வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

May 12, 2017

அணுவைத் துளைத்து…..! (01)

 


கி.மு 400ம் ஆண்டளவுகளில் வாழ்ந்து வந்த கிரேக்க தத்துவ ஆசானான, டெமோகிரிடஸ் (Democritus), ஒரு பொருளின் பிரிக்க முடியாத மிகச்சிறிய துகளை ‘A-tomos’ என்று அழைத்தார். ‘அ-டோமோஸ்’ என்றால், ‘பிரிக்க முடியாதது’ (un-cuttable) என்று அர்த்தம். மண் துணிக்கையை அரைத்துச் சிறிதாக்கிக்கொண்டு செல்லும்போது, இறுதியாகப் பிரிக்கவே முடியாமல் எஞ்சும் சிறு துகள் வருமல்லவா? அதையே, ‘அடோமஸ்’ என்றார். அடோமஸிலிருந்து உருவான சொல் ‘Atom’. ஐரோப்பிய, அமெரிக்க மொழிகள் மற்றும் அறிவியல் தளங்களில், ‘Atom’ என்னும் சொல்லே பயன்படுகின்றது. தமிழில் ‘அணு’. திருக்குறளைத் தனித்தன்மையுடன் பெருமைப்படுத்திச் சொல்வதற்காக, ‘அணுவைத் துளைத்து, அதனுள் ஏழு கடல்களைப் புகுத்தும் வல்லமையுடையது குறள்’ என்று அவ்வை சொல்லியிருக்கிறாள். அணுபற்றி அவ்வை சொல்லியிருக்கிறாள் என்பதால் நாமும் தமிழராய்ப் பெருமை கொள்ளலாம். ஆனால், இன்று அணுவிற்குக் கொடுக்கப்படும் அடையாளமும், டெமோகிரிடஸ் மற்றும் அவ்வை சொல்லிய அணுவின் அடையாளமும் ஒன்று என்பதற்குச் சான்றுகள் இல்லை. அவர்கள் இருவரும், தாங்கள் வாழ்ந்த காலங்களில், மிகச்சிறிய துகளாக அறியப்பட்டவற்றை அடோமஸென்றோ, அணுவென்றோ அழைத்திருக்கிறார்கள். இன்று அணுவுக்குரிய அடையாளமும், புரிதலும் வேறானவை.




கி.மு.400 ஆண்டளவில் டெமோகிரிடஸ் அணுவைப் பற்றிக் கூறியதற்கு 2200 வருடங்களுக்குப் பின்னர்தான், அதாவது கி.பி.1808 இல், ‘ஜோன் டால்டன்’ (John Dalton) என்னும் இங்கிலாந்து வேதியியலாளர் அணுவைப் பற்றிய தெளிவான வரைவை முதன்முதலாக முன்வைத்தார். அதன்பின்னர் அணு, எலெக்ட்ரோன்கள், புரோட்டோன்கள், நியூட்ரோன்கள் என்பவற்றால் ஆனதென்று படிப்படியாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்புகள் எப்போது, யாரால் நிகழ்த்தப்பட்டன என்று நான் மேலும் விபரமாகத் தொடர்ந்து எழுதினால், இந்த இடத்திலேயே இதைப் போட்டுவிட்டு, ‘விவேகம்’ படத்தின் டீசரைப் பார்க்கப் போய்விடுவீர்கள். அதனால், அணுவின் ஆரம்ப சரித்திரத்தை இந்த இடத்தில் சற்று வைத்துவிடுவோம். இப்போது இதைப் பாருங்கள்.



