வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

August 30, 2014

டவுன் சிண்ட்ரோம்




ஒவ்வொரு பொருட்களும் அணுக்களல் ஆனது போல, ஒவ்வொரு உயிரினமும் கலங்களால் (Cells) ஆனது. அணுக்கள் அடுக்கப்பட்டு ஒரு பொருள் உருவானது போல, கலங்கள் அடுக்கப்பட்டு உயிரினங்கள் ஒவ்வொன்றும் உருவாகியிருக்கின்றன. இதில் அனைத்து உயிர்களும் அடங்கும். நான், நீங்கள், நாய், பூனை, பாம்பு, பல்லி என அனைத்துமே! இதில் மனித உயிரை எடுத்துக் கொண்டால், ஒரு ஆணின் விந்தும், பெண்ணின் கருமுட்டையும் சேர்ந்து முதல் கலம் (Cell) உருவாகின்றது. அந்தக் கலம் பிரிவடைந்து, இரண்டாகிப் பின்னர் நான்காகி அப்புறம் பதினாறாகி அப்படியே படிப்படியாக அழகிய குழந்தையாகிறது. இதிலுள்ள ஆரம்ப கட்டமான முதல் கலத்திற்கு நாம் மீண்டும் வந்தால்………!


ஆணில் இருந்து வரும் விந்தில் 23 குரோமோசோம்களும் (Chromosomes), பெண்ணின் கருமுட்டையிலிருக்கும் 23 குரோமோசோம்களும் இணைந்து, 23 சோடிகளாக ஒன்று சேர்வதால், மனிதக் குழந்தையின் முதல் கலம் உருவாகும். மனித உயிரின் ஒவ்வொரு கலத்திலும் 23 சோடிகளாக குரோமோசோம்கள் இருக்கும். இதில் 23ம் சோடியாக இருக்கும் குரோமோசோம்தான், உருவாகும் அந்தக் குழந்தை, ஆணா? அல்லது பெண்ணா? என்று தீர்மானிப்பது. 23ம் குரோமோசோம் சோடியில், 'X,Y' என இரண்டு குரோமோசோம்கள் இருந்தால் அது ஆணாகவும், 'X,X' என இரண்டு குரோமோசோம்கள் இருந்தால் அது பெண்ணாகவும் இருக்கும். ஒரு ஆணிடம் 23வதாக இருக்கும் 'X,Y’ ஆகிய இரண்டு குரோமோசோம்களில் எந்தக் குரோமோசோம் அதாவது, X குரோமோசோமா அல்லது Y குரோமோசோமா பெண்ணுடைய கருவிலிருக்கும் 'X,X' குரோமோசோமில் ஒன்றுடன் சேர்கிறது என்பதைப் பொறுத்து, அந்தக் குழந்தை ஆண் அல்லது பெண் என்பது தீர்மானிக்கப்படுகிறது. மொத்தத்தில் சொல்லப் போனால், பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தீர்மானிப்பது முழுக்க முழுக்க ஆண் மட்டும்தான். பெண்ணுக்கு இதில் எந்தப் பங்கும் கிடையாது.


ஆதனால், 'பெண் குழந்தையைப் பெற்றுவிட்டாள்’ என்று சொல்லி, வீட்டுக்கு வந்த மருமகளிடம் கோவம் கொள்ளும் மாமியார்களும், அதையே சாட்டாக வைத்து இரண்டாவது திருமணம் செய்யத் துடிக்கும் ஆண்களும், இதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.


இங்கு மாமியார்களுக்கும், ஆண்களுக்கும் புத்திமதி சொல்வதற்காக நான் இந்தக் கட்டுரையை எழுதவில்லை. நான் இதை எழுத வந்ததற்கான காரணமே வேறு.


