வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

June 22, 2016

பூமியிலிருந்து விண்வெளிக்கு மிகவும் அருகாமையிலிருக்கும் மலைச் சிகரம்


இன்று விஜய் டிவியின் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வி என்னை மிகவும் ஆசரியத்துக்குள்ளாக்கியது. “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அதை அறிந்துவைத்திருப்பது மிகவும் நல்லதில்லையா

கேட்கப்பட்ட கேள்வி இதுதான், “பூமியிலிருந்து விண்வெளிக்கு மிகவும் அருகாமையிலிருக்கும் மலைச் சிகரம் எது?” 


இந்தக் கேள்விக்கு அநேகமானவர்கள், ‘எவரெஸ்ட்’ என்றுதான் பதில் சொல்வார்கள். அபடித்தான் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களில் பெரும்பான்மையானவர்களும் சொன்னார்கள். ஆனால் சரியான பதில், ‘ஷிம்பொரஸ்ஸோ’ (Shimborazo) என்பதுதான். 





'ஈக்வாடோர்' நாட்டில் அமைந்துள்ள இந்த மலை 6384 மீட்டர்கள் உரரமாக, பூமத்திய ரேகையின் ஒரு மேட்டுப்பகுதியில் அமைந்திருப்பதால், இதுவே விண்வெளிக்கு மிக அருகில் இருக்கும் மலைச்சிகரமாக இருக்கிறது. இந்த ஷிம்பொரஸ்ஸோ மலையானது ஒரு எரிமலை என்பது விசேச தகவல்.

-ராஜ்சிவா-


May 30, 2016

ஏலியனைத் தேடி ஒரு அதிசயப் பயணம் (Breakthrough Starshot)

ஏலியன்களைப் பற்றி நான் அதிகமாக எழுதுகிறேன் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இல்லாத ஒன்றைப்பற்றியதான மூடநம்பிக்கையைப் பலரின் மனதில் வளர்த்து வருகிறேன் என்றும் சிலர் சொல்வதுண்டு. ஒருசிலர் ஒருபடி மேலே போய், ஏலியன்களைப் பற்றி எழுதுவதைக் கேலியாகப் பேசுவதுமுண்டு. ஏலியன்கள் என்னும் கான்செப்ட் நாம் பேய்களைப் பற்றியும், பகுத்தறிவாததுக்கு ஒவ்வாத சிலவற்றைப் பேசுவது போல அல்ல. ஏலியன்கள் என்பவை முழுமையான அறிவியல் சம்மந்தப்பட்டவை. பல ஆண்டுகளாக மாபெரும் விஞ்ஞானிகள் அண்டத்தின் ஒவ்வொரு அங்குலமாக, ‘அவர்கள் இருக்கிறார்களா?’ என்று தேடிக்கொண்டே இருக்கிறார்கள். இதற்காக பில்லியன் பில்லியனாக டாலர்கள் ஆராய்சிகளுக்கென்று கொட்டப்படுக்கொண்டே இருக்கின்றன. ‘இல்லாத ஒன்றை வகைதொகையற்ற பணத்தைச் செலவுசெய்து அறிஞர்கள் தேடுவார்களா?’ அவர்களுக்கு அதற்கான நம்பிக்கை இருக்கும்போது, அதன் சிறிய பகுதியைத்தான் நான் உங்களுக்கு கொடுத்துவருகிறேன். இனிச் சமீபத்தில் நடந்த மிகப்பெரிய ஏலியன் சம்மந்தமான சம்பவத்தைப் பார்க்கலாம். உலகில் எப்படியெல்லாம் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அவைபற்றி எந்தத் தகவலும் தெரியாமல், தேவையற்றவற்றைப் பேசிக்கொண்டு நம் காலலங்களைக் கழித்துக்கொண்டிருக்கிறோம். நான் சொல்லப்போகும் இந்தத் தகவலுடன், உங்களுக்கு மிகவும் தெரிந்த, உங்களோடு எப்போதும் சம்மந்தப்பட்ட ஒருவரும் இணைந்திருக்கிறார். அவர் யாரென்று தெரிந்து கொள்ளுங்கள்.


ஸ்டீபன் ஹாக்கிங் ஏலியன்கள்பற்றிப் பல சமயங்களில் கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்னர், 'ஏலியன்களைத் தேடும் முஅற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம். அது பூமிக்கு பெரும் ஆபத்தாகிவிடும்' என்று எச்சரிக்கை விடுத்தார். 'நாம் ஏலியன்களைத் தேடி, நாம் வளமானதொரு பூமியில் வாழ்கிறோமென்று மனிதர்களைவிடப் புத்திசாலிகளான ஏலியன்களுக்குத் தெரியப்படுத்தினால், அவர்கள், நம் பூமியை ஆக்கிரமித்துவிடுவார்கள்' என்றார். 'நம் பூமியை வந்து ஆக்கிரமித்துக் கொள்ளுங்கள்' என்று ஏலியன்களுக்கு நாமே அழைப்பிதழ் கொடுப்பது முட்டாள்தனம் என்றார். ஆனால், அதே ஸ்டீபன் ஹாக்கிங் ஏலியன்களைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டிருக்கிறார். அதுவும் எப்படி? படியுங்கள்.


ரஷ்யாவின் பில்லியனரான 'ஜூரி மில்னெர்' (Juri Milner) என்பவரும், ஸ்டீபன் ஹாக்கிங்கும் இணைந்து ஏலியன்களைக் கண்டுபிடிக்கும் திட்டமொன்றை உருவாக்கியிருக்கிறார். 100 மில்லியன் டாலர்கள் ஆரம்ப முதலீட்டில் இந்தத் திட்டம் உருவாக்கப்படுகிறது. ஸ்டீபன் ஹாக்கிங்கின் அறிவுடன் கோடீஸ்வரரான மில்னெரின் கோடிகளும் சேர்ந்து திட்டம் உருவாக்கப்படுகிறது. ஏலியன்களைத் தேடும் இந்தத் திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி (12.04.2016) உலகிற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.




ஒரு ஸ்டாம்பின் அளவுகொண்ட மிகச்சிறிய விண்கலங்கள் பலவற்றை உருவாக்கி, அவை அனைத்தையும் 'அல்பா செண்டாரி' (Alpha centauri) நட்சத்திரங்களை நோக்கி அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கான தொகையில் அனுப்பப்பட இருக்கும் மிகச்சிறிய விண்கலங்கள் ஒளியின் வேகத்தின் 20% அளவில் வேகத்துடன் பயணம் செய்யக் கூடியதாக உருவாக்கப்படுகின்றன. அவற்றை ‘நானோ விண்கலங்கள்’ என்கிறார்கள். அந்த விண்கலங்கள், அல்பா செண்டாரி நட்சத்திரத்தின் சுற்று வட்டாரத்தை அடைவதற்கு கிட்டத்தட்ட இருபது வருடங்கள் எடுக்கும். அல்பா செண்டாரி என்பது மூன்று நட்சத்திரங்களைக் கொண்டது. அல்பா செண்டாரி A, அல்பா செண்டாரி B, அல்பா செண்டாரி C என்று அவைகளுக்குப் பெயரிடப்பட்டிருக்கின்றது. அவை பூமியிலிருந்து 4.2 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கின்றன. அல்பா செண்டாரி நட்சத்திரங்களுக்கு அண்மையில் உள்ள கோள்களில் ஏலியன்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இந்த 4.2 ஒளியாண்டு தூரத்தை, ஒளியின் 20 சதவீதமளவிலான வேகத்தில் அடைவதற்குக் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் தேவைப்படும். 9.46 பில்லியன் கிலோமீட்டர்கள் தூரத்தில் அல்பா செண்டாரி நட்சத்திரங்கள் இருக்கின்றன. இந்தப் பயணத்திற்கு ஆரம்பத்தில் 100 மில்லியன் டாலர்கள் முதலிட்டாலும், திட்டம் முழுமையடைய மொத்தமாக ஐந்து பில்லியன் டாலர்கள் வரை செலவாகலாம் என்று கணித்துள்ளார்கள். இந்தச் சமயத்தில்தான் உங்கள் நண்பர் இதற்குள் தன் பங்களிப்பும் இருக்க வேண்டுமென்று விரும்பி, திட்டத்தினுள் நுழைகிறார். அந்த நண்பர் வேறு யாருமல்ல, பேஸ்புக் நிறுவணரான மார்க் ஸுக்கர்பேர்க்.


மில்னெரும், ஸ்டீபன் ஹாக்கிங்கும் இணைந்து அமைத்த திட்டத்திற்கு முதலீடு செய்வதற்கு பேஸ்புக் நிறுவனரான மார்க் ஸுக்கர்பேர்க்கும் கைகோர்த்துள்ளார். மார்க் ஸுக்கர்பேர்க்கும் இவர்களுடன் இணைந்ததால், இந்தத் திட்டம் மிகவும் பிரமாண்டமான வடிவத்தையெடுக்குமென விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இப்படி, ஏலியனைத் தேடி பில்லியன்களில் பணத்தை இறைத்து திட்டமிடுகிறவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. உலக மகா விஞ்ஞானிகளும், கோடீஸ்வரர்களும். அவர்களே ஏலியன்கள் இருக்கின்றன என்று சொல்லும்போது, நாம் இல்லையென்று சொல்வது நியாயமா?


பூமியில் இருக்கும் நமக்கு மிக அருகில் காணப்படுபவை 'அல்பா செண்டாரி' நட்சத்திரங்கள். இவை மொத்தமாக மூன்று நட்சத்திரங்களாகும். அதில், 'அல்பா செண்டாரி A' நட்சத்திரமும், 'அல்பா செண்டாரி B' நட்சத்திரமும் இரட்டை நட்சத்திரங்களாகும். இரட்டை நட்சத்திரங்களை ‘பைனரி ஸ்டார்ஸ்’ (Binary Stars) என்பார்கள். இவையிரண்டும் இரட்டைப் பிறவிகள் போல, ஒன்றையொன்று சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவை இப்படிச் சுற்றிவர எடுக்கும் காலம் 79.91 வருடங்கள். இந்த இரண்டு நட்சத்திரங்கள் சுற்றிக்கொள்ளும் நீள்வட்டப்பாதையின் மையப்புள்ளியிலிருந்து பூமியானது 4.36 ஒளிவருடங்கள் தூரத்தில் இருக்கின்றது. ஆனால், இந்த நட்சத்திரங்களில் மூன்றாவது நட்சத்திரமான, 'அல்பா செண்டாரி C' நட்சத்திரமே பூமிக்கு மிக அருகில் இருக்கிறது. அது இருப்பது 4.24 ஒளியாண்டுகள் தூரத்தில். 'அல்பா செண்டாரி C' நட்சத்திரத்தை 'புராக்‌ஷிமா செண்டாரி' (Proxima Centauri) என்னும் விசேசப் பெயருடனும் அழைப்பார்கள். இது ஒரு 'சிவப்புக் குள்ள' நட்சத்திரமாகும் (Red Dwarf). ஏனைய நட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது, மிகவும் ஒளி குறைந்த நட்சத்திரம் இது. A,B நட்சத்திரங்களிலிருந்து 0.24 ஒளியாண்டுகள் தூரத்தில் 'புராக்‌ஷிமா செண்டாரி' இருக்கிறது.


அல்பா செண்டாரியின் மூன்று நட்சத்திரங்களுக்கும் அருகாமையில், நம் பூமியை ஒத்த பல வெளிக்கோள்கள் (Exoplanets) இருப்பதைக் 'கெப்ளர்' தொலைநோக்கிக் கருவி கண்டுபிடித்திருக்கிறது. அவற்றில் குறிப்பாக, 'அல்பா செண்டாரி B' நட்சத்திரத்தைச் சுற்றிவரும் கோளான, 'அல்பா செண்டாரி Bb' என்னும் பெயரிடப்பட்ட கோள் ஒன்றில், ஏலியன்கள் வாழலாம் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் திடமாக நம்புகின்றனர். சரியாகக் கவனியுங்கள் 'அல்பா செண்டாரி Bb' என்பது ஒரு நட்சத்திரம் அல்ல. அது ஒரு கோள். 'அல்பா செண்டாரி B' நட்சத்திரமானது சூரியனைவிடச் சற்றுச் சிறியது. கிட்டத்தட்ட சூரியனைப் போன்றது என்றும் சொல்லலாம். அதைச் சுற்றிவரும், 'அல்பா செண்டாரி Bb' என்னும் கோளும் கிட்டத்தட்டப் பூமியைப் போலவே அமைந்திருக்கின்றது. இந்தச் சாத்தியங்களை வைத்து, அந்தக் கோளில் ஏலியன்கள் வசிக்கலாம் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்திருக்கிறார்கள். இந்தக் கோளையும், ஏனைய கோள்களையும் குறிவைத்தே, ஸ்டீபன் ஹாக்கிங், யூரி மில்னெர், மார்க் சுக்கர்பேர்க் ஆகிய மூவரின் கூட்டணி, ஏலியனைத் தேடும் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறது.


இன்று, அதி நவீனமாக அமைக்கப்பட்ட விண்வெளி ராக்கெட்டுகளில், வேகமாகச் செல்லக் கூடிய ராக்கெட்டில் பயணம் செய்கிறோம் என்று வைத்துக் கொண்டால், 'அல்பா செண்டாரி' நட்சத்திரங்களை அந்த ராக்கெட் அடைவதற்கு 30,000 வருடங்கள் எடுக்கும். அதாவது நானூறு தலைமுறைகள் இந்த இடைக் காலத்தில் உருவாகியிருக்கும். அதனால், நம் காலத்திலேயே அங்கு செல்ல வேண்டும் என்பதற்காகப் புதுத் திட்டமொன்றை, ஸ்டீபன் ஹாக்கிங் குழுவினர் உருவாக்கியிருக்கிறார்கள். எடையிலும், அளவிலும் மிகவும் குறைந்த, நானோ வின்கலங்களை (Nanocraft) அவர்கள் அமைக்கத் தீர்மானித்திருக்கின்றனர். அவை ஒளிக்கற்றைகளின் (Light beam) அழுத்தத்தினால் மிகைவேகத்துடன் செல்லக் கூடியவாறு உருவாக்கப்பட இருக்கின்றன. ஆயிரக் கணக்கான நானோ விண்கலங்களை அனுப்பி, அவை 20 வருடங்களில் அல்பா செண்டாரியைச் சென்றடைய வைக்கப் போகிறார்கள். அந்த விண்கலங்களில் புகைப்படக் கருவிகளும், தொலைத்தொடர்புக் கருவிகளும், அரிய விஞ்ஞான சாதனங்களும் பொருத்தப்பட்டிருக்கும். இருபதாண்டுகளில், 'அல்பா செண்டாரி' நட்சத்திரங்களை அவை சென்றடைந்ததும், அங்கிருந்து பெறும் தகவல்களைப் பூமிக்கு அனுப்பி வைக்க ஆரம்பிக்கும். அந்தத் தகவல்கள் பூமியை வந்தடைவதற்கு மேலும் நான்கு வருடங்களெடுக்கும். காரணம், நான்கு ஒளியாண்டுகள் தூரம் இடையில் இருப்பதே! மொத்தமாக இருபத்தியைந்து வருடத் திட்டமிது. இன்னும் இரண்டு வருடங்களில் ஆரம்பமாக இருக்கிறது. இந்தத் திட்டத்திற்கு 'Breakthrough Starshot' என்று பெயரிட்டுள்ளார்கள்.


இந்தத் திட்டம் வெற்றியளித்து, ஏலியன்கள் இருக்கின்றன என்றோ அலது இல்லையென்றோ 25 வருடங்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டால், இதை எழுதும் நானோ, ஸ்டீபன் ஹாக்கிங்கோ, மில்னெரோ உயிருடன் இருப்போமோ தெரியவில்லை. ஆனாலும், இதைப்படிக்கும் உங்களில் பலர் நிச்சயம் உயிருடன் இருப்பீர்கள். அப்போது இந்த ராஜ்சிவாவை ஒருதரம் நினைத்துக் கொள்ளுங்கள்.

