வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

November 29, 2015

நிழல் செய்யும் மாயை



இயற்பியல் விதிகளின்படி ஒளியின் வேகத்தை விட அதிக வேகமாக எதுவுமே நகரமுடியாது என்பது இன்று உள்ள முடிவு. ஆனால் நான் இப்போது சொல்லப் போவதைப் படித்துப் பாருங்கள். கொஞ்சம் தலையைச் சுற்றும். கொஞ்சம் ஏமாற்றுவது போலத் தோன்றும். ஆனாலும் புரிகிறதாவென்று பாருங்கள்.

ஒளி, ஒரு பொருளில் படும்போது அந்தப் பொருளின் நிழல் நிலத்திலோ, சுவரிலோ விழுகிறது. சரி இப்படி வைத்துக் கொள்ளுங்கள். சூரிய ஒளி உங்களின் மேல் படும்போது, உங்கள் நிழல் நிலத்தில் விழுகிறது. சூரிய ஒளி உங்கள் உடலில் பட்ட அந்தக் கணத்திலேயே நிழலும் நிலத்தில் தோன்றிவிடுகிறது. சூரிய ஒளி மறையும் அந்தக் கணத்தில் நிழலும் இல்லாமல் போய்விடும். இதிலிருந்து, ‘ஒளி என்ன வேகத்தில் பயணம் செய்கிறதோ, அதே வேகத்தில் நிழலும் பயணம் செய்கிறது’ என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.




இப்போது, நான் சொல்லப் போகும் இந்தக் கேள்வி அல்லது சந்தேகம், உங்கள் மனதில் தோன்றியிருந்தால், நீங்கள் இயற்பியலில் அல்லது அறிவியலில் வல்லமையுள்ளவராக இருப்பவர் என்று அர்த்தம் கொள்ளலாம். வரவில்லையென்றாலும் பரவாயில்லை. அதுதான் இப்போது தெரிந்துவிடப் போகிறதே! அந்தக் கேள்வி இதுதான். ஃபோட்டான் என்னும் சிறு துகள்கள் பயணம் செய்வதைத்தான் நாம் ஒளி என்கிறோம். அதாவது ஒளிக்குப் பயணம் செய்வதற்குரிய துகள்கள் இருக்கின்றன. ஆனால் நிழல் என்பது ஒளியில்லாத இடம்தானே! அதாவது பயணம் செய்யப் ஃபோட்டான்களோ, வேறு எதுவோ இல்லாத ஒன்று அது. ஒன்றுமேயில்லாத ஒன்று எப்படி நகர முடியுமா? அப்படியென்றால், நிழலுக்கு எப்படி வேகம் இருக்க முடியும்?”

உண்மையைச் சொல்லுங்கள், இந்தக் கேள்வி உங்கள் மனதில் தோன்றியதா? ஆம் என்றால், உங்கள் தோளில் நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள். சரி விசயத்துக்கு வரலாம். நிழலுக்கு வேகம் உண்டா என்று கேட்டால், ஒளி நகரும் வேகத்தில் நிழலும் நகர்வதை நாம் கண்கொண்டு பார்க்கிறோம். இதை ஒரு மாயையென்று நாம் சொல்லப் போகிறோமா? பலரிடம் ஒரு கருத்து உண்டு. இருட்டு என்ற ஒன்று இல்லை. ‘ஒளி இல்லாத இடம்தான் இருட்டு’ என்பார்கள். ஆனால், இந்தக் கூற்றுத் தவறானது. பிரபஞ்சத்தில் ஆரம்பத்தில் இருந்தது இருள்தான். அதன் பின்னர்தான் ஒளியே தோன்றியது. இப்போதும் கூட, பிரபஞ்சத்தின் 95 சதவீதமான பகுதி இருட்டுத்தான். மத வேதங்களும் இதையே வலியுறுத்துகின்றன. ஒளி வருவதற்கு முன்னரே இருப்பது இருட்டு என்றால், ஒளி இல்லாத இடம்தான் இருட்டு என்னும் கருத்துத் தவறுதானே! சரி, நாம் எங்கேயோ வந்துவிட்டோம்.

நுண் துகள்கள் எதுவும் இல்லாமல், ஒன்றும் நகர முடியாது என்னும் கருத்தை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டுப் பார்ப்போம். இப்போது, ஒளி நகரும் வேகத்தில்தான் நிழலும் நகருகிறது என்பது கண்களால் நாம் புரிந்து கொள்ளும் ஒரு செயலாகத் தெரிகிறது. அதாவது ஒளி ஒரு செக்கனுக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்தால், நிழலும் மூன்று லட்சம் கிலோ மீட்டர்கள் செக்கனுக்குப் பயணம் செய்கிறது. என்ன சரிதானே!

