வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

November 13, 2014

‘எண்டாங்கிள்மெண்ட்' (Entanglement)



ஒரு சின்னச் சிக்கலான அறிவியல் விசயம் ஒன்றைச் சொல்கிறேன். ஆனால் அதற்கு முன்னர் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். இதைப் படித்துவிட்டு நீங்கள் குழம்பி விட வேண்டாம். வேறு குழப்பத்திலிருந்தாலும் இதைப் படிக்க வேண்டாம்.


இரவு வானத்தை ஒருதரம் தலை நிமிர்த்திப் பாருங்கள். அங்கே சந்திரன் இருப்பது தெரிகிறதல்லவா? சரி, இப்போது நான் கேட்கும் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்.


"நீங்கள் பார்த்ததால் அங்குச் சந்திரன் இருந்ததா? இல்லை, சந்திரன் இருந்ததால் அதை நீங்கள் பார்த்தீர்களா?"


என்ன…? சுத்தமாகக் குழம்பிப் போய்விட்டீர்களா? இல்லை நான் ஏதும் குடித்துவிட்டு உளறுகிறேன் என்று நினைக்கிறீர்களா?


சந்திரனை விட்டுவிடுவோம். நான் சொல்வதை இப்படி யோசித்துப் பாருங்கள். நீங்கள் வீட்டிலிருக்கும் ஷோபாவில் அமர்ந்திருக்கிறீர்கள். உங்கள் மனைவி உங்கள் முதுகுப் புறமாகப் பின்னால் வந்து நிற்கிறார். இப்போது நீங்கள் தலையைத் திருப்பி உங்கள் மனைவியைப் பார்க்கிறீர்கள். அங்கு உங்கள் மனைவி சிரித்துக் கொண்டிருக்கிறார்.


சரி, இப்போது சொல்லுங்கள், "நீங்கள் பார்த்ததால் அங்கு உங்கள் மனைவி நின்று கொண்டிருந்தாரா? அல்லது மனைவி அங்கு நின்று கொண்டிருந்ததால், அவரை நீங்கள் பார்த்தீர்களா?"


மீண்டும் உளருகிறேனா? இல்லை, இந்தக் கேள்வி ஒன்றும் உளரல் கிடையாது. அறிவியலின் மாமேதையான ஐன்ஸ்டைன் சொன்ன கூற்றுத்தான் நான் மேலே குறிப்பிட்ட சந்திரன் பற்றிய குறிப்பு. ஐன்ஸ்டைனுக்கும், நீல்ஸ் போருக்கும் இடையே நடந்து அறிவியல் போரின்போது, ஐன்ஸ்டைனால் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகள்தான் அவை.


குவாண்டம் இயற்பியலுடன் இணைந்து வந்துகொண்டிருந்த ஐன்ஸ்டைன் என்னும் மாமேதையால், துகள்களின் ‘எண்டாங்கிள்மெண்ட்' (Entanglement) பற்றிய கருத்தை ஒத்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது. ஐன்ஸ்டைன் சறுக்கிய இடமாக இப்போது அறிவியலில் அது கருதப்படுகிறது.


இப்போ மீண்டும் மேலே சொல்லப்பட்ட கூற்றுக்கு வரலாம்.


குவாண்டம் இயற்பியலின்படி, ஒரு துகள் இரண்டு நிலைகளில் இயங்குகின்றன. உதாரணமாக ஒரு எலெக்ட்ரானோ, போட்டோனோ சாதாரணமான நிலையில் அலையாகவே இயங்குகின்றன. ஆனால், அவற்றை நாம் கண்களால் பார்க்கும் அந்தக் கணத்தின்போது, அவை ஒரு திடப்பொருளாக (Particle) மாறிவிடுகின்றன. இது அறிவியலில் இப்போதும் மர்மமாகவே கருதப்படுகின்றது. அதாவது ஒன்றை நாம் பார்க்கும்போது, ‘அது’ கண்ணுக்குத் தெரியக்கூடிய அதுவாகவும், அதைப் பார்க்காதபோது, ‘அது' கண்ணுக்குத் தெரியாத அலையாகவும் மாறிவிடுகிறது. இது சும்மா பேச்சுக்கு எழுந்தமானத்தில் சொல்லப்பட்ட கருத்தல்ல. ஆராய்ச்சிக் கூடங்களில் தெளிவாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதாவது நாம் பார்க்கும் போதுதான் அலையாக இருப்பவை, பொருளாக மாறுகின்றன என்கிறது குவாண்டம் இயற்பியல்.


நான் சொன்னதையெல்லாம் மீண்டும் யோசித்துப் பாருங்கள். அத்தோடு உங்கள் கண்கள் இரண்டையும் நன்றாக மூடிக் கொள்ளுங்கள். இப்போது சொல்லுங்கள், உங்களைச் சுற்றி இதுவரை இருந்த உலகம் உண்மையில் இருந்ததா? இல்லை அவை எல்லாம் நீங்கள் கண்களைத் திறந்ததும் தோன்றிவிடும் மாயையா?





November 10, 2014

பரிமாணங்களின் இரகசியங்கள்




உங்கள் வீட்டில் உங்களுக்கான அறையில் நீங்கள் உட்கார்ந்திருக்கிறீர்கள். அறையினுள் உங்களைச் சூழக் காற்றுவெளி மண்டலம் இருப்பது உங்களுக்குத் தெரியும். பூமியெங்கும் அந்த வளிமண்டலம் பரவியிருக்கிறது. அதுவே உங்கள் அறையில் பரவியிருந்தாலும், அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டிருக்க மாட்டீர்கள். சரி இப்போ நான் சொல்வதைக் கவனியுங்கள்.


உங்கள் அறையில், உங்களைச் சுற்றி, உங்கள் அருகிலேயே என்னென்ன இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை. அமெரிக்கா, கனடா, ஜப்பான், அவுஸ்ரேலியா, ஆபிரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, நோர்வே என உலகில் உள்ள அனைத்து நாடுகளும், ஏதோ ஒரு வடிவதில் உங்கள் அருகிலேயே இருக்கின்றன. அவையெல்லாம் மிகமிகச் சிறிய இடைவெளிகளில் அங்கு பரவியிருக்கின்றன. இப்போது நீங்கள் மொத்தமாகக் குழம்பியிருப்பீர்கள். ஆனாலும் ‘ nterstellar' படம் உங்களைக் குழப்பியதை விட அதிகமாக இருக்காது. சொல்லப் போனால், இந்தப் படத்தைப் பார்த்தவர்களுக்காகக் கொடுக்க விரும்பும் சிறு விளக்கத்திற்காகவே இந்தப் பதிவு. நான் இன்னும் நான் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை. ஆனாலும்…….


சரி மீண்டும் இங்கள் அறைக்குள் வருவோம்.........


அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா போன்ற உலக நாடுகளெல்லாம், ஏதோவொரு வடிவத்தில் உங்கள் அறையில் மிகமிக அருகிலேயே இருக்கின்றன என்று சொன்னேனல்லவா? இப்போது நீங்கள் ஒரு உலக வானொலிகளை உள்வாங்கக் கூடிய சிற்றலை வானொலியொன்றை (Shortwave Radio) அதிக விலை கொடுத்து வாங்கி வைத்திருக்கிறீர்களென்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த வானொலியில் ஒவ்வொரு அலைவரிசையாக மாற்றிக் கொண்டு வரும்போது, உலகமெங்குமுள்ள ஒவ்வொரு நாட்டின் வானொலியையும் நீங்கள் கேட்கக் கூடியதாக இருக்கும். இந்தச் செயற்பாட்டைக் கொஞ்சம் சரியாகச் சிந்தித்துப் பாருங்கள்.


‘இந்த' ஒவ்வொரு நாட்டின் அலை வரிசைகளும் எங்குமிருக்கவில்லை. உங்களுக்கு அருகில்தான் ஒன்றுடன் ஒன்று பக்கத்திலேயே இருந்திருக்கின்றன. நீங்கள்தான் அதைச் சரியானதொரு கருவிமூலம் ‘ட்யூன்’ செய்ததால் தனித்தனியாகக் கிரகித்துக் கொள்கிறீர்கள். ஒவ்வொரு நாட்டையும் பெற்றுக் கொள்ள அதற்கேற்ற கருவியொன்றுதான் உங்களுக்குத் தேவைப்படுகின்றது. ஒவ்வொரு நாடுகளும் குவாண்டம் அளவுகளில் அருகருகேதான் இருந்திருக்கின்றன.


இதுபோலத்தான், பரிமாணங்களும் (Dimention). நாம் புரிந்து கொண்ட மூன்று பரிமாணங்கள் (3D) தவிர்ந்து, ஏனைய ஏழு பரிமாணங்களும் உங்கள் அருகிலே, உங்கள் கூடத்தான் இருக்கின்றன. அவை அங்கிருப்பது உங்களுக்குத்தான் தெரியவில்லை. எப்போது அவற்றை ‘ட்யூன்’ செய்து கண்டுபிடிக்கக் கூடிய தகுந்த கருவியை மனிதன் கண்டுபிடிக்கிறானோ, அப்போது இந்த பரிமாணங்களின் இரகசியங்கள் மெல்லப் புரிந்து போகும்.


நன்றி: Michio Kaku





September 20, 2014

மழையில் நனையும் அறிவியல்



இப்போது நான் சொல்லப் போவது, ரொம்பப் பெருசா ஒன்னுமில்ல. சின்னத் தகவல்தான். உங்கள் அன்றாட வாழ்க்கையுடன் இணைந்த ஒரு சிறிய அறிவியல் தகவல். நம்ப முடியாமல் இருந்தாலும், உண்மையானது. கணிதச் சமன்பாடுகளால் நிறுவப்பட்டது.


மழை பெய்யும் போது, கையில் குடையில்லாவிட்டால் மழைபடாத ஓரிடத்தில் ஒதுங்கியிருப்பீர்கள். நீங்கள் செல்ல வேண்டிய இடம், ஐம்பது அடிக்கும் குறைவான தூரத்தில் உங்களுக்கு முன்னாலேயே இருக்கும். ஆனாலும் பெருமழையில் நனைந்து விடுவீர்கள் என்பதால், மழை விடும்வரை அல்லது குறையும்வரை காத்துக் கொண்டிருப்பீர்கள். சிறிது நேரத்தில், பெருமழை குறைந்து சிறுதூறலாகப் பெய்ய ஆரம்பிக்கும். காத்திருந்து பொறுமையிழந்ததால், அந்தச் சிறுதூறலிலேயே செல்ல வேண்டிய இடத்துக்கு ஓடிப் போய்விடலாம் என்று நினைப்பீர்கள். மழைக்குள் இறங்கி ஓடவும் செய்வீர்கள்.


ஆனால், மழையில் சிறு தூரங்களைக் கடக்கும் போது, ஓடிச் செல்வதைவிட நடந்து செல்லும் போதுதான் நாம் குறைவாக நனைவோம் என்பது உங்களுக்குத் தெரியுமா?


நாம் நினைத்துக் கொள்வது என்னவென்றால், "நடந்து செல்வதைவிட ஓடிச் சென்றால் மழையில் நனைவது குறைவாக இருக்கும்" என்பதுதான். மூளையும் அதுவே சரியாக இருக்கும் என்றுதான் எண்ணிக் கொள்ளும். ஆனால், நடந்து செல்லும் போது நம்மில் படும் மழைத்துளிகளை விட, ஓடிச் செல்லும் போதே அதிக மழைத்துளிகள் படுகின்றன.




September 2, 2014

பரிமாணங்கள்



நாம் இந்த உலகை, நமது இரண்டு கண்களால் பார்க்கும்போது, அது மிகவும் அழகான தோற்றத்தில் கண்களைக் கவர்கிறது. அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், நாம் பார்க்கும் பொருளின் அல்லது காட்சியின் வடிவம்தான் அழகுக்கான மிகமுக்கியமான பங்கையெடுத்துக் கொள்கிறது. ஒரு பொருளின் வடிவம் அல்லது அமைப்பு என்பதை நாம் எடுத்துக் கொண்டால், அது இரண்டு வகைகளில் நம் கண்களுக்குத் தெரிகிறது. 1. இருபரிமாண வடிவவகை. 2.முப்பரிமாண வடிவவகை. அதாவது 2D (2Dimensions), 3D (3Dimension). இருபரிமாணங்கள், முப்பரிமாணங்களைப் பற்றி உங்களுக்கு அதிக விளக்கத்தை நான் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. காரணம் அவற்றை அன்றாட வாழ்க்கையில் நீங்கள் அடிக்கடி பார்த்தும், கேட்டும், பழகியும் கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும், ஒரு சிறியவகை விளக்கத்தை மட்டும் கொடுத்துவிட்டு மேலே செல்கிறேன்.


இருபரிமாணங்கள் (2D) என்பதற்கு உதாரணமாக, உயரம், அகலம் மட்டும் கொண்ட ஒரு புகைப்படத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், முப்பரிமாணம் (3D) உயரம், அகலம் என்பவற்றுடன் நீளத்தையும் கொண்டது. நாம் கண்திறந்து பார்க்கும்போது தெரியும் அனைத்துக் காட்சிகளும் முப்பரிமாண வகையிலேயே நமக்குத் தெரிகின்றன. இந்த முப்பரிமாணத்தில் உள்ள ஒரு அறிவியல், தொழில்நுட்பச் சிக்கல் பற்றிச் சொல்வதுதான் இந்தப் பதிவு. சிக்கல் என்று சொல்வது சரியாவெனத் தெரியவில்லை. நுட்பமான புரிதல் என்று வேண்டுமானால் சொல்லலாம்.


மனிதர்களுக்கு இயற்கையாகவே இரண்டு கண்கள் அமைந்திருக்கின்றன. இது போலத்தான் மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் அமைந்திருக்கின்றன. ஆனால், மனிதனின் பார்வைதரும் காட்சி வேறு. மிருகங்கள்/பறவைகளின் பார்வைதரும் காட்சிகள் வேறு. அந்த வேறுபாடுகள் பலவிதங்களில் இருந்தாலும், ஒரு முக்கியமான விசயத்தில் எப்படி வேறுபடுகின்றன என்பதை மட்டும் பாருங்கள்.


மனிதனாகட்டும், மிருகமாகட்டும், பறவையாகட்டும், இவை அனைத்தும் ஒரேயொரு கண்ணால், எப்போதுமே இருபரிமாணக் காட்சிகளைத்தான் பார்க்கின்றன. உதாரணமாக உங்களுக்கு ஒரு கண் மட்டும் இருக்கும்பட்சத்தில், நீங்கள் இருபரிமாணக் காட்சிகளைத்தான் காண்பீர்களேயொழிய, முப்பரிமாணக் காட்சிகளையல்ல. இதைச் சரியாக நாம் புரிந்து கொள்ளவேண்டும். மனிதனுக்கு இரண்டு கண்கள் இருப்பதால்தான், அவன் முப்பரிமாணக் காட்சிகளைக் காண்கிறான். முப்பரிமாணக் காட்சிகளை இரண்டு கண்களாலும் காண்பதில் இன்னுமொரு விசேசமான நுட்பமொன்றும் இருக்கிறது. அந்த இரண்டு கண்களும், ஒரே காட்சியைக் காணவேண்டும். அப்படிக் கண்டால் மட்டுமே, நம்மால் முப்பரிமாணக் காட்சிகளாக உணரமுடியும். இதை இன்னும் கொஞ்சம் விளக்கமாகக் கூறினால், மனிதனின் வலது, இடது, கண்கள் இரண்டும், குறித்த இடைவெளிகளில் அமைந்து, ஒரே பொருளைக் குறிப்பிட்ட பார்வைக் கோணத்தினூடாகப் பார்க்கும்போது, முப்பரிமாணக் காட்சி நமக்குத் தெரிகிறது. இந்த இடத்தில்தான், மிருகங்களுக்கும்/பறவைகளுக்கும் மனிதனோடு வேறுபாடு வந்துவிடுகிறது. மனிதர்களையும், ஒருசில விலங்குகளையும் தவிர, ஏனையவற்றிற்கு பக்கவாட்டிலேயே கண்களிரண்டும் அமைந்திருக்கும். அதனால், அவற்றின் கண்களிரண்டும் வெவ்வேறு காட்சிகளையே ஒரே நேரத்தில் காண்கின்றன. “இதயவீண தூங்கும்போது பாடமுடியுமா, இரண்டு கண்கள் இரண்டுகாட்சி காணமுடியுமா?” என்ற கண்ணதாசன் எழுதிய பாடல்வரிகள் மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் சரிவராது என்பதுதான் நிஜம். எதிரிகளிடமிருந்து தம்மைப் பாதுகாக்கவே இப்படியொரு அமைப்பை இயற்கை அவற்றிற்குக் கொடுத்திருக்கின்றது. ஆனால், இப்படியொரு கண்ணமைப்பினால், கழுகு, பருந்து போன்ற சில பறவைகளைத் தவிர, ஏனைய மிருகங்கள், பறவைகளினால் முப்பரிமாணக் காட்சிகளைக் காணமுடியாது (வேறு சில விதிவிலக்குகளும் இருக்கலாம்).