-ராஜ்சிவா-


May 20, 2016

அண்டமும் குவாண்டமும் - பகுதி 3

இந்தத் தொடரைப் படிப்பதற்கு முன்னர் ஒரு அன்பான வேண்டுகோள். தொடரை எழுதுவதற்காக நான் மிகவும் சிரமத்தை எடுத்து வருகிறேன். தயவுசெய்து இந்தத் தொடரில் வரும் கட்டுரைகளை யாரும் காப்பிசெய்து, தங்கள் இணையத்தளத்தில் பயன்படுத்த வேண்டாம். அப்படிப் பயன்படுத்துபவர்கள், தயவுசெய்து இந்த ஆக்கத்தை எழுதிய என் பெயரைக் குறிப்பிட்டுப் பதிவு செய்யுங்கள். கடந்த முறையும் இதுபோன்ற கையாடல்களினாலேயே தொடரை இடை நிறுத்தினேன். இதைத் தொடர்ந்து எழுதுவதற்கு நீங்கள்தான் உதவவேண்டும். என் பெயரில்லாமல், இந்தக் கட்டுரைகள் இணையத்தில் எங்கு காணப்பட்டாலும், எழுதுவதை நிறுத்திவிடுவேன் என்று மனவருத்தத்துட கூறிக் கொள்கிறேன். இதை நான் சொல்வதற்குக் காரணம், இக்கட்டுரைகள் தொகுப்பாக ஒரு புத்தகமாக வெளிவர இருக்கிறது என்பதே . நன்றி.

-ராஜ்சிவா-

கடந்த பதிவில் ஏற்பட்ட சந்தேகங்களில் பிறந்த கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய இந்த வேளையில், குவாண்டம் இயங்கியலின் (Quantum Mechanics) அடிப்படையான ஒரு முக்கிய விசயத்தைச் சொல்லப் போகிறேன். குவாண்டம் என்பது ஆச்சரியமும், மர்மமும், நம்ப முடியாத அதிசயமும் நிறைந்தது. "அட! இது எப்படிச் சாத்தியம்?" என்று அடிக்கடி உங்களைக் கேட்க வைக்கும். குவாண்டத்தின் நடவடிக்கைகள், அணுவைவிடச் சிறிய துகள்களினால் நடத்தப்படுபவை. எலெக்ட்றான், ஃபோட்டான் போன்ற மிகச்சிறிய துகள்கள் அவை. இவற்றைப்பற்றி உங்களுக்குச் சலிப்பேற்படும் அளவுக்கு அடிக்கடி சொல்வேன். அதனால், இப்போது ஏதாவது புரியவில்லையென்றால் கவலைப்பட வேண்டாம். சீக்கிரம் எல்லாமே புரியும்.

குவாண்டம் இயங்கியலில், 'இரட்டைத்துளைப் பரிசோதனை' (Double Slit Experiment) என்ற ஒன்று உண்டு. இதுவே குவாண்டம் இயங்கியலில் மிக அடிப்படையானது. அது என்னவென்று உங்களுக்கு இன்று சொல்லலாமென நினைக்கிறேன். இயற்பியலில் பெரும் விந்தையானது இது.

'துகள்களைத்' (Particles) திடப்பொருட்கள் போன்றவை என்று சொல்லலாம் (உண்மையில் அவை பொருட்களல்ல, ஒரு விளக்கத்திற்காக அப்படிச் சொல்கிறேன்). இந்தத் துகள்கள் பல ஒன்று சேர்ந்து உருவானதே அணுவாகும் (Atom). அணுக்கள் பல ஒன்று சேர்ந்து பொருட்கள் உருவாகின்றன. அதனால், ஒரு பேச்சுக்கு அவற்றை மிகமிகச்சிறிய திடப்பொருட்கள் என்றுஎடுத்துக் கொள்ளலாம். திடப்பொருளொன்றை நீங்கள் உங்களுக்கெதிரே இருக்கும் சுவரில் எறிந்தால், அது அந்தச் சுவரில் பட்டுக் கீழே விழுமல்லவா? அதுபோல, அணுத்துகள்களையும் சுவர் நோக்கி எறிந்தால் அதில் பட்டு விழவேண்டுமல்லவா? இப்போது நாம் திடப்பொருளாக இருக்கும், சிறிய வெள்ளி நிற உருண்டை வடிவக் குண்டுகளை எடுத்து, அவற்றை 'எயார் கன்' (Air Gun) துப்பாக்கியில் நிரப்பி எதிரே இருக்கும் சுவரை நோக்கிச் சுடுவோம். அதே நேரத்தில் சுவருக்கும் துப்பாக்கிக்கும் இடையில், நேர்கோடுபோன்ற இரண்டு துளைகளைக் கொண்ட தகடு ஒன்றையும் வைப்போம் (புரியவில்லையென்றால், படங்களைப் பார்க்கவும்).



இப்போது சுவரை நோக்கிச் சுடும்போது, வெள்ளிக் குண்டுகளில் சில அந்தத் தகட்டில் பட்டுக் கீழே விழ, எஞ்சியவை அந்த இரண்டு நேர்த்துவாரங்களினூடாகச் சென்று சுவரைத் தாக்கும். அந்த நேர்த்துவாரங்களினூடாக நேராகச் சென்ற குண்டுகள் சுவரிலும் இரண்டு நேர்கோடுகளை ஏற்படுத்தும். நான் சொல்வது புரிகிறதா? இது புரிந்தால்தான் நான் மேலே செல்ல முடியும். புரியவில்லையென்றால், மீண்டுமொருமுறை படியுங்கள். அத்துடன் படங்களையும் பாருங்கள். புரிந்தவுடன் மேலே செல்லலாம்.

வெள்ளி நிறத்திலான சிறிய துப்பாக்கிக் குண்டுகளை, இரண்டு நேர்கோட்டுத் துவாரங்கள் உள்ள தகட்டினூடாகச் சுவரொன்றை நோக்கிச் சுடும்போது, அந்தத் துவாரங்களினூடாகச் சென்ற குண்டுகள் நேர்கோடு போன்ற அடையாளத்தைச் சுவரில் ஏற்படுத்தும். இது சாதாரணமாக வெள்ளி நிறத் துப்பாக்கிக் குண்டுகள் போன்ற திடப்பொருட்களுக்கு நடைபெறுவது. இப்போது, இதே பரிசோதனையைத் துகள்களை வைத்துச் செய்து பார்க்கலாம். வெள்ளிக் குண்டுக்குப் பதிலாக நாம் இப்போது பயன்படுத்தப் போவது, அணுத்துகளான எலெக்ட்றானை. எலெக்ட்றான்களைச் சுடக்கூடிய துப்பாக்கியொன்றைத் தயார் செய்வோம். முன்னர் போலவே எலெக்ட்றான்கள் நுழையக்கூடிய சிறிய இரண்டு நேர்கோட்டுத் துவாரமுள்ள தகட்டையும் எடுத்துக் கொள்வோம். சுவருக்குப் பதில் எலெக்ட்றானை ஒளிரச் செய்யும் திரைபோன்ற சுவரையும் உருவாக்குவோம். இப்போது, எலெக்ட்றான்களை அந்தத் தகட்டின் துவாரங்கள் மூலமாகச் சுவர் நோக்கிச் சுட்டுப் பார்ப்போம். இப்போதும் சுவரில் இரண்டு நேர்கோடுகள் தெரிய வேண்டுமல்லவா

"அய்யோ! அங்கே தெரிவது இரண்டு கோடுகளல்ல. அடுத்தடுத்து இடைவெளிகள் விட்டுப் பல கோடுகள் தெரிகின்றனவே!". இது எப்படிச் சாத்தியம்? எலெக்ட்றானும் ஒரு பார்ட்டிகல்தானே (துகள்) அதாவது, திடப்பொருள் அல்லவா? அப்படியென்றால் இரு கோடுகள்தானே வர வேண்டும்? எப்படிப் பல கோடுகள் வந்தன? இதை ஆராய்ந்தபோதுதான் ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. எதிர்கால அறிவியலையே தலைகீழாகப் புரட்டிப் போட்ட ஆச்சரியம் அது.

நேர்கோட்டில் சென்று இரண்டு நேர்கோட்டை உருவாக்க வேண்டிய எலெக்ட்றான் துகள்கள், பல கோடுகளை உருவாக்கியிருந்தன. இது எப்படி நடைபெறலாம் என்று சிந்தித்தபோது, இயற்கையில் நடைபெறும் ஒரு செயற்பாடு அதற்கான விடையைத் தந்தது. அமைதியாக, எந்தச் சலனமும் இல்லாத குளம் ஒன்றில் ஒரு கல்லை போடுங்கள். அது வட்ட வடிவமான பல அலைகளை அடுத்தடுத்து உருவாக்கி, நகர்ந்துகொண்டே இருக்கும். இந்தச் செயல்பாட்டை நீங்கள் அனைவரும் கவனித்திருப்பீர்கள். இப்போது, ஒரு கல்லைக் குளத்தில் போட்டு அதன் அலைகள் உருவாகும்போது, இன்னுமொரு கல்லை அதற்கு அருகே சற்று இடைவெளிவிட்டுப் போடுங்கள். இப்போது நீங்கள் இரண்டு வட்டவடிவங்களினாலான அலைகள் தொடர்ச்சியாய்த் தோன்றுவதைத்தானே காணவேண்டும். ஆனால், அப்படி நடக்காது. இரண்டு கற்களினாலும் உருவாகிய வட்டங்கள் தனியாக நகர்ந்து பின்னர் ஒன்றையொன்று சந்தித்து நகரும்போது, பல வட்டங்களின் வடிவங்கள் தோன்றும். இது அலைகளாகச் செல்பவைகளுக்கு இருக்கும் ஒரு விசேசச் செயல்பாடு. இரண்டு வட்ட அலைகளும் சந்தித்து நகரும்போது, ஒன்றை ஒன்று அந்த வட்ட வடிவங்களை நீக்கியும் சேர்த்தும் நகர்வதால், பல வட்ட அலைகள் தோன்றுகின்றன.

இந்தச் செயற்பாடுதான் நாங்கள் எலெக்ட்றான்களைச் சுடும்போதும் நடைபெற்றிருக்கிறது என்று புரிந்து கொண்டார்கள் விஞ்ஞானிகள். அதாவது, எலெக்ட்றான்களைச் சுடும்போது, அவை அலைகளாகவே சென்றிருக்கின்றன? இது எப்படி நடக்க முடியும்? எலெக்ட்றான்கள் துகள்களாகும். அலை என்பது துகளுக்கு நேர்மாறானது. ஒரு துகள் எப்படி அலையாக மாற முடியும். இதற்கும் விஞ்ஞானிகளுக்கு இயற்கையிலிருந்தே ஒரு பதில் கிடைத்தது.

நீரானது அலையாக அசைகின்றது. நீரை எடுத்துக் கொண்டால், அதுவும் H2O என்னும் மூலக்கூறுகளினால்தான் உருவானது. மூலக்கூறுகளும் ஒருவகையில் திடப்பொருள் போன்றவைதான். ஆனாலும், நீர் அலையாக அசைகிறது. எனவே பல துகள்கள் ஒன்றாகச் சேர்ந்தால், அவை அலையாக நகரலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள். இதுபோலவே எலெக்ட்றான்களையும் கூட்டமாகச் சுடும்போது, அவை அலைகளாகச் சென்றிருக்கலாம் என்று முடிவு செய்தார்கள். ஆனாலும், அதைச் சரியாகத் தீர்மானிப்பதற்கு, எலெக்ட்றான்களை மொத்தமாகச் சுடாமல், ஒவ்வொன்றாகத் தனித்தனியாகச் சுட்டுப் பார்க்கலாம் என்று முடிவு செய்தார்கள். அதன்படி ஒவ்வொரு எலெக்ட்றானையும் தனியாகச் சுட்டும் பார்த்தார்கள். அங்கு அவர்கள் கண்டது மாபெரும் அதிசயம். எங்கும் நடக்க முடியாத ஒரு செயல்பாடு. இன்றுவரை விஞ்ஞானிகள் பிரமித்துப் பார்க்கும் அதிசயம் அது.

ஒரேயொரு எலெக்ட்றானை இரட்டைத்துவாரத் தகட்டினூடாகச் சுட்டபோது, அவர்கள் கண்டது என்ன தெரியுமா? அங்கும் அலைகள் உருவாக்கும் பல கோடுகள் காணப்பட்டன. திகைத்துப் போனார்கள் விஞ்ஞானிகள். ஒரு எலெக்ட்றான் எப்படி அலையை உருவாக்க முடியும்? எலெக்ட்றான் என்ன மாயாவியா? இல்லைப் பேயா? அப்போதுதான் விஞ்ஞானிகளுக்கு நடந்த உண்மை தெரிந்தது. ஒரு எலெக்ட்றானைச் சுட்டபோது, அந்த ஒரேயொரு எலெக்ட்றான், ஒரே நேரத்தில் இரண்டு துவாரங்களினூடாகவும் தனித்தனியாகச் சென்றிருக்கிறது. அதாவ,து ஒரு எலெக்ட்றான், இரண்டு எலெக்ட்றான்கள் போலச் செயல்பட்டு, இரண்டு துளைனூடாகச் சென்று அலைபோன்ற வடிவத்தை உருவாக்கியிருக்கின்றது. இது நம்பவே முடியாத விந்தை.

எலெக்ட்றான் ஒரு சமயத்தில் துகளாகவும் இருக்கிறது, அலையாகவும் இருக்கிறது. அறிவியலில் இந்தக் கண்டுபிடிப்பு ஒரு மைல்கல்லாகும். இதைத்தான் 'அணுத்துகள்களின் இரட்டை நிலை' என்பார்கள். இதை 'ஸ்ரோடிங்கெர்' (Schroedinger) என்னும் ஜேர்மன் இயற்பியலாளர் ஒரு பூனையை வைத்து அழகாக விளக்கியிருந்தார். இதைப்பற்றி நானும் 'அணுத்துகள்களின் இரட்டை நிலையும், ஸ்ரோடிங்கெரின் பூனையும்' என்ற மிக நீண்டதொரு கட்டுரையை உயிர்மைக்காக எழுதி, அது பலரால் பாராட்டப்பட்டது. 'இறந்தபின்னும் இருக்கிறோமா?' என்ற என் புத்தகத்தில் அந்தக் கட்டுரை இருக்கிறது. முடிந்தால் படித்துப் பாருங்கள் இல்லையென்றால் சொல்லுங்கள் அதுபோன்ற ஒரு விளக்கத்தை இங்கும் எழுதுகிறேன்.

அணுத்துகள்களின் இரட்டை நிலையின் விந்தை இத்துடன் முடிந்துவிடவில்லை. யாரும் நம்பவே முடியாத வேறொரு விந்தை அது. சொல்லப்போனால், ஸ்ரோடிங்கரும் அததான் விளக்கினார். அது என்னவென்பதை நாம் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

-ராஜ்சிவா-


அண்டமும் குவாண்டமும் - பகுதி 2

கடந்த பகுதியில் சிலர் கேட்டிருந்த கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்காமல், நான் அடுத்துச் செல்வதில் அர்த்தமேயில்லை. குவாண்டம் இயற்பியலைப் பிரமிப்புடனும், அந்நியமாகவும் பலர் பார்ப்பதற்குக் காரணம், அதன் விளங்காத்தன்மைதான். 'இவர்கள் ஏதோ சொல்கிறார்கள். அது எனக்குப் புரியவில்லை ஆனால் பிரமிப்பாக இருக்கிறது, அதனால் அது நிச்சயம் பெரியதொரு விசயமாகத்தான் இருக்கவேண்டும்’ என்று ஆச்சரியமாகப் பார்த்துவிட்டு விலகிக்கொள்கிறர்கள். இனி அந்தப் பிரமிப்பும், விளக்கமின்மையும் தமிழர்களுக்குக் குறைந்தபட்சமாவது இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில், என்னால் முடிந்தளவுக்கு, குவாண்டம் இயற்பியலைத் தமிழில் சொல்லிப் புரியவைக்க முயற்சி செய்கிறேன். அதனால், படிப்பவர்களுக்கு எந்தச் சந்தேகம் ஏற்பட்டாலும், அவற்றை முதலில் சரி செய்துவிட்டு மேலே தொடரவேண்டும்.

திரு.பொன்முடி வடிவேல் அவர்கள் ஒரு கேள்வி கேட்டிருந்தார்.

‘பெருவெடிப்பின்போது (Big Bang) அண்டமானது பிளாங்க் நேரம் (Planck Time) என்னும் குறுகிய கணத்தில் விரிவடைந்திருந்தால், அது பிளாங்க் அளவுதான் (Planck Length) விரிவடைந்திருந்திருக்க முடியும்? பெரிய அளவில் அண்டமாக விரிவடைந்திருக்க முடியாது’ என்பதுதான் அந்தக் கேள்வி. அவரின் கேள்விக்கு அடிப்படையாக இருப்பது, ஒளியின் வேகம். அதாவது, ஒளியைவிட அதிக வேகத்தில் எதுவும் நகர முடியாதென்று இயற்பியல் சொல்கிறது. அப்படியெனில், அண்டம் ஒளியின் வேகத்தில் விரிவடைந்திருந்தால், பிளாங்க் அளவுதான் அதன் விரிவு இருக்கும்.


