வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

March 6, 2015

வெரோனிக்காவின் முக்காடு - (பகுதி 3)



நாஸாவினரால் விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி எடுக்கப்படும் புகைப்படங்களை ஆராய்வதற்கென்று உருவாக்கப்பட்ட கருவிதான் 'VP8 இமேஜ் அனலைஸர்' (VP8 Image Analyzer) என்பதாகும். மேலே இருந்து எடுக்கப்பட்ட படங்களில், பூமியின் நிலப்பரப்பின் உயர்வு, தாழ்ச்சி என்பவற்றை இந்தக் கருவி கணித்துச் சொல்லும். இந்தக் கருவியில் ஒரு சாதாரண மனிதனின் புகைப்படமொன்றை (2D) வைத்து ஆராய்வோமானால், அந்தப் புகைப்படத்தில் இருக்கும் மனித உருவம் சிதைந்து காணப்படும். அதே நேரம், VP8 இல் ஒரு முப்பரிமாணப் படமொன்றை (3D) வைத்துப் பார்த்தால், அந்தப் படத்தில் உள்ள உருவம், முப்பரிமாணத் தோற்றத்துடன், மேலெழுந்த வடிவத்தில் காணப்படும். நாம் முப்பரிமாணப் படமொன்றை, அதற்குரிய கண்ணாடியை அணிந்துகொண்டு பார்க்கும்போது தெரியும் உருவம்போல அது இருக்கும். இந்த VP8 கருவியில் டூரின் துணியில் தெரிந்த உருவத்தைப் புகைப்படமாக எடுத்ததை வைத்துப் பார்ப்பதற்கு முடிவு செய்தார்கள். அதில் அந்தப் படத்தை வைத்துப் பார்க்கும் போதும், சிதைந்து போன உருவம் தெரியும் என்றுதான் நினைத்திருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சியொன்று காத்திருந்தது. அந்தப் படத்தை VP8 கருவியில் வைத்துப் பார்த்தபோது, அதில் தெரிந்த இயேசுநாதர் என்று கருதப்பட்ட அந்த உருவம் எந்தச் சிதைவும் இல்லாமல், முப்பரிமாண வடிவத்தில் முழுமையான மேலெழும்பிய முகத்துடன் அங்கு காணப்பட்டது. இப்படியொரு அதிசயத்தை அவர்கள் இதற்கு முன்னர் கண்டதேயில்லை. நெகட்டிவான எதிர்மறைப் படம் டூரின் துணியில் இருந்ததை 'செகண்டோ பியா' எடுத்த புகைப்படத்தின் மூலம் தெரிந்து கொண்டபோது எவ்வளவு ஆச்சரியமடைந்தார்களோ, அதைவிட அதிகளவு ஆச்சரியம், அந்தப் படம் முப்பரிமாணத் தோற்றத்தின் தகவல்களைக் கொண்டிருக்கின்றது என்ற போதும் ஏற்பட்டது.


டூரின் துணியில் காணப்பட்ட சில அதீதத் தன்மைகள், அது இயேசுநாதருடையதுதான் என்று பலர் எந்த மறுப்பும் இல்லாமல் நம்பிவிடுவதற்குக் காரணமாக இருந்தன. குறிப்பாகத் துணியில் இருந்த உருவம் மனிதனால் வரையப்பட்ட உருவமல்ல என்பதும், அது எதிர்மறை உருவமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது என்பதும், அத்துடன் அது முப்பரிமாணத் தோற்றத்திற்கான தகவல்களைக் கொண்டிருந்தது என்பதும், அதற்கு ஒரு அமானுஷ்யத் தன்மையை ஏற்படுத்தியிருந்தது. விஞ்ஞானம் வளர்ந்து, கணணிகளின் ஆதிக்கம் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில், இதுபோல ஒரு உருவத்தை மனிதனால் ஒரு துணியில் உருவாக்கியிருக்க முடியலாம். ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், இப்படியொன்றை மனிதனால் உருவாக்கியிருக்க முடியவே முடியாது என்று பலர் நினைத்திருந்தனர். அதனால், இது மனிதனைத் தாண்டிய ஒரு அதிசயச் சக்தியொன்றினாலேயே நடைபெற்றிருக்க வேண்டும் என்று அவர்கள் நம்புவதில் ஆச்சரியமில்லை. ஆனால், என்னதான் முடிவுகள் நம்பிக்கையாளர்களுக்குச் சாதகமாக வந்தாலும், அங்கும் பல மழுப்பலான ஓட்டைகள் இருந்ததை, எதிர்ப்பவர்கள் சுலபமாகக் கண்டு கொண்டார்கள். எந்த உருவம், அமானுஷ்யமான சக்தியொன்றினால் அந்தத் துணியில் பதிவாகியது என்று நினைத்தார்களோ, அந்த உருவத்தின் அமைப்பே அது உண்மையானதல்ல என்று மறுப்பதற்கும் வாய்ப்புகளை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுத்தது.