மனித செல்களில் 23 சோடி குரோமோசோம்கள் இருக்கின்றன என்று சொன்னேனல்லவா? ஆணின் விந்தும் பெண்னின், முட்டைக்கருவும் ஒன்றாகச் சேரும் போது, அதில் 21வது குரோமோசோம்கள் சோடிகளாகச் சேரும்போது, அங்கு அரிதாக ஒரு தவறு ஏற்பட்டுவிடுகிறது. அரிதாக இப்படிப் பல விதங்களில் தவறுகள் ஏற்படுவதுண்டு, ஆனாலும் இன்று நாம் பார்க்கப்போவது 21வது குரோமோசோமில் நடக்கும் தவறு பற்றி மட்டும்தான். 21ம் குரோமோசோமில் சோடி சேர்தல் நடைபெறும்போது, மேலதிகமாக ஒரு குரோமோசோம் அந்தச் சோடியுடன் சேர்ந்து விடுகின்றது. அதாவது இரண்டு குரோமோசோம்கள் இருப்பதற்குப் பதில் மூன்று குரோமோசோம்கள் (Trisomi) ஆகிவிடுகிறது. அதாவது, 23 சோடிகளாக மொத்தமாக 46 குரோமோசோம்கள் ஒரு மனித உயிருக்கு இருப்பதுதான் இயல்பானது. ஆனால் இங்கு 47வது குரோமோசோமும் சேர்கிறது. இப்படி மேலதிகமாக ஒரு குரோமோசோம் சேர்வதால், அந்தக் குழந்தைக்கு ஒரு மாற்றுத்திறன் தண்மையைக் கொடுத்துவிடுகிறது. அந்த உடல் குறைபாட்டைத்தான் 'டவுன் சிண்ட்ரோம்’ (Down Syndrome) என்பார்கள்.


'டவுன் சின்ட்ரோம்' உள்ள குழந்தைகள், பார்க்கும் போது உடலியலில் சிறிது வித்தியாசமாக இருப்பார்கள். உலகில் இந்தக் குறைபாடுள்ள குழந்தைகள் அனைவரும் கிட்டத்தட்ட ஒரே விதமாக முக அமைப்பைக் கொண்டிருப்பது ஆச்சரியமான ஒன்று. இந்தக் குறைபாட்டுடன் பிறப்பவர்களை மிகவும் சரியான விதத்தில் பராமரித்து வந்தால், அவர்கள் சாதாரண மனிதர்களுக்கு நிகராகவே தம்மை நிலைநிறுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். அதனால், பெற்றோர்கள் கவலைப்படுவதை நிறுத்திவிட்டு, அந்தக் குழந்தையை அக்கறையுடன் வளர்ப்பதில் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும்.


இந்த நோய் பற்றி மேலதிகமாக ஆராய்வதற்கு மிருகங்களைப் பயன்படுத்தலாம் என்று பார்த்தால், அவை ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு எண்ணிக்கையில் குரோமொசோம்கள் காணப்படுகின்றன. அதிகமாகப் பரிசோதனைக்குப் பயன்படுத்தப்படும் எலிகளை எடுத்துக் கொண்டால், அவற்றுக்கும் மனிதர்களைப் போல 23 சோடிக் குரோமோசோம்கள் இல்லை. குறைவான அளவில், அதாவது 20 சோடிகளே உண்டு. அப்படியிருந்தும், எலிகளில் மேலதிக குரோமோசோம் ஒன்றைச் சேர்த்து. 'டவுன் சிண்ட்ரோம்' குறைபாட்டுடன் புதிதாக உருவாக்கினாலும், அவை உயிருடன் இருக்கவில்லை. இந்த நேரத்தில்தான் டவுன் சின்ட்ரோம் குறைபாட்டுடன் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு 'வெள்ளைப் புலி' பற்றிய தகவல்கள் கிடைத்தன. அந்த அதிசயப் புலியைப் பற்றிய தகவல்களைச் சொல்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.


அமெரிக்காவின் ஒக்லஹோமா நகருக்கு அருகில் அமைந்துள்ள மிருகக்காட்சிச்சாலையில், ‘கென்னி' (Kenny) என்னும் பெயர் கொண்ட வெள்ளைப் புலி இருந்தது. இந்தப் புலி பெங்காலி வகைப் புலியினத்தைச் சேர்ந்தது. அதிசயமாக இந்தப் புலிக்கு, 'டவுன் சிண்ட்ரோம்' என்னும் அரிய வகைக் குறைபாடு இருந்தது. 'டவுன் சிண்ட்ரோம்' உள்ள மிருகமாக பெரிய அளவில் அறியப்பட்டது இதுதான். 1998ம் ஆண்டு பிறந்த கென்னி, 2008ம் ஆண்டு வரை உயிர் வாழ்ந்தது. பின்னர் அதற்கு புற்றுநோய் பீடித்ததால் 28ம் தேதி ஜுன் மாதம் 2008ம் ஆண்டு இறந்து போனது. மிருக இனங்களில் இன்றும் அதிசயமாகக் கென்னி பார்கப்படுகின்றது.


பிற்குறிப்பு: கென்னி தவிர துருக்கி நாட்டில் ஒரு பூனைக்கு இந்தக் குறைபாடு உள்ளதாகத் தெரிய வந்தது.