அவரது கேள்வி மிகச்சரியானதுதான். அதற்கான விளக்கத்தை முதலில் நாம் பார்க்கலாம். விளக்கம் சற்றே பெரிதாகத்தான் இருக்கும். ஆனாலும், நமக்கு நிறைய நேரம் இருக்கிறதே! விளக்கமாகப் பார்ப்போம்.


‘பிக்பாங்’ பெருவெடிப்பிற்கு முன்னர், அண்டம் மிகச்சிறியதொரு புள்ளியாகத்தான் இருந்தது. அந்தப் புள்ளியை, ‘ஒருமைப் புள்ளி’ (Singularity) என்பார்கள். அந்த ‘ஒருமைப் புள்ளி’ வெடித்துச் சிதறியதால் பேரண்டம் உருவாகியது. ஆனால், நிஜத்தில் அங்கு நடந்தது ஒரு வெடிப்பேயல்ல. அதைப் பெருவிரிவு (Expansion) என்பார்கள். திடீரென ஏற்பட்ட ஒரு விரிவு. அவ்வளவுதான். ஒரு பிளாங்க் நேரத்தில் அண்டமாக மாறிவிட்ட ஆச்சரிய விரிவு. அந்த விரிவு, ஒளியின் வேகத்தில் நடைபெற்றிருக்கவில்லை. அதைவிட அதி… அதி… அதிவேகத்தில் நடந்திருந்தது. சொல்லப் போனால், அதை வேகம் என்றே சொல்ல முடியாது. சிங்குலாரிட்டி என்பது, வேகம், நேரம், தூரம் என்று எதுவுமேயில்லாத சூனியக் கணம். ‘அந்த விரிவு ஏற்படுவதற்கு முன்னர் என்ன நடந்தது?” என்னும் கேள்வி இன்றும் பலரால் கேட்கப்படுகிறது. இந்தக் கேள்வி உங்களுக்கும்கூட இருக்கலாம். மனிதனால் கற்பனை செய்து பார்த்துக்கொள்ள முடியாத ஒரு நிலை.

நான் இப்போது சொல்லப் போவதை, உங்கள் அனுபவத்தில் நடந்த எதனுடனும் ஒப்பிட்டுப் பார்க்கமல், வெற்றுக் காகிதம் போலிருந்து சிந்தித்துப் பாருங்கள்.


‘பிக்பாங்’ என்னும் பெருவிரிவு நடக்கும் கணத்துக்கு முன்னர் நேரம் என்பது கிடையாது. அது ஒரு மிகச்சிறிய புள்ளியாக இருந்ததால், அங்கு தூரமும் கிடையாது. நேரமும், தூரமும் இல்லாத இடத்தில் வேகமும் இல்லை. எப்போது வெருவிரிவு நடந்ததோ, அந்தக் கணத்திலிருந்துதான் நேரம், தூரமென்பவையே ஆரம்பமாகின. நேரம், தூரம் இல்லாமல் இருபதை உங்களால் கற்பனைசெய்து பார்க்க முடியாது. காரணம், நீங்கள் எதைக் கற்பனை செய்வதானாலும், அது உங்கள் வாழ்வில் நடந்த சம்பவம், அடைந்த அனுபவம், கண்ட காட்சிகள் மற்றும் பொருட்கள் சார்ந்தவையாகவே இருக்க முடியும். அதனால், நீங்கள் அறிந்தேயிருக்காத, நேரம், தூரம் அற்ற ஒரு நிலையைக் கற்பனை செய்யமுடியாது. இதை ஐன்ஸ்டைன் இப்படி விளக்கினார். “பூமியின் வடதுருவத்திற்கு, வடக்காக என்ன இருக்கிறது என்று கேட்டால், என்ன பதில் உங்களிடம் இருக்குமோ, அது போன்றதொரு பதில்தான் இங்கும் இருக்கும்” என்றார்.


பிக்பாங்குக்கு முன்னர் என்னவென்ற குழப்பத்திற்குப் பதிலாக வேறுசில கோட்பாடுகளும் சொல்லப்படுவதுண்டு.


‘நம் அண்டத்தில் பிக்பாங் என்ற ஒன்றே நிகழவில்லை’ என்பது அதில் ஒன்று.


‘அண்டம் உருவாகவில்லை, அது எப்போதும் இருந்துகொண்டேயிருக்கிறது’ என்பது இன்னொன்று.


‘நம் அண்டம் ஒன்றல்ல, பல. எண்ணிலடங்காத முடிவிலி எண்ணிக்கையில் அண்டங்கள் இருக்கின்றன. அதாவது, ‘ஓரண்டம்’ (Universe) என்பது இல்லை. ‘பல அண்டங்கள்’ (Multiverse) தான். பல அண்டங்களில், ஒவ்வொரு அண்டமும் நீர்க்குமிழிகள்போல அடுத்தடுத்து சேர்ந்திருக்கின்றன. அவை ’மென்சவ்வுகளினால்’ (Membrane) பிரிக்கப்பட்டிருக்கின்றன. அதை நீங்கள் இப்படிக் கற்பனைசெய்து பார்க்கலாம். சின்ன வயதில் சோப்பினால் செய்த குமிழிகளை உருவாக்கி விளையாடியிருப்பீர்கள் அல்லவா? அப்படி விளையாடும்போது, இரண்டு சோப் குமிழிகள் ஒன்றாகச் சேர்ந்து மெல்லிய சோப்பின் சவ்வினால் பிரிக்கப்பட்டிருக்குமல்லவா? அதுபோலக் கோடானகோடி அண்டங்கள் முடிவில்லாத் தொகையுடன் ஒட்டியிருக்கின்றன.




இதை இன்னுமொரு விதமாகப் பாருங்கள். பிக்பாங் விரிவு 13.8 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் நடந்ததாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. அப்படிப் பார்த்தால், பிக்பாங் புள்ளியிலிருந்து அண்டத்தின் ஒரு எல்லைவரை 13.8 பில்லியன் ஒளியாண்டுகள் அளவு இருக்க வேண்டும். அண்டம், பிக்பாங் மையப் புள்ளியிலிருந்து வட்டமாக விரிந்தது என்று எடுத்துக் கொண்டால், இருபக்க எல்லைகள் 27.6 பில்லியன் ஒளியாண்டுகள் அளவாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது நம் அண்டம் மையத்திலிருந்து ஒருபக்க எல்லைவரை 46 பில்லியன் ஒளியாண்டுகள் பெரிதாக இருக்கிறது. ஒரு எல்லையிலிருந்து மறு எல்லை வரை 92 பில்லியன் ஒளியாண்டுகள் விரிவடைந்திருக்கிறது. இந்தக் கணிப்புக்கூட, நம்மால் அதுவரைதான் பார்க்க முடிகிறது என்பதை வைத்துத்தான். அதன் விரிவு அதற்கும் மேலே. இவ்வளவு பெரியதாக அண்டம் விரிவடைந்திருக்க வேண்டுமென்றால், ஒளியின் வேகத்தைவிட மிகஅதிகமான வேகத்தில் அது விரிவடைந்திருக்க வேண்டும். அதனால்தான் விஞ்ஞானிகள், “அண்டத்தில் ஒரு படிநிலையிலும், குவாண்டத்தின் ஒரு படிநிலையிலும், இயற்பியலின் எந்த விதிகளும் பொருந்திவராது” என்பார்கள்.


பதில்களுக்கான விளக்கத்தை அடுத்த பதிவிலும் தொடர்ந்து பார்க்கலாம்.


-ராஜ்சிவா-


April 30, 2016

அண்டமும் குவாண்டமும்…..! - பகுதி 1

நான் எழுதப் போகும், ‘அண்டமும் குவாண்டமும்’ என்னும் பகுதியில், குவாண்டம் இயற்பியலுக்கான அடிப்படைகள் அனைத்தையும் தனித்தனியாகப் பார்க்கப் போகின்றோம். குவாண்டம் இயற்பியலில் அநேக தொழில்நுட்பச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவற்றின் விளக்கங்களைத் தெரிந்து கொள்ள நம்மால் முடிவதில்லை. அவற்றைத் தமிழில் புரியவைக்கும் முயற்சியில் வெகு சிலரே ஈடுபட்டிருக்கின்றனர். வேறு பலரும் அதில் உண்டு என்றாலும், சாதாரண மக்களுக்குப் புரியும்படி அதை விளக்கிச் சொல்லத் தவறிவிடுகிறார்கள். அவர்களின் விளக்கம், ஏற்கனவே இவைபற்றி அறிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் மொழியில் அமைந்துள்ளது. ஆனால், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வாழும் சாதாரணத் தமிழ் மக்களிடம் இந்த அறிவியல் சென்றடைய வேண்டும். அதற்கான ஒரு சிறு முயற்சிதான் இது.


இந்தத் தொடரில் பல ஆங்கிலச் சொற்கள் வரும். அவற்றிற்குத் தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட வேண்டுமென்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அவற்றிற்கான தமிழ்ச் சொற்களை உருவாக்கும் பொறுப்பை முனைவர்களிடம் விட்டுவிடுகிறேன். நான் இலகுவாகத் தமிழில் விளக்கம் கொடுத்துப் புரிய வைக்க மட்டுமே முயற்சி எடுக்கிறேன். அதனால் சில சமயங்களில் ஆங்கிலச் சொற்களை அப்படியே பயன்படுத்தவும் வேண்டிவரலாம். அதற்கு முன்னரே என் மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்.


சமீப காலமாக அறிவியலில் நோபல் பரிசுகள் பெறுபவர்களை உருவாக்கும் நிறுவனங்களின் வரிசையில் ‘மாக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிட்யூட்’ (Max Planck Institute) முதன்மை வகிக்கிறது. மாக்ஸ் பிளாங்கில் ஆராய்ச்சிகளில் ஈடுபடுபவர் என்றால், அவருக்கு உலகளாவிய ரீதியில் பெரும்மதிப்பு இருக்கிறது. ஆராய்ச்சியில், ஸ்டான்ஃபோர்ட், கொலம்பியா, கலிபோர்னியா, பிரின்ஸ்டன், சிக்காக்கோ, ஹாவார்ட் ஆகிய பல்கலைக் கழகங்களுக்கு நிகரானது இது. இந்த மாக்ஸ் பிளாங் நிறுவனத்துக்கு இந்தப் பெயர் வந்ததற்குக் காரணம், ஜேர்மனியைச் சேர்ந்த இயற்பியலாளரான ‘மாக்ஸ் பிளாங்க்’ என்பவராவார்.


மாக்ஸ் பிளாங்க் (1858-1947) குவாண்டம் இயற்பியலின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர். இவரின் கண்டுபிடிப்புகளின் முடிபுகளாக அறிவியல் பெற்றுக்கொண்ட ஒரன்றுதான் ‘பிளாங்க் நீளம்’ (Planck Length). இந்தப் பிளாங்க் நீளமென்றால் என்னவென்பதைத்தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம். காரணம், மிகச் சிறிய அளவிலான பிளாங்க் நீளம்தான் குவாண்டத்தின் அளவையும் நமக்கு எடுத்துச் சொல்லும்.




முடிவிலி (Infinity) என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். முடிவில்லாதது, எல்லையில்லாதது, இதன் அளவு இதுதான் என்று எந்த வரையறைக்குள்ளும் அடங்காதது முடிவிலி என்று சொல்லப்படும்.. அதுபோல, உங்களால் கற்பனையே செய்ய முடியாத, பிரமாண்டமான (பெரிய) ஒன்று உண்டென்றால், அதுதான் பேரண்டம் (Universe). விண்மீன்களையும், விண்மீன் திரள்களையும் (Galaxies), கருந்துளைகளையும், கருஞ்சக்தி, கரும்பொருள் என அனைத்தையும் உள்ளடக்கியது பேரண்டம். 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகிய பேரண்டம், படிப்படியாகப் பெரிதாகிக் கொண்டேயிருக்கிறது. இன்றும் அதன் வளர்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நவீன இயற்பியல், ‘ஒளியைவிட வேகமாக எதுவும் நகர முடியாது’ என்று அடித்துச் சொல்லிய நிலையில், இயற்பியல் விதிகளையெல்லாம் உடைத்துக்கொண்டு, ஒளியைவிட அதிவேகமாக நம் பேரண்டம் விரிவடைந்துகொண்டே செல்கிறது. இப்படி இயற்பியல் விதிகள், அண்டத்திலும், குவாண்டத்திலும் சிலசமயங்களில் செயலிழந்துவிடுகின்றன. இன்றுள்ள நவீனக் கருவிகளைக் கொண்டு மனிதனால் அவதானிக்கக் கூடிய பேரண்டம் 92 ஒளியாண்டுகள் பெரிதானது. ஆனால் பேரண்டம் அத்துடன் முடிந்துவிடவில்லை. நம்மால் அவதானிக்க முடியாத பெரிய அளவையும் கொண்டது. அதனால், பேரண்டத்தின் அளவை முடிவிலி என்று சொல்லிக் கொள்ளலாம்.


பேரண்டம் அளவில் பெரியதாக இருப்பதுபோல, அதற்கு எதிர்மாறாகச் சிறிய அளவில் இருப்பதுதான் குவாண்டம் எனப்படுகிறது. சில காலங்களின் முன்வரை அணுவே மிகச் சிறியதாக நம்பிவந்தோம். பின்னர் அணு பிளக்கப்பட்டு, அதனுள் நுன்னிய அளவிலான, பேரண்டம் போன்று ஒரு பேருலகம் இருப்பது அறியப்பட்டது. பேரண்டத்தில் எந்த அளவுக்கு நட்சத்திரங்கள், கோள்கள், மற்றும் பலவும் இயங்கிக் கொண்டிருக்கின்றனவோ, அதேயளவு அணுவுக்குள்ளும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. எல்லாமே மிகமிகமிகச் சிறிய அளவிலானவை. அதுவே குவாண்டம் உலகு ஆகும். அணுவுக்குள் இருந்து இயங்கிக் கொண்டிருப்பவற்றை உப அணுத்துகள்கள் (Subatomic particles) என்பார்கள். அணுவுக்குள் எண்ணிலடங்காத உப அணுத்துகள்கள் இருக்கின்றன. அவற்றில் மிகச்சிறியதாகக் கருதப்படுவது ‘அதிர்விழை’ (Strings) ஆகும். அதிர்விழையென்பது கோட்பாட்டு ரீதியாகத்தான் இருக்கிறது. அப்படியொன்று இல்லையென்று சொல்பவர்களும் உண்டு.


அணுவைப் பிரித்தால், அங்கே எலெக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான் என்னும் துகள்கள் காணப்படுகின்றன. இந்த நியூட்ரான், புரோட்டான் ஆகியவற்றைப் பிளந்தால் அங்கு குவார்க்குகள் (Quark) என்பவை காணப்படுகின்றன. குவார்க்குகள் பல வகைகளில் உண்டு. இவைபற்றியெல்லாம் பின்னர் விரிவாகப் பார்ப்போம். குவார்க்கைப் பிரித்தால் அதனுள் இந்த அதிர்விழைகள் அதிர்ந்தபடி இருப்பதாகச் சொல்கிறார்கள். சொல்கிறார்களேயொழிய, அதை இன்னும் காணவில்லை. காரணம், அதைக் காணக்கூடிய வகையில் நம் அறிவியல் இன்னும் வளரவில்லை. இந்த அதிர்விழையின் அளவு, ஒரு ‘பிளாங்க் நீளம்’ (Plank Length) ஆகும் (அதிர்விழையென்று சொல்வது ஒரு இலகுவான புரிதலுக்காகத்தான்). ஐன்ஸ்டைன் குறிப்பிட்ட, வெளி.காலத்தின் (Space time) சிறிய அளவையும் பிளாங்க் நீளம் என்பார்கள்.


ஒரு பிளாங்க் நீளம் எவ்வளவு தெரியுமா?