இதிலிருந்து ஒளியைவிட, நிழல் சற்றே வேகமாகப் பயணம் செய்கிறது என்று எடுக்கலாமா? அதாவது இயற்பியல் விதி மீறப்படுகிறது. இல்லை இதுவும் மாயைதானா?

நிழலும், ஒளியும் ஒரே வேகத்தில் நகர்கின்றன அல்லவா? இயற்பியல் விதி என்ன சொல்கிறது, ஒளியின் வேகத்தை மிஞ்சி எதுவும் நகரவே முடியாது. என்றல்லவா?. நிழலும் ஒளியின் வேகத்தை மிஞ்சிவிடவில்லை. இப்போது, நான் சொல்லப் போவதைக் கவனியுங்கள். ஒளி எப்போதும் உங்கள் மேல் பட்டுக் கொண்டிருக்கிறது. நீங்கள் மாறவில்லை. ஆனால், உங்கள் நிழல் பெரிதாகிக் கொண்டிருக்கிறது. ஒளி படும் அதே கணத்தில் நிழல் தோன்றி, அந்த நிழல் பெரிதாக வேண்டுமென்றால், அது ஒளியைவிடச் சற்றே வேகமாக நகர்ந்திருக்க வேண்டுமல்லவா? என்ன, நான் சொல்வது புரிகிறதா? உங்கள் சிறிய உருவத்தை ஒளி நிரப்பும் நேரத்தை விட, உங்கள் உருவத்தைப் போல இருமடங்கு பெரிதான நிழலை நிரப்ப, அது ஒளியைவிட வேகமாக நகர்ந்திருக்க வேண்டுமல்லவா?

-ராஜ்சிவா-


November 3, 2015

சிவப்புப் பறவைகள்

ஏலியன்கள் பூமிக்கு வந்திருக்கலாம் என்பதை அடிப்படையாகக் கொண்டு 'இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?' என்னும் ஒரு தொடரை எழுதியிருந்தேன். அது உயிர்மைப் பதிப்பகமூடாகப் புத்தகமாக வெளிவந்து, நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.


அந்தத் தொடர் வெளிவந்ததிலிருந்து 'ஏலியன்கள்' என்று சொன்னாலே, என்னையும் அங்கே உள்ளே இழுத்துவிடுவது பரவலாக நடைபெறும் நிகழ்வுதான். ஏலியன்கள் சம்மந்தமாகச் சந்தேகங்கள் கேட்டுப் பலர் எழுதிய அஞ்சல்களும் எனக்கு வந்திருக்கின்றன. அப்படி வந்த அஞ்சல்களில் பொதுவாக இருக்கும் கேள்வி, "ஏலியன்கள் ஏன் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்குலக நாடுகளிலேயே தோன்றுகின்றன. இலங்கை, இந்தியா போன்ற நம் நாடுகளுக்கு வருவதில்லை?" என்பதாக இருக்கும். அப்போது அவர்களுக்கு நான் விளக்கமான பதில் சொல்லியிருந்தாலும், அந்தப் பதில்களைத் திடமான நிலைக்குக் கொண்டுவரும் சம்பவங்கள் கடந்த வாரத்தில் நடைபெற்றிருக்கின்றன. அந்தச் சம்பவங்கள் உண்மையெனின், அந்த உண்மையும் மறைக்கப்பட்டிருக்கிறது. முதலில் அந்தச் சம்பவம் என்னவென்று பார்ப்போம்.



ஏலியன்கள் நம் நாடுகளுக்கு ஏன் வருவதில்லையென்று கேட்டவர்களை, ஆச்சரியமும், அச்சமும் உச்சத்தில் கொண்டுசென்று வைக்கப் போகும் சம்பவம் இது. இது உண்மையில் நடந்ததா? இல்லையா? என்று யாரும் என்னிடம் கேட்காதீர்கள். நடந்ததாக அடித்துச் சொல்கிறது ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ (Hindustan Times). வேறுபல ஊடகங்களும் அதை உறுதிப்படுத்துகின்றன. இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி என்பதால் அந்தச் சம்பவம் இந்தியாவில் நடைபெறிருக்கலாம் என்ற உங்கள் ஊகம் சரியானதுதான். அந்தச் சம்பவம் என்ன தெரியுமா?