மேலும், இந்தப் பதிவு யார் மனதையும் புண்படுத்துவதற்கானது அல்ல.






August 12, 2014

நேரத்தின் பரிமாணம்




இந்தப் பதிவைப் படிப்பவர்களில் பெரும்பாண்மையானவர்கள் 25 வயதைத் தாண்டியவர்களாக இருப்பீர்கள். மேலும் சிலர் 35 வயதைத் தாண்டியவர்களாகவும், அதற்கு மேலானவர்களாகவும் இருக்கலாம். அதனால், நான் இப்போது சொல்லப் போவதை நீங்கள் ஞாபகத்தில் மீண்டும் ஒருமுறை மீட்டிக் கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.


நீங்கள் எட்டு வயதுச் சிறுவனாக இருக்கும் போது, பிற்பகலில் பாடசாலை விட்டு வீட்டுக்கு வருவீர்கள். வீட்டுக்கு வந்ததும், அவசர அவரசராமாக உணவை உண்டுவிட்டு மாலை நான்கு மணியளவில் சக பையன்களுடன் விளையாடுவதற்குச் செல்வீர்கள். நான்கு மணியிலிருந்து அதிகபட்சம் ஆறு மணி வரைதான் நீங்கள் விளையாடியிருப்பீர்கள். மொத்தமாக இரண்டேயிரண்டு மணி நேரமாகத்தான் அது இருந்திருக்கும். ஆனால், நீங்கள் நீண்ண்ண்ண்ட நேரமாக, பல மணி நேரங்கள் விளையாடியது போல உணர்ந்திருப்பீர்கள். இந்த அனுபவம் உங்கள் எல்லாருக்கும் நடந்திருக்கும். ஆனால் அதே இரண்டு மணி நேரம் இப்போதெல்லாம் விரைவில் நகர்ந்து விடுவதாக உணர்வீர்கள். சின்ன வயதாக இருக்கும் போது, நேரமென்பது மிக மெதுவாக நகர்வது போல இருந்திருக்கும். அதுவே வயது அதிகரிக்க அதிகரிக்க, அதாவது 60, 70 வயதுகளில், அந்த இரண்டு மணி நேரம் ஒரு விரல் சொடுக்கில் ஓடிவிடுவதாகத் தெரியும்.


இளவயதில் நேரம் நகர்வது மெதுவாகவும், வயது அதிகரிக்க வேகமாக நகர்வது என்பதும் உண்மைதானா? இல்லை அது ஒரு மாயையா? அதாவது சிறுவயதில் மெதுவாக நேரம் நகர்ந்ததாக நாம் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறீர்களா?


இல்லை! நமது ஒவ்வொரு வயதிலும், நேரம் நகர்வது பற்றி ஏற்படும் உணர்வு உண்மையானதுதான். அதில் எந்த மழுப்பலோ, மாயையோ இல்லை. சிறு வயதில் நேரம் மெதுவாக நகர்வதாக உணர்வதற்கும், வயது அதிகரிக்க நேரம் விரைவாக நகர்வதாக உணர்வதற்கும் அறிவியல் ரீதியான காரணம் உண்டு. அந்தக் காரணம் கணித ரீதியானதும் கூட. அது என்ன காரணமாக இருக்கும் என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா..? இல்லையா? பரவாயில்லை, தொடர்ந்து படியுங்கள். காரணம் தானாய் புரிந்து போகும்.


நேரத்தின் பரிமாணத்தை, நாம் வாழும் காலத்தின் அடிப்படையை வைத்தே புரிந்து கொள்கிறோம். அதாவது நம் கையில் ஒரு கடிகாரம் இல்லாவிட்டாலும் கூட, நேரம் செல்வதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அப்படி உணர்ந்து கொள்ளும் நேரத்தின் அளவை, நாம் எவ்வளவு காலம் வாழ்ந்திருக்கிறோம் என்ற அனுபவத்தின் அடிப்படையை வைத்தே நம் மூளை கணித்துக் கொள்கிறது. என்ன, நான் சொல்வது புரியவில்லையல்லவா? சரி, இந்த உதாரணத்தைப் பாருங்கள் புரியும்.


நீங்கள் ஐந்து வயதுப் பையனாக இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதாவது நீங்கள் வாழ்ந்த காலம் மொத்தமாக ஐந்து வருடங்கள். உங்கள் வாழ்க்கையின் அனுபவம் ஐந்து வருடங்களின் காலத்துக்குள்ளேயே அடங்கிவிடுகிறது. ஐந்து வயதில், ஐந்து வருடங்கள் என்பது உங்களின் முழுமையான வாழ்காலம் என்பதாக மூளை கணித்து வைத்துக் கொள்கிறது. இப்போது நான் சொல்வதைச் சரியாகக் கவனியுங்கள்.