ஒரு பிளாங்க் நீளம் = 0.000000000000000000000000000000000016 மீட்டர்களாகும். அதாவது தசமப் புள்ளிக்கு அருகே 35 பூச்சியங்களின் அளவு மீட்டராகும். அவ்வளவு சிறிய அளவு இது. ஒரு புரோட்டானின் 10^20 மடங்கு சிறியது. இதுவரை மணிதனால் அவதானிக்கப்பட்ட மிகச்சிறிய அளவு, பிளாங்க் நீளம்தான். இதைவிடவும் சிறிய அளவு இருக்கலாம். அதை இன்னும் நம்மால் கணிக்க முடியவில்லை. பிளாங்க் நீளத்தைப் போல நேரத்தின் மிகச்சிறிய அளவை ‘பிளாங்க் நேரம்’ (Planck Time) என்கிறார்கள். ஒரு பிளாங்க் நேரம் என்பது, ஒரு போட்டான் துகள், ஒளியின் வேகத்தில் ஒரு பிளாங்க் நீளத்தைக் கடக்க எடுக்கும் நேரம் ஆகும். அதாவது ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு 3 இலட்சம் கிலோ மீட்டர்களாகும். இந்த வேகத்தில், பிளாங்க் நீளத்தை ஒரு போட்டான் துகள் கடக்க எடுக்கும் நொடிகள் பிளாங்க் நேரம் எனப்படுகிறது. இது 0.00000000000000000000000000000000000000000001 செக்கனாகும். தசமப்புள்லிக்கு அருகே 43 பூச்சியங்கள் வரும் அளவுள்ள செக்கன் ஆகும் (10^-43 sec). பிக்பாங் என்னும் பெருவெடிப்பு நடந்து அது பெருவெளியாய் விரிவதற்கு இந்தப் பிளாங்க் நேரமே எடுத்திருக்கிறது.


இந்தப் பிளாங்க் அளவு பற்றிப்படிக்கும் போது நிறையவே சந்தேகங்களும் புரியாமையும் உங்களுக்குத் தோன்றியிருக்கும். அந்தச் சந்தேகங்கள் எவையென்று உங்கள் கமெண்டில் எழுதுங்கள். புரியாதவை எவையென்பதையும் எழுதுங்கள். அடுத்த பகுதியில் அவற்றின் விளக்கத்துடன் தொடரலாம்.


February 13, 2016

திணிவு, எடை, நிறை

சாதாரணமாக ஒரு பொருளின் பாரத்தைக் குறிப்பதற்குப் பயன்படும் சொற்கள் திணிவு, எடை, நிறை என்பவையாகும். ஆனால், அறிவியலில் இவற்றிற்கிடையே வித்தியாசம் இருக்கிறது. ‘ஈர்ப்பலை’ (Gravitational Waves) பற்றிய என் பதிவுக்குப் பலரின் சந்தேகங்கங்கள், திணிவு, எடை, நிறை சார்ந்தே இருந்தன. ‘நட்சத்திரங்களும், கருந்துளைகளும் அதிகத் திணிவுள்ளவையாக இருப்பதால் அவை அண்டவெளியை வளைக்கின்றன. அவை ஒவ்வொன்றின் திணிவுக்கேற்ப அந்த வெளிவளைவு இருக்கும்’ என்று எழுதியிருந்தேன். இதில்தான் அதிகமானவர்களின் சந்தேகம் இருந்தது. “விண்வெளியின் காற்று இல்லை. அங்கு இருப்பது வெற்றிடம் மட்டும்தான். அங்கு சென்றால் மனிதனுக்கு கூட எடை கிடையாது. அப்படியிருக்கையில் எப்படிக் கோள்களுக்கும், நட்சத்திரங்களுக்கும் எடை இருக்க முடியும்?” என்று கேட்டிருந்தார்கள். நியாயமான கேள்விதான் அது. ஆனால் அதன் விடை நான் மேலே சொன்ன சொற்களின் அர்த்தங்களில்தான் இருக்கின்றது. இவற்றையெல்லாம் நீங்கள் சின்ன வயதில் பாடசாலைகளில் படித்ததுதான். ஆனாலும் மறந்திருப்பீர்கள். அதனால்தான் இந்தக் குழப்பம்.

முதலில் திணிவு, எடை, நிறை ஆகிய மூன்றும் வேறு வேறானவையா, அல்லது ஒன்றையே குறிக்கின்றனவா? என்று நாம் பார்க்கலாம்.

எடை, நிறை என்னும் இரண்டு சொற்களும் ஒன்றையே குறிப்பவை. ஆனால் ‘திணிவு’ வேறுவகையானது. எடையென்று தமிழ்நாட்டுத் தமிழர்கள் எதைக் குறிப்பிடுகிறார்களோ, அதற்கு ஈழத்தில், ‘நிறை’ என்று சொல்வார்கள். இதுதான் இந்த இரண்டு சொற்களின் வித்தியாசம். தமிழ்நாட்டின் சில இடங்களில் ‘நிறை’ என்ற சொற்பதம் பிரயோகப்படுத்தப்படலாம். அதை நீங்கள்தான் சொல்ல வெண்டும்.

‘எடை’ மற்றும் ‘நிறை’ என்னும் சொற்களுக்கு ஆங்கிலத்தில் ‘Weight’ என்று சொல்வார்கள். ஆனால், ‘திணிவு’ அப்படியல்ல, திணிவை ஆங்கிலத்தில் ‘Mass’ என்பார்கள். திரைப்படங்களில் “நான் மாஸுடா!” என்னும் டயலாக் சரியான விதத்தில் புரிந்து கொண்டுதான் பயன்படுத்துகிறார்களா என்றும் எனக்குத் தெரியவில்லை. அதையும் இயக்குனர்கள்தான் சொல்ல வேண்டும்.





ஒவ்வொரு பொருளுக்கும் ‘திணிவு’ (Mass) இருக்கிறது. இந்தத் ‘திணிவு’ அந்தப் பொருள் எங்கு இருந்தாலும் மாறாது. அது பூமியில் இருந்தாலென்ன, சந்திரனில் இருந்தாலென்ன, விண்வெளியில் இருந்தாலென்ன எங்கிருந்தாலும் அதன் ‘திணிவு’ மாறவே மாறாது.

“அது எப்படி?”

ஒரு ‘ஐதரசன்’ அணுவை எடுத்துக்கொள்ளுங்கள். அதற்குள் உபஅணுத்துகள்கள் இருக்கின்றன. அதில் உள்ள புரோட்டான் ஒன்றின் திணிவு 1. அதை அணுத்திணிவு என்போம். அதாவது ‘ஐதரசன்’, ஒரு அணுத்திணிவு உடையது. அது கிராம், கிலோகிராம், அவுன்ஸ் போன்ற அலகு கிடையாது. ஒன்று என்றால் ஒன்று. அவ்வளவுதான். அதுபோல ஒவ்வொரு தனிமங்களுக்கும் அணுத்திணிவுகள் உண்டு. இந்த அணுக்கள் சேர்ந்து மூலக்கூறுகள் உருவாகின்றன. மூலக்கூறுகள் ஒன்று சேர்ந்து பொருட்களும், நானும், நீங்களும், பூமியும், நட்சத்திரங்களும் ஆகிறோம். அதாவது ஒரு பொருளில் உள்ள அணுக்களின் திணிவின் கூட்டுத்தொகை அந்தப் பொருளின் மொத்தத் திணிவு ஆகிறது. இதில் குறிப்பாக புரோட்டானுக்கும், நியூட்ரானுக்கும் அணுவில் அளக்கக் கூடிய திணிவு இருக்கிறது. மற்ற உபஅணுத்துகள்களின் திணிவுகள் ரொம்பக் கம்மியென்பதால் அவற்றை நாம் தவிர்த்துவிடலாம். இதை எழுதிக் கொண்டிருக்கும் ‘ராஜ்சிவா’ ஆகிய நானும் அணுக்களால் உருவானவனே! என்னுள் எத்தனை அணுக்கள் இருக்கின்றனவோ அவ்வளவு திணிவை உடையவன். நான் சந்திரனுக்குச் சென்றாலும் இதே ராஜ்சிவாதான். என்னில் எந்த மாற்றமும் ஏற்பட மாட்டாது. அப்படி மாற்றமிருந்தால், நான் சரவணனாலவோ, செல்வமாகவோ மாறியிருப்பேன். நான் விண்வெளியில் இருந்தாலும், நட்சத்திரங்களில் இருந்தாலும், எங்கிருந்தாலும் ராஜ்சிவாதான். அதனால், என்னுடைய திணிவு எங்கும் சமமானது. அதுபோல, நான் எங்கு சென்றாலும் எனக்குத் ‘திணிவு’ இருந்துகொண்டே இருக்கும். ஆனால், எடை/நிறை அப்படியல்ல.

ஒரு பொருளின் எடை/நிறை என்பது அது எங்கு இருக்கிறதோ அதற்கேற்ப மாறுபடும். அதாவது ஒரு குறிப்பிட்ட திணிவுள்ள பொருளை ஈர்ப்புவிசை கீழ்நோக்கி இழுக்கும் போது ஏற்படுவதே எடை/நிறை எனப்படும். அதாவது, ராஜ்சிவாவின் திணிவை புவியீர்ப்பு விசையினால் பெருக்கும்போது வருவதே, ராஜ்சிவாவின் எடை/நிறை. இதே ‘ராஜ்சிவா’ சந்திரனுக்குச் சென்றால், அங்கு ஆறிலொரு மடங்கு எடையையோ/நிறையையோ கொண்டிருப்பார். காரணம் சந்திரனின் சந்திர ஈர்ப்புவிசையானது, பூமியின் புவியீர்ப்பு விசையின் 1/6 பங்காகும். இதே ‘ராஜ்சிவா’ காற்றில்லா விண்வெளியில் இருந்தால் அவருக்கு எடை/நிறை இருக்காது. காரணம் அங்கு ஈர்ப்புவிசை இல்லை. ஆனால் ஒன்றை மறக்க வேண்டாம். விண்வெளியிலும் ராஜ்சிவாவுக்குத் திணிவு இருக்கும்.

“சரி, அப்படியென்றால், ராஜ்சிவாவின் திணிவு எவ்வளவு”

பூமியில் ராஜ்சிவாவின் எடை 78 கிலோ என்றால் (நம்புங்க. இப்போது ‘ராஜ்சிவா’, எடையைக் குறைத்துவிட்டார். முன்னர் இருந்த குண்டான ‘ராஜ்சிவா’ இல்லை இப்போ), அந்த நிறையை பூமியின் புவியீர்ப்பு விசையினால் வகுத்தால் எவ்வளவு வருகிறதோ, அதுதான் ராஜ்சிவாவின் திணிவு. இதுபோல உங்கள் திணிவுகளையும் நீங்கள் கணித்துக் கொள்ளலாம். இதை இயற்பியலில் ஒரு சமன்பாட்டின் மூலம் சொல்வார்கள்

எடையை/நிறையை W என்னும் குறியீட்டாலும், திணிவை m என்னும் குறியிட்டாலும், புவியீர்ப்பை g என்னும் குறியீட்டாலும் குறிப்பிடுவார்கள்.
W=mg என்பதுதான் அந்தச் சமன்பாடு.

அதிகமானோர்களின் சந்தேகம் இதனால் தீருமென்று நம்புகிறேன். மற்றவர்களின் சந்தேகங்களுக்குப் படிப்படியாகப் பதில் தருகிறேன்.


ஈர்ப்பலைகள்

உங்கள் வீட்டில் பலூன் இருக்கிறதா? அப்படியென்றால் அதைக் கையிலெடுங்கள். அந்த பலூனின் இரப்பரை சதுர வடிவத்தில் வெட்டி வைத்துக்கொள்ளுங்கள். அந்தச் சதுரம் இரண்டங்குல நீளம் X, இரண்டங்குல அகலம் Y இருந்தால் போதுமானது. இப்போது, அந்தச் சதுர இரப்பர் துண்டின் எதிரெதிர் பக்கங்களையும் உங்கள் வலது கையினாலும், இடது கையினாலும் பிடித்து இயன்ற மட்டும் இழுங்கள். அதாவது X அகலப் பக்கத்தை பெரிதாகும்படி முடிந்தவரை இழுங்கள். இப்போது நீங்கள் அவதானிப்பது என்ன? நீங்கள், X அகலப் பக்கத்தை இழுத்துப் பெரிதாக்கும்போது, Y பக்கத்தின் நீளம் தானாகவே சுருங்கிக் குறையும்.





“அதுசரி, இப்பொழுது எதற்கு இந்த பலூன் விளையாட்டு?”

சொல்கிறேன். அதற்கு முன்னர், நூறு வருடங்களுக்கு முன், அதாவது 1915ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தைப் பார்த்துவிட்டு வருவோம், வாருங்கள்.




கணித, இயற்பியல் மாமேதையான 'அல்பேர்ட் ஐன்ஸ்டைன்' (Albert Einstein) , ‘பொதுச் சார்புக் கோட்பாடு’ (General theory of Relativity) என்ற புரட்சிகரமான கோட்பாட்டை, 1915ம் ஆண்டு உலகிற்கு அறியப்படுத்தினார். அதுவரை, ‘ஈர்ப்புவிசை’ (Gravity) என்றால், ‘ஒரு பொருள் தன்னை நோக்கி மற்றப் பொருளை இழுக்கும் விசை’ என்றுதான் அறிவியல் நம்பி வந்தது. ஐசாக் நியூட்டன் தலையில் அப்பிள் பழம் விழுந்ததை வைத்து (உண்மையில் அவர் தலையில் அப்பிள் பழம் விழவில்லை), ஈர்ப்புவிசைக்கு இப்படியானதொரு அர்த்தம் கொடுக்கப்பட்டிருந்தது. உதாரணமாக, ‘பூமியானது தனது மையத்தில் காந்தம் போன்ற ஒன்றைக் கொண்டிருப்பதாகவும், அந்தக் காந்தம் பூமியை நோக்கிய திசையில் அனைத்துப் பொருட்களையும் இழுத்துக் கொள்கிறது’ என்றும் ஈர்ப்புவிசை புரிந்து கொள்ளப்பட்டது. ஆனால், ஐன்ஸ்டைன் கூறிய ஈர்ப்புவிசைக்கான விளக்கம், யாருமே எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது. ஐன்ஸ்டைன் கொடுத்த விளக்கத்தின்படி, பேரண்டத்தின் அமைப்புப் பற்றிய பார்வையும் மாறிப் போனது.


முன்பின், வலதுஇடது, மேலேகீழே என்று முப்பரிமாண வடிவத்தில் நம் கண்களுக்குக் காட்சியளிக்கும் பேரண்டமானது, உண்மையில் முப்பரிமாணம் கொண்டதல்ல. அது கிடையாக விரிக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான, இரப்பரினால் (Rubber) செய்யப்பட்ட பாய்போலக் காணப்படுகிறது. என்ன…, இந்த இரப்பர் பாய் 92 பில்லியன் ஒளிவருடங்கள் அளவு பரப்பளவையுடையது. கற்பனையே பண்ணமுடியாத பிரமாண்டம் அது. இந்தப் பிரமாண்டமான இரப்பர் பாயின் மேலேயே நட்சத்திரங்களும், கோள்களும், காலக்ஸிகளும், கருந்துளைகளும், நியூட்ரான் நட்சத்திரங்களும் அமர்ந்திருக்கின்றன.






இப்போது நான் சொல்வதைக் கற்பனை செய்து பாருங்கள். பத்து அடி விட்டமுள்ள வளையத்தின் விளிம்பில், அதே அளவுள்ள ஒரு மெல்லிய இரப்பர் விரிப்பை, நன்றாக இழுத்துக் கட்டி வையுங்கள். இப்போது அந்த இரப்பர் விரிப்பின் மேல் பாரமுள்ள இரும்புக் கோளம் ஒன்றைப் போடுங்கள். அந்தக் கோளம் வைக்கப்பட்ட இடத்தில் இரப்பர், கீழ் நோக்கி வட்டவடிவத்தில் குழிவாக அமிழ்ந்து போயிருக்கும். அந்தக் குழிவான இரப்பர் மேற்பரப்பில் ஒரு சிறிய கோலிக் குண்டைப் போட்டால், அது அந்தப் பெரிய இரும்புக் கோளம் ஏற்படுத்தியிருக்கும் குழியை நோக்கி கீழே இழுக்கப்படும். இது உங்களுக்குப் புரிகிறதா? அப்படியென்றால், இதுபோலத்தான், பாய்போல விரிந்திருக்கும் அண்டவெளியில், நட்சத்திரங்களும், கோள்களும் அதனதன் திணிவின் அளவுக்கேற்ப, அண்டவெளியைக் கீழ்நோக்கி வளைத்தபடி காணப்படுகின்றன. பூமியும் அப்படியே! பூமியால் ஏற்படுத்தப்பட்ட அதன் குழியை நோக்கி அனைத்துப் பொருட்களும் இழுக்கப்படுவதையே ‘புவி ஈர்ப்புவிசை’ என்று ஐன்ஸ்டைன் வரையறுத்தார். அத்துடன் ஐன்ஸ்டைன் இன்னுமொரு கருத்தையும் சொன்னார். அண்டவெளியில் காணப்படும் நட்சத்திரங்களின் அதிகளவான திணிவினால் ஏற்படும் குழியின் வளைவில் ஒளிகூட வளைந்தபடியே வருகின்றது என்றார். ஆரம்பத்தில் ஐன்ஸ்டைனின் இந்த முடிவுகளை அறிவியல் உலகத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், பின்னர் செய்யப்பட்ட பல பரிசோதனைகள், ஐன்ஸ்டைன் சரியாகவே சொல்லியிருக்கிறார் என்று நிரூபித்தது.




