'மொனா லிசா' ஓவியத்தைக் கி.பி.1503ம் ஆண்டளவுகளில் வரைந்திருக்கலாம் என்று நம்புகிறார்கள். இந்த மொனா லிசா ஓவியம் தற்சமயம் பாரிஸில் இருக்கும் 'லூவ்ரெ' (Louvre) கண்காட்சியகத்தில் இருக்கிறது. அதனால் நிஜமென்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் மொனா லிசா ஓவியத்தை 'லூவ்ரெ மொன லிசா' என்று இனிச் சொல்லிக் கொள்வோம். இதுவரை உலகமெங்கும் தனியாளாக நின்று வெற்றி முழக்கம் செய்துகொண்டிருந்த 'லூவ்ரெ மொனா லிசா'விற்குப் போட்டியாக முளைத்தது ஒரு புது 'மொனா லிசா'. உலகமே அதிசயத்தில் துள்ளிக் குதித்தது. ஏற்கனவே, 'டா வின்சி' ஒரு மர்ம மனிதராக ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டு வருவதோடு, அவரின் பல ஓவியங்களும் மர்மங்கள் நிறைந்தவையென்று பார்க்கப்பட்டுவரும் வேளையில், இப்படியொரு புதுத் திருப்பத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. அச்சு அசலாக இரண்டும் ஒரே மொனா லிசாவாக இருந்ததால், ஒருவேளை அது மொனா லிசா என்னும் பெண்ணின் இரட்டைப் பிறவியாக இருக்கலாமென்றும் சந்தேகப்பட்டார்கள். அப்புறம் இது மொனா லிசா என்னும் பெண்ணின் இரட்டைப் பிறவியல்ல, மொனா லிசா ஓவியத்தின் இரட்டை என்ற முடிவுக்கு வந்தார்கள். இப்படியொரு இரட்டை (Twin) மொனா லிசா ஓவியத்துக்கு இருப்பதை யாரும் அதுவரைஅறிந்திருக்கவில்லை. இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களில் பலருக்குக் கூட இந்தச் செய்தி புதிதாகத்தான் இருக்குமென நம்புகிறேன். 




லூவ்ரெ மொனா லிசாவின் இரட்டை மொனா லிசா என்று சொலப்படும் ஓவியம், சில நூற்றாண்டு காலமாக யாரும் தீண்டாத ஓவியமாக, ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரிலிருக்கும் தேசியக் கண்காட்சிச்சாலையில் (The Prado, Spain's national museum) இருந்து வந்திருக்கிறது. 16ம் நூற்றாண்டிலும், 17ம் நூற்றாண்டிலும் டா வின்சியின் ஓவியங்களைப் பலர் நகலாக வரைந்திருக்கிறார்கள். அவற்றில் மொனா லிசாவின் ஓவியத்தையும் நகலெடுத்துப் பல ஓவியங்கள் இருக்கின்றன. நிஜமான ஓவியம் இருக்கும்போது, நகல்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் எப்போதும் குறைவாகவே இருக்கும். அந்த நகல்களும் திறமையான ஓவியர்களாலேயே வரையப்பட்டிருக்கும். அதுமட்டுமில்லாமல், அவை முந்நூறு, நானூறு ஆண்டுகள் பழமையானவை. ஆனாலும் அவை நகலென்பதாலேயே அதிகக் கவனம் கொடுக்கப்படாமல் வைக்கப்படுகின்றன. மொனா லிசாவின் நகல் ஓவியங்களை, பிராடோ தேசியக் கண்காட்சிச்சாலையில், தனியாகப் பாதுகாத்து வந்தனர். மிகச்சமீபத்தில், நவீனத் தொழில்நுட்பங்களின் மூலம் அந்த ஓவியங்கள் அனைத்தையும் எடுத்து ஆராய்ச்சி செய்தனர். பழைய ஓவியங்களுக்கு 'எக்ஸ் கதிர்' (X Ray), 'புற ஊதாக்கதிர்' (Ultra Violet), 'அகச்சிவப்புக் கதிர்' (Infrared) ஆகிய கதிர்களைச் செலுத்தி ஆராயும் முறை தற்சமயத்தில் வழக்கத்தில் உள்ளது. இந்தக் கதிர்ச் சோதனைகளால் ஒவ்வொரு மொனோ லிசா நகல்களையும் ஆராய்ந்து பார்த்தனர். அவற்றில் இருந்த ஒரு மொனா லிசா ஓவியத்தில், மொனா லிசாவின் உருவம் மட்டும் தெளிவாகத் தெரிய, உருவத்தைச் சுற்றியுள்ள பின்னணியில் கருப்பு நிறம் பூசப்பட்டிருந்தது. கருப்புநிறப் பின்னணி பூசப்பட்டிருந்தது ஏனோ வித்தியாசமான உணர்வைக் கொடுக்க, அதை நன்றாக ஆராய்ந்து பர்த்தார்கள். அப்போதுதான் அந்த ஆச்சரியம் நடந்தது. அந்த ஓவியத்தின் மீது எக்ஸ் கதிர்களைச் செலுத்திப் பார்த்தபோது மிரண்டே போனார்கள். அதுவரை காணத்தவறிய ஒரு காட்சியை அவர்கள் அங்கே கண்டனர். 





அந்த மொனா லிசா ஓவியத்தில் எக்ஸ் கதிர்கள் பட்டவுடன், கருப்பு நிறத்துக்குக் கீழே வேறொரு அழகான வர்ணமயமான பின்னணி அந்த ஓவியத்தில் வரையப்பட்டிருந்தது தெரிந்தது. அந்தப் பின்னணிக் காட்சியைச் சரியாகக் கவனித்தபோது, நிஜமான லூவ்ரெ மொனா லிசா ஓவியத்தின் பின்னணி எதுவோ, அச்சு அசலாக அந்தப் பின்னணி அங்கே இருந்தது. என்ன நடக்கிறதென்றே புரியவில்லை அந்த ஓவியத்தை ஆராய்ச்சி செய்தவர்களுக்கு. அதாவது ஒரு அழகான ஓவியத்தின் மேல் பகுதிக்குக் கருப்பு வர்ணத்தை வேண்டுமென்றே தீட்டி உருமறைப்புச் செய்திருக்கிறார்கள். நிஜ ஓவியத்தைப் போலவேயிருக்கும் இந்த ஓவியம், யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே அந்தக் கருப்பு வர்ணம் பூசப்பட்டிருந்தது. யார் அப்படிச் செய்திருந்தார்களென்பது பற்றிய எந்தக் குறிப்பும் வரலாற்றில் காணப்படவில்லை. கி.பி.1660ம் ஆண்டளவுகளில் அந்தக் கருப்பு வர்ணம் பூசப்பட்டிருக்கலாம். இதில் இன்னுமொரு ஆச்சரியமும் இருந்தது. அந்தக் கருப்பு வர்ணத்தை மெதுவாக சுரண்டி நீக்க முயற்சித்தபோது, அது இலகுவாகவே அந்த ஓவியத்திலிருந்து நீங்கியது. அப்புறம் என்ன. அந்தக் கருப்பு நிறம் மொத்தமாக நீக்கப்பட்டது. நீக்கிவிட்டுப் பார்த்தவர்களுக்கு தங்கள் கண்களையே நம்பமுடியவில்லை. லூவ்ரெ மொனா லிசாவை அப்படியே உரித்து வைத்ததுபோல இன்னுமொரு மொனா லிசா அங்கே காணப்பட்டாள். ஒருவேளை இதுவும் ஏனைய மொன லிசாக்களைப்போல நகல் ஓவியமாக இருக்குமோவென்ற ரீதியில் ஆராய்ந்து பார்த்தபோது, அந்த ஓவியம் லூவ்ரெ மொனா லிசாவின் நகலல்ல என்று இலகுவாகப் புரிந்து போனது. இரண்டு ஓவியங்களிலும் இருந்தது ஒரே மொனா லிசாதானென்றாலும் அவை வரையப்பட்டிருந்த பார்வைக் கோணங்களில் சற்றே மாற்றமிருந்ததைக் கண்டுபிடித்தார்கள். ஏனைய நகல்கள் அனைத்திலும் மொனா லிசாவின் பின்னணிக் காட்சிகள் வெவ்வேறான விதங்களில், மழுப்பப்பட்டவையாக இருந்தன. ஆனால் இந்த மொனா லிசாவில் இரண்டு பின்னணிக் காட்சிகளும் ஒன்றுபோல இருந்தன. இரண்டு மொனா லிசாக்களின் காலங்களை ஆராய்ந்து பார்த்தபோது, கிடைத்த பதில் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருந்தது.