சரி! இனி நாம் மீண்டும் மனிதர்களிடத்துக்கு வரலாம். இப்போது, நான் முன்னர் சொன்னதை மீண்டும் பாருங்கள். மனிதன் தன் ஒரு கண்ணால் இருபரிமாணக் காட்சிகளையே காணமுடியும். அது இடதுகண்ணாக இருந்தாலென்ன, வலதுகண்ணாக இருந்தாலென்ன, ஒரு கண்ணால் காணக்கூடியது இருபரிமாணங்கள் மட்டும்தான். ஆனால், ஒரேகாட்சியைப் (பொருளை) பார்க்கும்போது பெறப்படும், இரண்டு இருபரிமாண விம்பங்களை, ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கிவைத்து, மூளைதான் அந்தக் காட்சியின் முப்பரிமாணத்தைக் கணித்துக் கொள்கிறது. உண்மையைச் சொல்லப் போனால், நம் கண்கள் பார்க்கும் காட்சிகள் எதுவுமே முப்பரிமாணங்கள் கிடையாது. அவற்றை முப்பரிமாணமாகத் கணித்துத் திருத்திக் கொண்வது மூளைதான். இதை இலகுவில் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், இருபரிமாணமுள்ள சினிமாத்திரையில் காட்டப்படும் சினிமாப்படமொன்றைச் சாதாரணக் கண்ணாடியை அணிவதன்மூலமாக முப்பரிமாணமாக மாற்றிக்கொள்கிறோமல்லவா, அதுபோல.


மீண்டும் உண்மையில்லாத ஒன்றை, உண்மையென்று நம்பி, நாம் தோற்பது தெரியாமல் தோற்றுப் போகிறோம். நாம் முப்பரிமாணக் காட்சிகளைக் காண்பதாக நினைத்துக் கொள்கிறோம், அவ்வளவுதான். ஆனால் இது, ‘மூளை செய்யும் வேலை’.





August 30, 2014

டவுன் சிண்ட்ரோம்




ஒவ்வொரு பொருட்களும் அணுக்களல் ஆனது போல, ஒவ்வொரு உயிரினமும் கலங்களால் (Cells) ஆனது. அணுக்கள் அடுக்கப்பட்டு ஒரு பொருள் உருவானது போல, கலங்கள் அடுக்கப்பட்டு உயிரினங்கள் ஒவ்வொன்றும் உருவாகியிருக்கின்றன. இதில் அனைத்து உயிர்களும் அடங்கும். நான், நீங்கள், நாய், பூனை, பாம்பு, பல்லி என அனைத்துமே! இதில் மனித உயிரை எடுத்துக் கொண்டால், ஒரு ஆணின் விந்தும், பெண்ணின் கருமுட்டையும் சேர்ந்து முதல் கலம் (Cell) உருவாகின்றது. அந்தக் கலம் பிரிவடைந்து, இரண்டாகிப் பின்னர் நான்காகி அப்புறம் பதினாறாகி அப்படியே படிப்படியாக அழகிய குழந்தையாகிறது. இதிலுள்ள ஆரம்ப கட்டமான முதல் கலத்திற்கு நாம் மீண்டும் வந்தால்………!


ஆணில் இருந்து வரும் விந்தில் 23 குரோமோசோம்களும் (Chromosomes), பெண்ணின் கருமுட்டையிலிருக்கும் 23 குரோமோசோம்களும் இணைந்து, 23 சோடிகளாக ஒன்று சேர்வதால், மனிதக் குழந்தையின் முதல் கலம் உருவாகும். மனித உயிரின் ஒவ்வொரு கலத்திலும் 23 சோடிகளாக குரோமோசோம்கள் இருக்கும். இதில் 23ம் சோடியாக இருக்கும் குரோமோசோம்தான், உருவாகும் அந்தக் குழந்தை, ஆணா? அல்லது பெண்ணா? என்று தீர்மானிப்பது. 23ம் குரோமோசோம் சோடியில், 'X,Y' என இரண்டு குரோமோசோம்கள் இருந்தால் அது ஆணாகவும், 'X,X' என இரண்டு குரோமோசோம்கள் இருந்தால் அது பெண்ணாகவும் இருக்கும். ஒரு ஆணிடம் 23வதாக இருக்கும் 'X,Y’ ஆகிய இரண்டு குரோமோசோம்களில் எந்தக் குரோமோசோம் அதாவது, X குரோமோசோமா அல்லது Y குரோமோசோமா பெண்ணுடைய கருவிலிருக்கும் 'X,X' குரோமோசோமில் ஒன்றுடன் சேர்கிறது என்பதைப் பொறுத்து, அந்தக் குழந்தை ஆண் அல்லது பெண் என்பது தீர்மானிக்கப்படுகிறது. மொத்தத்தில் சொல்லப் போனால், பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தீர்மானிப்பது முழுக்க முழுக்க ஆண் மட்டும்தான். பெண்ணுக்கு இதில் எந்தப் பங்கும் கிடையாது.


ஆதனால், 'பெண் குழந்தையைப் பெற்றுவிட்டாள்’ என்று சொல்லி, வீட்டுக்கு வந்த மருமகளிடம் கோவம் கொள்ளும் மாமியார்களும், அதையே சாட்டாக வைத்து இரண்டாவது திருமணம் செய்யத் துடிக்கும் ஆண்களும், இதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.


இங்கு மாமியார்களுக்கும், ஆண்களுக்கும் புத்திமதி சொல்வதற்காக நான் இந்தக் கட்டுரையை எழுதவில்லை. நான் இதை எழுத வந்ததற்கான காரணமே வேறு.


மனித செல்களில் 23 சோடி குரோமோசோம்கள் இருக்கின்றன என்று சொன்னேனல்லவா? ஆணின் விந்தும் பெண்னின், முட்டைக்கருவும் ஒன்றாகச் சேரும் போது, அதில் 21வது குரோமோசோம்கள் சோடிகளாகச் சேரும்போது, அங்கு அரிதாக ஒரு தவறு ஏற்பட்டுவிடுகிறது. அரிதாக இப்படிப் பல விதங்களில் தவறுகள் ஏற்படுவதுண்டு, ஆனாலும் இன்று நாம் பார்க்கப்போவது 21வது குரோமோசோமில் நடக்கும் தவறு பற்றி மட்டும்தான். 21ம் குரோமோசோமில் சோடி சேர்தல் நடைபெறும்போது, மேலதிகமாக ஒரு குரோமோசோம் அந்தச் சோடியுடன் சேர்ந்து விடுகின்றது. அதாவது இரண்டு குரோமோசோம்கள் இருப்பதற்குப் பதில் மூன்று குரோமோசோம்கள் (Trisomi) ஆகிவிடுகிறது. அதாவது, 23 சோடிகளாக மொத்தமாக 46 குரோமோசோம்கள் ஒரு மனித உயிருக்கு இருப்பதுதான் இயல்பானது. ஆனால் இங்கு 47வது குரோமோசோமும் சேர்கிறது. இப்படி மேலதிகமாக ஒரு குரோமோசோம் சேர்வதால், அந்தக் குழந்தைக்கு ஒரு மாற்றுத்திறன் தண்மையைக் கொடுத்துவிடுகிறது. அந்த உடல் குறைபாட்டைத்தான் 'டவுன் சிண்ட்ரோம்’ (Down Syndrome) என்பார்கள்.


'டவுன் சின்ட்ரோம்' உள்ள குழந்தைகள், பார்க்கும் போது உடலியலில் சிறிது வித்தியாசமாக இருப்பார்கள். உலகில் இந்தக் குறைபாடுள்ள குழந்தைகள் அனைவரும் கிட்டத்தட்ட ஒரே விதமாக முக அமைப்பைக் கொண்டிருப்பது ஆச்சரியமான ஒன்று. இந்தக் குறைபாட்டுடன் பிறப்பவர்களை மிகவும் சரியான விதத்தில் பராமரித்து வந்தால், அவர்கள் சாதாரண மனிதர்களுக்கு நிகராகவே தம்மை நிலைநிறுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். அதனால், பெற்றோர்கள் கவலைப்படுவதை நிறுத்திவிட்டு, அந்தக் குழந்தையை அக்கறையுடன் வளர்ப்பதில் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும்.


இந்த நோய் பற்றி மேலதிகமாக ஆராய்வதற்கு மிருகங்களைப் பயன்படுத்தலாம் என்று பார்த்தால், அவை ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு எண்ணிக்கையில் குரோமொசோம்கள் காணப்படுகின்றன. அதிகமாகப் பரிசோதனைக்குப் பயன்படுத்தப்படும் எலிகளை எடுத்துக் கொண்டால், அவற்றுக்கும் மனிதர்களைப் போல 23 சோடிக் குரோமோசோம்கள் இல்லை. குறைவான அளவில், அதாவது 20 சோடிகளே உண்டு. அப்படியிருந்தும், எலிகளில் மேலதிக குரோமோசோம் ஒன்றைச் சேர்த்து. 'டவுன் சிண்ட்ரோம்' குறைபாட்டுடன் புதிதாக உருவாக்கினாலும், அவை உயிருடன் இருக்கவில்லை. இந்த நேரத்தில்தான் டவுன் சின்ட்ரோம் குறைபாட்டுடன் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு 'வெள்ளைப் புலி' பற்றிய தகவல்கள் கிடைத்தன. அந்த அதிசயப் புலியைப் பற்றிய தகவல்களைச் சொல்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.


அமெரிக்காவின் ஒக்லஹோமா நகருக்கு அருகில் அமைந்துள்ள மிருகக்காட்சிச்சாலையில், ‘கென்னி' (Kenny) என்னும் பெயர் கொண்ட வெள்ளைப் புலி இருந்தது. இந்தப் புலி பெங்காலி வகைப் புலியினத்தைச் சேர்ந்தது. அதிசயமாக இந்தப் புலிக்கு, 'டவுன் சிண்ட்ரோம்' என்னும் அரிய வகைக் குறைபாடு இருந்தது. 'டவுன் சிண்ட்ரோம்' உள்ள மிருகமாக பெரிய அளவில் அறியப்பட்டது இதுதான். 1998ம் ஆண்டு பிறந்த கென்னி, 2008ம் ஆண்டு வரை உயிர் வாழ்ந்தது. பின்னர் அதற்கு புற்றுநோய் பீடித்ததால் 28ம் தேதி ஜுன் மாதம் 2008ம் ஆண்டு இறந்து போனது. மிருக இனங்களில் இன்றும் அதிசயமாகக் கென்னி பார்கப்படுகின்றது.


பிற்குறிப்பு: கென்னி தவிர துருக்கி நாட்டில் ஒரு பூனைக்கு இந்தக் குறைபாடு உள்ளதாகத் தெரிய வந்தது.


மேலும், இந்தப் பதிவு யார் மனதையும் புண்படுத்துவதற்கானது அல்ல.






August 12, 2014

நேரத்தின் பரிமாணம்




இந்தப் பதிவைப் படிப்பவர்களில் பெரும்பாண்மையானவர்கள் 25 வயதைத் தாண்டியவர்களாக இருப்பீர்கள். மேலும் சிலர் 35 வயதைத் தாண்டியவர்களாகவும், அதற்கு மேலானவர்களாகவும் இருக்கலாம். அதனால், நான் இப்போது சொல்லப் போவதை நீங்கள் ஞாபகத்தில் மீண்டும் ஒருமுறை மீட்டிக் கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.


நீங்கள் எட்டு வயதுச் சிறுவனாக இருக்கும் போது, பிற்பகலில் பாடசாலை விட்டு வீட்டுக்கு வருவீர்கள். வீட்டுக்கு வந்ததும், அவசர அவரசராமாக உணவை உண்டுவிட்டு மாலை நான்கு மணியளவில் சக பையன்களுடன் விளையாடுவதற்குச் செல்வீர்கள். நான்கு மணியிலிருந்து அதிகபட்சம் ஆறு மணி வரைதான் நீங்கள் விளையாடியிருப்பீர்கள். மொத்தமாக இரண்டேயிரண்டு மணி நேரமாகத்தான் அது இருந்திருக்கும். ஆனால், நீங்கள் நீண்ண்ண்ண்ட நேரமாக, பல மணி நேரங்கள் விளையாடியது போல உணர்ந்திருப்பீர்கள். இந்த அனுபவம் உங்கள் எல்லாருக்கும் நடந்திருக்கும். ஆனால் அதே இரண்டு மணி நேரம் இப்போதெல்லாம் விரைவில் நகர்ந்து விடுவதாக உணர்வீர்கள். சின்ன வயதாக இருக்கும் போது, நேரமென்பது மிக மெதுவாக நகர்வது போல இருந்திருக்கும். அதுவே வயது அதிகரிக்க அதிகரிக்க, அதாவது 60, 70 வயதுகளில், அந்த இரண்டு மணி நேரம் ஒரு விரல் சொடுக்கில் ஓடிவிடுவதாகத் தெரியும்.


இளவயதில் நேரம் நகர்வது மெதுவாகவும், வயது அதிகரிக்க வேகமாக நகர்வது என்பதும் உண்மைதானா? இல்லை அது ஒரு மாயையா? அதாவது சிறுவயதில் மெதுவாக நேரம் நகர்ந்ததாக நாம் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறீர்களா?


இல்லை! நமது ஒவ்வொரு வயதிலும், நேரம் நகர்வது பற்றி ஏற்படும் உணர்வு உண்மையானதுதான். அதில் எந்த மழுப்பலோ, மாயையோ இல்லை. சிறு வயதில் நேரம் மெதுவாக நகர்வதாக உணர்வதற்கும், வயது அதிகரிக்க நேரம் விரைவாக நகர்வதாக உணர்வதற்கும் அறிவியல் ரீதியான காரணம் உண்டு. அந்தக் காரணம் கணித ரீதியானதும் கூட. அது என்ன காரணமாக இருக்கும் என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா..? இல்லையா? பரவாயில்லை, தொடர்ந்து படியுங்கள். காரணம் தானாய் புரிந்து போகும்.


நேரத்தின் பரிமாணத்தை, நாம் வாழும் காலத்தின் அடிப்படையை வைத்தே புரிந்து கொள்கிறோம். அதாவது நம் கையில் ஒரு கடிகாரம் இல்லாவிட்டாலும் கூட, நேரம் செல்வதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அப்படி உணர்ந்து கொள்ளும் நேரத்தின் அளவை, நாம் எவ்வளவு காலம் வாழ்ந்திருக்கிறோம் என்ற அனுபவத்தின் அடிப்படையை வைத்தே நம் மூளை கணித்துக் கொள்கிறது. என்ன, நான் சொல்வது புரியவில்லையல்லவா? சரி, இந்த உதாரணத்தைப் பாருங்கள் புரியும்.


நீங்கள் ஐந்து வயதுப் பையனாக இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதாவது நீங்கள் வாழ்ந்த காலம் மொத்தமாக ஐந்து வருடங்கள். உங்கள் வாழ்க்கையின் அனுபவம் ஐந்து வருடங்களின் காலத்துக்குள்ளேயே அடங்கிவிடுகிறது. ஐந்து வயதில், ஐந்து வருடங்கள் என்பது உங்களின் முழுமையான வாழ்காலம் என்பதாக மூளை கணித்து வைத்துக் கொள்கிறது. இப்போது நான் சொல்வதைச் சரியாகக் கவனியுங்கள்.