உங்கள் ஐந்துவயதில், ஒரு வருடம் என்பது நீங்கள் வாழ்ந்த காலத்தின் ஐந்தில் ஒரு பங்கு. அதாவது வாழ்நாளின் ஐந்தில் ஒரு பங்குக் காலம் என்பது மிக நீண்டதொரு காலம். அதே நேரம் உங்களுக்கு ஐம்பது வயது என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அதில் ஒரு வருடம் என்பது, நீங்கள் வாழ்ந்த காலத்தின் ஐம்பதில் ஒரு பங்கு. அதாவது ரொம்பச் சிறிய காலம். ஐம்பது வயதுள்ள ஒருவருக்கு ஒரு வருடம் செல்வது என்பது அவரது அனுபவத்தின்படி சிறிய காலமாகவும், ஐந்து வயதுள்ள ஒருவருக்கு ஒருவருடம் செல்வது பெரிய காலமாகவும் இருப்பதன் காரணம் இதுதான். ஒருவருடம் போலவே, ஒரு மணி நேரமும் கணித அளவீடுகளைப் பெறுகிறது.


இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். வயது செல்லச் செல்ல நேரம் வேகமாகச் செல்வதற்குக் காரணம் இதுதான். அதனால் வயோதிபர்களுடன் உங்கள் நேரங்களை வழமையை விட, அதிகமாகச் செலவளிக்க முயற்சி செய்யுங்கள்.


பிற்குறிப்பு: இந்தக் கணிப்பு, காதலி வரும்வரை காத்திருக்கும் போது, நேரம் மெதுவாகவும், காதலி அருகில் இருக்கும் போது, நேரம் விரைவாகவும் நகர்வதாகத் தெரியும் மாயை நிலைக்குச் செல்லாது.




August 7, 2014

இயேசு கிரிஸ்து பல்லி



கிருஸ்தவர்களுக்கு இயேசு கிருஸ்துநாதரின் சரித்திரம் நன்றாகத் தெரிந்திருக்கும். கிருஸ்தவர் அல்லாவதவர்களுக்கும் கூட அவரைப் பற்றித் தெரிந்திருக்கும். ‘ஈஸா நபி’ என்னும் பெயரில், அவரை ஒரு தீர்க்கதரிசியாக, முஸ்லிம்களும் கொண்டாடுகின்றனர். பைபிளில் இயேசுநாதர் செய்த பல அற்புதங்கள் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் நீங்கள் அறிந்த விசயங்கள்தான்.


ஆனால்……..!


ஒரு பல்லிக்கு, 'இயேசு கிருஸ்து’ என்று பெயர் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?


‘ஸ்டாப்...! ஸ்டாப்…! ஸ்டாப்…! இயேசுநாதரில் பக்தியுள்ளவர்கள் யாரும், 'நான் இயேசுநாதரைப் பல்லியுடன் ஒப்பிட்டுச் சொல்வதாக' என்னைத் தப்பாக நினைத்துவிடாதீர்கள். இது உண்மையான தகவல். அதனல் இதை முழுவதுமாகப் படியுங்கள். இயேசுநாதரை யாரும் தவறாகச் சொல்லிவிடவில்லை.


இயேசுநாதரின் சீடர்கள் படகுகளில் சென்று கொண்டிருந்த போது, தூரத்தில், நீரின் ஆழமான பகுதியினூடாக, ஒரு ஒளி வருவது போலக் கண்டார்கள். அந்த ஒளியைச் சரியாகக் கவனித்துப் பார்த்த போது, அது ஒரு மனித வடிவாகத் தெரிந்தது. அந்த மனித வடிவானவர் கிட்டே நெருங்கிய போது, அது இயேசுநாதர் என்பது தெரிந்தது. இயேசுநாதர் தண்ணீரில் நடந்தபடி (அதாவது நிலத்தில் நடப்பது போல, ஆழமான தண்ணீரின் மேற்பரப்பில் நடந்தபடி) படகை நோக்கி வந்து கொண்டிருந்தார். அந்த அதிசயத்தைக் கண்ட சீடர்கள் வியந்து போனார்கள். இது பைபிளில் இயெசுநாதரின் அற்புதங்களைப் பற்றிச் சொல்லும் ஒரு கதை.


