வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

March 20, 2015

கருந்துளைகளை (Blackholes) மனிதனே உருவாக்குவது சாத்தியம்தானா?




கருந்துளைகளை (Black Holes) நாம் உருவாக்கப் போகின்றோமா?'இணை அண்டங்கள்' (Parallel Universe) இருக்கின்றன என்பது உண்மைதானா? இயற்பியலில் இதுவரை பெரும் மர்மமாக இருந்துவந்த இரண்டு மையப்பொருட்களை முன்னிலைப்படுத்திக் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகளுக்கான பதில்களை, எதிர்வரும் மாதங்களில் ஆராய்ந்து கண்டுபிடிக்க ஆயத்தமாகின்றது அறிவியல் உலகு. 2012ம் ஆண்டு, 'கடவுள் துகள்’ என்று செல்லப் பெயரிட்டு அழைக்கப்பட்ட ‘ஹிக்ஸ் போஸான்’ (Higgs Boson) என்னும் நுண்ணிய துகள் கண்டுபிடிக்கப்பட்டது. சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் அமைக்கப்பட்டுள்ள ‘சேர்ன்’ (Cern) ஆராய்ச்சி மையத்தில்தான் ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிக்கப்பட்டது. "பேரண்டத்தின் ஆரம்பப் பெருவெடிப்பின் (Bigbang) மூலமாக உருவான ஹிக்ஸ் துகள்கள், உண்மையில் இருக்கிறனவா? இல்லையா?" என்னும் சந்தேகத்துடனேயே அதுவரை விஞ்ஞானிகள் இருந்து வந்தார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது சேர்ன்.


சேர்ன்' என்னும் ஆராய்ச்சி மையம், நிலத்திற்குக் கீழே 175 மீட்டர்கள் ஆழத்தில், 27 கிலோமீட்டர்கள் சுற்றளவுள்ள வட்டப்பாதையில் நீண்ட குழாய்களை இணைத்து அமைக்கப்பட்டுள்ளது. வட்டமாக அமைக்கப்பட்ட நீண்ட குழாய்களினூடாக எதிரெதிர்த் திசைகளில், ஒளியின் வேகத்தில், குறித்த சக்தியுடன் முடுக்கிவிடப்படும் ‘ஹாட்ரான்’ (Hadron) துகள்கள், ஒன்றுடனொன்று மோதுவதால், வெடித்துச் சிதறி வெளிப்படும் அடிப்படைத் துகள்களைக் கண்டுகொள்வதே இந்த ஆராய்ச்சி மையத்தின் பயன்பாடு. இதைப் ‘பெரிய ஹாட்ரான் மோதி’ (Large Hadron Collider) என்பார்கள். சுருக்கமாக LHC





நான் மேலே கூறியவற்றை அறிவியலில் பரீட்சயமுள்ளவர்களும், இயற்பியல் ஆர்வலர்களும் இலகுவாகப் புரிந்துகொள்வார்கள். ஆனால், சாதாரண வாசகனுக்கு, 'ஹாட்ரான்' என்பதும், 'இணையண்டம்' என்பதும், கண்ணைக் கட்டி கருந்துளையில் விட்டதுபோல இருக்கும். அதனால், அனைத்துக்கும் விளக்கமளிக்க முடியாவிட்டாலும், முடிந்தளவு விளக்கங்களைக் கூறிச் செல்கிறேன்.