இரண்டு மொனா லிசா ஓவியங்களையும் பலவித ஆராய்ச்சிகளுக்குட்படுத்திப் பார்த்தபோது, இரண்டு ஓவியங்களுமே ஒரே காலத்தில், அதுவும் ஒரே நேரத்தில் வரையப்பட்டதாகத் தெரிய வந்தது. அதாவது, லியர்னாடோ டா வின்சியே இரண்டு படங்களையும் ஒரே சமயத்தில் வரைந்திருக்க வேண்டும். இல்லையென்றால், லியர்னாடோ டா வின்சி, மொனா லிசாவை மாடலாக இருக்கும்படி வைத்து, அந்த ஓவியத்தை வரைந்து கொண்டிருந்தபோது, டா வின்சியைப் போலவே ஓவியம் வரைவதில் திறமையுள்ள வேறொருவர், அருகில் நின்றுகொண்டு இரண்டாவது ஓவியத்தை வரைந்திருக்க வேண்டும். இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். "லியர்னாடோ டா வின்சியே ஒரு ஓவியத்தை வரைந்த பின்னர், இரண்டொரு நாட்கள் கழித்து, முதலாவது ஓவியத்தைப் பார்த்து இரண்டாவது ஓவியத்தை வரைந்திருக்கலாம்தானே!". இப்படி ஒரு சந்தேகம் அனைவருக்கும் வருவது இயல்புதான். 'அது எப்படி இரண்டு ஓவியங்களையும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் இருவர் அருகருகேயிருந்து வரைந்திருக்கிறார்கள்' என்ற முடிவுக்கு வந்தார்கள்? ஓவியங்களை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த முடிவுக்கு வந்ததற்குப் பெரிய காரணம் இருந்தது. அதுவும் ஆச்சரியமான ஒரு காரணம்தான்.




தொடர்வதற்கு முன்னர் ஒன்று. மொனா லிசா ஓவியங்களில் இப்போது இரண்டு ஓவியங்களைப்பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். இரண்டு ஓவியங்களையும் குறிப்பிடுவதற்கான பெயர்களை நாம் முடிவு செய்து கொள்ளவேண்டும். நிஜமான மொனா லிசா என்று கருதப்படும் ஓவியத்தை, 'லூவ்ரெ மொனா லிசா' என்று சொல்வார்களென முன்னர் சொன்னேனல்லவா? அதுபோல, இந்த இரண்டாவது மொனா லிசா ஓவியத்தை 'பிராடோ மொனா லிசா' (Prado Mona Lisa) என்று அழைக்கிறார்கள். நாங்களும் இனி அப்படியே அழைத்துக் கொள்ளலாம். இனி விசயத்துக்கு வருகிறேன். இரண்டு ஓவியங்களும் ஒரே நேரத்தில் வரையப்பட்டன என்பதற்கான சான்றுகள் ஆராய்ச்சியாளர்களுக்கு எப்படிக் கிடைத்தன தெரியுமா? லூவ்ரெ மொனா லிசா ஓவியத்தை டா வின்சி வரையும்போது, எந்த எந்த இடங்களை அழித்து மீண்டும் திருத்தங்கள் செய்திருந்தாரோ, அதே இடங்களில் பிராடோ மொனா லிசா ஓவியத்திலும் அழித்துத் திருத்திய மாற்றங்கள் இருந்தன. அதாவது ஓவியம் வரையும்போது ஏற்படும் தவறுகளை அழித்துவிட்டு மீண்டும் திருத்தி வரையும்போது, அங்கு ஆழமான அடையாளங்களும், ஓவியங்களில் பயன்படுத்தும் மை அதிகளவில் ஒன்றுக்குமேல் ஒன்றாகப் பூசப்பட்டிருக்குமல்லவா? இவையனைத்தும் இரண்டு ஓவியங்களிலும் ஒன்றுபோல இருந்தன. லூவ்ரெ மொனா லிசாவில் அப்படிப் பல இடங்களில் டா வின்சி திருத்தங்களைச் செய்திருந்தார். அதேயளவு இடங்களில் பிராடோ மொனா லிசாவிலும் திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தன. இதுவொரு சாதாரண நிகழ்வு கிடையாது. தற்செயலாக அமையக் கூடிய நிகழ்வாகவும் இருக்க முடியாது. ஒரே இடத்திலிருந்து இருவர் ஒரே ஓவியத்தை வரைந்து கொண்டிருக்கும்போது, அதில் தலைமையாக இருந்து வரைபவருக்கு ஏற்படும் அதிருப்தியினால் மாற்றங்கள் செய்யும்போது, அவரது சிஷ்யரானவரும் அந்த மாற்றங்களைச் செய்து வரைந்திருக்க வேண்டுமென்று உறுதியாகச் சொல்ல முடிந்தது. அத்துடன் அந்த இரண்டாவது மொனா லிசா ஓவியத்தை வரைந்தவர் நிச்சயமாக டா வின்சியின் சிஷ்யர்களில் ஒருவராகத்தான் இருக்க முடியுமென்ற முடிவுக்கும் வந்தார்கள். நீங்கள் பார்க்கும் அந்த பிராடோ மொனா லிசாவை நன்றாக உற்றுப் பாருங்கள். டா வின்சியே வரைந்ததாகச் சொல்லப்படும் நிஜ லூவ்ரெ மொனா லிசாவை விட, மிக அழகான தோற்றத்தில் அந்தப் பிராடோ மொனா லிசா ஜொலிப்பது தெரியும். அது மட்டுமில்லாமல், அந்த மொனா லிசாவின் உடையின் மேல் போர்த்தியிருக்கும் மெல்லிய பட்டுத் துணியினூடாக ஆடைகள் தெரிவதைத் தத்ரூபமாக வரைந்திருப்பது தெரியும். டா வின்சியைப் போலவே கைதேர்ந்த ஓவியர் ஒருவராலேயே அப்படி வரைந்திருக்க முடியும். அல்லது டா வின்சியால் மிகக்கவனமெடுத்துப் பயிற்றுவிக்கப்பட்ட ஒருவராலேயே அப்படியொரு ஓவியத்தை வரைந்திருக்க முடியும். காரணம் நிஜ மொனா லிசா ஓவியத்தை விட, இது மிகவும் அழகாகவும், இளமையாகவும் வரையப்பட்டிருக்கிறது என்பது ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மைதான். 