மத்திய அமெரிக்காக் காடுகளிலும், ஆற்றங்கரையோரங்களிலும் வாழும் ஒரு பல்லியினம் உண்டு. நம் வீடுகளில் வாழும் பெரிய பல்லிகளைப் போல அவை இருக்கும். கொஞ்சம் பெரியதாகவும் இருக்கலாம். இந்தப் பல்லிகள் ஆற்றங்கரையில் உள்ள பூச்சிகளைப் பிடித்து உண்டு வாழ்பவை. ஆனால் அதேயிடம்தான் அந்தப் பல்லிகளின் எதிரிகள் வாழும் இடமாகவும் இருக்கும். பல்லிகளைப் பிடிப்பதற்கெனப் சிறியவகைப் பாம்புகளும் அங்கே சுற்றித் திரியும். ஆற்றின் கரையில் இருந்தபடி பூச்சிகளை வேட்டையாடும் போது, பாம்புகள் வந்துவிட்டால், அவற்றின் பிடியிலிருந்து தப்புவதற்கு, இந்தப் பல்லிகள் ஆற்றின் மற்றப் பகுதிக்கு ஓடும். ஓடும் என்றால், எப்படி ஓடும் என்று நினைக்கிறீர்கள்?


ஒரு மனிதன் ஓடுவதைப் போல ந்மிர்ந்த நிலையில், முன்னிரண்டு கால்களையும் உயரத் தூக்கியபடி, பின் கால்கள் தண்ணீரின் மேற்பரப்பில் மிதந்தது போலப் படும்படியாக ஆற்றின் அடுத்த கரைக்கு விரைந்து ஓடிச்செல்லும். சாதாரண பல்லிகளைப் போல, தண்ணீரில் நீந்திக் கொண்டு சென்றால், பாம்புகள் அதை விட வேகமாக நீந்தி, இந்தப் பல்லிகளைப் பிடித்துவிடும். அதனால்தான் இந்த ஓட்டம். ஒரு வினாடிக்கு ஒன்றரை மீட்டர்கள் வேகமாக அதன் வேகம் இருக்கும். இப்படி அந்தப் பல்லி தண்ணீரின் மேல் செல்வது, இயேசுநாதர் தண்ணீரில் நடந்ததைப் போல இருப்பதால், அந்தப் பல்லிக்கு, ‘இயேசு கிரிஸ்து பல்லி’ (Jesus Christ Lizard) என்று பெயர் வந்தது.


யூட்யூப்பில் (Youtube) இந்தப் பல்லி தண்ணீரில் ஓடும் காணொளிகள் உண்டு. பாருங்கள், வியந்து போவீர்கள். அறிவியலின் அதிசயங்களை விட, இயற்கையின் அதிசயங்கள் அநேகம்.




'பூச்சிய ஈர்ப்புவிசை’ (Zero Gravity)



'பூச்சிய ஈர்ப்புவிசை’ (Zero Gravity) என்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? “படவில்லையா?” அப்படியென்றால் கொஞ்சம் பொறுங்க, உங்க கூடப் பேசனும்.


அண்டமெங்கும் பொருட்கள், ஈர்ப்புவிசையுடனே சுற்றித் திரிகின்றன. புவிக்கும் ஈர்ப்புவிசை உண்டு என்பது உங்களுக்குத் தெரியும். புவியின் ஈர்ப்புவிசையை, விசேசமாகப் ‘புவியீர்ப்புவிசை’ என்கிறோம். இந்தப் ‘புவியீர்ப்புவிசை’ என்னும் சொல்லைப் பலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர். சந்திரனின் ஈர்ப்புவிசையைப் பற்றிச் சொல்லும் போது கூட, “சந்திரனின் புவியீர்ப்புவிசை" என்று சொல்லிவிடுகிறார்கள். சரி, அது ஒருபுறம் இருக்கட்டும்.


ஈர்ப்புவிசையென்பது அண்டமெங்குமுள்ள பொருட்களுக்கு இருப்பது போல, ஈர்ப்புவிசை இல்லாத இடமும் இருக்கிறது. விண்வெளியில் ஈர்ப்புவிசையென்பது கிடையாது. வளிமண்டலம் பல படலங்களாகப் படிந்து, பூமியைப் பாதுகாக்கும் வலயமாகக் காணப்படுகிறது. இதை ‘அட்மாஸ்பியர்’ (Atmosphere) என்று அழைக்கிறோம். இந்த அட்மாஸ்பியருக்குள் நாம் இருக்கும் வரை, புவியீர்ப்புவிசை நம்மைப் பூமியை நோக்கி இழுத்துக் கொண்டே இருக்கும். அட்மாஸ்பியரை விட்டுத் தாண்டி விண்வெளியை அடையும் போது, அங்கு ஈர்ப்புவிசை இல்லாது போகின்றது. அதாவது அங்கே பூச்சிய ஈர்ப்புவிசை (Zero Gravity) ஆகிவிடுகின்றது. ஈர்ப்புவிசை இல்லாத இடத்தில் நாம் இருந்தால், அங்கே மிதந்து கொண்டுதான் இருப்போம். கீழே எங்கும் விழமாட்டோம். தண்ணீரில் நீந்துவது போல, காற்றில்லா வெற்றிடத்தில் மிதந்து கொண்டிருப்போம்.