ஒரு ‘அணுவின்’ (Atom) உருவத்தை நீங்கள் என்ன வடிவத்தில் கற்பனை செய்து வைத்திருக்கிறீர்கள்? புரோட்டோன்களும், நியூட்ரோன்களும் ஒன்றுசேர்ந்த கருவை, எலெக்ட்ரோன்கள் வட்டப் பாதையில் சுற்றுவது போலத்தானே உங்கள் மனதில் அணுவின் படம் வரையப்பட்டிருக்கிறது? சூரியனைச் சுற்றிவரும் கோள்களைப் போல, வட்டக் கோடுகளுடன் எலெக்ட்ரோன்கள் சுற்றுவதாகத்தானே தெரிந்து வைத்திருக்கிறீர்கள்? அணுவொன்றின் தன்மையைப் பொறுத்து அது எத்தனை எலெக்ட்ரோன்களைக் கொண்டிருக்கிறதோ, அதற்கேற்ப வட்டப் பாதைகள் இருக்கும். இப்படித்தான் அணு இருக்குமென்று நீங்கள் நினைத்தால், ஏமாந்து போவீர்கள். நவீன இயற்பியலின்படி, அணுவானது நீங்கள் நினைத்தே பார்க்க முடியாத வடிவத்தில் இருக்கும்.


நவீன இயற்பியலில், அணுவைச் சுற்றிக்கொண்டிருக்கும் எலெக்ட்ரோன்கள் ஒரு புகை மூட்டம்போல அல்லது முகில் கூட்டம்போல அணுக்கருவைச் சூழ்ந்திருக்கும். இதை ‘எலெக்ட்ரான் கிளௌட் மொடல்’ (Electron Cloud Model) என்பார்கள். இங்குதான் உங்கள் முதல் கேள்விகள் ஆரம்பமாகும். “அணுக்கருவைச் சுற்றும் சில எலெக்ட்ரோன்கள், நாம் தெரிந்து வைத்திருப்பதுபோல வட்டமாகத்தானே சுற்றி வர வேண்டும்? அவை எப்படிப் புகைபோலவோ, முகில்போலவோ அணுக்கருவைச் சூழ்ந்திருக்க முடியும்?”. இந்தக் கேள்விகளுக்கான பதில்கள்தான், நவீன அறிவியலின் விந்தை உலகின் கதவுகளாக இருக்கப் போகின்றன. இதன்மூலம் திறந்து விரியப் போகும் அறிவுலகத்தின் ஒவ்வொரு செயலும் நீங்கள் நம்ப முடியாதது. மாய யதார்த்தத் திரைப்படமொன்றைப் பார்க்கப் போகும் உணர்வுகளை உங்களுக்குத் தரப் போகிறது. யதார்த்த உலகில் எவை எவையெல்லாம் சாத்தியமற்றவையென நீங்கள் எண்ணிக்கொண்டிருப்பவை எல்லாம், இங்குப் பனிச்சறுக்குப் போல இலகுவாகச் சாத்தியமாகிவிடும்.

அந்தச் சாத்தியங்களை இனி நாம் ஒவ்வொன்றாகப் பார்க்கப் போகிறோம். அணுவைத் துளைத்து அதனுள் நுழையலாம். வாருங்கள்……! (இன்னும் வரும்)

- ராஜ்சிவா


4 comments:

  1. Wow nice sir. Interesting to read. Keep writing. Thumps up.

    ReplyDelete
  2. எலக்ட்ரான் சுற்றும் அளவற்ற வேகத்தால் பார்க்க முகில் போலத்தெரிகிறதா ?

    ReplyDelete
  3. ஔவையின் கருத்து அணு என குறளையும் -அதன் சிறு வடிவம் கருதி- ஏழ்கடல் புகுத்தி என்று குறளின் செறிவான கருத்து குறித்தும் குறுகத் தறித்த குறள் என்பது மயக்கமின்றி பொருள் குறித்துப் பேசுவதாகவும் கொள்ளத் தகும்.

    ReplyDelete
  4. ஔவையின் கருத்து அணு என குறளையும் -அதன் சிறு வடிவம் கருதி- ஏழ்கடல் புகுத்தி என்று குறளின் செறிவான கருத்து குறித்தும் குறுகத் தறித்த குறள் என்பது மயக்கமின்றி பொருள் குறித்துப் பேசுவதாகவும் கொள்ளத் தகும்.

    ReplyDelete