டா வின்சியின் சிஷ்யர்களில் ஒருவர்தான் அந்த ஓவியத்தை வரைந்திருக்க முடியுமென்ற முடிவுக்கு வந்தால், அது அவரின் இரண்டு சிஷ்யர்களில் ஒருவராகத்தான் இருக்கும். அந்த இருவரில் ஒருவரை உங்களுக்கு ஏற்கனவே தெரியும். முன்னர் அவரைப்பற்றிச் சொல்லியிருக்கிறேன். அவர்தான் டா வின்சியின் காதலரான 'அந்த்ரேயா சலை' (Andrea Salai) என்பவர். அவர் இல்லாத பட்சத்தில் டா வின்சியின் பிரதான சிஷ்யரான ஃபிரான்செஸ்கோ மெல்ஷி' (Francesco Melzi) ஆகவும் இருக்கலாம். திறமையின் அடிப்படையில் பார்த்தால் மெல்ஷி வரைந்திருக்கவே சாத்தியம் அதிகம் உண்டு. ஆனால், டா வின்சியின் அந்தரங்க ஓவியங்களை, அவருடன் இருந்து வரையக் கூடியவரென்று பார்த்தால் சலையாக இருக்கும் சாத்தியம் உண்டு. இரு ஓவியங்களும் மிக அருகருகே இருந்தவாறே வரையப்பட்டிருக்க வேண்டும். அதற்குக் காரணம் இரண்டு ஓவியங்களும் வரையப்பட்டிருக்கும் பார்வைக் கோணம் (Angle of view) என்று சொன்னேனல்லவா? அந்தப் பார்வைக் கோண வித்தியாசத்தைக்கூட ஆராய்ச்சியாளர்கள் அளந்திருக்கிறார்கள். மிகச்சரியாக 2.7 அங்குலம் இடைவெளிகளிலுள்ள பார்வைக் கோணங்களில் அந்த இருவரும் நின்றுகொண்டு மொனா லிசாவை வரைந்திருக்கின்றனர். இதற்கு இன்னுமொரு முக்கிய ஆதாரம் இரண்டு படங்களிலும் காணப்படுகின்றது. மொனா லிசா உட்கார்ந்திருக்கும் நாற்காலியின் மேற்பகுதியின் ஒரு பக்கம், சொற்ப அளவில் பிராடோ மொனா லிசா ஓவியத்தில் தெரிகிறது. ஆனால், லூவ்ரெ மொனா லிசா ஓவியத்தில் அந்த நாற்காலியின் அடையாளம் தெரியவில்லை. இதிலிருந்து, லூவ்ரெ ஓவியத்தை வரைந்தவர் மொனா லிசாவுக்கு நேர் எதிரே நின்று வரைந்திருக்கிறாரென்றும், பிராடோ ஓவியத்தை வரைந்தவர் சற்று இடப்பக்கம் நின்றபடி வரைந்திருக்கிறாரெனவும் தெரிய வருகிறது. இந்த இடத்தில்தான் சிலருக்கு முக்கியமானதொரு சந்தேகம் தோன்றுகிறது. 


லியர்னாடோ டா வின்சி இடது கைப்பழக்கமுள்ளவர் என்பதை முன்னர் சொல்லியிருந்தேனல்லவா? அப்படியென்றால், இடது பக்கம் நின்று வரைந்தவராக லியர்னாடோ டா வின்சியாகவல்லவா இருக்கவேண்டும். இடது பக்கம் வரையும் பலகை இருக்கும்போது, அதை இடக்கையால் வரைவதுதானே இலகுவாக இருக்கும். அப்படிப் பார்க்கும்போது, நாம் தற்சமயம் நிஜமென்று நினைத்துக் கொண்டிருக்கும் லூவ்ரெ மொனா லிசா ஓவியத்தை டா வின்சியின் சிஷ்யன் வரைந்திருக்க வேண்டும். பிராடோ மொனா லிசா ஓவியத்தை டா வின்சி வரைந்திருக்க வேண்டும். உண்மை ஏன் இப்படியும் இருக்கக் கூடாது? சரியாகப் பார்த்தால், அழகாகவும், ஜொலிப்பாகவும், இளமையாகவும், தெளிவாகவும் இருப்பது பிராடோ ஓவியம்தான். அப்படிப் பார்க்கையில் அதை டா வின்சி வரைந்திருக்கத்தான் சாத்தியம் அதிகம். இதுவரை நிஜத்தை நிழலென்றும், நிழலை நிஜமென்றும் நாம் நம்பி வருகின்றோமா? இப்போது இந்தப் பகுதியின் ஆரம்பத்தில் 'எனக்குள் ஒருவன்' படத்தைப் பற்றி நான் ஏன் சொன்னேனென்று உங்களுக்குப் புரிந்திருக்கும். எது எப்படியிருந்தாலும், இரண்டு ஓவியங்களிலும் டா வின்சியின் ஆளுமை இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதுவரைக்கும் மகிழ்ச்சிதான். இதை மீளப்பரிசோதனை செய்யும் அளவுக்கு லுவ்ரெ மொனா லிசா ஓவியம் இல்லை. மேலதிகமான பரிசோதனைகளுக்கு அதை உட்படுத்தும்போது கெட்டுப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏற்கனவே அந்த ஓவியம் மிகவும் பழுதடைந்த நிலையிலேயேதான் காணப்படுகிறது. அதனால் அதுவே டா வின்சி வரைந்த நிஜ ஓவியமென்று நம்பிவிடுவதில் நம் யாருக்கும் பிரசனை இல்லை. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்த இரண்டு மொனா லிசா ஓவியங்களையும் டா வின்சி ஒரு முக்கிய தேவையைக் கருதியே இரண்டுவிதமான பார்வைக் கோணங்களில் வரைந்தெடுத்திருக்கிறாரென்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்கும்போது தலையே சுற்றுவது போல இருக்கும். மிகச்சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்தை, டா வின்சி அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னரே பரிசோதித்துப் பார்த்திருக்கிறாரென்று, தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அப்படி டா வின்சி முயற்சி செய்து பார்த்தது என்ன தெரியுமா? மனித வரலாற்றிலேயே முதன்முதலாக முப்பரிமாணத் தோற்றத்தைத் (3 Dimension) தரக்கூடிய ஓவியத்தை டா வின்சி வரைந்திருக்கிறார் என்பதுதான் அது.