காற்றில்லாத வெற்றிடத்தில் மிதப்பதை உங்களால் கற்பனைதான் பண்ண முடியுமேயொழிய, முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாதல்லவா? அதனால், அதைப் புரிந்து கொள்வதற்கும், அதைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்குவதற்குமான அடிப்படை அறிவைப் பெறுவதற்கும், விஞ்ஞானிகள் எப்போதும் விண்வெளிக்குச் சென்று கொண்டிருக்க முடியாது. அதனால், "பூமியிலேயே பூச்சிய ஈர்ப்புவிசையை உருவாக்க வேண்டும், அதற்கு என்ன செய்யலாம்?” என்று சிந்தித்த போதுதான், ஒரு ஆச்சரியமான வழி கிடைத்தது. அதற்கென உருவானதுதான் ‘பூச்சிய ஈர்ப்புவிசை விமானம்’ (Zero Gravity Flight அல்லது Zero G Flight).


ஈர்ப்புவிசைகளற்று, வெளியியொன்றில் மிதப்பதற்கென ஒரு விமானமே தயார் செய்யப்பட்டது. இதற்கென்றே பிரத்தியேகமாக இருக்கைகள் அகற்றப்பட்டு அமைக்கப்பட்ட பெரிய விமானம் அது. இந்த விமானம் வானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது, அது 45 பாகை கோணத்தில் மேல் நோக்கிய வண்ணம், மிகை வேகத்தில் உயரப் பறக்கத் தொடங்கும். ஒரு குறித்த உயரத்தை அடைந்ததும் உடன் மீண்டும் 45 பாகைக் கோணத்தினூடாக கீழே இறங்க ஆரம்பிக்கும். இப்படி அது பல தடவைகள் ஒரு பரவளைவாகத் (Parabola) தொடர்ந்து பறந்து கொண்டிருக்கையில், இந்தப் பூச்சிய ஈர்ப்புவிசை விமானத்தில் உள்ளவர்களுக்குக் கிடைக்கிறது. உயரப் பறக்கும் விமானம் கீழ் நோக்கி இறங்க ஆரம்பிக்கும் சமயத்தில் இந்த பூச்சிய ஈர்ப்பு, கிட்டத்தட்ட 25 செக்கன்களுக்குக் கிடைக்கின்றன. அதி அற்புதமான மிதக்கும் விளவாக இது இருக்கும். பல விஞ்ஞானிகள், விண்வெளிக்கே போகாமல், அந்த விமானத்தில் பயணம் செய்து மிதந்திருக்கிறார்கள்.


இப்போது நான் சொல்வதைக் கற்பனை பண்ணிப் பாருங்கள். வழமை போல இதுவும் கற்பனைதான், உண்மையாக யாரும் பரீட்சித்துப் பார்க்க வேண்டாம். இது உங்கள் அம்மா மேல் சத்தியம். ராஜ்சிவா சொன்னாரேயென்று, எதற்கும் செய்து பார்ப்போம் என முயற்சிக்கவே வேண்டாம். உலகிலேயே உயரமான ஒரு கட்டடத்தின் உச்சியிலிருந்து நீங்கள் கீழே குதிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். கீழே நிலத்தை வந்து அடையப் பல நிமிடங்கள் எடுக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு உயரமான கட்டடம். நீங்கள் கீழே விழுந்து கொண்டிருக்கும் போது, உங்கள் பாக்கெட்டில் இருக்கும் ஒரு ரூபாய் நானயத்தை கையில் எடுத்து, அப்படியே விட்டுவிடுகிறீர்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். நீங்களும், நாணயமும் இப்போது ஒரே வேகத்தில் பூமியை நோக்கி விழுந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் நீங்கள் கீழேயும், வேறு எங்கும் பார்க்காமல், நாணயத்தை மட்டும் பார்ப்பீர்களானால், அந்த நானயம் காற்றில் மிதந்தபடி உங்கள் கூடவே வருவது போல உங்களுக்குத் தோன்றும். அதாவது அந்த நாணயம் பூச்சிய ஈர்ர்புவிசையில் இருப்பது போல மிதப்பதாக உங்களுக்குத் தெரியும். இந்தச் சம்பவத்தில், உங்களுக்கும் நாணயத்துக்கும் ஏற்பட்ட விளைவு போன்ற ஒரு விளைவுதான் பூச்சிய ஈர்ப்புவிசை விமானத்திலும் ஏற்படுகிறது. கொஞ்சம் மெனக்கெட்டு யோசித்துப் பார்த்தால், இது நிச்சயம் உங்களுக்குப் புரியும்.