முதலில் ஹாட்ரான் என்றால் என்னவென்பதைப் பார்க்கலாம். பல வருடங்களுக்கு முன்வரை, அணுவைப் பிரிக்க முடியாதென்றே நம்பிவந்தனர். மேலும் பிரிக்க முடியாத மிகச்சிறிய துகள்தான் அணு என்றார்கள். அதற்கப்புறம் அறிவியல் வளர வளர, அணுவைப் புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் என்று பிரித்தார்கள். அத்துடன் முடிந்தது கதையென்றுதான் நினைத்தோம். ஆனால் பிரித்தல், உடைத்தல் அத்துடன் முடிந்துவிடவில்லை. புரோட்டான்களும், நியூட்ரான்களும் மேலும் பிரிக்கப்பட்டு, அவை குவார்க்குகள் (Quarks) என்னும் நுண்துகள்களாலானவை என்று கண்டுபிடிக்கப்பட்டது. புரோட்டானும், நியூட்ரானும் தனித்தனியே, மூன்று குவார்க்குகளால் உருவானவை. குவார்க்குகள் ஆறுவகைப்படும். அவற்றில், 'மேல் குவார்க் (Up Quark), 'கீழ் குவார்க்’ (Down Quark) என்னும் இருவகைகளினால் புரோட்டானும், நியூட்ரானும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒரு புரோட்டானுக்குள் இரண்டு மேல் குவார்க்குகளும், ஒரு கீழ்க்குவார்க்கும் உண்டு. அதுபோல, ஒரு நியூட்ரானுக்குள் இரண்டு கீழ்க்குவார்க்குகளும், ஒரு மேல் குவார்க்கும் உண்டு. இந்தக் குவார்க்குகளால் உருவாக்கப்பட்ட துகள்களையே, ‘ஹாட்ரான்’ (Hadron) என்கிறார்கள். 


ஹாட்ரான் துகள்களுக்கு அதியுயர் சக்தி கொடுத்து, கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் முடுக்கி விடப்படுவதால், அவை அந்த நீண்ட குழாய்களில் எதிரெதிர்த் திசைகளில் மோதிக்கொள்கின்றன. அந்த மோதலை மிகநுண்ணிய கருவிகளினால் பதிவுசெய்து அவதானித்தபோது, 'ஹிக்ஸ் போஸான்’ என்று சொல்லப்படக்கூடிய துகள் வெளிப்பட்டதை 2012இல் கண்டுபிடித்தார்கள். அப்போது, ஹாட்ரான் மோதியினால் கொடுக்கப்பட்ட சக்தி, 7 முதல் 8 TeV (டெரா எலெக்ட்ரான் வோல்ட்) சக்தியாகும். ஹிக்ஸ் போஸான் கண்டுபிடித்ததன் பின்னர், கடந்த இரண்டரை வருடங்களாகச் சேர்ன் ஆய்வு மையம் தனது ஆராய்ச்சிகளை நிறுத்தி வைத்திருந்தது. காரணம், அதியுயர் சக்தியைத் துகள்களுக்குக் கொடுத்து மோதும்படி செய்வதற்கான ஆயத்தங்களை இடைக் காலங்களில் செய்து வந்ததே. இந்த ஹாட்ரான் மோதி, மீண்டும் 2015 மார்ச் 23ம் தேதி புதிய மோதல் பரிசோதனைகளுடன் இயங்க ஆரம்பிக்க இருக்கிறது. மார்ச் 23ம் தேதி ஆரம்பிக்கும் பரிசோதனைகள் படிப்படியாக உயர்த்தப்பட்டு, மே மாதமளவில் 13 முதல் 14 TeV சக்தியுடன் தொழில்பட ஆரம்பிக்கும். 14 டெரா எலெக்ட்ரான் வோல்ட் என்பது 'அதிசக்தி நிலயாக' (High energy level) கருதப்படுகின்றது. அதாவது கடந்த முறையைவிட இரண்டு மடங்கு சக்தியுடன் ஹாட்ரான்கள் இம்முறை மோதவிருக்கின்றன. இந்த மோதலின் மூலம், நம்மை மயக்க நிலையில் இதுவரை வைத்திருந்த பல இயற்பியல் மர்மங்களுக்கு விடைகள் கிடைக்குமென ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். குறிப்பாக, இந்த மோதலினால் உருவாகப் போகும் சில சம்பவங்கள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்த விஞ்ஞானிகளின் கருத்துகள் நம்மை வியப்பிலும், பயத்திலும் ஆழ்த்துகின்றன. வாட்டலூ பல்கலைக்கழகத்தைச் (Waterloo University) சேர்ந்த பேராசிரியர் ஃபைசல் (Prof.Mir Faizal) மற்றும் அஹ்மட் பராஹ் அலி, மொஹம்மட் ஹாலில் (Ahmed Farag Ali, and Mohammed M. Khalil) ஆகியோர் சேர்ந்து சமர்ப்பித்த ஆராய்ச்சிக் கட்டுரையே நம்மை ஆச்சரியத்துக்குள் கொண்டு செல்கின்றது.