- தொடரும்


March 29, 2015

பேரண்ட விரிவின் பேராச்சரியங்கள் - பகுதி 3

முன்னுரை:

'விகடன் இயர் புக் 2015’ (Vikatan Yearbook 2015) இல் வெளிவந்த இந்தக் கட்டுரை, கருந்துகள் (Dark Matter), கருஞ்சக்தி (Dark Energy) ஆகிய இரண்டையும் விரிவாக எடுத்துச் சொல்வதற்காக எழுதப்பட்டது. இவை இரண்டைப்பற்றியும் ஆரம்பத்திலிருந்து முழுமையாகப் புரிய வைக்க வேண்டுமென்பதனால், நான் முன்னரே பல கட்டுரைகளில் சொன்ன தகவல்களும் இதில் அடங்கியிருக்கின்றன. அதனால், 'ஏற்கனவே இதைப் படித்திருக்கிறேன்' என்ற உணர்வு உங்களுக்கு இடையிடை தோன்றலாம். ஆனால் கட்டுரையின் முழுமை கருதியே அவை இடம்பெறுகின்றன. மேலும், இந்தக் கட்டுரை மிக நீண்டதொரு கட்டுரை. அதை நீங்கள் தொடர்ச்சியாகப் படிப்பதற்குச் சிரமம் இருக்குமென்பதால், மூன்று பகுதிகளாகப் பிரித்து இங்கு பதிவிடுகிறேன். நன்றி.

-ராஜ்சிவா-


பேரண்ட விரிவின் பேராச்சரியங்கள் - பகுதி 3




ஆரம்பப் பெருவெடிப்பின் பின்னர் அண்டத்தில் நடைபெற்ற காட்சிகளையெல்லாம் நம்மால் இப்போதும் பார்க்கக் கூடியதாகவே இருக்கின்றது. பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததையெல்லாம் நம்மால் மீண்டும் பார்க்க முடியும். "என்ன, அவைதான் நடந்து முடிந்து போனவையாயிற்றே! இறந்த காலத்தை நம்மால் எப்படிக் காண முடியும்?" என்று நீங்கள் சிந்திப்பது புரிகிறது. ஆனால் நிஜத்தில் எப்போதும் நாம், 'நிகழ்காலத்தில் நின்றுகொண்டு, இறந்தகாலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்'. இறந்தகாலத்தை நோக்கி நம்மால் நகர முடிவதில்லையேயொழிய, நம் இரண்டு கண்களாலும் அதைப் பார்க்க முடியும். இப்போது நீங்கள் ரொம்பக் குழம்பிப் போயிருப்பீர்கள். அதனால், இதைக் கொஞ்சம் விரிவாகவே நாம் பார்க்கலாம். உங்கள் நண்பனிடம் "உன் வெற்றுக் கண்களால் உன்னால் எவ்வளவு தூரம் பார்க்க முடியும்?" என்று கேட்டுப் பாருங்கள். அவன் ஒரு குறித்த அளவுத் தூரத்தை, அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக் காட்டிப் பதில் சொல்வான். அந்தப் பதில் சரியானது போலவும் உங்களுக்குத் தோன்றும். ஆனால், உண்மையில் நம் கண்களால் நாம் எவ்வளவு தூரத்தில் உள்ள பொருட்களைப் பார்க்கிறோம் தெரியுமா? பல பில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களையெல்லாம் நம் கண்களால் பார்க்கிறோம். சூரியன் தவிர்ந்து, நமக்கு மிக அருகாமையில் இருப்பது 'அல்பா செண்டாரி A', 'அல்பா செண்டாரி B' என்னும் இரட்டை நட்சத்திரங்கள். இவை பூமியிலிருந்து 4.3 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கின்றன. அதற்கு அப்புரம் 25 ஒளியாண்டுகள், ஐம்பது ஒளியாண்டுகள், நூறு ஒளியாண்டுகள் தூரத்திலெல்லாம் நட்சத்திரங்கள் இருக்கின்றன. பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள காலக்ஸிகளும் நம் கண்களுக்குத் தெரிகின்றன. ஒளியானது ஒரு நொடிக்கு 3 இலட்சம் கிலோமீட்டர்கள் பயணம் செய்யக் கூடியது. அப்படியென்றால், ஒளி ஒரு ஆண்டுக்கு எத்தனை கிலோமீட்டர்கள் பயணம் செய்யும் என்பதை நாம் கணிப்பிடலாம். கணக்கிட்டு வருவது எத்தனை கிலோமீட்டர்களோ அதுவே ஒரு ஒளியாண்டுத் தூரம் ஆகும். இப்போது, பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் காலக்ஸிகள் எத்தனை கிலோமீட்டர்களாக இருக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இதை இப்படியும் பார்க்கலாம். நான்கு ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் நட்சத்திரத்திலிருந்து, ஒளி நம் கண்களை வந்தடைய வேண்டுமென்றால், நான்கு ஆண்டுகள் தேவை. அதாவது அந்த நட்சத்திரம் தெரிய ஆரம்பித்து நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் நம் கண்களுக்குத் தெரியும். தற்போது நீங்கள் ஒரு நட்சத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால், அந்த நட்சத்திரம் 25 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்குமானால், நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது 25 வருடத்துக்கு முன்னால் இருந்த நட்சத்திரத்தை. இன்று உள்ள நட்சத்திரத்தை அல்ல. அதாவது 25 வருடத்தின் முன்னரான இறந்த காலத்தையே அந்த நட்சத்திரத்தில் காண்கிறீர்கள். அப்படிப் பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள காலக்ஸியொன்று உங்கள் கண்களுக்குத் தெரிந்தால், நீங்கள் பில்லியன் வருடத்துக்கு முன்னால் உள்ள இறந்த காலத்தைப் பார்க்கிறீர்கள். இப்போது அந்த நட்சத்திரம் அங்கு இருக்கிறதா? அல்லது வெடித்துச் சிதறிவிட்டதா? என்று கூட உங்களுக்குத் தெரியாது. இப்போ புரிகிறதா, நீங்கள் நிகழ்காலத்தில் நின்று கொண்டு இறந்தகாலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று. நமது சூரியன் கூட எட்டேகால் நிமிடங்களின் பின்னர்தான் நம் கண்களுக்குத் தெரிகிறது. நாம் பார்க்கும்போது தெரியும் சூரியன், எட்டேகால் நிமிடங்களுக்கு முன்னரான சூரியன். சூரியனிலிருந்து ஒளி நம்மை வந்தடைய எட்டேகால் நிமிடங்கள் ஆகிறது. நாம் பார்க்கும் அனைத்தும் இப்படித்தான். ஒரு மீட்டர் தூரத்தில் இருக்கும் உங்கள் மனைவியைக் கூட, நானோ செக்கன்கள் இடைவெளிகளின் பின்னர்தான் பார்க்கிறீர்கள். அதே கணத்திலல்ல. நம் கண்களால் பார்ப்பவை எல்லாமே இறந்தகாலம்தான். இதன்படி பார்த்தால், மனிதன் கண்டுபிடித்த தொலைநோக்கிக் கருவிகள்தான், உலகின் முதன்முதலான 'கால இயந்திரம்' (Time Machine) என்று சொல்லலாம். இன்று கண்டுபிடிக்கப்பட்ட நவீன தொலைநோக்கிக் கருவிகளின் தொழில்நுட்பம் வார்தைகளால் விவரிக்க முடியாதது. அப்படிப்பட்ட தொலைநோக்கிக் கருவிகளில் சிலவற்றை விண்வெளிகளில் கூட மிதக்கவிட்டுள்ளார்கள். பூமியின் அட்மாஸ்பியர் என்னும் வளிமண்டலத்தின் வெப்பக்கதிர்த் தடைகள் ஏதும் இல்லாமல் வானிலையை ஆராய்ச்சி செய்வதற்கு இது உதவுகின்றது. இந்தத் தொலைநோக்கிக் கருவிகள்மூலம், பெருவெடிப்பிற்கு 480 மில்லியன் வருடத்தின் பின்னுள்ள 'குழந்தை அண்டத்தைப்' (Baby Universe) புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. அதாவது 13 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த அண்டங்களைக் கூட நம்மால் பார்க்க முடிகிறது. யாருக்குத் தெரியும், பெருவெடிப்பின் கணத்தையும் மனிதன் ஒருநாள் பார்த்தாலும் பார்க்கலாம். ஆனால் இன்றுள்ள சூழ்நிலையில் அதைப் பார்க்கவே முடியாது. நவீன தொலைநோக்கிக் கருவிகள்மூலம் பெருவெடிப்பின் விரிவு நடந்த காலங்களைப் படிப்படியாக ஆராய்ந்து கொண்டு வந்த போதுதான் அந்த ஆச்சரியத்தை விஞ்ஞானிகள் கண்டுகொண்டனர். 