இப்போது நான் சொல்லப் போவதை நன்றாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். டுரின் துணியில் காணப்பட்ட உருவத்தின் அமைப்பை நீங்கள் படத்தில் பார்த்தீர்களல்லவா? அது ஒரு மனிதனின் முகத்தை அப்படியே வரைந்தது போலக் காட்சி தருகிறதல்லவா? அது எப்படி உருவாகியது என்று நமக்குச் சொல்லப்பட்டது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு, மரணமடைந்த பின்னர், மூன்று நாட்களுக்கு அந்தத் துணி அவர் உடலில் போர்த்தப்பட்டிருந்தது எனவும், முகத்தின் மேல் அது மூடிக் கட்டப்பட்டது எனவும் பைபிளில் சொல்லப்பட்டிருந்தது அல்லவா? "இயேசுநாதரின் முகத்தின் மேல், மூன்று நாட்களாக அந்தத் துணி இருந்ததால்தான், அவரது முகம் அதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது" என்றுதானே நாம் நம்புகிறோம். அப்படியிருக்கும் பட்சத்தில், இதைச் சரியாகச் சிந்தித்துப் பாருங்கள். இயேசுநாதரின் முகம், காதிலிருந்து மூக்கு நுனிவரை மேல் நோக்கியபடி முப்பரிமாணத் தோற்றத்தில் உயர்ந்தல்லவா காணப்படும். அப்படிக் காணப்படும் முகத்தில் ஒரு துணியை நாம் போர்த்தினால், ஒரு காதுக்கும், மற்றக் காதுக்கும் இடையேயுள்ள இடைவெளி, போர்த்திய நிலையில் இருக்கும்போது அகலம் குறைந்ததாகவும், அந்தத் துணியை எடுத்து விரிக்கும்போது காதுகளுக்கிடையில் இருக்கும் இடைவெளி அதிகமாகவும் அல்லவா இருக்கும்? நான் சொல்வது புரியவில்லையா? சரி, இதை இப்படிப் பாருங்கள். இரண்டடி அகலமுள்ள சதுரத் துணியொன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதை உங்கள் முகத்தின் மேல் அப்படியே போட்டு மூடுங்கள். அது முகத்தில் இருக்கும் நிலையில், உங்கள் காதுகள் இருக்கும் இடங்களை அந்தத் துணியில் அடையாளமிடுங்கள். அப்படியே, உங்கள் கன்னங்கள் இரண்டையும் அடையாளமிடுங்கள். தொடர்ந்து, மூக்கு, நெற்றி, தாடை ஆகியவற்றையும் அடையாளமிடுங்கள். முடிந்ததா? இப்போது துணியை முகத்திலிருந்து எடுத்து விரித்துப் பாருங்கள். உங்கள் நிஜ முகத்தின் அகலத்தை விட, துணியில் இருக்கும் அடையாளங்கள் அதிக இடைவெளிகளில் காணப்படும். அது ஒரு கார்ட்டூன் மனிதனின் முகம்போலக் காட்சி தரும். உங்கள் முகத்தின் முப்பரிமாணத் தோற்றத்தினூடாக அந்தத் துணி போர்த்தப்பட்டுப் பின்னர் விரிக்கப்பட்டதுதான், அதற்குக் காரணம். முகம் அகலமாக இருக்க வேண்டும் என்று நான் சொல்லியிருந்தது இப்போதும் புரியாதவர்கள், குழந்தைகளை ஏமாற்றுவதற்கு நாம் அணியும் ரப்பரினால் செய்யப்பட்ட மெல்லிய முகமூடியை வெட்டி விரித்துப் பார்க்கும்போது, என்ன தோற்றம் வரும் என்று சிந்தித்துப் பாருங்கள். முடியாதவர்கள், அதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் படத்தைப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள். இப்போது அநேகமாகப் புரிந்திருக்கும் என்றே நம்புகிறேன். அதனால் நாம் இப்போது டூரின் துணிக்கு வரலாம். டூரின் துணியிலிருக்கும் உருவமும் இயேசுநாதரைப் போர்த்தியதால் ஏற்பட்டது என்றால், அதுவும் அகலமான முக அமைப்பைத்தான் கொண்டிருந்திருக்க வேண்டும்? ஆனால், டூரின் துணியில் உள்ள உருவம், படம் ஒன்றை வரைந்ததுபோல அல்லவா காணப்படுகிறது. அந்தத் துணி ஒரு உடலில் போர்த்தப்பட்டிருந்திருக்கலாம். அதனால் இரத்தத் திட்டுகள் அதில் பதிந்திருக்கலாம். ஆனால், முகம் பதிய வேண்டுமானால், அகலமாகத்தானே பதிந்திருக்க வேண்டும்? அப்படி இல்லாமல், மனிதன் ஒருவனை நேரில் பார்க்கும்போது தெரியும் அதே முக அமைப்பில் எப்படிப் பதிந்திருக்க முடியும்? இப்போது, அந்த உருவம் யாராலோ வரையப்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுகிறதல்லவா?