கடந்த ஒரு வாரமாக ஏலியன்கள் என்று சொல்லப்படும் வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும்தட்டுகள் (UFO) டில்லியில் வந்து சென்றிருக்கின்றன. டில்லியில் எங்கு வந்து சென்றிருக்கின்றன தெரியுமா? இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தின் (Indira Gandhi International) அஓடுபாதைகளுக்குள் வந்து சென்றிருக்கின்றன. ஒரு தடவை, இரண்டு தடவைகள் அல்ல, ஐந்துக்கும் மேற்பட்ட தடவைகள் வந்து சென்றிருக்கின்றன. ஏலியன்கள், பறக்கும்தட்டுகள் வந்தன என்று சொன்னாலே போதும், வாய்விட்டுச் சிரித்துப் பகடி பண்ணப் பலர் இருக்கிறார்கள். அவர்களிலும் தப்பு இல்லை. காரணம் ஏலியன்களைக் கண்டதாகச் சொல்லும் பலர் கதையளந்து விட்டுச் சென்றதால், அனைத்துமே கேலிக்குரியதாகி விடுகின்றன. ஆனால், இம்முறை நடந்த சம்பவங்கள் அமெரிக்காவிலோ, மெக்சிக்கோவிலோ, பெல்ஜியத்திலோ நடைபெற்றவையில்லை, சிரித்துவிட்டு நகர்ந்து போக. இந்தியாவில், அதுவும் தலைநகரின் மிகமுக்கியமான இடத்தில். ஏலியன்கள் வந்து போயிருக்கிறார்கள். உங்கள் அருகிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பதால், இவை உண்மையானவைதானா? இல்லை பொய்யானவையா? என்று அறிவதில் உங்களுக்கு எந்தப் பிரச்சனையும், சிரமமும் இருக்கப் போவதில்லை.

நம்நாட்டு ஊடகங்களெல்லாம் நடிகர்சங்க தேர்தலிலும், மாட்டுக்கறி விவாதத்திலும் முழ்கிப் போயிருக்க, அந்தச் சோற்றுக்குள் இந்த ஏலியன் பூசனிக்காய் மறைக்கப்பட்டிருக்கிறது. எந்தத் தொலைக்காட்சியும் இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. இனியும் வாய் திறக்காமல் இருக்கப் போகின்றனவா என்று பார்க்கலாம்.



நடந்தது இதுதான்…………!


கடந்த வாரம், அக்டோபர் மாதம் 27ம் தேதி காலை 7:30 மணியளவில், இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் பணிபுரியும் ஒரு பணியாளர் 29ம் இலக்க ஓடுபாதைக்கு (Runway) மேலே ஒரு இனம் தெரியாத ஏதோவொன்று வானத்தில் மிதந்துகொண்டிருந்ததைக் கண்டார். அவருக்கு அது என்னவாக இருக்குமென்பதில் பெரும்குழப்பமிருந்தது. அதனால் அந்தச் சம்பவம் எந்தவிதமான சலசலப்புமிலாமல் அன்றைய தினம் அடங்கிப் போனது. ஆனால், அடுத்தநாள் புதன்கிழமை இரவு 10:15 மணியளவில், அதே 29ம் இலக்க ஓடுபாதைக்கு வந்து சேர்ந்த ‘எயார் விஸ்டாரா’ (Air Vistara) விமானத்தின் விமானி, ‘நான் விமானத்தை இறக்கும்போது, லேசர் வெளிச்சக் கற்றைகள் பாய்ச்சப்பட்டதால் தடுமாற்றத்துடன் விமானத்தைத் தரையிறக்க வேண்டியிருந்தது’ என்று முறையிட்டார். தரையிலிருந்து யாரோ லேசர் ஒளியைச் செலுத்துகிறார்களென்றுதான் விமானி நினைத்திருந்தார். ஆனால், அந்த விமான நிலையத்தின் சுற்றுவட்டாரத்தில் அப்படியொரு சம்பவம் தரையிலிருக்கும் மனிதர்களால் ஏற்படுத்தியிருக்கச் சாத்தியமேயில்லை என்று தெரிந்ததும், டில்லியில் அதிகாரிகளிடையே சிறிது பதட்டம் தொத்திக் கொண்டது.