பெருவெடிப்பின் பின்னர் உருவான கோடிக்கணக்கான காலக்ஸிகளெல்லாம் அண்டத்தின் விரிவால் விலகிச் சென்ற போதும், காலக்ஸிகளுக்குள் இருக்கும் நட்சத்திரங்களும், கோள்களும் தமக்குள் விலகாமல், ஒரு ஈர்ப்புவிசையுடன் பிணைக்கப்பட்டு. ஒன்றாகவே இருந்து வந்தன. அப்படியொரு விலகல் ஏற்படுமேயானால், பூமி எப்போதோ சூரியனை விட்டு விலகிச் சென்றிருக்கும், அல்லது சூரியன் வேறு நட்சத்திரத்துடன் மோதியிருக்கும். ஆனால், ஒவ்வொரு காலக்ஸியையும் ஒன்றாக இணைத்தும், அதை விண்வெளியுடன் சேர்த்தும், ஏதோ ஒரு சக்தி வைத்திருப்பதை விஞ்ஞானிகள் அவதானித்தனர். அந்தச் சக்தி எதுவென்றே ஆரம்பத்தில் தெரியவில்லை. ஆனால் கண்ணுக்குத் தெரியாத கருமையான ஒரு சக்தியாகவே, அந்தச் சக்தி இருப்பது மட்டும் புரிந்தது. இந்த நேரத்தில்தான் ஐன்ஸ்டைன் கண்டுபிடித்துச் சொல்லிய ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்கு உதவியது. விண்வெளியில் இருப்பவைகளின் ஈர்ப்புவிசையின் பலத்தினால், ஒளிகூட வளையும் என்று சொல்லியிருந்தார். இதைக் 'ஈர்ப்பு வில்லை' (Gravitational Lensing) என்பார்கள். இதை வைத்துக் கொண்டு விண்வெளியை ஆராய்ந்தபோது, கறுப்பு நிறத்திலான ஏதோ ஒன்று காலக்ஸிகளை ஒன்று சேர்த்து வைத்திருப்பதைக் கண்டு கொண்டார்கள். அந்தக் கருப்பு நிறப்பொருளையே 'கரும்பொருள்' (Dark Matter) என்று பெயரிட்டு அழைக்கின்றனர். பேரண்டம் முழுவதும் 23% அளவில் இந்தக் கருப்பு சக்தி பரவியிருப்பதை இப்போது கணித்திருக்கிறார்கள். வாயகன்ற ஒரு பாத்திரத்தில் மோட்டார் வாகனத்துக்குப் பயன்படுத்தும் டீசல் எண்ணெய்யை ஊற்றிவிட்டு, அதன் மேற்பரப்பில் மரத்தூளை நீங்கள் தூவினால், எப்படிக் கருத்த டீசல் எண்ணெய் அந்த மரத்தூள்களை சேர்த்து வைத்திருக்கிறதோ, அப்படிக் கரும்பொருளும், காலக்ஸிகளை தன்னுடன் இழுத்து வைத்தபடி இருக்கின்றது. நவீன தொலைநோக்கிகள்மூலம் அவதானித்தபோது, பெருவெடிப்பின் பின், இந்த டார்க் மாட்டரானது காலக்ஸிகளை ஒன்றாக இழுத்து வைத்து அண்டத்தைச் சீராக விரிவடையச் செய்துகொண்டிருந்தது. ஆனால், இந்தச் சீரான விரிவு 9 பில்லியன் ஆண்டுகள் வரைதான் இருந்தது. அதன் பின்னர் நடந்தது இன்னுமொரு பேராச்சரியம்.