உங்கள் ஐந்துவயதில், ஒரு வருடம் என்பது நீங்கள் வாழ்ந்த காலத்தின் ஐந்தில் ஒரு பங்கு. அதாவது வாழ்நாளின் ஐந்தில் ஒரு பங்குக் காலம் என்பது மிக நீண்டதொரு காலம். அதே நேரம் உங்களுக்கு ஐம்பது வயது என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அதில் ஒரு வருடம் என்பது, நீங்கள் வாழ்ந்த காலத்தின் ஐம்பதில் ஒரு பங்கு. அதாவது ரொம்பச் சிறிய காலம். ஐம்பது வயதுள்ள ஒருவருக்கு ஒரு வருடம் செல்வது என்பது அவரது அனுபவத்தின்படி சிறிய காலமாகவும், ஐந்து வயதுள்ள ஒருவருக்கு ஒருவருடம் செல்வது பெரிய காலமாகவும் இருப்பதன் காரணம் இதுதான். ஒருவருடம் போலவே, ஒரு மணி நேரமும் கணித அளவீடுகளைப் பெறுகிறது.


இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். வயது செல்லச் செல்ல நேரம் வேகமாகச் செல்வதற்குக் காரணம் இதுதான். அதனால் வயோதிபர்களுடன் உங்கள் நேரங்களை வழமையை விட, அதிகமாகச் செலவளிக்க முயற்சி செய்யுங்கள்.


பிற்குறிப்பு: இந்தக் கணிப்பு, காதலி வரும்வரை காத்திருக்கும் போது, நேரம் மெதுவாகவும், காதலி அருகில் இருக்கும் போது, நேரம் விரைவாகவும் நகர்வதாகத் தெரியும் மாயை நிலைக்குச் செல்லாது.




August 7, 2014

இயேசு கிரிஸ்து பல்லி



கிருஸ்தவர்களுக்கு இயேசு கிருஸ்துநாதரின் சரித்திரம் நன்றாகத் தெரிந்திருக்கும். கிருஸ்தவர் அல்லாவதவர்களுக்கும் கூட அவரைப் பற்றித் தெரிந்திருக்கும். ‘ஈஸா நபி’ என்னும் பெயரில், அவரை ஒரு தீர்க்கதரிசியாக, முஸ்லிம்களும் கொண்டாடுகின்றனர். பைபிளில் இயேசுநாதர் செய்த பல அற்புதங்கள் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் நீங்கள் அறிந்த விசயங்கள்தான்.


ஆனால்……..!


ஒரு பல்லிக்கு, 'இயேசு கிருஸ்து’ என்று பெயர் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?


‘ஸ்டாப்...! ஸ்டாப்…! ஸ்டாப்…! இயேசுநாதரில் பக்தியுள்ளவர்கள் யாரும், 'நான் இயேசுநாதரைப் பல்லியுடன் ஒப்பிட்டுச் சொல்வதாக' என்னைத் தப்பாக நினைத்துவிடாதீர்கள். இது உண்மையான தகவல். அதனல் இதை முழுவதுமாகப் படியுங்கள். இயேசுநாதரை யாரும் தவறாகச் சொல்லிவிடவில்லை.


இயேசுநாதரின் சீடர்கள் படகுகளில் சென்று கொண்டிருந்த போது, தூரத்தில், நீரின் ஆழமான பகுதியினூடாக, ஒரு ஒளி வருவது போலக் கண்டார்கள். அந்த ஒளியைச் சரியாகக் கவனித்துப் பார்த்த போது, அது ஒரு மனித வடிவாகத் தெரிந்தது. அந்த மனித வடிவானவர் கிட்டே நெருங்கிய போது, அது இயேசுநாதர் என்பது தெரிந்தது. இயேசுநாதர் தண்ணீரில் நடந்தபடி (அதாவது நிலத்தில் நடப்பது போல, ஆழமான தண்ணீரின் மேற்பரப்பில் நடந்தபடி) படகை நோக்கி வந்து கொண்டிருந்தார். அந்த அதிசயத்தைக் கண்ட சீடர்கள் வியந்து போனார்கள். இது பைபிளில் இயெசுநாதரின் அற்புதங்களைப் பற்றிச் சொல்லும் ஒரு கதை.


மத்திய அமெரிக்காக் காடுகளிலும், ஆற்றங்கரையோரங்களிலும் வாழும் ஒரு பல்லியினம் உண்டு. நம் வீடுகளில் வாழும் பெரிய பல்லிகளைப் போல அவை இருக்கும். கொஞ்சம் பெரியதாகவும் இருக்கலாம். இந்தப் பல்லிகள் ஆற்றங்கரையில் உள்ள பூச்சிகளைப் பிடித்து உண்டு வாழ்பவை. ஆனால் அதேயிடம்தான் அந்தப் பல்லிகளின் எதிரிகள் வாழும் இடமாகவும் இருக்கும். பல்லிகளைப் பிடிப்பதற்கெனப் சிறியவகைப் பாம்புகளும் அங்கே சுற்றித் திரியும். ஆற்றின் கரையில் இருந்தபடி பூச்சிகளை வேட்டையாடும் போது, பாம்புகள் வந்துவிட்டால், அவற்றின் பிடியிலிருந்து தப்புவதற்கு, இந்தப் பல்லிகள் ஆற்றின் மற்றப் பகுதிக்கு ஓடும். ஓடும் என்றால், எப்படி ஓடும் என்று நினைக்கிறீர்கள்?


ஒரு மனிதன் ஓடுவதைப் போல ந்மிர்ந்த நிலையில், முன்னிரண்டு கால்களையும் உயரத் தூக்கியபடி, பின் கால்கள் தண்ணீரின் மேற்பரப்பில் மிதந்தது போலப் படும்படியாக ஆற்றின் அடுத்த கரைக்கு விரைந்து ஓடிச்செல்லும். சாதாரண பல்லிகளைப் போல, தண்ணீரில் நீந்திக் கொண்டு சென்றால், பாம்புகள் அதை விட வேகமாக நீந்தி, இந்தப் பல்லிகளைப் பிடித்துவிடும். அதனால்தான் இந்த ஓட்டம். ஒரு வினாடிக்கு ஒன்றரை மீட்டர்கள் வேகமாக அதன் வேகம் இருக்கும். இப்படி அந்தப் பல்லி தண்ணீரின் மேல் செல்வது, இயேசுநாதர் தண்ணீரில் நடந்ததைப் போல இருப்பதால், அந்தப் பல்லிக்கு, ‘இயேசு கிரிஸ்து பல்லி’ (Jesus Christ Lizard) என்று பெயர் வந்தது.


யூட்யூப்பில் (Youtube) இந்தப் பல்லி தண்ணீரில் ஓடும் காணொளிகள் உண்டு. பாருங்கள், வியந்து போவீர்கள். அறிவியலின் அதிசயங்களை விட, இயற்கையின் அதிசயங்கள் அநேகம்.




'பூச்சிய ஈர்ப்புவிசை’ (Zero Gravity)



'பூச்சிய ஈர்ப்புவிசை’ (Zero Gravity) என்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? “படவில்லையா?” அப்படியென்றால் கொஞ்சம் பொறுங்க, உங்க கூடப் பேசனும்.


அண்டமெங்கும் பொருட்கள், ஈர்ப்புவிசையுடனே சுற்றித் திரிகின்றன. புவிக்கும் ஈர்ப்புவிசை உண்டு என்பது உங்களுக்குத் தெரியும். புவியின் ஈர்ப்புவிசையை, விசேசமாகப் ‘புவியீர்ப்புவிசை’ என்கிறோம். இந்தப் ‘புவியீர்ப்புவிசை’ என்னும் சொல்லைப் பலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர். சந்திரனின் ஈர்ப்புவிசையைப் பற்றிச் சொல்லும் போது கூட, “சந்திரனின் புவியீர்ப்புவிசை" என்று சொல்லிவிடுகிறார்கள். சரி, அது ஒருபுறம் இருக்கட்டும்.


ஈர்ப்புவிசையென்பது அண்டமெங்குமுள்ள பொருட்களுக்கு இருப்பது போல, ஈர்ப்புவிசை இல்லாத இடமும் இருக்கிறது. விண்வெளியில் ஈர்ப்புவிசையென்பது கிடையாது. வளிமண்டலம் பல படலங்களாகப் படிந்து, பூமியைப் பாதுகாக்கும் வலயமாகக் காணப்படுகிறது. இதை ‘அட்மாஸ்பியர்’ (Atmosphere) என்று அழைக்கிறோம். இந்த அட்மாஸ்பியருக்குள் நாம் இருக்கும் வரை, புவியீர்ப்புவிசை நம்மைப் பூமியை நோக்கி இழுத்துக் கொண்டே இருக்கும். அட்மாஸ்பியரை விட்டுத் தாண்டி விண்வெளியை அடையும் போது, அங்கு ஈர்ப்புவிசை இல்லாது போகின்றது. அதாவது அங்கே பூச்சிய ஈர்ப்புவிசை (Zero Gravity) ஆகிவிடுகின்றது. ஈர்ப்புவிசை இல்லாத இடத்தில் நாம் இருந்தால், அங்கே மிதந்து கொண்டுதான் இருப்போம். கீழே எங்கும் விழமாட்டோம். தண்ணீரில் நீந்துவது போல, காற்றில்லா வெற்றிடத்தில் மிதந்து கொண்டிருப்போம்.


காற்றில்லாத வெற்றிடத்தில் மிதப்பதை உங்களால் கற்பனைதான் பண்ண முடியுமேயொழிய, முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாதல்லவா? அதனால், அதைப் புரிந்து கொள்வதற்கும், அதைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்குவதற்குமான அடிப்படை அறிவைப் பெறுவதற்கும், விஞ்ஞானிகள் எப்போதும் விண்வெளிக்குச் சென்று கொண்டிருக்க முடியாது. அதனால், "பூமியிலேயே பூச்சிய ஈர்ப்புவிசையை உருவாக்க வேண்டும், அதற்கு என்ன செய்யலாம்?” என்று சிந்தித்த போதுதான், ஒரு ஆச்சரியமான வழி கிடைத்தது. அதற்கென உருவானதுதான் ‘பூச்சிய ஈர்ப்புவிசை விமானம்’ (Zero Gravity Flight அல்லது Zero G Flight).


ஈர்ப்புவிசைகளற்று, வெளியியொன்றில் மிதப்பதற்கென ஒரு விமானமே தயார் செய்யப்பட்டது. இதற்கென்றே பிரத்தியேகமாக இருக்கைகள் அகற்றப்பட்டு அமைக்கப்பட்ட பெரிய விமானம் அது. இந்த விமானம் வானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது, அது 45 பாகை கோணத்தில் மேல் நோக்கிய வண்ணம், மிகை வேகத்தில் உயரப் பறக்கத் தொடங்கும். ஒரு குறித்த உயரத்தை அடைந்ததும் உடன் மீண்டும் 45 பாகைக் கோணத்தினூடாக கீழே இறங்க ஆரம்பிக்கும். இப்படி அது பல தடவைகள் ஒரு பரவளைவாகத் (Parabola) தொடர்ந்து பறந்து கொண்டிருக்கையில், இந்தப் பூச்சிய ஈர்ப்புவிசை விமானத்தில் உள்ளவர்களுக்குக் கிடைக்கிறது. உயரப் பறக்கும் விமானம் கீழ் நோக்கி இறங்க ஆரம்பிக்கும் சமயத்தில் இந்த பூச்சிய ஈர்ப்பு, கிட்டத்தட்ட 25 செக்கன்களுக்குக் கிடைக்கின்றன. அதி அற்புதமான மிதக்கும் விளவாக இது இருக்கும். பல விஞ்ஞானிகள், விண்வெளிக்கே போகாமல், அந்த விமானத்தில் பயணம் செய்து மிதந்திருக்கிறார்கள்.


இப்போது நான் சொல்வதைக் கற்பனை பண்ணிப் பாருங்கள். வழமை போல இதுவும் கற்பனைதான், உண்மையாக யாரும் பரீட்சித்துப் பார்க்க வேண்டாம். இது உங்கள் அம்மா மேல் சத்தியம். ராஜ்சிவா சொன்னாரேயென்று, எதற்கும் செய்து பார்ப்போம் என முயற்சிக்கவே வேண்டாம். உலகிலேயே உயரமான ஒரு கட்டடத்தின் உச்சியிலிருந்து நீங்கள் கீழே குதிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். கீழே நிலத்தை வந்து அடையப் பல நிமிடங்கள் எடுக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு உயரமான கட்டடம். நீங்கள் கீழே விழுந்து கொண்டிருக்கும் போது, உங்கள் பாக்கெட்டில் இருக்கும் ஒரு ரூபாய் நானயத்தை கையில் எடுத்து, அப்படியே விட்டுவிடுகிறீர்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். நீங்களும், நாணயமும் இப்போது ஒரே வேகத்தில் பூமியை நோக்கி விழுந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் நீங்கள் கீழேயும், வேறு எங்கும் பார்க்காமல், நாணயத்தை மட்டும் பார்ப்பீர்களானால், அந்த நானயம் காற்றில் மிதந்தபடி உங்கள் கூடவே வருவது போல உங்களுக்குத் தோன்றும். அதாவது அந்த நாணயம் பூச்சிய ஈர்ர்புவிசையில் இருப்பது போல மிதப்பதாக உங்களுக்குத் தெரியும். இந்தச் சம்பவத்தில், உங்களுக்கும் நாணயத்துக்கும் ஏற்பட்ட விளைவு போன்ற ஒரு விளைவுதான் பூச்சிய ஈர்ப்புவிசை விமானத்திலும் ஏற்படுகிறது. கொஞ்சம் மெனக்கெட்டு யோசித்துப் பார்த்தால், இது நிச்சயம் உங்களுக்குப் புரியும்.


பூச்சிய ஈர்ப்பு விமானத்தில் உலகப் பிரசித்தி பெற்ற கணித, இயற்பியல் மேதையான ‘ஸ்டீபன் ஹாக்கிங்’ அவர்கள் கூடத் தன் உடலை அசைக்க முடியாத நிலையிலும், பயணம் செய்து பரிசோதனை செய்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.




August 6, 2014

‘ட்சூரியை' (Tschuri) நோக்கி ‘ரொசெட்டா’ (Rosetta)



இன்று அறிவியலில் ஒரு சாதனை நடந்த ஒரு நாள். சாதிக்க முடியாத ஒன்றை மனிதன் சாதித்த நாள். அது என்ன தெரியுமா?


உலக வரலாற்றில் முதல் முறையாக, மனிதன் அனுப்பிய விண்கலம், வால் நட்சத்திரம் (Comet) ஒன்றின் ஈர்ப்பு வலயத்துக்குள் புகுந்திருக்கிறது. ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து (ESA-The European Space Agency), வால் நட்சத்திரமான ‘ட்சூரியை' (Tschuri) நோக்கி 2004ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி, ‘ரொசெட்டா’ (Rosetta) என்னும் விண்கலம் அனுப்பப்பட்டது. அந்த விண்கலம் பத்து வருடங்களின் பின்னர், எத்தனையோ தடைகளைத் தாண்டித் தான் சென்றடைய வேண்டிய இடமான ‘ட்சூரி' வால் நட்சத்திரத்தின் ஈர்ப்பு வளையத்துக்குள் இன்று (06.08.2014), ஐரோப்பிய நேரம் முற்பகல் 11:06 இற்குச் சென்றடைந்திருக்கிறது.


விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு மைல்கல் என்று சொன்னால், அது ரொம்பவும் குறைத்துச் சொல்லப்பட்ட மதிப்பாகவே இருக்கும். பல மில்லியன் கிலோமீட்டர்கள் பயணம் செய்த ‘ரொசெட்டா' இப்போது தனது சரியான குறிக்கோள் இடத்தை அடைந்திருந்தாலும், அது அந்த வால் நட்சத்திரத்தின் மேற்பரப்பில் இறங்குவதே அதன் இறுதிக் கட்டமாகும். அதற்கு இன்னும் சில நூறு கிலோமீட்டர்களே மிச்சமாக இருக்கின்றன.


‘ரொசெட்டா’ விண்கலம் ட்சூரியின் மேற்பரப்பில் இறங்கியதும், அதனுடனேயே பயணம் செய்து அண்டத்தின் பல அதிசயங்களையும், ரகசியங்களையும் நமக்குப் படங்கள் மூலமாக அனுப்பிக் கொண்டிருக்கும். அதனால், ‘ரொசெட்டா’ விண்கலம், ட்சூரியின் மேற்பரப்பில் எதுவிதச் சேதமுமில்லாமல் தரையிறங்க வேண்டுமென்று அனைவரும் விரும்புகிறார்கள். அது மட்டும் நடந்துவிட்டால், விண்வெளிப் பயண ஆராய்ச்சியில் பல பயனுள்ள தகவல்கள் ரொசெட்டா மூலமாகக் கொட்டும்.