டூரின் துணியில் உள்ள உருவம் இயேசுநாதரின் முகத்தில் படிந்திருப்பதால் பதிவாகியது என்பதில் பெரும் சந்தேகம் உருவாகினாலும், அதுவரை செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் அனைத்தும் அது வரையப்பட்ட உருவமல்ல என்றே முடிவுக்குக் கொண்டுவந்திருந்தன. நிச்சயம் அது வரையப்பட்டிருக்க வேண்டும் என்று ஒருபுறம் முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கையில், அது வரையப்படவில்லை என்ற முடிவுகளும் கிடைத்திருந்தன. இது ஒரு பெருங்குழப்பமாகவே உருவெடுத்தது. இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில், 'துணியில் காணப்பட்ட இரத்தத் திட்டுகள் என்ன சொல்கின்றன?' என்ற கேள்வியும் எஞ்சி நின்றது. இரத்தத்தை ஆராய்வதற்கு முன்னரே அது பல சந்தேகங்களைக் கிளப்பியிருந்தது. அந்தச் சந்தேகங்களுக்குக் காரணம், துணியில் காணப்பட்ட அந்த இரத்தத் திட்டுகள் மனிதனின் இரத்தத் திட்டுகள்போல இல்லாமல், சிறிது மாற்றத்துடன் காணப்பட்டதுதான். சாதாரணமாகக் காலம் செல்லச் செல்ல மனிதனின் இரத்தம் சிவப்பு நிறத்தை இழந்து மஞ்சள் நிறமாக மாறும். மேலும் காலம் சென்றால், அது மண்ணிறத்தை அடையும். அதன் பின்னர் அது கருப்பாக மாறும். ஆனால், டூரின் துணியில் காணப்பட இரத்தத் திட்டுக்களில் சில, அப்போதும் சிவப்பு நிறமாகவே காணப்பட்டன. மனித இரத்தமாக இருந்தால், அது நிச்சயம் நிறம் மாறியிருக்க வேண்டும். டூரின் துணியில் இருந்த இரத்தம் சிவப்பாக இருந்ததை, மக்கள் இரண்டு விதங்களில் பார்க்க ஆரம்பித்தனர். அது இயேசுநாதரின் இரத்தம் என்று நம்பியவர்கள், 'இயேசுவின் பரிசுத்த இரத்தம் என்பதாலேயே நிறம் மாறாமல், சிவப்பு நிறத்தில் இப்போதும் காணப்படுகிறது' என்று சொல்லி அதிசயப்பட்டார்கள். ஆனால், அது இயேசுவினுடையது அல்ல என்று மறுப்பவர்களோ, 'இது சிவப்பு நிறத்தில் இப்போதும் இருப்பதால் மனித இரத்தமாக இருப்பதற்குச் சாத்தியமேயில்லை. நிச்சயம் இது சிவப்பு மையினால் வரையப்பட்டிருக்க வேண்டும்' என்று கருதினார்கள். இந்தச் சந்தேகங்களைத் தீர்த்துவிட வேண்டுமென்பதால், துணியில் இருந்த இரத்தத்தின் மாதிரியைப் பரிசோதனை செய்வதென்ற முடிவுக்கு வந்தார்கள். துணியில் இருந்த இரத்தத்திட்டு சுரண்டப்பட்டுப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. "சிவப்பு மையா? இல்லை இயேசுவின் இரத்தமா?" என்று ஆவலுடன் காத்திருந்த மக்களுக்குப் பதிலும் கிடைத்தது.