விண்வெளி விரிவதை ஆராய்ந்து கொண்டிருந்த விஞ்ஞானிகள் பெரும் ஆச்சரியத்தைத் திடீரெனக் கண்டுகொண்டார்கள். அண்டத்தின் எல்லையில் உள்ள காலக்ஸிகள் சிலவற்றில் காணப்பட்ட சுப்பர்நோவா நட்சத்திரங்களுக்கிடையேயுள்ள தூரங்களை அளந்து எடுத்துக் கொண்டார்கள். அவற்றைக் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் அளந்து கொண்டு வந்தபோது, அந்த ஆச்சரியம் உறுதிசெய்யப்பட்டது. அதாவது, பேரண்டமானது ஒரு குறித்த வேகத்தில் விரிவடைவதற்குப் பதிலாக வேகவளர்ச்சியுடன் (Acceleration) கூடிய மிகை வேகத்துடன் விரிந்து கொண்டே போய்க்கொண்டிருக்கிறது. ஒரு பந்தை, வானத்தை நோக்கி எறிந்தால், அந்தப் பந்தின் வேகம் படிப்படியாகக் குறைந்து பூச்சியமாக வேண்டுமல்லவா? அதற்கு மாறாக, அந்தப் பந்து மேலும் மேலும் வேகவளர்ச்சியடைந்து மேல் நோக்கிச் சென்று கொண்டேயிருப்பது நம்பமுடியாத ஒன்றல்லவா? தொலைநோக்கிக் கருவிகள்மூலம் இதை ஆராய்ந்து பார்த்தபோது, கடந்த நான்கு பில்லியன் வருடங்களாகத் திடீரென இந்த வேகவளர்ச்சி அண்டத்தில் ஏற்பட்டிருப்பது தெரிந்தது. அது எப்படி? எது இந்த வேக வளர்ச்சியைக் கொடுக்கிறது? 'டார்க் மாட்டர்' காலக்ஸிகளை ஒன்றாக இழுத்து வைத்துக் கொண்டிருக்கும்போது, இன்னுமொரு சக்தி அவற்றை வேகவளர்ச்சியுடன் விலகச் செய்கிறதே! இந்த ஆச்சரியத்துக்கு என்ன காரணம்? யாருக்குமே இன்றுவரை விடை தெரியாத மர்மம் இது. அண்டத்தை வேகமாக விரிவடையச் செய்யும் அந்தச் சக்தியைத்தான் 'கரும்சக்தி' (Dark Energy) என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்தக் கரும்சக்தி, அண்டம் எங்கும் பரவி, அண்டத்தை நினக்கவே முடியாத அளவு பெரிதாக்கி, முடிவிலியை நோக்கி விரிவடைந்து கொண்டேயிருக்கிறது. இந்தச் சக்தியின் விரிவும் ஒரு நாள் முடிவடைந்து மீண்டும் குறைவடையுமா? அல்லது மேலும் மேலும் விரிவடைந்து கொண்டு போய், ஒரு நிலையில் அந்த விரிவைத் தாங்க முடியாமல், அண்டம் மீண்டும் கட்டுடைந்து உறைந்து போகுமா? எதுவும் தெரியவில்லை. இப்படி விரிவடைந்து கொண்டு சென்று ஒருநாள் அதன் தாக்கம் தாங்க முடியாமல் உருக்குலைந்து போவதை, 'பெரும் குளிர்ச்சி' (Big Chill) என்கிறார்கள். நான் ஆரம்பத்தில் கூறிய பலூனின் முதல் நிலை இதுதான்.




கரும்பொருள், கரும்சக்தி ஆகிய இரண்டுமே இன்றைய விஞ்ஞானிகளுக்குச் சவால் விடும் இரண்டு சக்திகள், இதுவரை இவை எவையென மனிதனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதுவாக இருக்கலாம், இதுவாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் மட்டும்தான் உள்ளனவேயொழிய, உன்மையில் இவை என்னவென்று தெரியவே தெரியாது. இன்றுள்ள கணிப்பின்படி, அண்டம் முழுவதும் உள்ள நட்சத்திரங்கள், கோள்கள், காலக்ஸிகள், கருந்துளைகள், க்வேஸார்கள் இன்னபிற பொருட்களெல்லாம் சேர்ந்து, அண்டத்தின் 4% அளவும், கரும்பொருள் என்னும் டார்க் மாட்டர் 23% அளவும், கரும்சக்தி எனப்படும் டார்க் எனர்ஜி 73% ஆகக் காணப்படுகின்றன. கரும்சக்திதான் அதிகமாக அண்டம் முழுவதும் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது. 


இன்றைய அறிவியலின்படி கரும்சக்தியும், கரும்பொளும் இருக்கின்றன என்னும் முடிவுக்கு மட்டுதான் நாம் வந்திருக்கின்றோம். இவையிரண்டும் ஒன்றுக்கொன்று வேவ்வேறு எதிர்ச் செயல்களைச் செய்தாலும், இவை ஒன்றோடு ஒன்று தொடர்பானவையா? அல்லது வெவ்வேறானவையா? என்பது தெரியவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் சொல்லலாம். இந்துமதத்தின் சிவனும், சக்தியும் போல இவை இரண்டும் இருப்பது என்னவோ நிஜம். இவை இரண்டும் கருமையாக இருப்பது அந்த நினைப்புக்குகான இன்னுமொரு பலம். இதனால் நான் இந்துமதத்தை இங்கு வலியுறுத்துகிறேன் என்று யாரும் தப்பாக நினைத்துவிட வேண்டாம். இந்தச் சக்திகள்பற்றி ஏற்கனவே தெரிந்திருந்த நம் அறிவுள்ள மூதாதையர்கள், இதை ஏதோ வகையில் குறித்துச் சொல்லியிருக்க, நாம் அதை இந்த விதத்தில் அர்தப்படுத்தியும் இருக்கலாம். எது எப்பிடியிருந்தாலும், கண்களுக்குத் தெரியாத இந்த இரு மாயசக்திகளும் இந்தப் பேரண்டத்தையே வழிநடத்திச் செல்கின்றன என்பதுதான் தற்போதய நிஜம். இப்பகுதியுடன் இந்த கட்டுரை முற்றுபெறுகிறது.


-ராஜ்சிவா-


பேரண்ட விரிவின் பேராச்சரியங்கள் - பகுதி 2

முன்னுரை:

'விகடன் இயர் புக் 2015’ (Vikatan Yearbook 2015) இல் வெளிவந்த இந்தக் கட்டுரை, கருந்துகள் (Dark Matter), கருஞ்சக்தி (Dark Energy) ஆகிய இரண்டையும் விரிவாக எடுத்துச் சொல்வதற்காக எழுதப்பட்டது. இவை இரண்டைப்பற்றியும் ஆரம்பத்திலிருந்து முழுமையாகப் புரிய வைக்க வேண்டுமென்பதனால், நான் முன்னரே பல கட்டுரைகளில் சொன்ன தகவல்களும் இதில் அடங்கியிருக்கின்றன. அதனால், 'ஏற்கனவே இதைப் படித்திருக்கிறேன்' என்ற உணர்வு உங்களுக்கு இடையிடை தோன்றலாம். ஆனால் கட்டுரையின் முழுமை கருதியே அவை இடம்பெறுகின்றன. மேலும், இந்தக் கட்டுரை மிக நீண்டதொரு கட்டுரை. அதை நீங்கள் தொடர்ச்சியாகப் படிப்பதற்குச் சிரமம் இருக்குமென்பதால், மூன்று பகுதிகளாகப் பிரித்து இங்கு பதிவிடுகிறேன். நன்றி.