விரைவில் ரொசெட்டா, ட்சூரி வால்நட்சத்திரத்தில் இறங்கிவிட்டது என்ற செய்தியை நாம் அறிவோம் என்று நம்புவோமாக.


நவீன அறிவியல் உலகம் நம்பவே முடியாத விசயங்களையெல்லாம் சாதித்துக் கொண்டு வருகிறது. முன்னர் வால் நட்சத்திரங்கள் நமக்கு நல்லது/கெட்டது சொல்லும் ஜோதிடத் தண்மை வாய்ந்த கணக்கியலுக்கே பயன்பட்டன. ஆனால், இப்போது அந்த வால் நட்சத்திரங்களையே மனிதன் தொடப்போகின்றான் என்பது அறிவியலின் நினைத்தே பார்க்க முடியாத வெற்றியாகும்.




August 5, 2014

க்ளோனிங்




அறிவியலை, ஆன்மீகம் இடறிவிட நினைக்கும் ஒரு இடமுண்டு. “எதையும் அறிவியலால் உருவாக்க முடியும், ஆனால் ஒரு உயிரை அறிவியலால் உருவாக்க முடியாது” என்பதுதான் அது. அறிவியலும், ஆன்மீகமும் மோதும் போது, இறுதி வாதமாக, இது முன் வைக்கப்பட்டு, விவாதம் அந்த நிலையிலேயே முடிவுக்குக் கொண்டு வரப்படும்.


"உயிரை உருவாக்கக் கடவுளால் மட்டுமே முடியும்” என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே, இன்றுவரை உலகமும் இயங்கி வந்து கொண்டிருக்கிறது. அறிவியல் என்றாவது ஒருஉயிரை உருவாக்கிவிட்டால், அனைத்து நம்பிக்கைகளுமே தடுமாறிவிடும். ஆனால், அப்படியொரு நிகழ்வு மனிதனால் நிகழ்த்தப்படக் கூடாது என்பதுதான் என் விருப்பமும் கூட.


க்ளோனிங் முறையில் உயிரினங்கள் உருவாக்கப்பட்டது போல. மனிதனையும் எங்கோ ஒரு இடத்தில் க்ளோளிங் முறையில் இரகசியமாக உருவாக்கியிருப்பார்கள் என்று பலர் நம்புகிறார்கள். அந்தச் செய்தி வெளியில் கசிந்தால், பல சிக்கல்கள் உருவாகலாம் என்பதால் அதை வெளிவிடாமல் வைத்திருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். அதுபோல, ஒரு கலமுள்ள உயிரினத்தையும் மனிதன் உருவாக்கி விட்டான் என்ற வதந்தியும் உண்டு. அறிவியலின் பல கண்டுபிடிப்புகள் சாதாரண மனிதன் முன்னால் சமர்ப்பிக்கப்படாமல், இரகசியமாகவே வைக்கப்பட்டிருப்பது என்னவோ உண்மைதான். அதில் இவையும் ஒன்றாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.


சரி நான் இதை ஏன் இங்கு சொல்கிறேன் தெரியுமா?


சமீபத்தில் விஞ்ஞானிகள் ஒரு புரட்சியைச் செய்திருக்கிறார்கள். அது புரட்சியா? இல்லையா? என்று இதைப் படித்தபின்னர் நீங்கள்தான் சொல்ல வேண்டும். அது வேறு ஒன்றுமில்லை, விஞ்ஞானிகள் ஒரு எலியை 'See-Through' வாக உருவாக்கியிருக்கிறார்கள். அதாவது, எலியைப் பார்க்கும் போது, அதன் உள்ளே உள்ள உறுப்புகள் அனைத்தும் வெளியே தெரிவது போல (கண்ணாடி போல) மாற்றியிருக்கிறார்கள். ‘Tranparent' என்று சொல்வார்களே! அப்படி 'ஒளி ஊடுருவும்' தண்மையுடன் அந்த எலி காணப்படும். அதன் எலும்புகள் தவிர்ந்து, வெளித் தோல், உள்ளே இருக்கும் உறுப்புகள் அனைத்தும், கண்ணாடி போன்றே காணப்படும். நோய்களையும், அதன் காரணிகளையும் இலகுவாக இதனால் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.


உங்கள் மனதில் தோன்றும் கேள்வி புரிகிறது. அந்த எலி உயிருடன் இல்லை. "இவை ஆராய்ச்சிக்கானது மட்டுமேயன்றி உயிர் வாழ்வதற்கானதல்ல" என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.


நான் கண்ணாடி முன்னால் நின்று கொண்டு, என்னை ட்ரான்ஸ்பரண்டான உடலுறுப்புகளுடன் ஒரு நிமிடம் கற்பனை செய்து பார்த்தேன். அப்போது மனதில் தோன்றிய உருவம் கொடுத்த அதிர்ச்சி, என் எதிரிக்கும் வரக்கூடாத ஒன்று. நீங்களும் கண்ணாடி முன் நின்று ஒருதரம் கற்பனை செய்து பாருங்கள். இப்போது அந்த எலியின் படங்களைப் பாருங்கள்.




July 31, 2014

பூனையில்லாத சிரிப்பு (‘Quantum Cheshire Cat’)



‘ஆலிஸ் இன் வெண்டர்லாண்ட்’ (Alice in Wonderland) என்னும் கதையை உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். திரைப்படமாகவும், கார்ட்டூன் படமாகவும் அதைப் பார்க்காதவர்களே இல்லையென்று சொல்லலாம். சிறுவர் முதல் பெரியோர் வரை ஆலிஸையும், அவளது அதிசய உலகத்தையும் மறந்திருக்கவே முடியாது. 1865ம் ஆண்டில் லூயிஸ் கரோல் (Lewis Carroll) என்பவரால் எழுதப்பட்ட Alice's Adventures in Wonderland என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சிறுவர் காவியம் இது. பல தடவைகள் திரைபடங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும், கார்ட்டூன் திரைப்படங்களாகவும் இந்தக் கதை வெளிவந்திருக்கிறது.


இந்த ‘ஆலிஸ் இன் வொண்டர்லாண்ட்' கதையின் நாயகியான ஆலிஸ், அதிசய உலகத்திற்குள் நுழையும் போது, ஒரு அதிசயப் பூனையைக் காண்கிறாள். கதையில் 'Cheshire Cat’ என்று அழைக்கபட்ட அந்தப் பூனை, சிரித்துக் கொண்டே ஆலிஸுடன் உரையாடியபடி மறைய ஆரம்பிக்கும். முதலில் வால், அப்புறம் உடல் பின்னர் தலையென, ஒவ்வொரு பாகமாக மறையும். கடைசியில் பூனையின் சிரிப்பு மட்டும் எஞ்சியிருக்கும். பூனையில்லாமல் வெறும் சிரிப்பு மட்டும்.


அப்போதுதான் ஆலிஸ் சொல்வதாக ஒரு வசனம் வரும். "சிரிப்பில்லாத பூனையைப் பார்த்திருக்கிறேன். பூனையில்லாத சிரிப்பைக் கண்டதில்லை”. இது ஒரு மிகப்பிரபலமான வசனமாக, நூற்றாண்டுகளாகச் சிலாகிக்கப்பட்டு வருகிறது. சொல்லப் போனால், ஒரு வித தத்துவமாகவும் பார்க்கப்படுகிறது. நீங்கள் எப்போதாவது இதைச் சிந்தித்திருக்கின்றீர்களா? சிரிப்பில்லாமல் ஒரு பூனையை நீங்களும் கண்டிருக்கலாம். ஆனால் பூனையில்லாமல் சிரிப்பை உங்களால் காண முடியுமா? ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், முடியும் என்று சொல்கிறது நவீன அறிவியல். சொல்வது மட்டுமில்லாமல், அதை நிரூபித்துமிருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.


ஆம்! இந்தப் 'பூனையில்லாத சிரிப்பு', இன்று அறிவியலின் முக்கிய கண்டுபிடிப்பொன்றுக்கு எடுகோளாக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் 'வியன்னா பல்கலைக் கழகத்தில்' (Vienna University of Technology) கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஆச்சரியமான கண்டுபிடிப்புக்கு ‘Quantum Cheshire Cat’ என்ற பெயரையே இட்டிருக்கிறார்கள். அதாவது, ஒரு சாதாரண நிலையில், ஒரு செயலையும், செயலைச் செய்பவரையும் பிரித்து எடுக்கவே முடியாது. உதாரணமாக, நீங்கள் சிரிக்கும் போது, உங்களை ஓரிடத்திலும், உங்கள் சிரிப்பை இன்னுமொரு இடத்திலுமாகப் பிரித்தெடுக்கவே முடியாது. சிரிப்பு மட்டும் இல்லை. அழுகை, ஆச்சரியம், கோபம், துக்கம் என எந்தச் செயலையுமே!


"செய்பவன் இல்லாமல், செயல் என்பதே கிடையாது". ஆனால் குவாண்டம் நிலையில், இதைச் சாத்தியம் என்று நிரூபித்திருக்கிறார்கள் வியன்னா விஞ்ஞானிகள். கொஞ்சம் சிக்கலானதும், பெரியதொரு விசயமாகவும் இது இருந்தாலும், முடிந்தவரை சுருக்கி விளக்குகிறேன்.


அணுத்துகள்களான, ஒரு ஃபோட்டானை (Photon), அல்லது நியூட்ரானை (Neutron) எடுத்துக் கொண்டு, அந்த நுண்ணிய துகளைக் காந்தப் புலத்தில் ஈடுபட வைக்கும் போது, அதற்கு ஒரு சுழற்சி (polarization) கிடைக்கும். அந்தச் சுழற்சி நிலையால், காந்தப் புலனில் மாற்றங்கள் ஏற்படும். வியன்னா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியின்படி, சுழற்சியில் இருக்கும் நியூட்ரானையோ, போட்டானையோ அந்த இடத்திலிருந்து அகற்றி வேறு இடத்துக்கு மாற்றினாலும், அந்தச் சுழற்சி அதே இடத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. அதாவது செயலைச் செய்பவர் வேறு இடத்திலும், செயல் வேறு இடத்திலுமாகக் காட்சியளிக்கிறது.


சரி, இதை இப்படிப் பாருங்கள். நீங்கள் சென்னையில் உள்ள உங்கள் வீட்டில், ஒரு பாடலைக் கேட்டுக் கொண்டு நடனமாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் உங்களைத் தூக்கிக் கொண்டு ஜேர்மனிக்கு வந்துவிடுகிறோம். ஆனால், உங்கள் நடனம் மட்டும் சென்னையில் உள்ள உங்கள் வீட்டில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. "என்ன பைத்தியமே பிடிக்கும் போல உள்ளதா?" இதைத்தான் ஆலிஸுடன் பேசும், 'Cheshire Cat’ இனது சிரிப்புப் போன்றது என்கிறார்கள். பூனை அந்த இடத்தை விட்டு மறைந்த பின்னரும் சிரிப்பு அங்கே இருந்து கொண்டே இருகிறது.


நவீன இயற்பியலின் கண்டுபிடிப்புகளில் இன்னும் என்ன என்ன அதிசயங்கள் வெளிப்பட இருக்கின்றனவோ தெரியவில்லை.




July 24, 2014

நியூட்ரீனோஸ்.. (Neutrinos)



நான் சொல்வதைக் கொஞ்சம் செய்து பாருங்கள். அல்லது கற்பனை செய்து பாருங்கள்.


உங்கள் வலது உள்ளங்கையை நீட்டியபடி விரித்துப் பிடியுங்கள். இப்போது, உள்ளங்கையின் மத்தியில் சிறிது தண்ணீரை ஊற்றுங்கள். என்ன நடக்கும்? கையில் தண்ணீர் அப்படியே தங்கிய நிலையில் இருக்கும், அப்படித்தானே?


சரி, கையை நன்றாகத் துடைத்துவிட்டு, கைகளில் சிறிது மணலை எடுத்துச் சிறிது சிறிதாக கொட்டுங்கள். இப்போது மணலும் கைகளிலேயே இருக்கின்றன அல்லவா? இது போலவே முகத்துக்குப் பூசும் பௌடரைக் கொட்டுங்கள் அதுவும் கைகளிலேயே இருக்கும் இல்லையா?


"ஆமாம்! என்ன பெரிய உலக மகா அதிகசயத்தைச் சொல்வது போல இவர் சொல்கிறார்? உள்ளங்கையில் கொட்டப்படும் எல்லாமே உள்ளங்கையில்தான் இருக்கும். இதெல்லாமா பெரிய பிரச்சனை?” இது இப்போ நீங்கள் உங்கள் மனதில் நினைப்பது. நீங்க எப்படியும் நினைச்சுக்குங்க. நான் சொல்வதைத் தப்பாவே புரிஞ்சுக்கிறதுதானே உங்கள் வேலையே! பரவாயில்லை, நான் சொல்ல வந்ததைச் சொல்லிவிடுகிறேன்.


நியூட்ரீனோஸ்.. நியூட்ரீனோஸ்… (Neutrinos) என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களல்லவா? அந்த நியூட்ரீனோஸைக் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதை உங்கள் உள்ளங்கைகயில் கொட்டுங்கள். இப்போது பார்த்தீர்களானால், அந்த நியூட்ரீனோஸ், உங்கள் உள்ளங்கைகளினூடாக வழிந்தபடி கீழே விழும். அப்படியொரு காட்சியை உங்களால் நம்பவே முடியாது. அதாவது கைகளைத் துளைத்தபடி, கைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அது உங்கள் கைகளூடாகக் கீழே விழும். அதுமட்டுமல்ல………


விண்வெளியிலிருந்து நியூட்ரீனோஸ்கள் ஒவ்வொரு கணமும் கோடி கோடியாகப் பூமியை நோக்கி வந்து பூமியின் மேற்பரப்பை அடைந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவை பூமியை முழுமையாக ஊடுருவிக் கொண்டு கீழே சென்று பூமிக்கு வெளியே அப்படியே கொட்டப்படுகின்றன. பூமியில் எங்கும் அவை தங்கிவிடாது. ஒளிகூட, பூமியை ஊடுருவவோ, உள்ளங்கைகளை ஊடுருவவோ முடியாமல் இருக்க, நியூட்ரீனோஸ் இவையெல்லாவற்றையும் ஊடுருவிக் கொண்டு செல்கிறன. இதன் காரணம் என்ன தெரியுமா? சொல்கிறேன்……!


நியூட்ரீனோஸ் என்பவை ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பச் சிறியவை. ஒரு அரிக்கும் தட்டில் மாவைக் கொட்டி அரிக்கும் போது, அரிதட்டில் உள்ள துளையின் பருமனைப் பொறுத்து அதனுடாக மா கீழே விழ, மற்றவை அரிதட்டில் எஞ்சியிருக்கும் அல்லவா? அது போலத்தான், எங்கள் கைகளில் உள்ள தோலின் கலங்களை, ஊடுருவிக் கொண்டு செல்லக் கூடிய அளவுக்கு அநேகப் பொருட்களால் முடியாது. கலங்கள் அந்த அளவுக்குச் சிறியவை. ஆனால், தோலில் உள்ள கலங்கள் அணுக்களால் ஆனவை. அந்த அணுக்கள், அணுக்கருவாலும் அதைச் சுற்றும் எலெக்ட்ரானாலும் ஆனவை. அணுக்கருவுக்கும், எலெக்ரானுக்குமிடையில் இருப்பது ஒரு வெறுமையான இடைவெளி. நியூட்ரீனோஸ் என்பவை அணுக்கருக்களுக்கும் எலெக்ட்ரான்களுக்குமிடையிலுள்ள மிக மிக சிறிய இடைவெளியினூடாகச் செல்லக் கூடிய அளவுக்குச் சிறியவை.


ஒரு நியூட்ரீனோஸ், 0.0000000000000000000001 மிமீ அளவுள்ளது. அதாவது பத்தின் மைனஸ் 22 அடுக்குகள் மில்லிமீட்டர் (10^ -22mm). அணுவிலுள்ள அணுக்கருவுக்கும் எலெக்ட்ரானுக்கும் இடையில் உள்ள இடைவெளியின் அளவு, நியூட்ரீனோஸின் அளவை விட 10000000000 மடங்கு பெரியது. நியூட்ரீனோஸ் எவ்வ்வ்வ்வ்வளவு சிறியது என்று இப்போது புரிகிறதா?