பூச்சிய ஈர்ப்பு விமானத்தில் உலகப் பிரசித்தி பெற்ற கணித, இயற்பியல் மேதையான ‘ஸ்டீபன் ஹாக்கிங்’ அவர்கள் கூடத் தன் உடலை அசைக்க முடியாத நிலையிலும், பயணம் செய்து பரிசோதனை செய்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.




August 6, 2014

‘ட்சூரியை' (Tschuri) நோக்கி ‘ரொசெட்டா’ (Rosetta)



இன்று அறிவியலில் ஒரு சாதனை நடந்த ஒரு நாள். சாதிக்க முடியாத ஒன்றை மனிதன் சாதித்த நாள். அது என்ன தெரியுமா?


உலக வரலாற்றில் முதல் முறையாக, மனிதன் அனுப்பிய விண்கலம், வால் நட்சத்திரம் (Comet) ஒன்றின் ஈர்ப்பு வலயத்துக்குள் புகுந்திருக்கிறது. ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து (ESA-The European Space Agency), வால் நட்சத்திரமான ‘ட்சூரியை' (Tschuri) நோக்கி 2004ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி, ‘ரொசெட்டா’ (Rosetta) என்னும் விண்கலம் அனுப்பப்பட்டது. அந்த விண்கலம் பத்து வருடங்களின் பின்னர், எத்தனையோ தடைகளைத் தாண்டித் தான் சென்றடைய வேண்டிய இடமான ‘ட்சூரி' வால் நட்சத்திரத்தின் ஈர்ப்பு வளையத்துக்குள் இன்று (06.08.2014), ஐரோப்பிய நேரம் முற்பகல் 11:06 இற்குச் சென்றடைந்திருக்கிறது.


விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு மைல்கல் என்று சொன்னால், அது ரொம்பவும் குறைத்துச் சொல்லப்பட்ட மதிப்பாகவே இருக்கும். பல மில்லியன் கிலோமீட்டர்கள் பயணம் செய்த ‘ரொசெட்டா' இப்போது தனது சரியான குறிக்கோள் இடத்தை அடைந்திருந்தாலும், அது அந்த வால் நட்சத்திரத்தின் மேற்பரப்பில் இறங்குவதே அதன் இறுதிக் கட்டமாகும். அதற்கு இன்னும் சில நூறு கிலோமீட்டர்களே மிச்சமாக இருக்கின்றன.


‘ரொசெட்டா’ விண்கலம் ட்சூரியின் மேற்பரப்பில் இறங்கியதும், அதனுடனேயே பயணம் செய்து அண்டத்தின் பல அதிசயங்களையும், ரகசியங்களையும் நமக்குப் படங்கள் மூலமாக அனுப்பிக் கொண்டிருக்கும். அதனால், ‘ரொசெட்டா’ விண்கலம், ட்சூரியின் மேற்பரப்பில் எதுவிதச் சேதமுமில்லாமல் தரையிறங்க வேண்டுமென்று அனைவரும் விரும்புகிறார்கள். அது மட்டும் நடந்துவிட்டால், விண்வெளிப் பயண ஆராய்ச்சியில் பல பயனுள்ள தகவல்கள் ரொசெட்டா மூலமாகக் கொட்டும்.


விரைவில் ரொசெட்டா, ட்சூரி வால்நட்சத்திரத்தில் இறங்கிவிட்டது என்ற செய்தியை நாம் அறிவோம் என்று நம்புவோமாக.


நவீன அறிவியல் உலகம் நம்பவே முடியாத விசயங்களையெல்லாம் சாதித்துக் கொண்டு வருகிறது. முன்னர் வால் நட்சத்திரங்கள் நமக்கு நல்லது/கெட்டது சொல்லும் ஜோதிடத் தண்மை வாய்ந்த கணக்கியலுக்கே பயன்பட்டன. ஆனால், இப்போது அந்த வால் நட்சத்திரங்களையே மனிதன் தொடப்போகின்றான் என்பது அறிவியலின் நினைத்தே பார்க்க முடியாத வெற்றியாகும்.