-ராஜ்சிவா-


பேரண்ட விரிவின் பேராச்சரியங்கள் - பகுதி 2



இயற்பியல் மற்றும் கணித விதிகளின்படி, மறுக்க முடியாத கோட்பாடுகளை (Theory) அமைத்து, தனக்கென ஒரு தனிவழியில் குவாண்டம் இயற்பியல் சென்றுகொண்டிருக்கிறது. குவாண்டம் இயற்பியல் நிறுவும் கோட்பாடுகள் அனைத்துமே மந்திரங்கள் நிறைந்ததொரு மாய உலகில் வசிப்பது போன்ற பிரமையையே நமக்கு ஏற்படுத்தும். நம்பவே முடியாத ஆச்சரியங்களும், வியப்புகளும், மர்மங்களும் நிறைந்தது குவாண்டம் உலகு. நாம் வாழ்வதாக நினைத்துக் கொண்டிருப்பதே, அண்டவெளியில் இருக்கும் கருந்துளைகளிலிருந்து வெளிவரும் ஹோலோகிராம் (Hologram) காட்சிகள்தான் என்கிறது குவாண்டம். அதுமட்டுமில்லை, 'யூனிவேர்ஸ்' (Universe) என்று சொல்லப்படும் 'ஒரே அண்டம்' என்று சொல்வதே தப்பு, நம் அண்டத்தைப் போலக் கோடிக்கணக்கான அண்டங்கள் உள்ளன என்கிறது குவாண்டம். அதனை 'மல்ட்டிவேர்ஸ்' (Multiverse) என்றும் அழைக்கிறது. சமுத்திரத்தில் உள்ள நீரில் எவ்வளவு நீர்க்குமிழிகள் இருக்கின்றனவோ, அதைவிட அதிக அளவில் அண்டங்கள் இருக்கின்றன என்கிறது. நம்முடைய அண்டத்தை அப்படியே காப்பியடித்தது போலப் பல அண்டங்களும் இருக்கின்றன என்கிறது. அந்த அண்டங்களிலும் நாம், இங்கு வாழ்வது போல, அங்கும் வாழ்ந்து கொண்டிருப்போம் என்கிறது. "என்ன இது சுத்தப் பேத்தலாக இருக்கிறது. இவர் ஏன் இப்படி உளறுகிறார்?" என்று நீங்கள் இப்போது நினைக்கலாம். ஆனால் இவை அனைத்தும் கணிதச் சமன்பாடுகளைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் கோட்பாடுகள். உலகில் உள்ள விஞ்ஞானிகளில் பெரும்பான்மையினர் ஏற்றுக் கொண்ட கோட்பாடுகள்தான் இவை. குவாண்டத்தின் முடிவுகள் ஒவ்வொன்றைப் பற்றியும் சொல்லும் போதும், அவை தனித்தனியே பிரமிக்க வைக்கும் மர்மக் கதைகள்போல இருக்கும். படிக்கப் படிக்கச் சுவாரஷ்யமாக இருக்கும். ஆனால், இந்தக் கட்டுரை குவாண்டம் பற்றிச் சொல்வதற்கானதல்ல. பிறிதொரு சமயத்தில் அதற்கான வாய்ப்புகள் அமையும் பட்சத்தில் குவாண்டம் பற்றி நாம் விரிவாகவே பார்க்கலாம். இப்போது, நம் கட்டுரைக்கான அளவுக்குக் குவாண்டம் என்ன சொன்னதோ அதை மட்டும் பார்த்துவிட்டு மேலே செல்வோம்.


குவார்க்குகளையும் பிரித்து, அதனுள் என்ன இருக்கின்றது என்ற ஒரு கோட்பாட்டைக் குவாண்டம் இயற்பியல் வெளியிட்டது. அந்தக் கோட்பாடுதான் மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்திய 'அதிர்விழைக் கோட்பாடு' (String Theory) ஆகும். அறிவியலையே தலைகீழாகப் புரட்டிப் போட்ட கோட்பாடு அது. அதன் தாக்கத்தை இன்றும் பல விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ள முடியாமல்தான் இருக்கிறது. இப்போது நாம் அதிர்விழைக் கோட்பாடுபற்றி முழுமையாகப் பார்க்காவிட்டாலும், அதன் அடிப்படையைப் பார்த்துவிடலாம். 'அதிர்விழைக் கோட்பாடு' என்ன சொல்கிறதென்றால், அணுவில் உள்ள மிகச் சிறிய குவார்க்கைப் பிரித்துப் பார்த்தால், பெரும்பாண்மையான பகுதி வெற்றிடமாக இருக்க, அதனிடையே மிகச்சிறிய இழைகள் அதிர்ந்தபடி (இசைத்தபடி) மிதந்து கொண்டிருக்கின்றன. அதாவது ஒரு வீணையின் தந்திக் கம்பிகள் அதிர்வது போல, மிக நுண்ணிய இழைகள் அங்கே அதிர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த 'அதிர்விழை' (String) மனிதனால் அளவிடவே முடியாத ஆகச்சிறிய அளவான 'பிளாங்க் அளவைக்' (Planck length) கொண்டது. ஒன்றுடன் 32 பூச்சியங்கள் சேர்த்தால் வரும் இலக்கத்தின் ஒரு பங்கு மில்லிமீட்டர்தான் ஒரு 'பிளாங்க் அளவு' என்கிறார்கள். அதாவது தசமப் புள்ளியுடன் 32 பூச்சியங்களைச் சேர்த்து வரும் எண் அது. 'மாக்ஸ் பிளாங்க்' (Max Planck) என்னும் ஜேர்மன் இயற்பியலாளரால் கண்டுபிடிக்கபட்ட ஒரு மாறிலி எண்தான் இந்த 'ப்ளாங்க் அளவு' என்று சொல்லப்படுகிறது. குவாண்டம் இயற்பியலின் செயற்பாடுகள் கூட இந்தச் சிறிய அளவீட்டுத் தளத்திலேயே ஆரம்பமாகின்றது. அண்டம் எந்த அளவுக்குப் பிரமாண்டமானதோ, அதற்கு எதிரான அளவில் குவாண்டம் மிக நுண்ணியது. ஆனால் ஆச்சரியமாக, அண்டத்தில் நட்சத்திரங்கள், கோள்கள், காலக்ஸிகள், கருந்துளைகள் எனக் கோடானகோடி பொருட்கள் இயங்குவது போல, அணுவுக்குள் குவாண்ட அளவில் கோடானகோடி உபஅணுத்துகள்கள் (Subatomic Particles) இயங்கிக் கொண்டிருக்கின்றன. சொல்லப் போனால், அணுவுக்குள்ளும் ஒரு அண்டம் இருக்கிறதாகச் சொல்கிறார்கள். "அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும்" என்று நம்முன்னோர்கள் இதைத்தான் சொன்னார்களோ தெரியவில்லை. குவாண்டம் சொல்வதைப் போல, அணுவுக்குள் இருப்பதெல்லாம் மிகமெல்லிய பிளாங்க் அளவுள்ள அதிர்விழைகள்தான் என்றால், பொருட்களோ, மனிதனோ என்று யாருமே இல்லை. எல்லாமே அதிர்விழைகள்தான். அதாவது எல்லாமே இசைதான். இந்தப் பூமியும், ஒட்டு மொத்த அண்டமும் அதிர்விழைகளால், இசையாக அதிர்ந்து கொண்டிருக்கின்றன. 'ஓம்' என்னும் பிரணவ மந்திரமே பிரபஞ்சம் முழுவதும் பரந்திருக்கிறது என்று இந்து மதம் சொல்வதும், 'முதலில் வார்த்தை இருந்தது' என்று பைபிள் சொல்வதும் இங்குப் பொருந்துகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளலாம். இங்கு நான் சொல்ல வருவது, அறிவியல், ஆன்மீகத்தை சிலசமயங்களில் தொட்டுச் செல்கிறது என்பதைச் சுட்டிக்காட்டத்தான். நம்முன்னோர்களுக்கு அறிவியலின் ஆழமான கருத்துகளை 'யாரோ' சொல்லிக் கொடுத்திருக்கின்றனர் என்பதைத்தான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அந்த 'யாரோ', யாரென்பதில்தான் அறிவியலும், ஆன்மீகமும் வேறுபட்டுக் கொள்கின்றன. இனி நாம் மீண்டும் ஆரம்பப் பெருவெடிப்புக்கு வரலாம். 