சூரியனுக்குப் பின்னால் மறைந்தபடி, வெகு தொலைவில் இருக்கும் சில நட்சத்திரங்கள், சூரிய கிரகணம் ஏற்படும் நாட்களில் நம் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தன. அதற்குக் காரணம் சூரியனால் ஏற்பட்ட வெளியின் வளைவில், அந்த நட்சத்திரங்களின் ஒளியும் வளைந்தபடி நம் கண்களை நோக்கி வந்ததால், நாம் அவற்றைக் காணக்கூடியதாக இருந்தது. இதுவே விண்வெளி வளைகிறது என்பதற்குப் போதிய சான்றாக அமைந்தது. ‘எதையும் தன் சொந்தக் கண்களால் பார்க்காமல், வெறும் கணிதச் சமன்பாடுகளை மட்டும் வைத்துக் கணித்து, இந்த மனிதன் எப்படி இது போன்ற கோட்பாடுகளைச் சொல்கிறார்?’ என்று உலகமே வியந்தது. இருபதாம் நூற்றாண்டின் அதிசய மனிதராகவே ஐன்ஸ்டைன் கொண்டாடப்பட்டார். ஐன்ஸ்டைன் கூறிய கோட்பாடுகள் உண்மையாகத்தான் இருக்கும் என்னும் நம்பிக்கை அனைத்து விஞ்ஞானிகளுக்கும் ஏற்படலாயிற்று. அத்துடன், ஐன்ஸ்டைன் கூறிய இன்னுமொரு கோட்பாட்டை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டிருந்தாலும், அதனை நிரூபிக்க முடியவில்லை. ஐன்ஸ்டைன் கூறினால் அதில் தவறே இருக்காது, என்ற நம்பிக்கையில் அதற்கான ஆராய்ச்சியில் பல விஞ்ஞானிள் ஈடுபடத் தொடங்கினார்கள். அதற்குப் பலன் நூறு வருடங்களின் பின்னர்தான் கிடைத்தது. கடந்த மாதம் அந்தக் கோட்பாட்டிற்கான சான்று கதவைத் தட்டியது.


அண்டவெளியானது நீளம், அகலம் கொண்ட இரண்டு பரிமாணத்தில் பாய்போன்று விரிந்திருக்கிறது. அதன் மேல் நட்சத்திரங்களும், கோள்களும், கருந்துளைகளும் காணப்படுகின்றன. இவையெல்லாம் நிலையாக அண்டவெளியில் நிற்கவில்லை. எப்போதும் அசைந்து கொண்டேயிருக்கின்றன. ஒன்றையொன்று சுற்றிக் கொண்டுமிருக்கின்றன. இவற்றின் உயரமும், அவற்றின் திணிவினால் ஏற்படும் அண்டவெளியின் குழிவும், உயரம் என்னும் மூன்றாவது பரிமாணத்தைக் கொடுக்கிறது. இந்த அண்டவெளி (Space), நேரத்துடன் (Time) இணைந்தே காணப்படும் என்று இயற்பியலாளர்கள் கருதுகிறார்கள். அதிக திணிவுயுள்ள கருந்துளைகள், அண்டவெளியை மிக ஆழமாக வளைத்திருப்பவை. வளைந்த இடத்தில், நேரம் மெதுவாகி, சமயத்தில் நின்றே விடுகிறது என்றும் அவர்கள் கருதுகிறார்கள். அண்டவெளியும், நேரமும் இணைந்து, ‘அண்டவெளி நேரம்’ (Spacetime) என்னும் கூட்டு நிலையில் காணப்படுகிறது என்கிறார்கள். மேற்படி சொன்ன மூன்று பரிமாணங்களுடன், நேரமானது நான்காவது பரிமாணமாக இங்கே இணைந்து கொள்கிறது. பரிமாணங்கள் எப்போதும் ஒன்றுக்கொன்று மிகவும் அருகிலேயே காணப்படுகின்றன.




அண்டவெளியில் அநேகமான நட்சத்திரங்கள், இரட்டை நட்சத்திரங்களாக ஒன்றையொன்று சுற்றிக் கொண்டிருக்கின்றன. நம் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும் 'அல்ஃபா செண்டாரி' (Alpha Centauri) நட்சத்திரங்களும், இரட்டை நட்சத்திரங்களே! நட்சத்திரங்கள் மட்டுமல்ல, சமயத்தில் மாபெரும் திணிவையும், ஈர்ப்புவிசையையும் கொண்ட நியூட்ரான் நட்சத்திரங்களும் (Neutron Stars), கருந்துளைகளும் (Blackholes) கூட, இரட்டைப் பிள்ளைகள் போல சுற்றிக் கொண்டிருக்கின்றன. இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் அல்லது இரண்டு கருந்துளைகள் ஒன்றையொன்று சுற்றிக் கொண்டிருக்கையில், அவற்றின் ஈர்ப்புவிசையின் காரணமாக தம்மைக் கவர்ந்துகொண்டே சுற்றுகின்றன. இந்தக் கவர்ச்சி அதிகரிப்பினால், அவை ஒன்றுடன் ஒன்று இணையும் வகையில், தமக்கிடையேயான தூரத்தைக் குறைத்துக்கொண்டு வருகின்றன. எதோவொரு கட்டத்தில், இரண்டு கருந்துளைகளும் அல்லது இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்களும் மிக அண்மையில் நெருங்கி வந்ததும் சடாரென ஒன்று சேர்ந்து, ஒரு கருந்துளையாகவோ, ஒரு நியூட்ரான் நட்சத்திரமாகவோ மாறிவிடுகின்றன. இரண்டும் ஒன்று சேர்வதற்கு சற்று முன்னரான நிலையில், அவை சுற்றும் வேகம் மிக அதிகமாகக் காணப்படும். ஒளியின் வேகத்தின் அரை மடங்குக்கு அதிகமான வேகமாகக்கூட அது இருக்கும். அந்த அதிவேகத்தினால், அண்டவெளியின் மேற்பரப்பில் அலைகள் போன்ற அதிர்வுகள் ஏற்படும். அதன்பின் இரண்டு கருந்துளைகளும் ஒன்றாகச் சேரும் கணத்தில் அதிர்வலைகள் மிக அதிகமாக வெளிப்படும். இந்த அலைகளை, 'ஈர்ப்பு அலைகள்' (Gravitational Waves) என்று ஐன்ஸ்டைன் குறிப்பிட்டார். மேற்படி, இரண்டு கருந்துளைகள் அல்லது இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்று சேரும்போது உருவாகும் மிகப்பெரிய ஈர்ப்பலையானது படிப்படியாக, அண்டவெளியினூடாகக் கடத்தப்பட்டு பூமிவரை வந்தடையும். தாய்லாந்தின் கடலுக்குக் கீழே பூமிப்பாறைகளின் உராய்வால் ஏற்பட்ட அதிர்வால் உருவான பேரலைகள், படிப்படியாகக் கடல்வழி நகர்ந்து, எங்கேயோ இருக்கும் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பெரும் சுனாமியாக உருவெடுத்து அழித்து ஓய்ந்ததல்லவா. அதுபோல, அண்டவெளியில் ஏற்படும் பிரளயங்களும் ஈர்ப்பலை அதிர்வுகளாக அண்டமெங்கும் கடத்தப்படும். அண்டவெளியில் ஈர்ப்பலையை ஏற்படுத்த, கருந்துளைகளோ, நியூட்ரான் நட்சத்திரங்களோ மட்டும்தான் தேவையென்றில்லை. நீங்களும், நானும் எம்பிக் குதித்தாலும், அண்டவெளியின் பரப்பில் அதிர்வுண்டாகும். அந்த அதிர்வு ஈர்ப்பலைகளை உருவாக்கும். ஆனால், அவையெல்லாம் அளக்கவே முடியாத மிகமிகச் சிறிய ஈர்ப்பலைகள். இந்த ஈர்ப்பலைகளை அளக்க வேண்டுமென்றால், கருந்துளைகள் போன்ற பெரிய கடோத்கஜன்கள்தான் மோதிக்கொள்ள வேண்டும். 'ஈர்ப்பலைகள்' பற்றி ஐன்ஸ்டைன் குறிப்பிட்ட கணத்திலிருந்து, அப்படியொன்று இருக்கிறது என்பதை நிரூபிக்க முடியாமல் தடுமாறியது அறிவியல் உலகம். போகும் போக்கில் கோட்பாடுகளை ஒரு தீர்க்கதரிசி போலச் சொல்லிவிட்டு மறைந்து போனார் ஐன்ஸ்டைன். ஆனால அவரின் கோட்பாடுகளை நிருபித்துக் காட்டுவோமென்று பலர் களத்தில் இறங்கினர். அந்த நிலையில்தான் ரஷ்யாவைச் சேர்ந்த 'மிகைல் கேர்சென்ஸ்டைன்' (Mikhail Gertsenshtein) மற்றும் 'விளாடிஸ்லாவ் புஸ்டோவொய்ட்' (Vladislav Pustovoit) ஆகிய இருவரும் 1962ம் ஆண்டு, இந்த ஈர்ப்பலைகளைக் கண்டுபிடிக்கும் விதத்தைக் கோட்பாடாக வெளியிட்டார்கள். இதைத் தொடர்ந்து 1992ம் ஆண்டு, லேசர்க் கதிர்களின் உதவியுடன் 'இண்டெர்ஃபெரோமீட்டர்' மூலமாக ஈர்ப்பலைகளை அவதானிக்கும் பரிசோதனைச் சாலையை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. அது 'லைகோ' (LIGO - Laser Interferometer Gravitational wave Observatory) என்றழைக்கப்படுகிறது.






2002ம் ஆண்டு 'லூசியானா' மாநிலத்தில் இருக்கும் 'லிவிங்ஸ்டன்' (Livington Louisiana) நகரில், உலகிலுள்ள பல நாடுகளின் கூட்டு முயற்சியாலும், ஆயிரத்துக்கு அதிகமான ஆராய்ச்சியாளர்களுடனும், பலநூறு மில்லியன் டாலர்கள் செலவில், 'லைகோ' ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சி நிலையம் 2010ம் ஆண்டுவரை எந்தவிதமான ஈர்ப்பலைகளையும் கண்டுபிடிக்கவில்லை. அதன்பின்னர் 2015ம் ஆண்டு, மிகவும் நவீனமான முறையில் புதிய ஆராய்ச்சி நிலையங்களாக 'லைகோ' மாற்றியமைக்கப்பட்டது. இம்முறை வாஷிங்டனில் உள்ள ஹான்ஃபோர்ட் ( Hanford, Washington) நகரிலும் இரண்டாவது 'லைகோ' ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது. இந்த இரண்டு ஆராய்ச்சி நிலையங்களின் இடைவிடாத அவதானிப்புகளால், ஈர்ப்பலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.





ஒன்றுக்கொன்று 90 பாகைக் கோணத்தில் அமைந்த மிக நீண்ட இரண்டு குழாய்கள் லைகோவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை இரண்டும் சந்திக்குமிடத்தில் லேசர் கதிர்கள் செலுத்தும் கருவியும், அந்த லேசர் கருவிகள் குழாய்கள் வழியே சென்று, அங்கிருக்கும் கண்ணாடியில் தெறிப்படைந்து மீண்டும் திரும்பி வரும்போது, அதைக் கிரகித்துக் கொள்ளும் கருவியும் அமைக்கப்பட்டுள்ளது. குழாய்கள் இரண்டும் நான்கு கிலோமீட்டர்கள் நீளத்துடன், நேர்கோட்டில் அமைந்தவை. குழாயின் வழியாகச் செலுத்தப்படும் லேசர் கதிர்கள், அந்தக் குழாய்கள் வழியாகச் சென்று, அவற்றின் முடிவில் அமைந்திருக்கும் கண்ணாடிகளில் பட்டுத் தெறித்து, அதே பாதையில் மீண்டும் திரும்பிவரும். இப்படி இரண்டு குழாய்களிலிருந்து வரும் கதிர்கள், சென்று திரும்ப எடுக்கும் நேரம் துல்லியமாகக் கணிக்கப்படும். இரண்டு குழாய்களும் ஒரே நீளமுள்ளவையாக இருப்பதால், இரண்டினூடாகவும் லேசர் கதிர்கள் சென்றுவர ஒரேயளவு நேரமே எடுக்கும். 2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 14ம் தேதி 9:51 மணியளவில், உலகமே அதிசயிக்கும் அந்த அறிவியல் ஆச்சரியம் நடந்தது. வாஷிங்டன் மற்றும் லூசியானா இரண்டு 'லைகோ' ஆராய்ச்சி நிலையங்களின் கணணித் திரைகளும் ஒரே நேரத்தில் அதிர்வுகளால் துடித்தன.


லைகோவிலுள்ள லேசர் அவதானிப்புக் கணணிகளில் முதல் முறையாகச் சலனங்கள் தோன்றின. லேசர் கதிர்களின் நேர அளவுகள் இரண்டு குழாய்களிலும் சமமாக இருக்குமென்று சொன்னேனலவா? அந்த அளவுகளில் வித்தியாசம் காணப்பட்டது. ஈர்ப்பலையதிர்வுகள் அந்த இடங்களைக் கடந்து சென்றதாகக் கருவிகள் காட்டின. ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் துள்ளிக் குதித்தனர். 'நூறு வருடங்களுக்கு முன்னர் ஐன்ஸ்டைன் கூறிய கோட்பாடு உண்மையே!' என்று நிரூபனம் கிடைத்தது. ஆனால் உடனடியாக அவர்கள் அதை வெளியிடவில்லை. காரணம், அந்த அதிர்வுகள் உண்மையாகவே விண்வெளியிலிருந்துதான் வந்தனவா? அவை நிஜமான அண்டவெளி ஈர்ப்பலைகள்தானா? அவை எவ்வளவு தூரங்களிலிருந்து வந்தன? எதனால் அந்த அலைகள் ஏற்பட்டன? என்பது போன்ற ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டன. கிடைத்த தகவல்களோ ஆச்சரியமானவை. சாதாரண மக்களால் நம்பவே முடியாதவை. அந்தக் காரணங்களை ஆராய்ந்து ஒரு மாதத்தின் பின்னர் கடந்த வாரம், "ஈர்ப்பலைகளைக் கண்டுபிடித்துவிட்டோம்" என்று உலகிற்குச் சத்தமாகச் சொன்னார்கள்.






1.3 பில்லியன் வருடங்களுக்கு முன்னர், ஒன்றையொன்று சுற்றிக்கொண்டிருந்த இரண்டு கருந்துளைகள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு கருந்துளையாக மாறியபோது ஏற்பட்ட ஈர்ப்பலைகளையே நாம் கண்டுபிடித்திருக்கிறோம். அந்த இரண்டு கருந்துளைகளும், கிட்டத்தட்ட 30 சூரியனின் அளவையுடயனவாக இருந்திருக்கின்றன. ஒவ்வொன்றும் 150 கிலோமீட்டர்கள் குறுக்களவுள்ளவையாக இருந்திருகின்றன. அதாவது, சென்னையை விடப் பெரிதானவையாக இருந்திருக்கின்றன. மோதும் கணத்தில் அவை ஒளியின் அரை மடங்கு வேகத்தில் சுற்றியிருக்கின்றன. அவ்வளவு வேகத்தில் சுற்றிய இந்தக் கருந்துளைகள் இரண்டும் மோதியதால் ஏற்பட்ட ஈர்ப்பலைகள், 1.3 பில்லியன் வருடங்களாகச் சுனாமி அலைகள் போலப் படிப்படியாக அண்டவெளியெங்கும் நகர்ந்து, நம் பூமியைத் தாண்டிச் சென்றிருக்கிறது. நீங்கள் குளத்தில் கல்லெறியும் போது, அது ஏற்படுத்தும் வட்டமான அலைகள் தூரத்தில் மிதந்து கொண்டிருக்கும் இலைச் சருகை, அசைத்துவிட்டுச் செல்லுமே அதுபோல, கருந்துளைகளால் ஏற்படுத்தப்பட்ட ஈர்ப்பலைகளும் பூமியைத் தாண்டும்போது, பூமியை சற்றே அசைத்துவிட்டுப் போயிருக்கிறது. அசைவு மிகச் சிறியதுதான். ஒரு புரோட்டான் அணுவின் பத்தாயிரத்தில் ஒரு பங்குதான் அந்த அசைவு. அதுவே நமக்குப் போதுமானது. அந்த அசைவை 'லைகோ' குழாய்கள் உடனே கண்டுபிடித்துவிட்டன. 'அதுசரி, எப்படிக் கண்டுபிடித்தார்கள்?'