August 5, 2014

க்ளோனிங்




அறிவியலை, ஆன்மீகம் இடறிவிட நினைக்கும் ஒரு இடமுண்டு. “எதையும் அறிவியலால் உருவாக்க முடியும், ஆனால் ஒரு உயிரை அறிவியலால் உருவாக்க முடியாது” என்பதுதான் அது. அறிவியலும், ஆன்மீகமும் மோதும் போது, இறுதி வாதமாக, இது முன் வைக்கப்பட்டு, விவாதம் அந்த நிலையிலேயே முடிவுக்குக் கொண்டு வரப்படும்.


"உயிரை உருவாக்கக் கடவுளால் மட்டுமே முடியும்” என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே, இன்றுவரை உலகமும் இயங்கி வந்து கொண்டிருக்கிறது. அறிவியல் என்றாவது ஒருஉயிரை உருவாக்கிவிட்டால், அனைத்து நம்பிக்கைகளுமே தடுமாறிவிடும். ஆனால், அப்படியொரு நிகழ்வு மனிதனால் நிகழ்த்தப்படக் கூடாது என்பதுதான் என் விருப்பமும் கூட.


க்ளோனிங் முறையில் உயிரினங்கள் உருவாக்கப்பட்டது போல. மனிதனையும் எங்கோ ஒரு இடத்தில் க்ளோளிங் முறையில் இரகசியமாக உருவாக்கியிருப்பார்கள் என்று பலர் நம்புகிறார்கள். அந்தச் செய்தி வெளியில் கசிந்தால், பல சிக்கல்கள் உருவாகலாம் என்பதால் அதை வெளிவிடாமல் வைத்திருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். அதுபோல, ஒரு கலமுள்ள உயிரினத்தையும் மனிதன் உருவாக்கி விட்டான் என்ற வதந்தியும் உண்டு. அறிவியலின் பல கண்டுபிடிப்புகள் சாதாரண மனிதன் முன்னால் சமர்ப்பிக்கப்படாமல், இரகசியமாகவே வைக்கப்பட்டிருப்பது என்னவோ உண்மைதான். அதில் இவையும் ஒன்றாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.


சரி நான் இதை ஏன் இங்கு சொல்கிறேன் தெரியுமா?


சமீபத்தில் விஞ்ஞானிகள் ஒரு புரட்சியைச் செய்திருக்கிறார்கள். அது புரட்சியா? இல்லையா? என்று இதைப் படித்தபின்னர் நீங்கள்தான் சொல்ல வேண்டும். அது வேறு ஒன்றுமில்லை, விஞ்ஞானிகள் ஒரு எலியை 'See-Through' வாக உருவாக்கியிருக்கிறார்கள். அதாவது, எலியைப் பார்க்கும் போது, அதன் உள்ளே உள்ள உறுப்புகள் அனைத்தும் வெளியே தெரிவது போல (கண்ணாடி போல) மாற்றியிருக்கிறார்கள். ‘Tranparent' என்று சொல்வார்களே! அப்படி 'ஒளி ஊடுருவும்' தண்மையுடன் அந்த எலி காணப்படும். அதன் எலும்புகள் தவிர்ந்து, வெளித் தோல், உள்ளே இருக்கும் உறுப்புகள் அனைத்தும், கண்ணாடி போன்றே காணப்படும். நோய்களையும், அதன் காரணிகளையும் இலகுவாக இதனால் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.


உங்கள் மனதில் தோன்றும் கேள்வி புரிகிறது. அந்த எலி உயிருடன் இல்லை. "இவை ஆராய்ச்சிக்கானது மட்டுமேயன்றி உயிர் வாழ்வதற்கானதல்ல" என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.


நான் கண்ணாடி முன்னால் நின்று கொண்டு, என்னை ட்ரான்ஸ்பரண்டான உடலுறுப்புகளுடன் ஒரு நிமிடம் கற்பனை செய்து பார்த்தேன். அப்போது மனதில் தோன்றிய உருவம் கொடுத்த அதிர்ச்சி, என் எதிரிக்கும் வரக்கூடாத ஒன்று. நீங்களும் கண்ணாடி முன் நின்று ஒருதரம் கற்பனை செய்து பாருங்கள். இப்போது அந்த எலியின் படங்களைப் பாருங்கள்.