பெருவெடிப்பின் ஆரம்பப் புள்ளியானது குவார்க்குகளாக இருக்கலாம் என்று சொல்லியிருந்தேன். இப்போது குவாண்டம் இயற்பியலின்படி அது மேலும் நுண்ணியதான அதிர்விழைத் துண்டுகளாகவும் இருக்கலாம். அப்படியிருக்கலாமெனில், அந்தப் புள்ளியானது குண்டூசி முனையளவானதாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அப்ப்டியிருந்தாலும், அந்தப் புள்ளி முடிவில்லாத எடையையும், முடிவில்லாத அடர்த்தியையும் கொண்டிருந்திருக்கும். அதன் எடையின் கனத்தினாலும், அடர்த்தியினாலும் உருவான பெரும் வெப்பத்தினால் நிலைகுலைந்து, திடீரென அது வெடித்திருக்கலாம். அந்தப் புள்ளி வெடித்த கணத்திலிருந்து முதல் மூன்று நிமிடங்கள்வரை மிகப்பெரிய அணுஉலையைப் போல, அங்குச் செயல்பாடுகள் இருந்திருக்கின்றன. அங்கு நடந்தது எல்லாமே கதிர்வீச்சுகளாகத்தான் இருந்தன. பின்னர் மெல்ல மெல்ல ஒவ்வொரு உபஅணுத்துகள்களும் உருவாகத் தொடங்கின. மூன்று இலட்சத்து எண்பதினாயிரம் ஆண்டுகளின் பின்பு முதல் எலெக்ட்ரான், ஐதரசன் அணுக்கருவுடன் இணைந்து, அண்டத்தின் முதலாவது அணுவை உருவாக்கியது. அதன் பின்னர் படிப்படியாக நட்சத்திரங்கள், கோள்கள் அனைத்தும் உருவாகத் தொடங்கின. இவையனைத்துமே பெருவெடிப்பின் மூலம் உருவான, பெருவிரிவின் வேகத்துடனே நடந்து கொண்டிருந்தன. பெருவெடிப்பின் வீரியத்தால் விரிவடையத்தொடங்கிய அண்டம் இன்றுவரை விரிவடைந்து கொண்டேயிருக்கிறது.




பேரண்டம் இப்போதும் விரிவடைந்து கொண்டிருக்கிறது என்பதை 1929ம் ஆண்டில் 'எட்வின் ஹபிள்' (Edwin Hubble) என்பவர் கண்டுபிடித்தார். தொலைநோக்கிக் கருவியினால் விண்வெளியை ஆராய்ந்து கொண்டிருந்த ஹபிள், அண்டத்தின் எல்லையில் காணப்பட்ட 'காலக்ஸிகள்' (Galaxies) ஒன்றையொன்று விலகிச் செல்வதை அவதானித்தார். பலூன் ஒன்றில் பேனாவின் மூலம் சுற்றிவரப் புள்ளிகளையிட்டுப் பின்னர் அந்தப் பலூனைப் படிப்படியாகப் பெரிதாக ஊதும்போது, அதில் உள்ள புள்ளிகள் எப்படி ஒன்றை ஒன்று விட்டு விலகிச் செல்லுமோ அப்படி, அண்டத்தின் எல்லைகளில் இருக்கும் காலக்ஸிகளும் விலகிச் செல்கின்றன என்று கண்டுபிடித்தார். மிகத் தொலைவிலிருந்து வரும் ஒளி, நம்மை நோக்கி வந்தால் அது நீலநிறமாகவும், விலகிச் சென்றால் சிவப்பு நிறமாகவும் ஒளிப்பிரிகையடையும் என்னும் கருதுகோள் ஒன்று உண்டு. அதைச் 'செந்நிற விலகல்' (Red Shift) என்று சொல்வார்கள். ஹபிள், நட்சத்திரக் கூட்டங்களை அவதானித்தபோது, அவை சிவப்பு நிற ஒளியுடன் விலகுவது தெரிந்தது. தற்கால விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளும் இதைச் சுப்பர் நோவாக்களின் (Supernova) விலகலை வைத்து உறுதிசெய்து கொண்டார்கள். ஆனால், அண்டம் இன்றும் விரிவடைந்து செல்வதற்கு ஆரம்பப் பெருவெடிப்பின் வீரியம்தான் காரணம் என்று நம்பி வந்த விஞ்ஞானிகளுக்குப் பேரதிர்ச்சியொன்று காத்திருந்தது. பெருவெடிப்பின் வீரியம் எந்த அள்வு பெரிதாக இருந்தாலும், என்றாவது ஒருநாள் அது பூச்சியமாக வந்துதான் ஆக வேண்டும் என்று விஞ்ஞானிகளுக்குத் தெரியும். ஒரு கிரிக்கெட் பந்தை என்னதான் பலம் கொண்ட அளவுக்கு மேல்நோக்கி எறிந்தாலும், புவியீர்ப்புவிசைக்கெதிராக மேலே செல்லும் பந்து, ஒரு குறித்த இடம்வரை சென்று, மீண்டும் ஈர்ப்புவிசையால் கீழே விழ ஆரம்பிக்கும். அதுபோல, பெருவெடிபினால் ஏற்பட்ட விரிவும் ஒரு நாள் தன் எல்லையை அடைய வேண்டும் என்று விஞ்ஞானிகள் நம்பினார்கள். அதன்பின்னர், அண்டத்தில் உள்ள காலக்ஸிகளின் ஈர்ப்புவிசையினால், அவை ஒன்றையொன்று இழுக்க, மீண்டும் அண்டம் சுருங்க ஆரம்பிக்கும். அப்படிப் படிப்படியாகச் சுருங்கி மீண்டும் ஆரம்பப் புள்ளியின் நிலையை அண்டம் அடையும் என்று கருதினார்கள். இதற்குப் 'பெரிய சுருக்கம்' (Big Crunch) என்று பெயரும் வைத்திருக்கிறார்கள். இந்த நிலைதான் நான் ஆரம்பத்தில் சொன்ன பலூனின் இரண்டாவது நிலை. "எப்படி அண்டம் வெடித்து விரிந்து பெரிதாகியதோ, அதேபோலச் சிறுத்துச் சுருங்கி மீண்டும் புள்ளியாகும்" என்பதுதான் இயல்பு. ஆனால், நடந்ததோ வேறு. நம்பவே முடியாத ஆச்சரியம். இன்றுவரை உலகில் உள்ள அனைத்து அறிவியலாளர்களையும் பிரமிப்புக்குள் வைத்திருக்கும் விடை தெரியாத மர்மம் அது.



- தொடரும்