ஹாட்ரான்கள் அதியுயர் சக்தியுடன் மோதும்போது, ஈர்ப்புசக்தியில் சிறிதளவு, அந்த இடத்திலிருந்து மாயமாக மறைந்து போகுமெனவும், அப்படி மறைந்து போகும் ஈர்ப்புசக்தி நம் அண்டத்திலிருந்து வேறு பரிமாணங்களுக்கே (Dimensions) செல்கின்றனவென்றும், அப்படிச் சென்றால், நம் அண்டத்துக்கு இணையான இன்னுமொரு அண்டம் (Parallel Universe) இருப்பது உறுதியாகுமெனவும், பேராசிரியர் ஃபைசலின் ஆராய்ச்சிக் கட்டுரை சொல்கிறது. அத்தோடு அந்தக் கட்டுரை நின்றுவிடவில்லை. "ஈர்ப்புவிசை மேலே சொன்னதுபோல மர்மமான முறையில் மறைந்துபோனால், அந்தக் கணத்தில் மிகச்சிறியளவிலான கருந்துளை தோன்றவும் வாய்ப்பிருக்கிறது" என்றும் சொல்கிறது. மிகச்சிறியது என்றால், எந்த அடிப்படைத் துகள்களும் உட்புகமுடியாத அளவுக்கு நுண்ணிய கருந்துளையாக அது இருக்கும். ஹாட்ரான் மோதியில் ஆராய்ச்சிகளைச் செய்ய ஆரம்பித்த காலகட்டங்களிலேயே, 'அதன்மூலம் கருந்துளைகள் உருவாகிப் பூமியையே அழித்துவிடும் அபாயம் உண்டென்ற' எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் கூட ஒருமுறை எச்சரிக்கையாகச் சொல்லியிருந்தார். கருந்துளைகள் அவ்வளவு ஆபத்தானவை. கருந்துளைகள் மிகவும் அதிகளவு ஈர்ப்புசக்தியைக் கொண்டிருப்பதால், அவற்றின் ஈர்ப்பிலிருந்து எதுவுமே தப்ப முடியாது. ஒளிகூட அதன் ஈர்ப்பிலிருந்து தப்ப முடியாதென்றால் பாருங்கள். ஒரு மீட்டருக்குக் குறைவான அளவிலுள்ள கருந்துளை, நம் பூமியை ஒரு நூடுல்ஸ் போல நீட்டி, லபக்கெனத் தனக்குள் இழுத்துக் கொள்ளும் ஆபத்து இருக்கிறது. சிறியதாக இருக்கும் கருந்துளைகள், ஒவ்வொன்றாகத் தன்னுள் இழுத்துக்கொள்வதால், படிப்படியாகப் பெரிதாகிக்கொண்டு வருமென்று சொல்கிறார்கள்.




கருந்துளையின் சக்திகள் எல்லாமே ஈர்ப்புவிசையிலேயே தங்கியிருக்கிறது. இதுவரை மனிதன் கணித்துக்கொள்ள முடியாமல் அவதியுறும் விசை, ஈர்ப்புவிசை மட்டும்தான். ஈர்ப்புவிசைக்கான அடிப்படைக் காரணங்கள் இன்னும் மர்மமாகவே இருக்கின்றன. ஐசாக் நியூட்டன், பூமி தன்னை நோக்கிப் பொருட்களை ஒரு விசையுடன் இழுத்துக் கொண்டிருக்கிறது. அதுவே 'புவியீர்ப்பு விசை' என்றார். ஆனால் அதன்பின்னர் வந்த ஐன்ஸ்டைன், சூரியன், பூமி போன்ற மிகப்பெரிய பொருட்கள் தாம் நின்றுகொண்டு சுழலும் காலவெளியை (Space time) தம் நிறைகளினால் கீழ்நோக்கி வளைப்பதால் ஏற்படுவதே, ஈர்ப்பு விசையென்றார். பல ஆராய்ச்சிகளின் பின்னர், ஐன்ஸ்டைன் சொன்ன கருத்துச் சரியென்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், நவீன இயற்பியலாளர்களால் இப்போது, ‘ஈர்ப்பு வானவில்’ (Gravity's rainbow) என்னும் புதிய ஈர்ப்புக்கொள்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது. காலவெளியானது, துகள்களின் சக்திவெளிப்பாட்டு நிறமாலை வித்தியாசங்களுக்கேற்ப வெவ்வேறு விதமாக அவற்றை வளைத்துக்கொள்கிறது என்கிறார்கள். இந்த ஈர்ப்பு வானவில் கோட்பாடு, பிக்பாங் என்னும் பெருவெடிப்பு என்ற ஒன்றே நடைபெறவில்லையென்று சொல்கிறது. இதைப்பற்றி இன்னுமொரு கட்டுரை மூலம் விளக்கமாக எழுதுகிறேன். இம்முறை நடைபெறப்போகும் ஹாட்ரான் மோதலின் மூலம் இந்த ஈர்ப்பு வானவில் விதி சரியானதென்று நிறுவப்படலாமென நம்புகிறார்கள். 