அண்டத்திலுள்ள கருந்துகள்கள் (Dark matter), நியூட்ரீனோஸை விட ரொம்ம்ம்ம்ம்பச் சிறியது என்று சொல்கிறார்கள். அதனால்தான் நம்மால் அதைப் பற்றி இதுவரை அறிய முடியவில்லை.


அப்பாடா! முடிந்தவரை சொல்லியிருக்கிறேன். கொஞ்சம் கடுமையான விசயம்தான். புரிந்து, சிந்திப்பீர்களென்றால் மிகப்பெரிய அறிவியல் தகவல் இது என்பது தெரியவரும்.




July 17, 2014

பூமியினூடாக ஒரு பயணம்



புவியின் ஈர்ப்பிவிசை பற்றிய விளக்கம் உங்களுக்கு உள்ளதல்லவா? பூமி தன் மையத்தை நோக்கி, தன் மேற்பரப்பின் மேலிருக்கும் அனைத்துப் பொருட்களையும் ஈர்ப்புவிசையால் இழுத்துக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். இப்போது இதைப் பாருங்கள்.


பூமியின் வட துருவ மேற்பரப்பிலிருந்து குழாய் போன்ற அமைப்பிலான மிக நீண்டதொரு குழியை, பூமியின் தென் துருவ மேற்பரப்பு வரை தோண்டுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். வைத்துக் கொள்ளத்தான் முடியும். காரணம் பூமியின் மையப்பகுதி மிகவும் கடுமையான இரும்பால் உருவான கோளமாகும். அதனால் உண்மையாகக் குழி தோண்ட முடியாது.


சரி, ஒரு பேச்சுக்கு ஒரு குழாய் போல குழியைத் தோண்டிவிட்டோம். இப்போது. வட துருவத்திலிருந்து ஒருவர் குழிக்குள் விழுந்தால், அவருக்கு என்ன நடக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்? அவர் குழியில் நேராக விழுந்து, தென் துருவத்தினூடாக வெளியே வருவாரா? அல்லது பூமியின் மையத்தில் நின்று விடுவாரா?


நீங்கள் இதுபோல, எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா? சரி, குழிக்குள் விழுந்தவருக்கு என்ன நடந்தது என்று பார்க்கலாம் வாருங்கள்.


குழிக்குள் விழுந்தவர், பூமியின் மையம் நோக்கி ஈர்ப்புவிசையால் மிகை வேகத்தில் இழுக்கப்படுவார். மையம் வரை ஈர்ப்பு விசை இருப்பதால் அதிக வேகத்துடன் வந்து, அந்த வேகத்தின் தாக்கத்தால் வேகம் பூச்சியமாகும் வரை தொடர்ந்து குழிக்குள் விழுந்து கொண்டேயிருப்பார். சரியாகத் தென் துருவ மேற்பரப்பை அடையும் வரை அவர் விழுந்து கொண்டிருப்பார். தென் துருவ மேற்பரப்பு விளிம்பை அவர் அடைந்ததும், மீண்டும் புவியின் மையம் நோக்கிய எதிர்த் திசையில், வட துருவம் நோக்கி விழ ஆரம்பிப்பார். இப்படி மாறிமாறி வட தென் துருவங்களுக்கிடையில் கடிகாரத்தின் பெண்டுலம் போல ஆடிக்கொண்டிருப்பார். பூமிக்கு வெளியே அவர் வரவே மாட்டார். எனவே யார் குழி கிண்டிவிட்டுக் குதிக்கச் சொன்னாலும் குதித்து விடாதீர்கள்.


நீங்கள் முன்னரே இதை நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதற்கான விளக்கமும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். எழுத்தாளர் சுஜாதா கூட, இதை ஒரு கேள்வி பதிலில் விளக்கியிருப்பார். அதை நீங்கள் படித்துமிருக்கலாம். ஆனாலும் இந்தத் தகவலிலும் நீங்கள் தவறவிட்ட செய்தியொன்றும் கூடவே இருக்கிறது. அதைச் சொல்லவே இந்தப் பதிவு.


அது என்ன தெரியுமா……?


“எரிசக்திக்குப் பதிலாக, பூமியின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி, ஏன் சுலபமாகப் பிரயாணங்களை மேற்கொள்ளக் கூடாது?” என்று விஞ்ஞானிகள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர். நான் மேலே சொன்னது போல, பூமியின் மையத்தினூடாக சுரங்கம் அமைக்க முடியாவிட்டாலும், ஓரளவு சரிந்த நிலையில் சுரங்கங்களைக் கிண்டி, ஈர்ப்பு விசையின் உதவியால், ஓரு இடத்திலிருந்து இன்னுமொரு இடத்துக்குச் செல்லலாம் என்னும் முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் இப்போது வந்திருக்கின்றனர். இப்படிப் பயணம் செய்வதை கிராவிட்டி ட்ரெய்ன் (Gravity Train) என்கிறார்கள்.


நியூயார்க்கிலிருந்து பாரீஸுக்கோ, பாரிஸிலிருந்து ஜப்பானுக்கோ, ஜேர்மனியிலிருந்து சென்னைக்கோ இதன் மூலம் நாம் பயணங்களை மேற்கொள்ளலாம். அதற்கேற்ற வகையில் சாய்வான சுரங்கப் பாதைகளை மட்டுமே அமைக்க வேண்டும். ஜேர்மனியில் ஒரு மூடிய பெட்டி போன்ற அமைப்பினுள் நான் உட்கார்ந்தால், அது புவியீர்ப்பு விசைகளால் செலுத்தப்பட்டு, சென்னையை வந்து சேரும். அங்கு அந்தப் பெட்டியைத் திறந்து நான் வெளியே வந்தால், சென்னை. எல்லாமே புவி ஈர்ப்பு விசையினால்தான் நடைபெறும். இப்படி ஒரு பிரயாணம் சாத்தியமானால், அதில் ஒரு ஆச்சரியமும் காத்திருக்கும்.


நீங்கள் பூமியின் எந்த இடத்திலிருந்தும், வேறு எந்த இடத்துக்கும், ஈர்ப்பு விசையைப் பயன்படுத்திப் பயணம் செய்யும் போது, அந்தப் பயணத்துக்கு 42.2 நிமிடங்கள் மட்டுமே பிரயாண நேரமாக அமையும். அதாவது நியூயார்க்கிலிருந்து பாரிஸுக்கும் 42.2 நிமிடங்கள்தான். ஜேர்மனியிலிருந்து சென்னைக்கும் 42.2 நிமிடங்கள்தான். சென்னையிலிருந்து மலேசியாவுக்கும் 42.2 நிமிடங்கள்தான். நான் மேலே சொன்ன வட துருவத்திலிருந்து தென் துருவத்துக்கு குழியின் மூலமாக விழுவதற்குக் கூட அதே 42.2 நிமிடங்கள்தான் எடுக்கும். எவ்வளவு தொலைவு அல்லது அண்மை என்றாலும், அனைத்துப் பயணங்களுக்கும் எடுக்கும் நேரம் அதே 42.2 நிமிடங்கள் மட்ட்டும்தான்.


என்ன ஆச்சரியமாக இல்லையா?


பிற்குறிப்பு: இந்தப் பதிவை பகிர்ந்து கொள்ள விரும்புபவர்கள் தாராளமாகப் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், இதைப் பகிரும் போது, இந்தப் பதிவு பற்றிய உங்களின் சிறு விளக்கத்தையும் கொடுத்து இந்தப் பதிவைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.







March 4, 2014

அண்டமும் குவாண்டமும் - பகுதி 4


நட்சத்திரம் ஒன்றின் இறப்பு



அண்டப் பெருவெளியில் ஒவ்வொரு நொடியும், எங்கோ ஒரு நட்சத்திரம் பிறந்து கொண்டும், இன்னுமொரு நட்சத்திரம் இறந்து கொண்டும் இருக்கின்றன. மனிதர்களின் வாழ்க்கையைப் போலவே ஒரு நட்சத்திரங்களும் பிறந்து, பின்னர் வளர்ந்து, பல காலம் வாழ்ந்து, அதன் பிறகு இறக்கின்றன. இயற்கை நடத்திக் கொண்டிருக்கும் அதிசய நிகழ்வு இது. பிறப்புகளினாலும் இறப்புகளினாலும் தன்னை ஒரு சமநிலைக்கு உட்படுத்தி வைத்துக் கொள்கிறது இயற்கை. ஒரு நட்சத்திரம் இறக்கும் போது, 'சுப்பர் நோவா' (Super Nova) என்னும் பிரமாண்ட நிலையை அடைந்து, திடீரென வெடித்து இறக்கிறது. இவற்றைப் பற்றியெல்லாம் ஒரு தகவல்களாகத் தெரிந்து கொள்வதோடு நின்றுவிடாமல், 'ஒரு நட்சத்திரம் இறக்கும் போது, அங்கே என்ன நடைபெறுகிறது?' என்ற கேள்விக்கான பதிலாகத் தெரிந்து வைத்திருப்பது அவசியம். அது தெரிந்திருக்கும் பட்சத்தில்தான், அதன் அடுத்த கட்டமாகவுள்ள கருந்துளைகள் பற்றிய முழுமையான அறிவையும் நாம் பெற்றுக் கொள்ள்லாம். கருந்துளைகள் பற்றிய பல விளக்கங்களையும் நம்மால் விளங்கிக் கொள்ள முடியும். அதனால், நட்சத்திரம் ஒன்று இறக்கும் போது, அங்கு என்ன நடக்கிறது என்பதை நாம் விளக்கமாகப் பார்க்கலாம்.



ஒரு நட்சத்திரம் முக்கியமாக மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கிறது. 1.நடுவே இருக்கும் 'கோர்' (Core) என்று சொல்லப்படும் அதன் மையம், 2.கதிர்வீச்சு மண்டலம் (Radiative Zone), 3.'ஒளிக் கோளம்' (Photosphere). இது தவிர்ந்து வேறு சில பகுதிகள் இருந்தாலும், இவையே நமக்கு முக்கியமானவை. 'கோர்' என்பது ஒரு செர்ரிப் பழத்தினுள் அதன் விதை எப்படி இருக்குமோ, அப்படி நட்சத்திரத்தின் நடுவே அமைந்திருக்கும். ஒரு பழத்திற்கான அடிப்படைச் சத்துக்களையும், சக்திகளையும் ஒரு விதை எப்படி வழங்குமோ, அப்படிக் 'கோர்' என்பதும் நட்சத்திரம் எரிவதற்குரிய சக்திகளை வழங்குகிறது. 'கதிர்வீச்சு மண்டலம்' என்று சொல்லப்படும் பகுதி, கோரைச் சுற்றிக் காணப்படும் பகுதி. நட்சத்திரத்தின் எரியும் சக்தியால் உருவாகும் கதிர்வீச்சின் ஆற்றல்கள் மெல்நோக்கிக் கடத்தப்படும் இடம் இதுதான். 'ஒளிக் கோளம்' என்றழைக்கப்படும் Photosphere என்பது, நட்சத்திரத்தின் வெளியே இருக்கும் மேற்பகுதியாகும். இங்கிருந்துதான் கதிர்வீச்சு சக்தி, ஒளியாகவும், வெப்பக் கதிர்களாகவும் மாறி விண்வெளிக்கு உமிழப்படுகிறது.



நட்சத்திரத்திரம் ஒன்று மிகப் பெரிதாக எரிந்து, வெப்பத்தையும், வெளிச்சத்தையும் வெளிவிடும் செயல்பாட்டில் நடக்கும் அடிப்படை நிகழ்வு, ஐதரசன் ஹீலியமாக மாறுவதுதான். நட்சத்திரத்தின் கோருக்குள் ஐதரசனின் அணுக்கருக்கள் (Nucleus) ஒன்றாகச் சேர்ந்து நிறைந்திருக்கும். ஐதரசன் அணுக்கருவை எடுத்துக் கொண்டால், அது ஒரேயொரு புரோட்டானை மட்டுமே கொண்டிருக்கும். ஐதரசன் அணுக்கருக்கள் ஒன்றாகத் திரண்டிருக்கும் போது, அங்கே ஒரு நிகழ்வு நடைபெற ஆரம்பிக்கிறது. அந்த நிகழ்வின் பெயர் 'அணுக்கருப் பிணைப்பு' (Nuclear Fusion). மனிதனின் வரலாற்றில், அதிக சக்தியைப் பெறுவதற்கு மூலகாரணியாக அணுசக்தி விளங்குகிறது. அணுசக்தி மூலமாகவே அணு உலைகளில் தடையில்லா மின்சாரம் பெறப்படுகின்றது. அணுவின் கருக்களில் இரண்டு விதமான விளைவுகளை ஏற்படுத்துவதன் மூலம் நாம் அளவிட முடியாத சக்தியைப் பெற்றுக் கொள்ளலாம். அந்த விளைவுகளில் ஒன்று 'அணுக்கருப் பிணைப்பு' (Nuclear Fusion) மற்றது 'அணுக்கருப் பிளவு' (Nuclear Fission). சரியாகக் கவனியுங்கள் ஒன்று 'Fusion' மற்றது 'Fission'. இரண்டு வெவ்வேறு அணுக்கருக்களை ஒன்றாகப் பிணைத்து ஒரே அணுக்கருவாக மாற்றும் செயலையே 'பியூஸன்' (Fusion) என்பார்கள். அதே நேரத்தில் ஒரு அணுக்கருவைப் பிளந்து, இரண்டு வெவ்வேறு அணுக்கருக்களாகப் பிரித்தெடுப்பது 'பிஸன்' (Fission) எனப்படும். இரண்டு அணுக்கருக்களை ஒரு அணுக்கருவாகச் சேர்க்கும் போதோ அல்லது ஒரு அணுகருவை இரண்டு அணுக்கருக்களாகப் பிரிக்கும் போதோ அளவிட முடியாத சக்தியும் சேர்ந்து வெளிவிடப்படுகிறது. இதை வாசிக்கும் நீங்கள் தமிழகத் தமிழனாக இருந்தால், அணுவில் நடக்கும் 'பியூஸன்', 'பிஸன்' ஆகிய இரண்டைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். காரணம், அணுசக்தி என்பது விரும்பியோ, விரும்பாமலோ தமிழகத் தமிழர்களின் வாழ்வுடன் ஒன்றாகக் கலந்துவிட்டது. அணு உலையில் ஏற்படும் கதிர்வீச்சினால் மக்களுக்கு ஆபத்து என்று கூறிக் கூடங்குளத்தில் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அது ஆபத்தா? இல்லையா? என்று ஆராய்வதைத் தற்போது சற்றுத் தள்ளி வைத்துவிட்டு, அணுக்கருப் பிளவின் போதும், அணுக்கருப் பிணைப்பின் போதும் என்ன நடக்கிறது என்பதை மட்டும் இப்போது நாம் அறிந்து கொள்ளலாம்.