இப்போது, நாம் ஆரம்பத்தில் கூறிய பலூன் துண்டை இழுத்துப்பிடித்த சம்பவத்துக்கு வரலாம்.


பலூனில் சதுரமாக வெட்டிய சிறிய இரப்பர் துண்டை, இருபக்கமும் பிடித்து இழுத்தோமல்லவா? அப்படி இழுக்கும்போது, அதற்குச் 90 பாகையில் அமைந்த மற்ற இரண்டு பக்கங்களும் சிறியதாக மாறின அல்லவா? இதுபோலத்தான், அண்டவெளியும் ஒருபுறம் அழுத்தப்பட்டால் மறுபுறம் விரிவடையும். லைகோவில் 90 பாகையில் அமைக்கப்பட்ட இரண்டு குழாய்களைத் தாண்டிச் செல்லும் ஈர்ப்பலைகள் அங்கேயிருக்கும் அண்டவெளியைச் சற்றே இழுக்கும். அதே சமயத்தில் அண்டவெளியின் மறுபக்கம் சிறியதாகும். எல்லாமே மிகமிகச் சிறிய அளவுகளில்தான் நடைபெறும். இதனால், ஒரு குழாயினூடாகச் செல்லும் லேசர் கதிர்களின் நீளம் சற்றே கூட, மறு குழாயினூடாகச் செல்லும் லேசர் கதிர்களின் நீளம் சற்றே குறையும். இந்த லேசர் கதிர்களின் அளவு வித்த்தியாசத்தைக் கணணிகள் உடனடியாகக் கணித்துக் கொள்கின்றன.


முடிவில் மாபெரும் புரட்சியாக 'கிராவிட்டேசனல் வேவ்ஸ்' என்று சொல்லப்படும் ஈர்ப்பலைகளை நாம் கண்டுபிடித்துவிட்டோம். அறிவியலுலகை மாற்றியமைக்கப் போகும் கண்டுபிடிப்பு இது. இதன்மூலம் ஈர்ப்புவிசை பற்றிய முழுமையான தெளிவும், ' இணையண்டம்' (Parallel Universe), 'பல்பரிமாணங்கள்' (Dimesions), 'பல அண்டங்கள்' (Multiverse) போன்ற கோட்பாடுகளுக்கான விடைகளையும் காணக்கூடிய வழி கிடைத்திருக்கிறது. இவற்றை ஆராய்வதற்கு மேலும் ஆறு 'லைகோ' ஆராய்ச்சி நிலையங்கள் உலகெங்கும் அமைக்கப்படவிருகின்றன. விண்வெளியின்கூட ஒன்று அமைக்கப்படலாம். இதில் முக்கியமான ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன். 14.09.2015 அன்று மனித வரலாறின் மிகமுக்கிய சம்பவமாகப் பதிவு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்குக் காரணமாக இருந்த, 1.3 பில்லியன் வருடப் பழைய ஈர்ப்பலைகள் என்னையும், உங்களையும் தொட்டுவிட்டே தாண்டிச் சென்றிருக்கின்றன. அந்தக் கருந்துளைகள் மோதியபோது ஏற்பட்ட அதிர்வுகளின் ஒலி, மனிதக் காதுகளால் கேட்கும் அதிர்வுகளையே கொண்டிருந்தன. அந்த ஒலியும் ஆராய்ச்சியாளர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. முதன்முதலாகப் பேரண்டத்தின் பேச்சு ஒலியை மனிதன் தன் காதால் இந்தச் சம்பவத்தின் மூலமாகக் கேட்டிருக்கின்றான். இறுதியாக ஒன்று:


'லைகோ' ஆராய்ச்சி நிலையமொன்றை இந்தியாவிலும் அமைப்பதற்குக் கோரிக்கைகள் விடப்பட்டிருக்கிறது. இந்திய அணு ஆராய்சிக் கழகத்தினால் இன்னும் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. யார் கண்டது அது தமிழ்நாட்டில் கூட அமைக்கப்படலாம்.


February 9, 2016

உண்மையெல்லாம் உண்மையல்ல - 2


கடந்த பதிவில் நாம் உண்மையென்று நினைக்கும் எதுவுமே உண்மையில்லையென்று எழுதியிருந்தேன். அதன்படி, நாம் உண்மையென்று நம்பும் அடுத்த பொய் இது. இதுவும் சூரியக் குடும்பம் சாந்ததுதான்.


சூரியக் குடும்பத்தில் இருக்கும் அனைத்துக் கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்றே நாம் நம்புகிறோம். பாடசாலைகளில் பிள்ளைகளுக்கும் கற்பித்து வருகிறோம். இயற்பியலில் நல்ல அறிவும், புரிதலும் உள்ளவர்களுக்கு இவை மிகவும் தவறான கூற்றுகளே!


சூரியனை எந்தக் கோள்களும் சுற்றுவதில்லை என்பதுதான் பெரிய உண்மை. குறிப்பாக வியாழக் கிரகம் சூரியனைச் சுற்றுவதே இல்லையென்று சொல்லலாம்.


"இது என்ன புதுக் குழப்பம்?"


என்னவெல்லாமோ நம்புகிறோம் அதுபோல இவற்றையும் நம்பிவிட்டோம். ஆனால், உண்மை வேறு வடிவிலானது.


புரிய வைக்க முயல்கிறேன்......!


நியூட்டனுக்குப் பின்னர் நாம் ஈர்ப்புவிசைபற்றித் தெரிந்து கொண்டது ஒன்று. ஐன்ஸ்டைனுக்குப் பின்னர் ஈர்ப்புவிசைபற்றித் தெரிந்து கொண்டது வேறொன்று. ஐன்ஸ்டைனின் ஈர்ப்புவிசைக் கொள்கையின்படி, திணிவு உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஈர்ப்புவிசையிருக்கும். அதன் திணிவைப் பொறுத்து, அது வெளியை வளைக்கும்.


உதாரணமாக ஒரு வேட்டியின் நான்கு மூலைகளையும் நான்குபேர், அதைத் தொய்ந்து விடாமல் இறுகப் பிடித்தால், அந்த வேட்டி, ஒரு சமதளம் போலக் காணப்படுமல்லவா? அல்லது சிறுவர்கள் குதித்து விளையாடும் ட்ரம்பொலலைனையும் (Trampoline) நீங்கள் உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம். இப்போ நீங்கள், "ட்ரம்பொலைன் என்றால் என்ன?" என்று என்னிடம் கேட்டால், நான் அம்பேல். அதனால், நாம் வேட்டியுடனே நின்று கொள்வோம். அது கிழிந்தாலும் பரவாயில்லை.


சமதளம்போலக் காணப்படும் வேட்டியின் மேல் டென்னிஸ் பந்து ஒன்றை விட்டால், அந்தப் பந்து இருக்குமிடத்தில் வேட்டி, சற்றுக் கீழே அமிழ்ந்து குழிபோல காணப்படுமல்லவா?


அதுபோலத்தான், சமதளமாக இருக்கும் விண்வெளியில், சூரியப் பந்து இருக்கும்போது, அது வெளியை ஆழக்குழிபோல வளைக்கும். அந்தக் குழியை நோக்கிப் பொருட்கள் இழுக்கப்படுவதையே, 'ஈர்ப்புவிசை' என்றார் ஐன்ஸ்டைன். உண்மையில் ஈர்ப்புவிசை அப்படித்தான் தொழில்படுகிறது. குறைந்தபட்சம் இப்போதுள்ள அறிவியல் அறிவுப்படி இதுதான் சரியானது. பின்னர் இதுவும் மாறலாம், யார் கண்டது?


நாம் மீண்டும் வேட்டிக்கே வரலாம். வேட்டியில் ஒரு டென்னிஸ் பந்தைப் போட்டபோது, வேட்டி அதன் திணிவுக்கேற்ப வளைந்ததல்லவா? இப்போது வேறொரு சிறிய பந்தையும் வேட்டியின் மேல் போடுவோம். இப்போது இரண்டு பந்துகளின் திணிவுக்கேற்ப வேட்டி கீழ்நோக்கி வளையும். முன்னர் ஒரு டென்னிஸ் பந்தை மட்டும் போட்டபோது, வளைந்த வேட்டியின் மையப்புள்ளி, அந்தப் பந்தின் மையத்தை நோக்கியே இருந்திருக்கும். ஆனால், இரண்டாவது பந்து வந்ததும், இரண்டின் திணிவுக்கேற்றவாறு பொது மையப்புள்ளியும் மாறும். எது அதிகத் திணிவுள்ள பந்தோ, அதற்கு மிக அருகில் பொது மையப்புள்ளி இருந்தாலும், அந்தப் பந்தின் மையத்தில், பொதுவான மையம் இருக்காது.


இப்போது, வேட்டியில் மேலும் ஒன்பது சிறிய பந்துகளைப் போடுங்கள். இப்போது வேட்டியின் மொத்த வளைவு வேறுவிதமாக மாறி, அவற்றின் மொத்தமான பொது மையப்புள்ளியும் வேறு இடத்துக்கு மாறும்.





இதுபோலத்தான் சூரியக் குடும்பமும். சூரியக் குடும்பம் என்பது சூரியன் என்னும் மிகப்பெரிய நட்சத்திரத்தையும், பல கோள்கள், உபகோள்களையும் கொண்டது. சூரியக் குடும்பம் மொத்தமும் ஒரு தனியான 'அமைப்பு' (System). இந்த அமைப்புக்கென்று மொத்தமான ஒரு திணிவு உண்டு. அந்த மொத்தத் திணிவுக்கேற்ப சூரிய அமைப்புக்கு ஒரு மையம் இருக்கிறது. அந்த மையத்தை 'பரிமையம்' (barycentre) என்கிறோம். இந்த பரிமையம் சூரியனின் மையப்புள்ளி அல்ல. அது அநேகமாகச் சூரியனுக்கு வெளியே இருக்கும். சூரியன் அதிக எடை உள்ளதாக இருப்பதால், இந்த பரிமையமும் சூரியனுக்கு அருகில்தான் இருக்கும்.


சூரியக் குடும்பத்திலுள்ள எல்லாக் கோள்களும், சூரியன் உட்பட, இந்த பரிமையத்தையே சுற்றுகின்றன. சூரியனை அல்ல. அதனால் பூமி, சூரியனைச் சுற்றிவருகின்றதென்பது உண்மையல்ல. வியாழக் கிரகம், பெரியதாகவும், அதிக எடையுள்ளதாகவும் இருப்பதால், சூரியனை அது எப்போதும் சுற்றுவதேயில்லை. சூரியக் குடும்பத்தின் கோள்கள் அடிக்கடி இடம் மாறுவதால், பாரிமையமும் மாறிக்கொண்டேயிருக்கும். சில சயங்களில். கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும்போது, பரிமையம் சூரியனை ரொம்பவும் தாண்டியிருக்கும்.


இப்போது நாம் கொஞ்சம் தர்க்க ரீதியாகப் பார்த்தால், எல்லாக் கோள்களும் பூமியைச் சுற்றுகின்றன என்று சொன்னாலும் அதுவும் உண்மையாகலாம்.


இதுவரை, நான் புரிய வைத்தது நிச்சயம் உங்களுக்குப் புரிந்திருக்குமென்றே நினைக்கிறேன். உங்களுக்கு இது புரியவில்கையென்றால், புரிய வைக்க முடியாமல் போன என் தவறுதான். உங்கள் தவறு அல்ல.


'இந்த உண்மை மட்டுமல்ல, எந்த உண்மையும் உண்மை அல்ல"


உண்மையெல்லாம் உண்மையல்ல - 1

நாம் இதுதான் உண்மையென்று நினைத்துக்கொண்டிருக்கும் எதுவுமே உண்மையில்லை என்பதுதான் மிகபெரிய உண்மை. 


இப்போது சொன்ன கருத்தும், சிலசமயங்களில் உண்மையில்லாமல் போய்விடலாம்.


உண்மைகள், உண்மைகளில்லை என்பதுபற்றி நான் இதற்கு முன்னரும் பல தகவல்களில் எழுதியிருக்கிறேன். அதுபோன்ற ஒன்று இப்போதும் உங்களுக்காக....


நமது பூமியானது, நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருவதாகவும், சூரியனை அது ஒரு சுற்றுச் சுற்றி மீண்டும் அதே இடத்துக்குத் திரும்பி வருவதற்கு 365.25 நாட்கள் எடுக்கிறது என்றும் நம்பி வருகிறோம். ஆனால் இந்தக் இவை எவையும் உண்மையில்லை என்கிறது நவீன அறிவியல்.


பூமி சூரியனைச் சுற்றுகிறதோ இல்லையோ, உங்கள் தலை இப்போ சுற்றுகிறதல்லவா?


சரி, சுற்றும் தலையை நிறுத்தலாம் வாருங்கள்.


பூமி தன்னைத்தானே மணிக்கு 1600 கிலோமீட்டர்களுக்கு அதிகமான வேகத்தில் சுற்றுவதோடு, சூரியனையும் கிட்டத்தட்ட மணிக்கு 100 000 கிலோமீட்டர்கள் வேகத்தில் சுற்றிக்கொண்டு வருகிறது. இந்தச் செயலில், சூரியன் ஒரு நிலையான இடத்தில் இருந்தால் மட்டுமே, பூமி ஒரு நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றிவருகிறது என்றெடுக்கலாம். ஆனால், சூரியன் நிலையாக ஒரு இடத்தில் இருப்பதில்லை. அதுவும் மணிக்கு 800 000 கிலோமீட்டர்கள் வேகத்தில் பால்வெளி மண்டலத்தைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதிவேகம் அது. ஓடிக்கொண்டே இருக்கும் சூரியனைப் பூமி எப்படி ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்ற முடியும்? புரியாவிட்டால் இதை ஒரு உதாரணத்தின் மூலம் பார்க்கலாம்.





நீங்கள் ஒரு மைதானத்தில் மெதுவாக நேர்கோட்டில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களைப் பலமுறைகள் சுற்றியபடி, உங்கள் மகள் ஓடி வந்துகொண்டிருக்கிறாள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த மைதானத்தைப் பொறுத்தவரை உங்கள் மகள் ஓடிவந்த பாதை, ஒரு 'சுருள்கம்பி' (Spring) வடிவத்தில் இருக்கும். இதுபோலத்தான் பூமியின் சுற்றுப்பாதையும் கம்பிச்சுருள் வடிவத்தில் இருக்குமேயல்லாமல், நீள்வட்டப்பாதையில் இருக்காது.


இந்தப் பேரண்டவெளியில், நாம் இந்த நொடியில் இருக்கும் இடத்துக்கு இனி எப்போதும் மீண்டும் வரவே மாட்டோம். நாம் மட்டுமல்ல, பூமியும், சூரியனும் அதிகம் ஏன், இந்தப் பால்வெளி மண்டலம்கூட, இந்த நொடியில் இருக்கும் இடத்திற்குத் திரும்பி வரவே போவதில்லை. அவ்வளவு விசேசம் வாய்ந்தது இந்த நொடியும், நீங்கள் இருக்கும் அமைவும். எல்லாமே அதி வேகத்தில் தங்கள் இடங்களை நீங்கி ஓடிக்கொண்டே இருக்கின்றன.


"வானத்தில் ஒவ்வொரு நாள் இரவும் பார்க்கும்போது, அதே நட்சத்திரங்களைற்றானே பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அப்படியென்றால் ஒரே இடத்தில்தானே இருக்கிறோம்" என்று இப்போது நீங்கள் யோசிக்கலாம். அது அப்படியல்ல. நீங்கள் வாழ்ந்த இவ்வளவு வருடங்களில் மட்டுமல்ல, பூமியின் பல ஆயிரம் வருடங்களில், பூமி பல கோடி கிலோமீட்டர்கள் தூரம் நகர்ந்திருந்தாலும், அண்டவெளியின் பிரமாண்டத்துடனும், நட்சத்திரங்களின் தூரங்களுடனும் ஒப்பிடும்போது, அது ஒன்றுமேயில்லை என்பதுதான் நிஜம். அண்டவெளியின் பிரமாண்டமான அமைப்புடன் ஒப்பீட்டளவில் பார்த்தால் ஒரு செமீ அளவு தூரத்தைக்கூடக் கடந்ததாக எடுத்துக்கொள்ள முடியாது. அதனால்தான் நாம் சிறிய வயதில் பார்த்த நட்சத்திரங்கள் இன்றும் அதே இடத்தில் இருப்பதுபோலத் தெரிகிறது. நிஜத்தில் நாம் நம்பவே முடியாத தூரத்தைக் கடந்து வந்துவிட்டோம்.