இவற்றின் உச்சக்கட்டமாக, 30ம் தேதி வெளிக்கிழமையன்று மூன்று தடவைகள் மூன்று வெவ்வேறு நேரங்களில், அதே விமானநிலையத்தில் பறக்கும்தட்டுகள் தெரிந்தன.

காலை 10:44 மணியளவில், விமானப் பறப்புகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கட்டுப்பாட்டு அறையில் (Air Traffic Controller - ATC) அமர்ந்திருந்த இந்திய விமானப்படை அதிகாரியொருவர் (IAF) ஓடுபாதை 9-27 இற்கு மேலாக ஒரு பறக்கும்தட்டு பறந்து கொண்டிருப்பதாக முறைப்பாடு செய்தார். அத்துடன் தொடர்ச்சியாக, 10:50 மணிக்கு ஒன்றும், 10:55 மணிக்கு ஒன்றுமாக மூன்று பறக்கும்தட்டுகளை அவர் கண்டதாக அறிவித்தார். உடனடியாக விமானநிலையத்திலிருந்த இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரொன்று பறக்கும்தட்டுகளை நோக்கி அனுப்பப்பட்டது. ஆனால் ஹெலிகாப்டர்கள் எந்தப் பறக்கும்தட்டுகளையும் காணாமல் திரும்பி வந்தன.





காட்சிபடுத்தக்கூடிய எந்தவொரு சாட்சியும் இல்லாதபட்சத்தில் எதையும் செய்ய முடியாமல் போய்விட்டாலும், Intelligence Burereau, Central Industrial Security Force (CISF), Bureau for Civil Aviation Security ஆகியவற்றுடன் டில்லிப் போலீஸாரையும், இந்திய விமானப்படையையும் இறுக்கமான கண்காணிப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்துமாறும், சந்தேகப்படும்படியாகத் தெரியும் எந்தப் பொருளையும் சுட்டு வீழ்த்துமாறும் மேலிடத்திலிருந்து கட்டளை கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




இந்த நிலையில் இன்னுமொரு அதிர்ச்சியான செய்தி வேறொரு இடத்திலிருந்து வந்திருக்கிறது. இம்மாதம் 1ம் தேதி, அதாவது முந்தாநேற்றுப் பிற்பகல் 2 மணியளவில், கர்னாடகா மாநிலம் மைசூரின் சிறிய கிராமமொன்றில் சிவப்பு நிறத்தில் பறக்கும்தட்டு இறங்கியதை அந்தக் கிராம மக்கள் கண்டிருக்கிறார்கள். ஏழு வெவ்வேறு கிராமவாசிகள் கண்டதற்கான சாட்சிகளாக உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த மக்களுக்கு ஏலியன் என்னும் ஒன்று இருப்பதே தெரியாத நிலையில், அதைப்பற்றி சிந்திக்கக் கூட முடியாத நிலையில். வேற்றுலகவாசிகளைக் கண்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். அந்தச் சிவப்புப் பறக்கும்தட்டிலிருந்து இறங்கியவர்கள் மனிதர்களைப் போலவே இருந்ததாக நேரில் பார்த்த பெண்ணொருவர் சொல்லியிருக்கிறார்.

நம்நாடுகளுக்கு ஏலியனே வராதா? என்று கேட்டவர்களுக்கு பதில் சொல்லும் விதமாக இந்தச் சம்பவங்கள் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. இவை அனைத்துமே பொய்யாகவும், இட்டுக்கட்டிய கதைகளாகவும் இருக்கலாம். ஆனால் இந்தியாவுக்கு ரொம்பத் தூரத்தில் ஜேர்மன் நாட்டில் வசிக்கும் நான் இந்த விபரங்களை, உண்மையா? பொய்யா? என்று அறிந்து கொள்வதைவிட, இந்தியாவிலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் உங்களுக்கு அந்த உண்மையை அறிய அதிகச் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அதனால், இனி இந்த உண்மைகலைக் கண்டறிந்து சொல்லும் பொறுப்பு உங்களுக்கானது.

தற்செயலாக இந்தச் செய்திகள் உண்மையாக இருக்கும்பட்சத்தில், “இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்பட்டன?” என்பதையும் கண்டறியுங்கள். ஊடகங்கள் இவற்றை ஏன் இருட்டடிப்புச் செய்கின்றன என்றும் பாருங்கள்.

சரி, இனியாவது எழுதுகிறார்களா பார்க்கலாம்.

-ராஜ்சிவா-

குறிப்பு: இந்தப் பதிவு இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் செய்தியை அடிப்படையாகக் கொண்டது.