யூரேனியம்238 (Uranium-U238) என்னும் ஒரு தனிமத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் அணுக்கருவுக்குள் 92 புரோட்டான்களும், 146 நியூட்ரான்களும் உண்டு (92+146=238). யூரேனியத்தின் அணுக்கருவுக்குள் இருக்கும் புரோட்டான்களும், நியூட்ரான்களும் 'திட அணுக்கருவிசை' (Strong Nuclear Force) என்னும் மிகப் பலமான விசையினால் பிணைக்கப்பட்டிருக்கின்றன. இப்படிப் பலமான விசையினால் ஒட்டப்பட்டிருக்கும் புரோட்டான்களையும், நியூட்ரான்களையும், நாம் ஏதோ ஒரு வழியினால் உடைப்போமேயானால், அவை ஒவ்வொன்றும் தனித்தனியாகப் பிளவுபடும். அப்போது பிரமாண்டமான சக்தி வெளிவிடப்படும். ஆனால் U238 ஐ அப்படி உடைப்பது மிகவும் கடினம். ஆனால் யூரேனியத்தில், 'யூரேனியம்235' (U235) என்ற 'ஐசடோப்' (Isotop) ஒன்று உண்டு. அதாவது U235 இற்கு 92 புரோட்டான்களும், 143 நியூட்ரான்களும் இருக்கும். 3 நியூட்ரான்கள் இதில் குறைவாகக் காணப்படும். இந்த யூரேனியம்235 இன் அணுக்கரு, யூரேனியம்238 இன் அணுக்கருவைப் போல பலமானது அல்ல. மிகவும் பலஹீனமானது. யூரேனியத்தின் ஐசடோப்பான U235 இன் அணுக்கருவை, மிகை வேகத்துடன் ஒரு நியூட்ரானால் மோதும் போது, அந்த யூரேனியம் அணுக்கரு சிதறடிக்கப்பட்டு, இரண்டாகப் பிளவுபடும். அப்படிப் பிளவுபடும் போது, புதிய தனிமங்களான பேரியமும்(Ba), கிரிப்டோனும்(Kr) உருவாகின்றன. கூடவே மூன்று நியூட்ரான்களுடன் பெரிய அளவில் சக்தியும் வெளிவரும். வெளிவிடப்பட்ட மூன்று நியூட்ரான்கள், மேலும் மூன்று U235 அணுக்கருவில் மோத, மூன்று மடங்கு சக்தியும், ஒன்பது நியூட்ரான்களும் வெளிவரும். இது சங்கிலி போலத் தொடர்ச்சியாக நடைபெற்று, மிகக்குறுகிய நேரத்தில் மிகப் பெரிய சக்தியை வெளிக் கொண்டுவருகிறது. இந்தச் சக்தி வெப்பமாக மாறி, அதன் மூலம் நீர் ஆவியாகி, அந்த நீராவி சக்கரம் ஒன்றைச் சுழற்றுவதால் மின்சாரத்தைப் பெறுகிறோம். இங்கு நடைபெற்ற நிகழ்வு 'அணுக்கருப் பிளவு' (Nuclear Fission). ஆனால் நட்சத்திரங்களின் உள்ளே நடைபெறுவது 'அணுக்கருப் பிணைப்பு' (Nuclear Fusion).




நட்சத்திரம் ஒன்று பிறக்கும் போது, ஐதரசன் அணுக்கருக்களைக் கொண்டுதான் உருவாகிறது. இந்த ஐதரசன் அணுக்கருக்கள் ஒரு கட்டத்தில் ஒன்றுடன் ஒன்று சேர ஆரம்பிக்கின்றன. ஐதரசனின் அணுக்கருவுக்குள் ஒரேயொரு புரோட்டான் மட்டுமே இருக்கும் என்று சொல்லியிருக்கிறேன். இரண்டு ஐதரசன் அணுக்கருக்கள், அணுக்கருப் பிணைப்பின் மூலம் ஒன்று சேர்வதால், 'டுட்டேரியம்' (Duetarium) என்னும் ஐதரசனின் ஐசொடோப் உருவாகின்றது. அதாவது இரண்டு ஐதரசன் அணுக்கருக்களில் இருந்த, இரண்டு புரோட்டான்களும் ஒன்று சேர்ந்து, ஒரு நியூட்ரான் உருவாகி, ஒரு புரோட்டானையும், ஒரு நியூட்ரானையும் கொண்ட 'டுட்டேரியம்' என்னும் புதிய ஐசடோப் பிறக்கிறது. இதன் தொடர்ச்சியாக, 'டுட்டேரியம்' மேலுமொரு ஐதரசன் அணுக்கருவுடன், அணுக்கருப் பிணைப்பினால் ஒன்று சேர்கிறது. அப்போது, 'ட்ரிடியம்' ( Tritium) என்னும் ஐதரசனின் மேலுமொரு புதிய ஐசொடோப் தோன்றுகிறது. இந்த 'ட்ரிடியம்' என்பது ஒரு ப்ரோட்டானையும், இரண்டு நியூட்ரான்களையும் கொண்டிருக்கும். தொடர்ச்சியாக ட்ரிடியமும், டுட்டேரியமும் அணுக்கருப்பிணைப்பின் மூலம் ஒன்று சேர, ஐதரசன் இல்லாத வேறு ஒரு புதிய தனிமமான ஹீலியம் (Helium- He) உருவாகிறது. இங்கு ஹீலியம் உருவாகும் போது, ஒரு நியூட்ரான் வெளிவந்து, கூடவே பிரமாண்டமான சக்தியும் வெளிவிடப்படும். இவையெல்லாம் கணநேரத்தில் நடந்துவிடும். இதுவும் ஒரு சங்கிலித் தொடர் நிகழ்வாக (Chain reaction) நடைபெறுவதால், மாபெரும் சக்தி வெளிவந்து கொண்டே இருக்கும். கோர் ஒன்றிற்குள் நடக்கும் இந்தத் தொடர் விளைவினால் ஏற்படும் சக்தியின் மிகைவெப்பத்தில், கதிர் வீச்சு மண்டலத்திற்குள் கதிர்வீச்சுச் சக்தி பெருகி, நட்சத்திரம் வாழ்வதற்கு வழியமைத்துக் கொள்ளும். அங்கு நட்சத்திரத்தின் வெப்ப நிலை 100 பில்லியன் சதம பாகையாக இருக்கும். நட்சத்திரத்தின் கோருக்குள் எந்த அளவுக்கு ஐதரசன் அணுக்கருக்கள் இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு ஒரு நட்சத்திரம் எரிந்து கொண்டேயிருக்கும். சூரியனைப் போல இருபத்தியைந்து மடங்கு பெரிதாக உள்ள நட்சத்திரமொன்றில் ஐரசன் கிட்டத்தட்ட 700 மில்லியன் வருடங்களுக்கு எரியும். எந்த வாழ்வுக்கும் ஒரு முடிவு வந்தே தீர வேண்டுமல்லவா? நட்சத்திரங்களுக்கும் அந்த நிலை வரும்.





பல பில்லியன் ஆண்டுகள் தொடர்ச்சியாக எரிந்து கொண்டிருக்கும் நட்சத்திரத்தில் ஐதரசன் அணுக்கருக்கள் தீர்ந்து போக ஆரம்பிக்கும். அப்போது, ஐதரசன் அணுக்கருக்களுக்கு ஏற்பட்ட பியூஸன் தொடர்ந்து ஹீலியம் அணுக்கருக்களுக்குள் ஏற்பட ஆரம்பிக்கும். ஐதரசன், ஹீலியமாக மாறியது போல, ஹீலியம், கார்பனாக மாற ஆரம்பிக்கும், இது போலவே, கார்பன் ஒக்சிசனாகவும், ஒக்சிசன் சிலிக்கானாகவும், இறுதியாக சிலிக்கான் இரும்பாக மாறும். இரும்புதான் பியூஸனின் இறுதி நிலை. இரும்பு எந்த அணுப்பிணைப்புக்கும் ஆளாகாது. அதனால் ஒரு நட்சத்திரத்தின் முழுக் கோரும் இறுதியாக இரும்பு அணுக்கருக்களாக மாறும். இங்கு நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு டன் எடையுள்ள இரும்பு ஒரு மீட்டர் அகலம், ஒரு மீட்டர் நீளம், ஒரு மீட்டர் உயரமான கட்டியாக இருக்கலாம். ஆனால், ஒரு டன் எடையுள்ள இரும்பின் அணுக்கருவை மட்டும் ஒன்று சேர்த்தால், அவை ஒரு ஊசியின் முனையளவை விடச் சிறியதாகவே இருக்கும். என்ன நம்ப முடியவில்லையா? நாம் பயன்படுத்தும் இரும்பானது, இரும்பு அணுவால் (Fe) ஆனது. இரும்பு அணுவானது, அணுக்கருவையும், அதைச் சுற்றும் எலெக்ட்ரான்களையும் கொண்டது. எலெக்ட்ரானுடன் சேர்ந்த முழு அணுவையும் , அணுக்கருவையும் ஒப்பிட்டால், ஒரு கிரிக்கெட் மைதானத்தையும், அந்த மைதானத்தின் நடுவே விழுந்து கிடக்கும் கிரிக்கெட் பந்தையும் ஒப்பிடுவது போல. அவ்வளவு சிறியது அணுக்கரு. ஆனால், இரும்பின் முழு நிறையும் அணுக்கருவினில்தான் இருக்கின்றது. சுற்றியிருக்கும் எலெக்ட்ரான்களுக்கு நிறை கிடையாது. இப்போது இப்படிச் சிந்தித்துப் பாருங்கள். நூறு கிரிக்க்கட் மைதானங்களின் மொத்த எடையும், நூறு கிரிக்கட் பந்துகளின் எடைக்குள் இருக்கின்றன என்றால், அந்தக் கிரிக்கட் பந்துகள் எவ்வளவு எடையாக இருக்க வேண்டும்? நூறு கிரிக்க்கெட் பந்துகளை ஒன்று சேர்த்தால் வரு சின்னப் பந்தில் அந்த நூறு மைதானங்களின் எடையே அடங்கியிருக்கின்றன. இது போலத்தான் நட்சத்திரத்தின் கோர் இரும்பாக மாறியதும் அதன் எடை நினைக்க முடியாத அளவு அதிகரித்துப் போயிருக்கும். இரும்பின் அணுக்கருக்கள் மட்டும் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய கோளக் கட்டியாக மாறினால், அதன் எடை மில்லியன் பில்லியன் பில்லியன் டன்களாக அதிகரித்துக் காணப்படும்.





நட்சத்திரத்தின் கோருக்குள் ஐதரசன் பியூஸன் நடைபெறும் போது, கதிர்வீச்சு மண்டலத்தின் (Radiative Zone) கதிர்வீச்சினால் நட்சத்திரம் உயிர்ப்புடன் இருக்கும். ஐதரசன் தீர்ந்து போகும் போது, கதிர்வீச்சு மண்டலத்தினுள் வெற்றிடம் தோன்ற ஆரம்பிக்கும். இது தொடர்ந்து நடைபெறும் போது, நட்சத்திரத்தின் மேற்பரப்புப் பகுதியான 'ஒளிக் கோளம்' (Photosphere) மிகப் பெரிதாக ஊத ஆரம்பிக்கும். இப்படி நட்சத்திரம் ஊதுவதையே சுப்பர் நோவா நிலையென்கிறோம். நட்சத்திரத்தின் மேற்பரப்பு ஒரு பக்கம் பெரிதாகிக் கொண்டிருக்க, நடுப்பகுதியில் வெற்றிடம் தோன்ற, மையக் கோரின் எடை அதிகரிக்கத் தொடங்கும். கோர் முழுமையான இரும்பாக மாறியதும் ஏற்படும் எடையின் அதிகரிப்பால், ஈர்ப்பு விசையும் முடிவில்லாமல் அதிகரிக்கத் தொடங்கும். அதிக ஈர்ப்புவிசை உள்ளிழுக்க அதனால் ஏற்படும் திடீர்ச் சுருக்கத்தின் தூண்டுதல் (Trigger), நட்சத்திரத்தைப் படீரென வெடிக்கப்பண்ணுகிறது. இந்த நடவடிக்கைகளெல்லாம் மிகச் சிறிய காலப்பகுதியில் நடந்து விடுகின்றன. அதாவது ஒரு நொடிக்குக் குறைவான நேரத்தில் நடந்துவிடுகிறது.


ஒவ்வொரு நட்சத்திரமும் எவ்வளவு பருமனைக் கொண்டிருக்கின்றனவோ, அதைப் பொறுத்து அந்த நட்சத்திரம் இறக்கும் போது, வெவ்வேறு வகையாக வடிவங்களாக மாறுகின்றன. நட்சத்திரங்களின் பருமன், சூரியனுடன் ஒப்பிட்டே அளக்கப்படுகிறது. சூரியன் நட்சத்திரங்களில் மிகச் சிறியது. சூரியனின் பருமனுடைய ஒரு நட்சத்திரம் இறந்து போகுமானால், அது 'வெள்ளைக் குள்ளன்' (White Dwarf) என்னும் நிலையை அடையும். சூரியனை விடப் பல மடங்கு பருமனுள்ள நட்சத்திரங்கள், அவற்றின் பருமனுக்கேற்ப 'சுப்பர் நோவா' (Super Nova), 'ஹைபர் நோவா' (Hyper Nova) நிலையை அடைந்து, நியூட்ரான் நட்சத்திரங்களையும், கருந்துளைகளையும் உருவாக்கும். சூரியனைப் போல 100 மடங்கு பருமனுள்ள நட்சத்திரத்தின் மையக் கோர், மொத்தமாக இரும்பு அணுக்கருவாக மாறுகின்றது என்பதைக் கற்பனை பண்ணிப் பாருங்கள். அதன் கோர் மட்டுமே எவ்வளவு பெரிதென்று யோசியுங்கள். அவ்வளவு பெரிய கோர் முழுவதும் இரும்பின் அணுக்கருவால் நிரம்பியிருந்தால், அது எவ்வளவு எடையுடன் இருக்கும் என்பது புரிகிறதா? மனிதனால் கற்பனையே பண்ண முடியாத பாரத்துடன் அந்த நட்சத்திரத்தின் கோர் இருக்குமல்லவா? அதனாலேயே ஈர்ப்புவிசையிலும் முடிவற்ற நிலையை அடையத் தொடங்கும். இந்த நிலையில் வெடிக்கும் போது எல்லையற்ற ஈர்ப்புவிசையுடன் கூடிய கருந்துளை உருவாகின்றது. அந்தக் கருந்துளை தன்னுள் அனைத்தையும் உள்வாங்கி விழுங்கிக் கொள்கிறது. அதன் இழுவை விசையில், ஒளி கூட தப்ப முடியாமல் உள்ளே சென்றுவிடுகின்றது.




இதுவரை கண்டுபிடித்ததிலிருந்து, 'VY Canis Majoris' என்ற நட்சத்திரமே அண்டத்தில் மிகப் பெரிய நட்சத்திரமாக அறியப்படுகிறது. இது ஒரு 'சிவப்பு இராட்சச நட்சத்திரம்' (red hypergiant) ஆகும்.


சூரியனைப் போல 1500 மடங்கு பெரியது. இந்த நட்சத்திரம் வெடிக்குமானால், அண்டத்திலேயே பெரிய கருந்துளையொன்று இதன் மூலம் உருவாகும். நட்சத்திரங்கள் பெரிதாக இருந்தால், அவற்றின் வாழும் காலமும் குறைந்து போகும். ஒரு நட்சத்திரம் வெடித்துக் கருந்துளை உருவாவதற்கான விளக்கங்களைப் பார்த்தோம். அப்படிப் பார்க்கும் போது, 'ஐசடோப்' என்ற சொல் அடிக்கடி குறுக்கிட்டது. 'ஐசடோப்புகள் என்றால் என்ன?' என்று ஒரு கேள்வி உங்களுக்குத் அப்போது தோன்றியிருக்கலாம். அதனால் ஐசோடோப் என்றால் என்ன என்பதையும் நாம் பார்த்துவிடலாம்.