என்ன புரிகிறதா?


அடுத்த தகவல் உண்மையின் நம்பகத்தன்மையை விமர்சிக்கும் வேறொரு தளத்தில் இருக்கும். இரண்டையும் ஒன்றாகத் தரவே இருந்தேன். பதிவு நீண்டுவிட்டதால்.....


January 22, 2016

அவர்கள்

ஜன்னல் சஞ்சிகையில் வெளிவந்து கொண்டிருக்கும், நான் எழுதும் 'அவர்கள்' தொடரின் முதல் பகுதியை உங்களுக்கு வாசிப்புக்காகத் தருகிறேன். இதை நீங்கள் தனியொரு கதையாகவும் படிக்கலாம் அல்லது 'அவர்கள்' தொடரின் முதல் பகுதியாகவும் படிக்கலாம். இதைப் படித்த பின்னர் தொடர்ந்துவரும் பகுதிகளை ஜன்னல் சஞ்சிகையில் படியுங்கள். 

நன்றி
-ராஜ்சிவா-

அவர்கள்



அந்த விமானநிலையத்தில் 'அவன்' வந்திறங்கியபோது, வழக்கம்போல அது பரபரப்பாகவே இயங்கிக்கொண்டிருந்தது. கோடைகாலப் பின்மாலைப் பொழுது ஏற்படுத்தியிருந்த உற்சாகம், அங்கிருந்த மக்கள் அனைவரிடமும் தொற்றியிருந்தது. ஐரோப்பிய நாடொன்றின் விமானத்தில் அவன் வந்திறங்கியிருக்க வேண்டும். அவன் தோற்றமும் கலப்பற்ற ஐரோப்பியனென்றே சொல்லியது. வர்த்தகப் பயணியொருவன்போல, மடிப்புக்கலையாத கோர்ட், தொப்பியுடன் நேர்த்தியாகக் காணப்பட்டான். 'யப்பான் உங்களை வரவேற்கிறது' என்னும் வாசகத்துடனான மிகப்பெரிய வாசலினூடாக டோக்கியோவினுள் நுழைவதற்காகச் சென்றுகொண்டிருந்தான். சுற்றியிருக்கும் பயணிகளிடம் ஒருவித படபடப்புக் காணப்பட்டது. விமானநிலையத்தின் கடவுச்சீட்டுகளைப் பரிசோதிக்குமிடத்தில் பயணிகளிடையே படபடப்புக் காணப்படுவது சகஜம்தான். ஆனால், அவனிடம் எந்தவிதமான படபடப்போ, தடுமாற்றமோ காணப்படவில்லை. இதுபோன்ற நடைமுறைகளைத் தினமும் காண்பவனென்ற அலட்சியம் அவனில் தெரிந்தது. விமானப் பயணச்சீட்டையும், கடவுச்சீட்டையும் வலதுகையிலும், ஆவணங்கள் வைக்கும் மெல்லிய கைப்பையை இடதுதுகையிலும் வைத்திருந்தான். வெளியே செல்லவேண்டும் என்னும் ஆர்வத்தில் வரிசைகளில் முதலில் நிற்பதற்கு பயணிகள் அவசரப்பட, நிதானமாகக் கடைசி மனிதனாக அவன் நின்றுகொண்டான். 


யப்பான், உலகில் தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டிருந்த காலமது. தொழிற்புரட்சியின்மூலம் தானொரு ஜாம்பவனாகிவிட வேண்டுமெனத் திட்டமிட்டிருந்த காலம். அதனால், உலகம் முழுவதிலிருந்தும் வர்த்தக ஒப்பந்தங்களுக்காகப் பலர், டோக்கியோ நோக்கித் தினமும் வந்திறங்கியபடியே இருப்பார்கள். அப்படியொரு வியாபாரத் தோரணையுடன்தான் அவனும் காட்சியளித்தான். கடவுச்சீட்டுகளைப் பரிசோதித்து உள்நுழைய அனுமதிக்கும் அதிகாரிகள் இரண்டு பகுதிகளாகப் பிரிந்து பயணிகளை அனுமதித்துக் கொண்டிருந்தார்கள். வரிசைகளும் இரண்டாக மெல்ல நகர்ந்தது. இருபது நிமிடங்களின் பின்னர் அவன் முறை வந்தது. யப்பான் நாட்டுக்கேயுரிய விருந்தினரை உபசரிக்கும் சிரிப்புடன் கடவுச்சீட்டைப் பரிசோதிப்பவர் அவனைப் பார்த்தார். அவனும் சிநேகிதமான சிரிப்புடன் கைகளில் இருந்தவற்றை அவரிடம் ஒப்படைத்தான். கடவுச்சீட்டை வாங்கிப் பரிசோதித்த அதிகாரியின் முகத்திலிருந்த சிரிப்பு மெல்லமெல்ல மறையத் தொடங்கியது.  





அந்த அதிகாரிக்கு இருபத்தியைந்து வயதிருக்கலாம். முகத்தில் ஒட்டிக்கொண்டிருந்த அவரது சிரிப்புக் காணாமல் போனது அவருக்கே தெரிந்திருக்கவில்லை. கடவுச்சீட்டை மேலும் கீழும், பக்கம் பக்கமாகப் புரட்டிப் பார்த்தார். முகத்தில் வியப்பும், ஏதோவொன்றைக் கண்டுவிட்டதுபோன்ற உணர்வும் கலந்து காணப்பட்டது. மேசைக்குக் கீழேயிருந்த பட்டனை அழுத்தினார். எங்கிருந்து வந்தார்களென்றே தெரியாமல், திடீரெனத் தோன்றிய இரு காவலர்கள் அவனுக்கு இரண்டு பக்கத்திலும் வந்து நின்றனர். விரும்பாத விசயமொன்று நடக்கிறது என்று அவனுக்குப் புரியத் தொடங்கியது. அமைதியாகச் சிரித்தபடியேதான் அப்போதும் நின்றான். அருகே நின்ற காவலர்கள் இருவரும் எதுவும் பேசவில்லை. கடவுச்சீட்டைச் சரிபார்த்த இளம் அதிகாரி, அடுத்த வரிசையிலிருந்த அதிகாரியிடம் சென்றான். ஐம்பது வயது மதிக்கக்கூடிய அந்த அதிகாரி மிகவும் அனுபவசாலியாகத் தெரிந்தார். கையிலிருந்த கடவுச்சீட்டை அந்த அதிகாரியிடம் காட்டினான். அவரும் கடவுச்சீட்டைப் பலமுறை புரட்டிப்பார்த்தார். அவரின் முகமும் இறுக்கமடைந்தது. இரு அதிகாரிகளும் மெல்ல அவனை நோக்கி வந்தனர். 


அவனருகே வந்த அதிகாரிகள், அவனைத் தங்களுடன் வருமாறு ஆங்கிலத்தில் அழைத்தனர். ஏதோ தப்பு நடந்திருக்கிறதென்பதை அவன் புரிந்துகொண்டான். விமானநிலையத்தின் விசேச வழிகளுக்கூடாக அறையொன்றுக்குள் அழைத்துச் செல்லப்பட்டான். அறைக்குள் நுழையும்போது, அடுத்தடுத்த அறைகளில் காவலர்களின் நடமாட்டம் அதிகமாக இருந்ததை அவன் கவனித்தான். அறை மிகவும் விசாலமாக இருந்தது. நடுவே ஒரு மேசை போடப்பட்டிருந்தது. அங்கிருக்கும் நாற்காலியில் அவனை அமரச் சொன்னார்கள்.  


"இதுவெல்லாம் எதற்கு என்று நான் அறிந்து கொள்ளலாமா?" 


சுத்தமான யப்பான்மொழியில் அவன் கேட்டான். காவலர்கள் அதிர்ந்தே போனார்கள். ஐரோப்பியனொருவன் இந்தளவுக்குத் துல்லியமாக யப்பான்மொழி பேசியதை இதுவரை அவர்கள் பார்த்திருக்கவில்லை.  


"எங்கள் சீஃப் வருவார், அதுவரை கொஞ்சம் பொறுத்திருங்கள்" 


காவலர்களும் யப்பான்மொழியில் அவனுக்குப் பதில் கொடுத்தனர். பெரிய அதிகாரி வந்து சேர்ந்தார். மிகவும் ஆதரவான முகபாவனையுடன் தன் பெயரைச் சொல்லிவிட்டு, அவன் முன்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். மெல்ல அவனை ஊடுருவதுபோலப் பார்த்தார். சில நிமிடங்கள் எதுவும் பேசவில்லை. நாகரீகமான கோர்ட், சூட். அதிநவீனமான மின்னும் காலணி. பணக்கார ஐரோப்பியனொருவன் தன்முன் அமர்ந்திருப்பதைக் கண்களால் கணித்துக்கொண்டார். மெல்ல ஒரு புன்னகையை தன் முகத்தில் தோன்றவிட்டு, அவர் கேட்டார்.. 


"சரி… சொல்லுங்கள். நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?" 


கேள்வி ஆங்கிலத்தில் இருந்தது. அந்தக் கேள்வி அவனை ஆச்சரியப்பட வைத்தது. பதிலை அவன் யப்பான்மொழியிலேயே சொன்னான். 


"ஏன் என் பாஸ்போர்ட்டில் அது தெளிவாகக் குறிக்கப்பட்டிருக்கிறதே!"  


மேசை மேல் காவலர்கள் வைத்திருந்த தன் கடவுச்சீட்டை விரல்களால் சுட்டிக்காட்டியபடி சொன்னான். அவன் யப்பான்மொழியை இவ்வளவு இலாவகமாகப் பேசுவானென்று அவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆச்சரியத்தை அடக்கிக்கொண்டார்.  


"அது இருக்கட்டும். நீங்க உங்க வாயால் சொல்லுங்கள். உங்கள் நாடு எது?" 


"டௌரெட் (Taured)" 


"என்ன? டௌரெட்டா?" 


அதிகாரி நாற்காலியின் முன்னுக்கு வந்தார். 


"என் நாடு டௌரெட்"


அவன் பதில் இயல்பாகவேயிருந்தது. 


"உங்கள் டௌரெட் நாடு எங்கிருக்கிறதென்று சொல்வீர்களா?" 


அதிகாரியின் முகத்தில் புன்னகை மறைந்து, சந்தேகக் குரலில் கேள்வி வந்தது. 


'இது என்ன முட்டாள்தனமான கேள்வி' என்பதுபோல அதிகாரியைப் பார்த்தான். 'இதுக்கு என்ன பதில் சொல்வது?' என்றும் யோசித்தான். அவனது அந்தச் சில நொடிகள் தாமதம் அதிகாரியின் சந்தேகத்தை மேலும் வலுக்கச் செய்தது. அவன் அமர்ந்திருந்த நாற்காலிக்குப் பின்னேயிருந்த மிகப்பெரிய உலகப் படத்தைச் சுட்டிக்காட்டி. 


"அந்தப் படத்தில் உங்கள் நாடு எங்கிருக்கிறதென்று காட்டுங்கள்"  


அப்போதுதான் அவன் அந்தப் பிரமாண்டமான உலக வரைபடத்தைப் பார்த்தான். அதனருகே சென்று ஒவ்வொரு நாடாகக் கண்களைச் செலுத்தியவனுக்கு, வரைபடத்தில் ஏதோ வித்தியாசம் இருப்பதாக உள்ளுணர்வு சொன்னது. அந்த வரைபடத்தில் மெதுவாகத் தன் விரல்களை நகர்த்தியபடி, ஃபிரான்ஸ் நாட்டுக்கும், ஸ்பெயின் நாட்டுக்குமிடையேயுள்ள எல்லை நகரமொன்றில் நிறுத்தினான். ஆனால் அந்த இடத்தின் பெயர் 'டௌரெட்' என்று வரைபடத்தில் குறிக்கப்பட்டிருக்கவில்லை. 'அண்டோரா' (Andorra) என்று குறிக்கப்பட்டிருந்தது. இது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. 'ஓ… யப்பான் மொழியில் டௌரெட்டுக்கு அண்டோரா என்பதுதான் பெயரா?' என்று நினைத்தான். ஆனால் சடாரென அந்த நினைப்பு அவனுக்கு எவ்வளவு முட்டாள்தனமென்று புரிந்தது. அவனுக்குத்தான் யப்பான் மொழி நன்றாகத் தெரியுமே! இதுவரை எத்தனையோ தடவைகள் யப்பானுக்கு அவன் வந்திருக்கிறானே! அண்டோரா என்னும் பெயரை இதுவரை கேட்டதில்லையே! 


"டௌரெட் என்னும் பெயரை நாங்கள் என்றும் கேள்விப்பட்டதில்லையே! 


அவனின் சந்தேகத்தையே தலைகீழாக்கி அதிகாரி கேட்டபடி, தொடர்ந்தார். 


"நீங்கள் சுட்டிக்காட்டும் இடம் அண்டோரா அல்லவா? அதை ஏன் டௌரெட் என்கிறீர்கள்?" 


"இல்லை, அது அண்டோரா இல்லை. டௌரெட்தான்" 






இவர்களுக்கு நான் எப்படிப் புரிய வைப்பது என்று யோசித்தான் அவன். 


"என் கைப்பையைத் தாருங்கள். அதிலிருக்கும் என் டாக்குமெண்டுகளைப் பாருங்கள். நான் சொல்வது உண்மையென்று தெரியும்" 


அதிகாரி, காவலர்களைப் பார்த்தார். அவர்கள் அவனிடம் வாங்கி வைத்திருந்த பெட்டியைக் கொண்டுவந்தனர். அதைத் திறக்கும்படி அவனிடமே கொடுத்தனர். திறந்தவுடன் அவனிடமிருந்து அதைப் பறித்து, உள்ளே என்ன இருக்கிறதென்று ஆராய்ந்தனர். துப்பாக்கியோ, ஆயுதங்களோ அதிலிருக்கவில்லை. இருந்தவை டாக்குமெண்டுகள்தான். பெட்டியை அவனிடமே திருப்பிக் கொடுத்தனர். அதனுள்ளிருந்து ஒவ்வொரு காகிதத்தையும் எடுத்து அதிகாரியிடம் காட்டினான். 


அவன் பெட்டிகளில் வியாபாரத்துக்குரிய ஆவணங்கள் இருந்தன. அவையனைத்துமே முறையாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன. பதிவு செய்யப்பட்டிருந்த இடம் 'டௌரெட்'. அவனது கடவுச்சீட்டும் டௌரெட்டிலேயே வினயோகிக்கப்பட்டிருந்தது. அதன் முன்னட்டையில் தங்க எழுத்தில் 'டௌரெட்' என்று எழுதியுமிருந்தது. கைப்பையின் மேல்பகுதியிலிருந்து தனது 'சாரதி அனுமதி' (Driving Licence) அட்டையையும் எடுத்துக் கொடுத்தான். அதுவும் டௌரெட்டிலேயே வினயோகிக்கப்பட்டிருந்தது. டௌரெட்டிலிருக்கும் ஒரு வங்கியில் வியாபாரத்துக்கென அவன் வாங்கிய கடன் பத்திரமும் அங்கிருந்தது. எல்லாமே அசலாகத் தயார் செய்யப்பட்டிருக்கும் ஒரு நாட்டின் ஆவனங்கள்போல் இருந்தன. அவன் கடைசியாகக் காட்டியதுதான் அதிகாரியை ரொம்பவும் அசைத்தது. டௌரெட்டிலிருக்கும் அவனது கம்பெனிக்கும், டோக்கியோவிலிருக்கும் கம்பெனிக்குமிடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தப் பத்திரமது. அதிகாரிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவன் பொய் சொல்பவனாகத் தெரியவில்லை. அனைத்து டாக்குமெண்ட்களையும் டௌரெட்டிலிருந்து பெற்றுக்கொண்டதாக வைத்திருக்கிறான். அவனது கடவுச் சீட்டின்படி, உலகத்திலுள்ள பெரும்பான்மையான நாடுகளுக்கும் பயணித்திருப்பதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. யப்பானுக்கு மட்டும் பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் வந்து போயிருக்கிறான். யப்ப்பான் மொழியையும் அச்சரம் பிழைக்காமல் தெளிவாகப் பேசுகிறான். 