இதை நான் முன்னர் பலமுறை சொல்லியிருந்தாலும், இந்தக் கட்டுரையின் விளக்கத்திற்கான அவசியம் கருதி மீண்டும் ஒருமுறை….
ஐன்ஸ்டைனின் ஒருங்கமைக் கோட்பாட்டின் (Theory of Everything) அடிப்படையில், அதன் நீட்சியாக உருவாக்கப்பட்டது 'அதிர்விழைக் கோட்பாடு' (String Theory). இந்த அதிர்விழைக் கோட்பாட்டின் நீட்சியாக 'எம் கோட்பாடு' (M Theory) உருவாகியது. அதிர்விழைக் கோட்பாட்டையும், எம் கோட்பாட்டையும் நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் அதை உருவாக்கியவர்களுக்குக் கிடைக்கவில்லை. அந்தக் கோட்பாடுகள் பல விஞ்ஞானிகளால் விமர்சனத்துக்குள்ளாகியது. கற்பனாவாதிகள் என்று சிலரால் ஏளனமும் செய்யப்பட்டது. ஆனால், அந்தக் கோட்பாட்டைப் பலர் ஏற்றுக் கொண்டுமிருக்கிறார்கள். அதிர்விழைக் கோட்பாடு, எம் கோட்பாடுகளின்படி, நாம் வாழும் அண்டத்திற்கு மொத்தமாகப் பனினொரு பரிமாணங்கள் உள்ளன என்று நிறுவப்பட்டிருக்கின்றது. மனிதர்களான நம்மால் அதிகபட்சமாக மூன்றே மூன்று பரிமாணங்களைத்தான் புரிந்து கொள்ள முடியும். நீளம், அகலம், உயரம் (X,Y,Z,) என்பவையே அந்த மூன்று பரிமாணங்களுமாகும். நம் கண்ணால் பார்க்கும் காட்சிகளெல்லாம் முப்பரிமாண வடிவங்களாலானவை. மனிதன் மூன்று பரிமாணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால், ஒரு பரிமாணத்தில் வாழும் உயிரினங்களும், இரு பரிமாணங்களில் வாழும் உயிரினங்குகளும் பூமியில் இருக்கின்றன. உதாரணமாக நிலத்தில் அசையாமல் இருக்கும் ஒரு சிறிய புல் ஒரு பரிமாணத்தில் வாழ்வதாகவே நாம் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு, இடம் வலமாகவோ, முன் பின்னாகவோ அசைவதற்கான பரிமாணம் இல்லை. ஆனால் கீழ் மேலாக அது தன்னை வளர்த்துக் கொள்கிறது. அதனால் அதை ஒரு பரிமாணத்தில் வாழும் உயிரினமாகக் கொள்ளலாம். இது ஒரு உதாரணத்திற்கு மட்டுமே. அதுபோல, நிலத்தில் ஊர்ந்து செல்லும் எறும்பொன்றை இரு பரிமாணங்களில் வாழும் உயிரினமாகக் கொள்ளலாம். எறும்பு, முன் பின்னாகவும், இடம் வலமாகவும் அசைகிறது. ஆனால், அதனால், மேல் கீழாக அசைய முடிவதில்லை. ஆனால், ஒரு பறவையால் இடம் வலம், முன் பின், மேல் கீழ் ஆகிய மூன்று பரிமாணங்களில் பயணிக்க முடிகிறது. ஒரு எறும்பிடம் "மூன்றாவது பரிமாணமென்ற ஒன்று உண்டென்றும், அங்கு மனிதன் என்பவனும், பறவைகளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்றும் சொன்னால், அதனால் அதைக் கற்பனையே செய்து பார்க்க முடியாது. அதுபோல, நான்காவது பரிமாணம் உண்டென்று மனிதனிடம் சொன்னால், அவனாலும் அதை நம்ப முடிவதில்லை. கற்பனை செய்யவும் முடிவதில்லை. எம் கோட்பாடு, மொத்தமாகப் பதினோரு பரிமாணங்கள் உள்ளன என்று சொல்கின்றது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது, பதினோராவது பரிமாணங்களிலும் வெவ்வேறு வகையான உயிரினங்கள் வாழ்ந்துகொண்டிருக்கலாம். அவையே ஆவிகளாகவும், பேய்களாகவும், ஏலியன்களாகவும், அசுரர்களாகவும், தேவர்களாகவும், கடவுள்களாகவும் இருக்கலாம். ஒவ்வொரு பரிமாணங்களாக அதிகரிக்க அதிகரிக்க, அதில் வாழும் உயிரினங்களின் சக்திகளும் அதிகரித்துச் செல்லலாம். மூன்று பரிமாணங்களைவிட அதிகப் பரிமாணங்கள் உண்டென்று நிரூபிக்கப்பட்டால், அதில் வேறு வகையான உயிரினங்களும் வாழ்வதற்குச் சாத்தியங்களும் உண்டு என்பதும் உறுதியாகும். 