ஐதரசன் வாயுவைப் (H2) பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இரண்டு ஐதரசன் அணுக்கள் (2H) ஒன்று சேர்வதால் உருவாவது ஐதரசன் வாயு. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தனிமங்களில் (Elements) அணு எண்ணிலும், அணு நிறையிலும் குறைந்தது ஐதரசன் அணுதான். பூமியில் உள்ள பொருட்கள் எல்லாம் அணுக்களால் ஆனவை என்பதை, நீங்கள் சின்னக் குழந்தையாக இருக்கும் போதே அறிந்து கொண்டிருப்பீர்கள். அணுக்கள், இலத்திரன் (Electron), நியூட்ரான் (Neutron), புரோட்டான் (Proton) ஆகியவற்றால் ஆனவை என்பதும் உங்களுக்குத் தெரியும். புரோட்டானும், நியூட்ரானும் அணுவின் கருவில் இருப்பவை. எலெக்ட்ரான் அந்த அணுக்கருவைச் சுற்றிக் கொண்டிருப்பது. எலெக்ட்ரான் எதிரேற்றமும் (-), புரோட்டான் நேரேற்றமும் (+), நியூட்ரான் ஏற்றம் ஏதும் இல்லாமல் பூச்சியமாகவும் இருக்கும். இதில் எலெக்ட்ரானுக்கு நிறை இல்லை. ஆனால் புரோட்டானுக்கும், நியூட்ரானுக்கு தலா 1 என்னும் நிறை இருக்கிறது. ஒரு அணுவின் கருவில் இருக்கும் புரோட்டான்களின் எண்ணிக்கை அந்த அணுவின் 'அணு எண்' (Atomic Number) என்றழைக்கப்படுகிறது. தனிமங்களின் அணு எண்கள் மாறுபடும் போது, அவை வெவ்வேறு தனிமங்கள் ஆகின்றன. அதாவது ஒவ்வொரு தனிமத்துக்குமெனத் தனித்தனியாக ஒரு அணு எண் இருக்கிறது. 'அணு எண் 1' என்றால் ஐதரசன் அணு என்றும், 'அணு எண் 2' என்றால் ஹீலியம் என்றும் தனிமங்களின் அணு எண்களுக்கேற்ப மாறிக் கொண்டே போகும். இதுவரை 118 தனிமங்களைப் பூமியில் நாம் கண்டுபிடித்திருக்கிறோம். அணு எண்கள் போலவே அணு நிறையும் கணக்கிடப்படுகிறது. ஒரு அணுவின் அணுக்கருவுக்குள் இருக்கும் புரோட்டான்களையும், நியூட்ரான்களையும் ஒன்று சேர்த்தால் வருவது அந்த அணுவின் 'அணு நிறை' (Atomic Mass) எனப்படுகிறது. ஒரு தனிமத்துக்கு குறித்த எண்ணிக்கையில் புரோட்டான்கள் இருப்பது போல, குறித்த எண்ணிக்கையில் நியூட்ரான்களும் இருக்கும். அபூர்வமான நிலையில் சில தனிமங்கள், மாறுபட்டு நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கொண்டிருக்கும். உதாரனமாக, 'லிதியம்' (Lithium) என்னும் தனிமத்துக்கு 3 புரோட்டான்களும், 4 நியூட்ரான்களும் இருக்கும். அதாவது அதன் 'அணு நிறை 7' ஆகும். ஆனால் 'அணு நிறை 6' கொண்ட லிதியமும் உண்டு. அதாவது 3 புரோட்டான்களும், 3 நியூட்ரான்களும் அதில் காணப்படும். இந்த இரண்டு வெவ்வேறு அணு நிறைகளைக் கொண்ட லிதியங்களும் 'ஐசடோப்புகள்' (Isotopes) என்று சொல்லப்படுகின்றன. இப்போது, ஐசோடோப்புகள் என்றால் என்னவென்று நிச்சயம் உங்களுக்குப் புரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். சரி, புரியாவிட்டாலும் ஒன்றும் கெட்டுப் போவதில்லை. இங்கு சொல்லப்பட்டவை உங்களுக்குப் புரிந்தால் மிகவும் மகிழ்ச்சியே! ஒரு பேச்சுக்கு இவை புரியவில்லையென்றாலும் எந்தக் கவலையும் தேவையில்லை. இவை தெரியாமலே நாம் தொடரைத் தொடர்ந்து செல்லலாம்.


பிற்குறிப்பு: இது ஒரு தகவலுக்காகத்தான். Fusion க்கும் Fission க்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். 'ஐதரசன் குண்டு' (Hydrogen Bomb) பியூஸனினால் உருவாகும் சக்தியை வெளிப்படுத்துகிறது. 'அணு குண்டு' (Atom Bomb) பிஸனினால் உருவாகும் சக்தியை வெளிப்படுத்துகிறது. இவையிரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன தெரியுமா? ஒரே அளவுள்ள ஐதரசன் குண்டு, அணு குண்டை விடஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது. இரண்டம் உலக மஹா யுத்தத்தில் பாவிக்கப்பட்ட மொத்தக் குண்டுகளின் சக்தி, ஒரு ஐதரசன் குண்டின் ஐந்தில் ஒரு பங்குக்கே சமன். ஒரு கிலோகிராம் ஐதரசனை, ஹீலியமாக மாற்றும் போது ஏற்படும் சக்தி, இருபதாயிரம் டன்கள்


நிலக்கரி எரிவதால் உருவாகும் சக்திக்குச் சமன். இப்போது பியூஸன் நடைபெறும் நட்சத்திரத்தின் சக்தி புரிகிறதா?


- தொடரும்




அண்டமும் குவாண்டமும் - பகுதி 3

நிகழ்வு எல்லை (Event Horizon)





முற்குறிப்பு: இது கருந்துளையைப் பற்றி மட்டும் ஆராயும் ஒரு கட்டுரை அல்ல. இது ஒரு தொடர். காதல் கதையை, துப்பறியும் கதையை, பயங்கரக் கதையைத் தொடராக எழுதலாம். அது போல, முழுமையான அறிவியலை ஏன் தொடராக எழுதக் கூடாது என்று நான் நினைத்து எழுதும் ஒரு தொடர். அறிவியலை மட்டுமே கையிலெடுத்து இந்தத் தொடரை எழுதுகிறேன். அதிலும் விசேசமாக, நவீன அறிவியலில் மிகவும் சிக்கலானதும், கடுமையானதும் என்று நினைக்கப்படும், குவாண்டம் (Quantum) அறிவியலைப் பற்றியது இந்தத் தொடர். அறிவியலை நேரடியாக எழுதும் போது, கல்லூரியில் பாடம் கற்பது போன்ற வறட்சியான, சலிப்பான உணர்வு தோன்றிவிடும். அதைச் சரியாகக் கவனத்தில் எடுத்து, அலுப்பின்றித் தொடரைக் கொண்டு செல்ல வேண்டும். இது எனக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால். உங்களது ஆர்வதை அதிகரித்து மேலும் மேலும் வாசிக்கத் தூண்டும் வகையில் அறிவியலைத் தந்தால் மட்டுமே இந்தத் தொடரை நீங்கள் தொடர்ந்து வாசிப்பீர்கள். அதனால், 'அண்டமும் குவாண்டமும்' என்னும் இந்தத் தொடரை எழுதிச் செல்வது எவ்வளவு சிரமம் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இந்தத் தொடர் நவீன அறிவியலின் முக்கியமான அனைத்தையும் தொட்டுச் செல்லும். எனவே, நான் 'தொடரும்' என்று போடுவதால் அதையிட்டு சலிப்படைதீர்கள். நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் எத்தனையோ இருக்கின்றன. அவையெல்லாவற்றையும் ஒன்றிரண்டு அத்தியாயங்களில் சுருக்கமாகச் சொல்லிவிட முடியாது. அப்படிச் சொல்லிவிட்டால், அது ஒரு ஏமாற்று வேலையாகிவிடும். தயவுசெய்து தொடர்ந்து படித்து வாருங்கள். இவையெல்லாவற்றையும் தாண்டி, இந்த விசயங்களைத் தெரிந்து கொண்டீர்களென்றால், புதியதோர் அதிசய உலகத்தின் கதவு உங்களுக்காகத் திறந்து கொள்ளும். நம்பவே முடியாத ஆச்சரியமான தகவல்களும், அவற்றுக்கான காரணங்களும் மெல்ல மெல்லப் புரிய ஆரம்பிக்கும். நவீன அறிவியலின் ஆச்ச்சரிய உலகின் மர்ம முடிச்சுகள் எல்லாம் உங்கள் முன் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்கும். எனவே கொஞ்சம் நிதானமாக நான் சொல்லப் போவதைப் படித்து, என்னுடன் கைகோர்த்து வாருங்கள். என்ன, தயார்தானே…?


சூரியனைப் போலப் பல மடங்கு பெரிதாகவுள்ள ஒரு நட்சத்திரம், இறக்கும் நிலை வந்ததும் வெடித்துச் சிதறும். அப்போது அங்கே ஒரு கருந்துளை (Blackhole) பிறக்கிறது. உதாரணமாக, சூரியனைப் போல ஐம்பது மடங்கு பெரிய நட்சத்திரம் ஒன்று பல மில்லியன் வருடங்களாக எரிந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நட்சத்திரத்தின் எரியும் சக்தி படிப்படியாகத் தீர்ந்துகொண்டு வரும். நட்சத்திரத்திரம் எரிவதற்கு அடிப்படைச் சக்தியாக இருப்பது ஐதரசன்(H). நட்சத்திரத்தின் கோருக்குள் (Core) இருக்கும் ஐதரசன், 'நியூக்ளியர் பியூஸன்' (Nuclear Fusion) காரணமாக ஹீலியமாக(He) மாறும். இப்படி மாற்றமடையும் போது பிரமாண்டமான சக்தி வெளிவரும். இரண்டு அணுக்கருக்கள் ஒன்றாக இணைந்து, வேறொரு அணுவாக மாறுவதையே 'நியூக்கிளியர் பியூஸன்' என்கிறார்கள். தமிழில் 'அணுக்கருப் பிணைப்பு' என்று சொல்லலாம். ஐதரசன், ஹீலியமாக மாறும்போது உருவாகும் சக்தியால் ஏற்படும் கதிர்வீச்சையே ஒளியாகவும், வெப்பமாகவும் வெளியே அனுப்புகிறது நட்சத்திரம். ஒரு கட்டத்தில் கோருக்குள் இருக்கும் ஐதரசன் அனைத்தும் ஹீலியமாக மாறும் நிலை வரும். அப்போதும் 'அணுக்கருப் பிணைப்பு' தொடர்ந்து நடைபெறுவதால் ஹீலியம், கார்பனாக(C) மாறத் தொடங்கும். ஐதரசன் எப்படி ஹீலியமாக மாறியதோ, அதேபோல ஹீலியமும், கார்பனாக மாற ஆரம்பிக்கும். இப்போதும் அதிகளவு சக்தி வெளிவரும். ஐதரசன், ஹீலியமாக மாறுவதற்கு எட்டு மில்லியன் வருடங்கள் எடுக்கலாம். ஆனால், ஹீலியம் முழுவதும் கார்பனாக மாறுவதற்கு சுமார் அரை மில்லியன் வருடங்களே போதுமானது. இத்துடன் 'அணுக்கருப் பிணைப்பு' முடிந்து விடுவதில்லை. தொடர்ந்து கார்பன் நியானாகவும்(Ne), நியான் ஒட்சிசனாகவும்(O), ஒட்சிசன் சிலிக்கானாகவும்(Si), சிலிக்கான் இரும்பாகவும்(Fe) படிப்படியாக மாறுகின்றன. இவற்றுக்கெல்லாம் முன்னரைப் போல அல்லாமல், மிகச்சிறிய கால இடைவெளிகளே போதுமானது. இறுதியாக உள்ள சிலிக்கான் அனைத்தும் இரும்பாக மாறுவதற்கு ஒரேயொரு நாள் மட்டுமே எடுக்கும். இரும்புதான் இறுதியானது. இரும்பு, 'அணுக்கருப் பிணைப்பு' மூலமாக எதுவாகவும் மாறாது. அதனால் அந்த நட்சத்திரத்தின் கோரானது, முழுமையான இரும்பாக மாறும் நிலையை அடையும். இங்கு ஒன்றைச் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். இரும்பு (Iron) என்றால், சாதாரணமாக 'இரும்பு' என்று நீங்கள் நினைப்பது அல்ல. இரும்பின் அணுக்கருக்கள்தான் (Iron Nucleus) இங்கு ஒன்றாகச் சேர்ந்து காணப்படுகின்றன. உங்கள் உள்ளங்கையளவேயான சாதாரண இரும்பை நிறுத்துப் பார்த்தீர்களானால், அது ஒரு கிலோகிராம் எடையுள்ளதாக இருக்கலாம். ஆனால், அதே உள்ளங்கை அளவில் இரும்பின் அணுக்கருக்களை மட்டும் எடுத்து நிறுத்துப் பார்த்தால், அவை பல ஆயிரம் டன்கள் எடையாக இருக்கும். சாதாரண இரும்புக்கும், இரும்பின் அணுக்கருவுக்கும் ஏன் இவ்வளவு எடை வித்தியாசம் என்பதை விரிவாக, இதன் தொடர்ச்சிக் கட்டுரையில் எழுதியிருக்கிறேன். உள்ளங்கையளவு இரும்பு அணுக்கருக்கள் பல ஆயிரம் டன்கள் எடையாய் இருக்கும் போது, ஒரு நட்சத்திரத்தின் மையப் பகுதியான 'கோர்' முழுமையாக இரும்பாக மாறினால் எவ்வளவு எடையிருக்கும் என்பதை நீங்களே கற்பனை பண்ணிப் பாருங்கள். இப்போது புரிகிறதா, ஒரு நட்சத்திரம் இறக்கும் போது ஏன் அதன் மையப்பகுதி அளவில்லாத எடையைக் கொண்டிருக்கிறது என்பது? அந்த அளவில்லா எடை காரணமாகவே, அது முடிவற்ற ஈர்ப்புவிசையையும் பெற்றுக் கொள்கிறது. கோர் முழுவதும் இரும்பாக மாறிய நிலையை ஒரு நட்சத்திரத்தினால் தாங்கிக் கொள்ளவே முடியாது. அதிக எடையினால் அப்போது கோருக்குள் ஒரு நிலைகுலைவுத் தண்மை ஏற்படுகிறது. ஒரு நொடிக்கும் குறைவான குறித்த கணத்தில் நட்சத்திரம் படீரென வெடித்துச் சிதறுகிறது. அதனால், அங்கே முடிவில்லாச் சக்தியும், எடையும், ஈர்ப்பு விசையும் கொண்ட கருந்துளையொன்று தோன்றுகிறது.




கருந்துளையின் அளவிடமுடியாத எடையின் காரணமாக, அதன் மையம் 'புனல்' போன்ற வடிவத்துடன் கிழ்நோக்கி அமிழ்ந்த நிலையில், விண்வெளியில் (Space) காணப்படும். கருந்துளையின் மையம் மிகச்சிறிய புள்ளியாகவே இருக்கும். அந்தப் புள்ளியை 'ஒருமை மையம்' (Singularity) என்பார்கள். இந்த ஒருமை மையத்தின் ஈர்ப்பு விசையானது முடிவிலியாக (Infinity) இருக்கும். இதன் ஈர்ப்பு விசையிலிருந்து எதுவுமே தப்பிவிட முடியாது. எதுவும் என்றால் அண்டத்தில் உள்ள எதுவுமே! தனக்கு அருகே இருக்கும் அனைத்தையும், தன் ஈர்ப்பு விசையால் உள்ளே இழுத்துக் கொள்ளும். ஒளிகூட இதிலிருந்து தப்ப முடியாது. பலருக்கு 'ஒளியைக் கூடக் கருந்துளையானது உள்ளிழுத்துக் கொள்கிறது' என்று சொல்லும் போது, அதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. அண்டத்தில் உள்ள அனைத்திலும் அதிவேகமாகச் செல்லக் கூடியது ஒளிதான். இதை நாம் ஒரு உதாரணத்தின் மூலம் பார்க்கலாம். இந்த உதாரனத்தினால், கருந்துளையின் பல தண்மைகளை நாம் இலகுவில் புரிந்து கொள்ளலாம். இதுவும் நாம் முற்பகுதியில் எடுத்துக் கொண்ட நீர்வீழ்ச்சி உதாரணம்தான். உலகிலேயே மிகவும் வேகமாக நீந்தக் கூடிய இருபது நீச்சல் வீரர்களை ஒன்றாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். அவர்களில் ஒருவன், உலகில் உள்ள அனைவரையும் விட அதிவேகமாக நீச்சல் செய்யக் கூடியவனாக இருப்பான். இவர்கள் அனைவரையும் மலையுச்சியிலிருந்து நீர்வீழ்ச்சியாகக் கீழே விழப் போகும் காட்டாறு ஒன்றுக்கு அழைத்துச் செல்லலாம். அந்தக் காட்டாறு நினக்கவே முடியாத வேகத்தில் பாய்ந்தபடி ஒடிக்கொண்டிருக்கிறது. சிறிது தூரத்தில் அது நீர்வீழ்ச்சியாகக் கீழே விழுகிறது. இந்த இருபது நீச்சல் வீரர்களையும் அந்த ஆற்றில் தள்ளிவிடுகிறோம். அனைவரும் ஆற்றின் திசைக்கு எதிரான திசையில் தங்களால் முடிந்தவரை நீந்த ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அந்த ஆறு எதையும் இழுக்கும் சக்தி வாய்ந்த அளவுக்கு நீரின் இழுவையைக் கொண்டிருக்கிறது. எல்லாரும் ஆற்றின் திசையில் அடித்துக் கொண்டு செல்லப்படுகிறார்கள். ஆனால், நீர்வீழ்ச்சியின் அருகே சென்றதும் கீழே விழுந்து விடுவோம் என்னும் பயத்தில் அனைவரும் தங்கள் சக்தி அனைத்தையும் பிரயோகித்து எதிர்த் திசையில் வேகமாக நீந்துகின்றனர். நீர் கீழே விழும் இடத்துக்கு மிக அருகே, குறிப்பிட்ட எல்லையில் ஆற்றின் இழுவை மேலும் அதிகமாகிறது. ஒருவனைத் தவிர அனைவரும் அப்படியே நீர்வீழ்ச்சியை நோக்கி இழுக்கப்பட்டு கீழே விழுகிறார்கள். ஆனால் உலகிலேயே அதிவேகமாக நீந்தக் கூடிய நீச்சல் வீரன் மட்டும் தன் பலம் கொண்டவரை எதிர்த்து நீந்துகிறான். தன் இறுதி முடிவு நெருங்கிவிட்டதை அறிந்து, அதிக சக்தியை வரவழைத்து நீந்துகிறான். அப்போது அவன் நீர்வீழ்ச்சி கீழே விழும் இடத்துக்குச் சிறிது முன்னால் இருக்கும் அந்த எல்லையில் இருக்கிறான். அந்த இடத்தில், அவன் நீந்தும் வேகமும், ஆறு கீழே விழுவதால் ஏற்படும் வேகமும், அதாவது ஆற்றின் இழுவைச் சக்தியும் சமமாக இருக்கிறது. அப்போது என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அந்த நீச்சல் வீரன் கீழே விழாமலும், எதிர்த் திசைக்குச் செல்லாமலும் ஒரே இடத்தில் நின்று நீந்திக் கொண்டே இருப்பான். காரணம் எதிரெதிரான இரண்டு வேகமும் அந்தப் புள்ளியில் சமமாகிறது. அதனால், அதி வேகத்தில் நீந்தும் அந்த உலக நீச்சல் வீரனின் வேகம் அந்தப் புள்ளியில் பூச்சியமாகிவிடுகிறது. ஆற்றின் கரையில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவன் ஒரே இடத்தில் நின்று கொண்டே நீந்துவது போலத் தெரியும். எப்பொழுதும் அப்படியே நீந்திக் கொண்டிருக்க முடியாதல்லவா? அதனால், ஒரு கட்டத்தில் அந்த எல்லைப் புள்ளியைக் கடக்கும் நீச்சல் வீரனால் அதற்குமேல் நீர்வீழ்ச்சியின் எதிர்ப்பைத் தாங்க முடியாமல் கீழே விழுந்துவிடுகிறான். யாரும் தப்ப முடியாத நீர்வீழ்ச்சி அது.




