இயற்பியல் விதிகளின்படி ஒளியின் வேகத்தை விட அதிக வேகமாக எதுவுமே நகரமுடியாது என்பது இன்று உள்ள முடிவு. ஆனால் நான் இப்போது சொல்லப் போவதைப் படித்துப் பாருங்கள். கொஞ்சம் தலையைச் சுற்றும். கொஞ்சம் ஏமாற்றுவது போலத் தோன்றும். ஆனாலும் புரிகிறதாவென்று பாருங்கள்.
ஒளி, ஒரு பொருளில் படும்போது அந்தப் பொருளின் நிழல் நிலத்திலோ, சுவரிலோ விழுகிறது. சரி இப்படி வைத்துக் கொள்ளுங்கள். சூரிய ஒளி உங்களின் மேல் படும்போது, உங்கள் நிழல் நிலத்தில் விழுகிறது. சூரிய ஒளி உங்கள் உடலில் பட்ட அந்தக் கணத்திலேயே நிழலும் நிலத்தில் தோன்றிவிடுகிறது. சூரிய ஒளி மறையும் அந்தக் கணத்தில் நிழலும் இல்லாமல் போய்விடும். இதிலிருந்து, ‘ஒளி என்ன வேகத்தில் பயணம் செய்கிறதோ, அதே வேகத்தில் நிழலும் பயணம் செய்கிறது’ என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
இப்போது, நான் சொல்லப் போகும் இந்தக் கேள்வி அல்லது சந்தேகம், உங்கள் மனதில் தோன்றியிருந்தால், நீங்கள் இயற்பியலில் அல்லது அறிவியலில் வல்லமையுள்ளவராக இருப்பவர் என்று அர்த்தம் கொள்ளலாம். வரவில்லையென்றாலும் பரவாயில்லை. அதுதான் இப்போது தெரிந்துவிடப் போகிறதே! அந்தக் கேள்வி இதுதான். ஃபோட்டான் என்னும் சிறு துகள்கள் பயணம் செய்வதைத்தான் நாம் ஒளி என்கிறோம். அதாவது ஒளிக்குப் பயணம் செய்வதற்குரிய துகள்கள் இருக்கின்றன. ஆனால் நிழல் என்பது ஒளியில்லாத இடம்தானே! அதாவது பயணம் செய்யப் ஃபோட்டான்களோ, வேறு எதுவோ இல்லாத ஒன்று அது. ஒன்றுமேயில்லாத ஒன்று எப்படி நகர முடியுமா? அப்படியென்றால், நிழலுக்கு எப்படி வேகம் இருக்க முடியும்?”
உண்மையைச் சொல்லுங்கள், இந்தக் கேள்வி உங்கள் மனதில் தோன்றியதா? ஆம் என்றால், உங்கள் தோளில் நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள். சரி விசயத்துக்கு வரலாம். நிழலுக்கு வேகம் உண்டா என்று கேட்டால், ஒளி நகரும் வேகத்தில் நிழலும் நகர்வதை நாம் கண்கொண்டு பார்க்கிறோம். இதை ஒரு மாயையென்று நாம் சொல்லப் போகிறோமா? பலரிடம் ஒரு கருத்து உண்டு. இருட்டு என்ற ஒன்று இல்லை. ‘ஒளி இல்லாத இடம்தான் இருட்டு’ என்பார்கள். ஆனால், இந்தக் கூற்றுத் தவறானது. பிரபஞ்சத்தில் ஆரம்பத்தில் இருந்தது இருள்தான். அதன் பின்னர்தான் ஒளியே தோன்றியது. இப்போதும் கூட, பிரபஞ்சத்தின் 95 சதவீதமான பகுதி இருட்டுத்தான். மத வேதங்களும் இதையே வலியுறுத்துகின்றன. ஒளி வருவதற்கு முன்னரே இருப்பது இருட்டு என்றால், ஒளி இல்லாத இடம்தான் இருட்டு என்னும் கருத்துத் தவறுதானே! சரி, நாம் எங்கேயோ வந்துவிட்டோம்.
நுண் துகள்கள் எதுவும் இல்லாமல், ஒன்றும் நகர முடியாது என்னும் கருத்தை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டுப் பார்ப்போம். இப்போது, ஒளி நகரும் வேகத்தில்தான் நிழலும் நகருகிறது என்பது கண்களால் நாம் புரிந்து கொள்ளும் ஒரு செயலாகத் தெரிகிறது. அதாவது ஒளி ஒரு செக்கனுக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்தால், நிழலும் மூன்று லட்சம் கிலோ மீட்டர்கள் செக்கனுக்குப் பயணம் செய்கிறது. என்ன சரிதானே!
இதிலிருந்து ஒளியைவிட, நிழல் சற்றே வேகமாகப் பயணம் செய்கிறது என்று எடுக்கலாமா? அதாவது இயற்பியல் விதி மீறப்படுகிறது. இல்லை இதுவும் மாயைதானா?
நிழலும், ஒளியும் ஒரே வேகத்தில் நகர்கின்றன அல்லவா? இயற்பியல் விதி என்ன சொல்கிறது, ஒளியின் வேகத்தை மிஞ்சி எதுவும் நகரவே முடியாது. என்றல்லவா?. நிழலும் ஒளியின் வேகத்தை மிஞ்சிவிடவில்லை. இப்போது, நான் சொல்லப் போவதைக் கவனியுங்கள். ஒளி எப்போதும் உங்கள் மேல் பட்டுக் கொண்டிருக்கிறது. நீங்கள் மாறவில்லை. ஆனால், உங்கள் நிழல் பெரிதாகிக் கொண்டிருக்கிறது. ஒளி படும் அதே கணத்தில் நிழல் தோன்றி, அந்த நிழல் பெரிதாக வேண்டுமென்றால், அது ஒளியைவிடச் சற்றே வேகமாக நகர்ந்திருக்க வேண்டுமல்லவா? என்ன, நான் சொல்வது புரிகிறதா? உங்கள் சிறிய உருவத்தை ஒளி நிரப்பும் நேரத்தை விட, உங்கள் உருவத்தைப் போல இருமடங்கு பெரிதான நிழலை நிரப்ப, அது ஒளியைவிட வேகமாக நகர்ந்திருக்க வேண்டுமல்லவா?
-ராஜ்சிவா-