ஒருவேளை, ஹாட்ரான் மோதிப் பரிசோதனையில் கருந்துளையொன்று உருவாகினால், அது பிளாங்க் அளவுகளிலேயே (Planck Length) காணப்படுமென்றும். அவற்றால் மேலும் சுருங்கவோ, உள்ளே இழுக்கவோ முடியாது என்கிறார்கள். கருந்துளையால் ஆபத்து ஏதும் இல்லையென்னும் நிலையில், எதிர்வரும் மே மாதமளவில் கருந்துளையொன்று உருவாகும் பட்சத்தில், இதுவரை நம் கண்ணால் காணமுடியாத கடவுள்கள், தேவர்கள், அசுரர்கள், பேய்கள், ஆவிகள், ஏலியன்கள் வசித்துக் கொண்டிருக்கும் இடங்களான ஒவ்வொரு பரிமாணத்தையும் நாம் கண்டறிந்தவர்களாவோம். இயற்பியலில் அடைக்கப்படாத பல ஓட்டைகள் இதனால் படிப்படியாக அடைக்கப்படலாம். நம்பிக்கைகள்கூடத் திருத்தியெழுதப்படலாம். அல்லது அவற்றுக்குப் புது அர்த்தங்கள் உருவாக்கப்படலாம். 

அறிவியலில் புது வரலாறொன்று படைக்கப்படுவதற்கு சாட்சியமாகி, அந்த வரலாற்று முக்கியம் வாய்ந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களென்றும் பெயரை நாம் பெறப்போகிறோமா? இல்லையா? என்பதை இன்னும் சில நாட்களில் தெரிந்துகொள்வோம்.


8 comments:

  1. மண்ணாங்கட்டிMarch 20, 2015 at 2:25 PM

    மேலும் மேலும் ஆச்சரியத் தகவல்களை எங்களுக்கு திரட்டியளிக்கிறீர்கள்.
    ஒருபுறம் பயமாகவும் இருக்கிறது. ஒருபுறம் எதிர்பார்ப்புகளோடு காத்தொருக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. பயப்பட ஒன்றுமில்லையென்றே நானும் நம்புகிறேன் மண்ணாங்கட்டி சார்.

      Delete
  2. Replies
    1. உங்களுக்கும் என் நன்றிகள்.

      Delete
  3. மிகவும் அவசியமான தகவல்.. நன்றி அண்ணா

    ReplyDelete
  4. I am addicted to your articles sir... Hats off To you.... I am looking forward for more.... Thank you sir.....

    ReplyDelete
  5. தமிழில் இவற்றை விளங்கிக்கொள்ள இன்னும் தெளிவாகப் புரிகின்றது.. நன்றி

    ReplyDelete