இப்போது, இந்த நீர்வீழ்ச்சியையும், உலகமகா நீச்சல் வீரனையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நீர்வீழ்ச்சிதான் கருந்துளை. நீரைக் கீழ்நோக்கி இழுப்பது கருந்துளையின் மையமான ஒருமைப்புள்ளி. உலகமகா நீச்சல் வீரன்தான் ஒளி. நீச்சல் வீரனான ஒளிக்கு, மூன்று இலட்சம் கிலோமிட்டர்கள் ஒரு நொடிக்கு நீந்த முடியும். ஆனால் அந்த கீழ்நோக்கி இழுக்கும் நீர்வீழ்ச்சியான கருந்துளையின் ஒருமைப்புள்ளியின் இழுவை வேகமோ அதைவிடப் பல மடங்கு அதிகம். காட்டாறின் வேகம், நீர்வீழ்ச்சியிலிருந்து நீர் கீழே விழுவதற்கு சற்று முன்னே ஒரு குறித்த எல்லையில் அதிகரிக்க ஆரம்பிக்கும் அல்லவா? அந்த இடம்தான் கருந்துளையின் 'நிகழ்வு எல்லை' என்று சொல்லப்படும் 'Event Horizon'. அந்த எல்லையில் உலகமகா நீச்சல் வீரனின் வேகமும் சக்தியும், நீர்வீழ்ச்சியின் வேகத்துக்கும் சக்திக்கும் சமமாக இருந்தது என்று பார்த்தோம். அங்கு நீச்சல் வீரனின் வேகம் அந்தப் புள்ளியைப் பொறுத்தவரை பூச்சியமாகிறது என்றும் பார்த்தோம். இப்போது, நீச்சல் வீரனை ஒளியென்று எடுத்தால், நிகழ்வு எல்லையில் ஒளியின் வேகம் பூச்சியமாகிறது. அதாவது, 'நிகழ்வு எல்லையில்' அண்டத்திலேயே அதியுயர் வேகத்தில் செல்லக் கூடிய ஒளியானது பூச்சியமாகி, உறைந்து போய்விடுகிறது. ஒளிதான் அண்டத்தில் காலத்தை நிர்ணயிக்கும் ஒன்றாக இருக்கிறது. அத்துடன் காலம் (Time), வேகம், தூரம் என்னும் அனைத்துமே ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை என்று உங்களுக்குத் தெரியும். வேகமும், தூரமும் பூச்சியமாகும் போது, காலமும் அங்கு பூச்சியமாகிவிடுகிறது. அதாவது கருந்துளையின் 'நிகழ்வு எல்லை' என்னும் இடத்தில் காலம் பூச்சியமாகி உறைந்துவிடுகிறது. புரிகிறதா? எதிர் நீச்சல் செய்ய்யும் நீச்சல் வீரனைப் பொறுத்தவரை தான் அதிவேகமாக நீச்சல் செய்வதாகவே நினைத்துக் கொள்வான். அவனைப் பொறுத்தவரை அவன் அதிகளவு வேகத்துடனே நீந்திக் கொண்டிருப்பான். ஆனால் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு, அவன் நீந்தாமல் ஓரிடத்தில் நிற்பது போலவே இருக்கும். இது போலத்தான், கருந்துளையின் நிகழ்வு எல்லையில் காலம் உறைந்து போயிருக்க, அண்டத்தில் உள்ள ஏனைய இடங்களில் காலம் வழமை போலவே நகர்ந்து கொண்டிருக்கும். கருந்துளையின் நிகழ்வு எல்லைப் புள்ளியில் நுழையும் ஒளி, அந்தப் எல்லையைத் தாண்டியதும் ஒருமைப் புள்ளியை நோக்கி இழுக்கப்பட்டுவிடும். 'கருந்துளையில் ஒளி கூடத் தப்பிவிட முடியாது' என்று கூறுவது இதனால்தான். அதனுடன் சேர்ந்து கருந்துளையின் நிகழ்வு எல்லையில் காலம் பூச்சியமாகிவிடுகிறது என்பதையும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றேன். இப்போது நான் சொன்னது மட்டும் உங்களுக்குப் புரிந்திருக்குமானால், உலகிலேயே மிகவும் சிக்கலான ஒரு கோட்பாட்டைப் புரிந்தவராகிவிடுவீர்கள். இதைப் புரியவைக்கப் பலர் தலையால் மண்கிண்டுகிறார்கள். நான் கூடச் சரியான முறையில் புரிய வைத்தேனோ தெரியவில்லை. ஆனாலும் புரியும் என்று நம்புகிறேன்.



'கருந்துளையில் காலம் உறைகிறது என்பதை நாம் சரியாகப் புரிந்து கொள்வோமானால், 'பிக்பாங்' பெருவெடிப்பின் போது 'காலம்' (Time) எப்படி உருவாகியது என்பதையும் நம்மால் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும்' என்கிறார் பிரபல இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங். கருந்துளைகளுக்கும் ஸ்டீபன் ஹாக்கிங்குக்கும் நிறையவே சம்மந்தம் உண்டு. ஸ்டீபன் ஹாக்கிங் தன் வாழ்க்கையில் பெரும்பாண்மையான காலத்தை, கருந்துளைகளைப் பற்றி ஆராய்வதிலேயே செலவிட்டார். கருந்துளை பற்றி இவர் வெளியிட்ட கணிதச் சமன்பாடு ஒன்று இயற்பியல் வரலாற்றில் மைல்கல்லாக அமைந்தது. தன் இளம் வயது முதல் சக்கர நாற்காலியிலேயே கழித்து வரும் ஹாக்கிங்கை நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றே கொள்ளலாம். கருந்துளை பற்றிப் பல கருத்துகளை வெளியிட்டவர் ஸ்டீபன் ஹாக்கிங். இதுவரை அவர் வெளியிட்ட கருந்துளை பற்றிய கருத்துகள், ஏனைய விஞ்ஞானிகளுக்குப் பல முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உதவியாக இருந்தது. கருந்துளை பற்றித் தெரிந்து வைத்திருக்கும் போது, ஸ்டீபன் ஹாக்கிங் பற்றியும் சுருக்கமாக நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.




இயற்பியலிலும், கணிதவியலிலும் சிறந்தவரான ஹாக்கிங், நம்மைப் போலச் சாதாரண மனிதனாகத் தற்போது இல்லை. 'Neuro Muscular dystrophy' (Amyotrophic Lateral Sclerosis - ALS) என்னும் உடலியல் பக்கவாத நோயினால் உடலுறுப்புகள் படிப்படியாகச் செயலிழக்கப்பட்டு, இன்று சக்கர நாற்காலியில் அசையவே முடியாத நிலையில் இருக்கிறார். இவரால் அசைக்கக் கூடிய அங்கங்கள் கண்ணும், புருவமும் மட்டுமே. ஆனாலும் அவர் சிந்திப்பது மட்டும் வற்றிப் போகவில்லை. அது மேலும் விரிவடைந்து கொண்டே செல்கிறது. இப்போதும் அவர் பல ஆராய்ச்சிகளைக் கண்டுபிடித்து, வெளியிட்டுக் கொண்டேதான் இருக்கிறார். அவர் சிந்திப்பதையும், கண்டுபிடிப்பதையும் நம்முடன் பகிர்ந்து கொள்வதற்கெனப் பிரத்தியேகமாக ஒரு கணணி உருவாக்கப்பட்டிருக்கிறது. அவர் சொல்ல வருவதை கண் மற்றும் புருவத்தின் அசைவுகளால் கணணி மூலமாக, ஒலியாக வெளிக் கொண்டு வருகிறார்கள்.




ஹாக்கிங்கின் புத்திசாலித்தனம் எவ்வளவு அதிசயமோ, அதுபோல அவர் நம்முடன் கண்மூலம் பேசுவதும் அதிசயம்தான். ஹாக்கிங், விண்வெளியியல் ஆய்வுக்கு ஆற்றிய சேவை மிகப்பெரியது. இதில் கருந்துளை பற்றிய ஆய்வு முக்கியமானது. இவர் எழுதிய 'A Brief History of Time' என்ற நூல் மிகவும் பிரபலமானது. பிரபஞ்சம் உருவானதற்குக் காரணமான 'பிக் பாங்' (Big Bang) குறித்த கருத்தையும், மற்றும் அதற்கு முந்தைய காலகட்டத்தையும் இந்த நூலில் அவர் எளிமையாக விளக்கியுள்ளார். இங்கிலாந்தின் 'சன்டே டைம்ஸ்' இதழின் சிறந்த புத்தக வரிசையில் தொடர்ந்து 237 வாரங்கள் முதலிடத்தில் இருந்து சாதனை படைத்தது இந்தப் புத்தகம். கருந்துளை பற்றிய பல விபரங்கள் இந்த நூலில் இருக்கின்றன. இந்த நூல் போலவே இவர் எழுதிய 'The Grand Design' என்ற இன்னுமொரு நூலும் மிகப் பிரபலமானது. இதில் அவர் புரட்சிகரமான கருத்தொன்றைச் சொல்லியிருந்தார். ”இந்த அண்டத்தை யாரும் வந்து உருவாக்க வேண்டிய அவசியமே இல்லை. அதுவாகவே தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளது. இந்த அண்டம் முற்றிலும் இயற்பியல் சார்ந்ததே” என்று அந்த நூலின் மூலம் சொல்கிறார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது உங்களுக்குப் புரியும் என்றே நினைக்கிறேன்.





இனி நாம் மீண்டும் நிகழ்வு எல்லைக்கு வரலாம். ஹாக்கிங்கிற்கும், சஸ்கிண்டுக்கும் இடையில் ஒரு அறிவியல் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது என்று முதல் பகுதிகளில் கூறியிருந்தேன். நாற்பது வருடங்களுக்கு முன்னர் கருந்துளை பற்றி ஹாக்கிங் சொன்ன கருத்து ஒன்றின் தொடர்ச்சியாகத்தான் அந்த யுத்தம் ஆரம்பமாகியது. கருந்துளைகளில் வந்து விழும் அனைத்தும் அதன் மையம் நோக்கி நகர்த்தப்பட்டுவிடும் என்று ஹாக்கிங் சொல்லியிருந்தார். கருந்துளையின் மையம் என்பது ஒருமைப் புள்ளி. அந்த ஒருமைப் புள்ளியுடன் அனைத்தும் சேர்ந்து, அவை அப்படியே இல்லாமல் போய்விடும் என்றார். சமயத்தில் கருந்துளைகளும் இல்லாமல் மறைந்து போய்விடும் என்றும் சொல்லியிருந்தார். இப்படி ஹாக்கிங் சொல்லியிருந்த கருத்தே, சஸ்கிண்ட் அவரை எதிர்ப்பதற்கான யுத்தத்தை ஆரம்பித்து வைத்தது. உதாரணமாக, நாம் வாழும் பூமி கருந்துளையின் உள்ளே சென்றுவிடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். பூமியென்று சொன்னால், பூமியில் உள்ள கட்டடங்கள், மனிதர்கள், மிருகங்கள், மலைகள், ஆறுகள், ராஜ்சிவா, இதைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள், கணணி என அனைத்துமே கருந்துளைக்குள் சென்றுவிட்டால், அது அப்படியே ஒருமை மையத்தில் மறைந்துவிடும் என்றார் ஹாக்கிங். ஆனால், சஸ்கிண்ட் இதை எதிர்த்தார். "அண்டத்தில் உள்ள அனைத்துமே ஒரு கட்டமைப்பின் மூலம் உருவானவை. பூமியை எடுத்தால், மேலே நான் சொன்னவை அனைத்தும் ஒருவித கட்டமைப்புகளுடன் உருவானவை. அந்தக் கட்டமைப்பில் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அந்தக் கட்டமைப்பும், ஒழுங்கும் தகவல்களைக் (Informations) கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றன. அண்டத்தில் எந்தத் தகவல்களையும் இல்லாமல் அழிக்க முடியாது. ஒரு தகவலை இன்னுமொரு தகவலாக மாற்ற முடியுமேயொழிய அவற்றை அழிக்க முடியாது. ஆகவே ஹாக்கிங் சொன்னது போல, கருந்துளைக்குள் செல்லும் தகவல்களும் அழிய முடியாது. அண்டம் ஒரு சமநிலையிலேயே இயங்குகிறது. சமநிலையில் இயங்கும் அண்டத்தில், குவாண்ட இயற்பியலின்படி எந்தத் தகவல்களும் அழிந்து போகாது. இல்லாமல் போவதாக நாம் நினைக்கும் எல்லாத் தகவல்களையும் நவீன இயற்பியலால் மீளப் பெறமுடியும். எனவே ஹாக்கிங் சொன்னது மாபெரும் அறிவியல் தவறு" என்றார் சஸ்கிண்ட்.


சஸ்கிண்ட் கூறியதை உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொண்டார்கள். அதிகம் ஏன், ஹாக்கிங் கூட ஏற்றுக் கொண்டார். சஸ்கிண்டின் எதிர்ப்பை கணக்கிலெடுத்து, தனது தவறைத் திருத்தும் வகையில் வேறு ஒரு கருத்தையும் ஹாக்கிங் முன்வைத்தார். ஆனால் அதில் அவர் முழுமையாகத் திருப்தியடையவில்லை. அதனால், மீண்டும் ஒரு புதுக் கருத்தைச் சமீபத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் ஹாக்கிங்கின் கருத்துகள் பலரை ஏமாற்றமடைய வைத்தது. 


"அட! இது என்ன? தகவல் அது, இது என்கிறீர்கள். ஒன்றுமே புரியவில்லை. என்ன நடந்தது என்று விளக்கமாகக் கூறுங்கள்" என்றுதானே நினைக்கிறீர்கள். அடுத்த பகுதியில் நிச்சயம் சொல்கிறேன்.


- தொடரும்