'இவன் யார்? எங்கிருந்து வந்திருக்கிறான்?'.  


பெரிய அதிகாரி நாற்காலியிலிருந்து எழுந்தார். இரு அதிகாரிகளையும் தன்னுடன் அழைத்தார். அவனுக்கருகில் இரு காவலர்கள் நின்றுகொண்டனர். அடுத்த அறைக்குச் சென்றார். அங்கு மேலும் சில அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். அனைவரும் நாற்காலிகளில் அமர்ந்து, அவனைப்பற்றிப் பேச ஆரம்பித்தனர். நடந்தவை அனைத்தையும் பெரிய அதிகாரி அனைவருக்கும் விளக்கிக் கூறினார். அனைவரும் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தனர். அதிகாரி கூறினார். 


"நான் இந்தப் பணியில் பலகாலம் இருக்கிறேன். ஐரோப்பாவின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்திருக்கிறேன். பிரான்ஸுக்கும், ஸ்பெயினுக்குமிடையில் 'டௌரெட்' என்னும் நாடு இருப்பதாகக் கேள்விப்பட்டதேயில்லை. அங்கிருப்பது அண்டோராதான். அண்டோரா என்பது ஸ்பெயினுக்குச் சொந்தமான ஃபிரான்ஸ் எல்லையிலமைந்த ஒரு சிறிய நகரம். அவன் சொல்வதோ, கடவுச்சீட்டுக் வழங்கக்கூடிய 'டௌரெட்' என்னுமொரு நாட்டைப்பற்றி. ஐரோப்பாவில் 'டௌரெட்' என்னும் நாடு, குறிப்பாக அவன் சுட்டிக்காட்டும் இடத்தில் இல்லவேயில்லை. அவனைப் பார்த்தால் பொய் சொல்பவன் போலவும் தெரியவில்லை. அவனுக்கு ஆங்கிலம், யப்பான் மொழிகள் சரளமாகப் பேசவருகிறது. இன்னும் என்னென்ன மொழிகள் பேசுவானோ தெரியவில்லை. அவன் கொடுக்கும் தகவல்களிலும், டாக்குமெண்டுகளிலும் எந்தத் தடுமாற்றமும், சந்தேகங்களும் இல்லை. அனைத்தும் ஒரிஜினலாகவே இருக்கின்றன. டௌரெட்டிலிருக்கும் வங்கியொன்றில் கடனெடுத்ததற்கான ஆவனமொன்றையும் அவன் வைத்திருக்கிறான். 'டௌரெட்' என்ற நாடு எங்களுக்குத் தெரியாமல் எப்படி மறைந்திருக்க முடியும்? அல்லது இவன் அனைவரையும் ஏமாற்றும் ஒரு ஏமாற்றுக்காரனா? 


மூச்சு விடாமல் பேசி முடித்தார் அதிகாரி. அப்போது அங்கிருந்த இன்னுமொரு அதிகாரி ஒரு ஆலோசனையைக் கூறினார். 


"நாம் ஏன் ஸ்பெயினுக்கும், ஃபிரான்ஸுக்கும் போன்செய்து இதை விசாரிக்கக்கூடாது?" 


உடன் ஸ்பெயினுக்கும், ஃபிரான்ஸுக்கும் தொலைபேசி அழைப்புகள் பறந்தன. அவர்கள் சிரிக்காத குறைதான். ஒரு ஊர் இருக்கிறதா? என்று கேட்டிருந்தால், அந்தச் சிரிப்பு வந்திருக்காது. நாடொன்று இருக்கிறதா? என்று கேட்டதுதான் தப்பு. 'டௌரெட்' என்றொரு நாடே இல்லையெனத் தெளிவாகத் தெரிந்துபோனது. அப்போது இன்னுமொரு இளம் அதிகாரி சொன்னார். 


"அவன் யப்பான் கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்திருந்தானல்லவா? அந்தக் கம்பெனியில் விசாரித்தாலென்ன?" 


இது சரியான வழியென்று அனைவருக்கும் பட்டது. அவனிருக்கும் அறையை நோக்கி அதிகாரிகள் சென்றனர். அவ்வளவு பேரை அவன் எதிர்பார்க்கவில்லை. அவனைப் பார்த்துப் பெரிய அதிகாரி சொன்னார். 


"நீங்கள் சொன்ன உங்கள் நாடான டௌரெட், இந்த உலகத்தில் எங்குமில்லை. வரைபடத்தில் நீங்கள் காட்டிய இடத்தில் பிரான்ஸும், ஸ்பெயினும் மட்டுமே இருக்கின்றன. நீங்கள் எங்களுக்கு எதையோ மறைக்கிறீர்கள். பொய் சொல்கிறீர்கள். இப்போது உண்மையைச் சொல்லும் பட்சத்தில், உங்கள் உண்மையான நாட்டின் தூதுவராலயத்தில் உங்களை ஒப்படைத்து விடுகிறோம். ஐரோப்பாவுடன் யப்பான் எப்போதும் நல்ல உறவையே கடைப்பிடிக்க விரும்புகிறது. அதனால், நீங்கள் பொய் சொல்வதில் அர்த்தமில்லை. நீங்கள் யார், எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற உண்மையைச் சொல்லுங்கள்?" 


அவர் பேசப்பேச அங்கு தன்னையொரு முழுமையான அந்நியனாகவே அவன் உணர்ந்தான். இதுபோல் அவன் எந்த நாட்டிலும் இதுவரை உணர்ந்ததில்லை. அப்போதுதான் அவனுக்கு, 'தான் ஒப்பந்தம் செய்த கம்பெனியிடமே இவர்கள் பேசினால் உண்மை தெரிந்து விடுமே!' என்று தோன்றியது. 


"நான் டோக்கியோவிக்கு யாரிடம் வந்தேனோ, அந்தக் கம்பெனிக்கே நீங்கள் போன் செய்து கேட்டுப் பார்க்கலாமே!" 


இதை அதிகாரிகள் எவரும் எதிர்பார்கவில்லை. தாங்கள் எதைச் சரிபார்க்க வேண்டுமென்று நினைத்து வந்தார்களோ, அதையே அவனும் சொன்னது ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவன் பேச்சில் உண்மைத்தன்மை பளிச்சிட்டதைக் கண்டார்கள். தன்னிடமிருந்த காகிதங்களிலிருந்து கம்பெனியின் பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை அவன் கொடுத்தான். அவனுக்கு முன்னாலேயே போன் செய்யப்பட்டது. ஆனால், அப்படியொரு விலாசமோ, கம்பெனியோ டோக்கியோவில் இல்லையெனத் தெரியவந்தது. அந்தத் தொலைபேசி இலக்கங்களும் தவறாக இருந்தது. 


இதை அவன் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அவன் பொய் சொல்பவனல்ல. தன் நாட்டில் மிகவும் மதிக்கத்தக்க பிரஜை அவன். இப்படியொரு அவமரியாதை அவனுக்கு இதுவரை ஏற்பட்டதேயில்லை. நாடுகள்தோறும் வியாபாரம் செய்து, கோடிகோடியாகப் பணத்தைப் பெருக்கி, வளர்ந்துவரும் கோடீஸ்வரர்களில் அவனும் ஒருவன். 'என்னை எப்படி இவர்கள் இப்படி நடத்தலாம்? ஒரு அதிகாரிதான் தப்பாகச் சிந்திப்பாரென்றால், அனைத்து அதிகாரிகளும் எப்படித் தப்பாகச் சிந்திக்க முடியும்? இல்லையென்றால், நான்தான் இங்கே தப்பா? எங்கோ தவறு நடந்து வேறொரு இடத்துக்கு நான் மாறிவந்துவிட்டேனா?' மேலே அவனால் நினைக்க முடியவில்லை. 'அட! நான் இதை மறந்து போனேனே! டௌரெட்டிலிருக்கும் என் மனைவியுடன் போனில் பேசினால், அவள் இவர்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்வாளல்லவா?' அதை உடன் அதிகாரிகளுக்குச் சொன்னான். அதிகாரிகளில் பலர் அதை ஒத்துக்கொள்ளவில்லை. இவனொரு ஏமாற்றுக்காரன் அல்லது பைத்தியக்காரன் என்ற முடிவுக்கே அவர்கள் வந்திருந்தார்கள். தன் மனைவிக்கு தொலைபேச அனுமதிக்கும்படி அவன் கெஞ்சினான். பெரிய அதிகாரிக்கு மட்டும் அவன் பொய் சொல்லவில்லையென்ற எண்ணம் தோன்றிக்கொண்டேயிருந்தது. அவரது அனுபவத்தில் பொய் சொல்லும் எத்தனையோ குற்றவாளிகளைக் கண்டிருக்கிறார். அவர்களின் கண்களை அல்லது விரலசைவுகளை வைத்தே பொய் சொல்வதை அவரால் கண்டுபிடித்துவிட முடியும். பொய் சொல்பவனை அவரது உள்ளுணர்வு உடன் காட்டிக்கொடுத்துவிடும். இவனிடம் அப்படி எதுவுமே தெரியவில்லை. இறுதிச் சந்தர்ப்பமாக அவனுக்கு மனைவியிடம் தொலைபேச அனுமதித்தார். அவன் கையில் தொலைபேசி கொடுக்கப்பட்டது. 


அவன் டயல் செய்தான். ஆனால் அவன் டயல் செய்யும் இலக்கம் தவறென்பதுபோல தொலைபேசியிலிருந்து சத்தம் வந்தது. பலதடவைகள் முயற்சி செய்தான். அப்படியொரு இலக்கமே இல்லையென்று தொலைபேசிக் காரியாலத்திலிருந்தும் சொல்லப்பட்டது. அவனுக்கு அப்போதுதான், தான் நினைத்தது சரியென்று தோன்றியது. உண்மையாகவே தப்பு நடந்துவிட்டது தெரிந்தது. 'சுவரிலிருந்த வரைபடத்தைத் தவிர்ந்து வேறு வரைபடம் இருகிறதா?' எனக்கேட்டான். அவனுக்கு ஒரு வரைபடப் புத்தகமே கொடுக்கப்பட்டது. அதிலுள்ள அநேகமான நாடுகள் அவனுக்குத் தெரியாத நாடுகளாகவே இருந்தன. வரைபடமும் வேறு வடிவத்தில் அமைந்ததுபோலத் தெரிந்தது. தப்பான ஒரு இடத்துக்குத் தான் மாறி வந்துவிட்டதை அவன் அறிந்துகொண்டான். கடைசியாக 'டௌரெட்' விமானநிலையத்தில் யப்பான் செல்வதற்காக ஏறியது ஞாபகமிருந்தது. மனைவியும், மகளும் வழியனுப்பக்கூட வந்திருந்தனர். அப்புறம் விமானத்தில் நெடுநேரம் நித்திரைசெய்தது, பின்னர் விமானம் இறங்கும்போது விழித்தெழுந்தது ஞாபகம் வந்தது. இப்போது யோசிக்கும்போது, நித்திரையால் எழுந்த பின்னர் விமானத்தில் ஒரு மாற்றம் இருப்பதாகத்தான் தோன்றியது. ஆனால், நித்திரைக் கலக்கத்தில் அதைப் பெரிதாக எடுக்கவில்லை. தன் தலையைப் பிடித்தபடி, குனிந்துகொண்டு அழுதான். அழுது எழுந்தவனுக்கு என்ன நடந்திருக்குமெனத் தெரிந்துபோனது. அவன் அமைதியானான். அதன் பின்னர் அதிகாரிகள் கேட்ட எந்தக் கேள்விகளுக்கும் அவன் பதிலளிக்க மறுத்துவிட்டான். அவனொரு ஐரோப்பியனாக இருந்ததால் வன்முறைகள்மூலம் உண்மையைக் கேட்டறிய முடியவில்லை. டோக்கியோ நகர இரகசியப் போலீஸிடம் அவனைக் கையளிப்பதாக முடிவெடுக்கப்பட்டது. அதற்கான ஆவணங்களைத் தயார்செய்ய நேரம் தேவைப்பட்டதால், அன்றிரவு விமானநிலையத்துக்கு அருகேயுள்ள ஹோட்டல் ஒன்றில் காவலில் வைத்திருப்பதற்குத் தீர்மானித்தனர். 


எட்டடுக்கு மாடிகளைக்கொண்ட அந்த ஹோட்டலின் ஐந்தாவது மாடியில், ஒரு அறையில் அவன் தங்கவைக்கப்பட்டான். அந்த ஹோட்டர் அறை பாதுகாப்புடன் விசேசமாகத் தயார் செய்யப்பட்டது. எப்படி முயன்றாலும் திறக்க முடியாத ஜன்னல்களுடன், பால்கனியேயில்லாத அறையது. அந்த அறையிலிருந்து தப்ப வேண்டுமாயின் வாசல் வழியாக மட்டுமே தப்பமுடியும். அறை வாசலில் இரண்டு காவலர்களும், சற்றுத் தள்ளி இரண்டு காவலர்களும் பாதுகாப்புக்கென நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அறையில் இருந்த கட்டிலில் நிம்மதியாக அவன் படுத்துறங்கினான். 


அடுத்தநாள் காலையுணவிற்காக அவனை எழுப்புவதற்குக் காவலர்கள் அறையைத் திறந்தபோது, அறை வெறுமையாகக் காட்சியளித்தது. அங்கு யாருமே காணப்படவில்லை. காற்றில் கரைந்து மாயமாகியிருந்தான் அவன். வாசல் வழியாகவோ அல்லது வேறெந்த வழியாகவோ அவன் தப்பிப் போயிருக்க முடியாது. ஆனால் எப்படி அவன் மறைந்து போனான்? அதிகாரிகளுக்கு விபரம் அறிவிக்கப்பட்டது. அலறியடித்துக்கொண்டு ஹோட்டலுக்கு ஓடிவந்தனர். எங்கு தேடியும் அவனில்லை. ஹோட்டலில் தேடிக்கொண்டிருந்த அதிகாரிகளுக்கு விமானநிலையத்திலிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது. காவலரொருவர் பதட்டத்துடன் பேசினார். 


"அந்த மனிதனின் கைப்பெட்டி, அவனது ஆவனங்கள், கடவுச்சீட்டு அனைத்தும் இருந்த இடத்திலிருந்து மாயமாகிவிட்டன" 


இதுவரை இந்தக் கதையைப் படித்தபோது, 'ராஜ்சிவா புனைகதை எழுத ஆரம்பித்துவிட்டாரா?' என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால், இது புனைகதையில்லை. நிஜமாகவே நடந்த கதை. 'The man from Taured' என்று அவனைப்பற்றி உலகமே பேசுகிறது. டோக்கியோவிலிருக்கும் 'ஹனேடா' (Haneda) விமானநிலையத்தில், 1954ம் ஆண்டு யூலை மாதம் அந்த மனிதன் வந்திறங்கியதாகச் சொல்லப்படுகிறது. அழகாக வெட்டப்பட்ட தாடியுடன், நாகரீகமாகக் காட்சியளித்திருக்கிறான். பின்னர் மறைந்து போய்விட்டான். அவன் கூறும்போது, "டௌரெட் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் நாடு" என்று சொல்லியிருக்கிறான். அத்துடன் அவனது கடவுச்சீட்டும் போலியான கடவுச்சீட்டென்று சொல்ல முடியாததுபோல் இருந்தது. 


'அவன் யார்? டோக்கியோவுக்கு எப்படி வந்தான்? உண்மையில் அப்படியொருவன் வந்தானா? அல்லது அவன் போலியாக உருவாக்கப்பட்ட ஒரு வரலாற்றுப் பாத்திரமா? இல்லை, காலப் பிரயாணத்தில் வந்துபோன ஒரு மனிதனா? அல்லது, பூமியின் இன்னுமொரு பரிமாணத்தில் (Dimension) இருந்து மாறி வந்துவிட்டவனா?' 


அல்லது ஏலியனா? 


விடை தெரியாத பல கேள்விகள் நம்மிடையே இன்னமும் இருந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் முக்கியமானது, 'ஏலியன் என்று சொல்லப்படும் வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்களா?' என்னும் கேள்விதான். இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இனிவரும் ஒவ்வொரு இதழிலும் நாம் விளக்கமாகப் பார்ப்போமா?  


அடுத்த இதழில் ஏலியன்களுடன் உங்களைச் சந்திக்கிறேன். 


(மர்மங்கள் தொடரும்) 


-ராஜ்சிவா-