சந்தேகமே இல்லாமல், டூரின் துணியில் காணப்படுவது ஒது மனிதனின் இரத்தம்தான் என்று பரிசோதனையின் முடிவு தெரிவித்தது. அத்துடன் இன்னுமொரு ஆச்சரியமும் அதில் இருந்தது. அதாவது அந்த இரத்தம் 'AB' வகையைச் சேர்ந்தது என்று சொல்லப்பட்டது. அதன் அர்த்தம், அந்த டூரின் துணியில் இருக்கும் இரத்தம் இயேசுநாதருடையதுதான் என்ற முடிவுக்கு நாம் வருவோமானால், இயேசுநாதருக்கு 'AB' வகையைச் சேர்ந்த இரத்தம் உடலில் ஓடிக்கொண்டிருந்திருக்க வேண்டும். இது இரத்த வகைகளில் மிகவும் அரிய வகையானது என்பது உண்மைதான் ('AB' வகை இரத்தம் உள்ளவர்கள் இதனால் கொஞ்சம் பெருமையும் பட்டுக் கொள்ளலாம்). துணியில் இருந்தது மை அல்ல இரத்தம்தான் என்ற முடிவு நம்பிக்கையாளர்களுக்குப் பெரிய நிம்மதியைக் கொடுத்தது. அதுமட்டும் இரத்தம் இல்லை, மைதான் என்ற முடிவு வந்திருக்கும் பட்சத்தில், ஒட்டுமொத்த நம்பிக்கையும் அடியோடு தகர்ந்து போயிருக்கும். அந்த இரத்தம் பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் 'A', 'B' வகை இரத்தம் இல்லாமல், 'AB' என்னும் அரிய வகையில் இருந்தது நம்பிக்கையாளர்களின் வாதத்துக்குப் பலம் சேர்க்கும் வகையில் இருந்தது. "பார்த்தீர்களா? அது இயேசுவின் இரத்தம் என்பதால்தான் AB என்னும் அரிய வகையான இரத்தமாக இருக்கிறது" என்று சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் அதற்கும் சில உயிரியல் ஆராய்ச்சியாளர்களின் கூற்று முட்டுக்கட்டையிட்டது. இரத்தமானது காலம் செல்லச் செல்ல அதிலிருக்கும் பிளாஸ்மாக் கலங்களின் ஆண்டிபாடியை (Antibody) இழக்கத் தொடங்கும். பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் முழுமையாக அங்கே ஆண்டிபாடீகள் அழிந்து போயிருக்கும். எந்த இரத்த வகையில் பிளாஸ்மாக் கலங்களில் ஆண்டிபாடீ இருக்காதோ, அதையே 'AB' வகை இரத்தம் என்று வரையறுக்கிறார்கள். டூரின் துணியில் இருந்த இரத்தம் 'A' வகை இரத்தமாகவோ அல்லது 'B' வகை இரத்தமாகவோ இருந்திருந்தாலும், அவை பல நூற்றாண்டுகளின் பின்னர் தங்கள் ஆண்டிபாடீயை இழந்திருக்கும். அவற்றைப் பரிசோதனை செய்யும்போது, 'AB' வகை இரத்தம் என்றே நாம் முடிவுக்கு வருவோம் என்று உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அது அப்படியில்லை என்று மறுப்பவர்களும் உண்டு.




இப்போது வேறு வகையில் ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது. ஒரு சாதாரண மனிதனுக்கு, உடல் கலங்களில், 23 சோடிக் குரோமோசோம்கள் (Chromosome) உண்டு. அதாவது, மொத்தமாக 46 குரோமோசோம்கள் காணப்படும். மனிதன் கருவில் உருவாகும்போது, தாயிடமிருந்து 23 குரோமோசோம்களும், தந்தையிடமிருந்து 23 குரோமோசோம்களும் பெற்றிருப்பான். 22 சோடிக் குரோமொசோம்களுடன், 23வது சோடியில் ஆணென்றால் X,Y குரோமோசோம்களும், பெண்ணென்றால் X,X குரோமொசோம்களும் சோடியாகச் சேர்ந்திருக்கும். இயேசுநாதர் மனிதனாகப் பிறந்தாலும், அவர் தகப்பன் இல்லாமல் தாயின் கர்ப்பத்தில் மட்டுமே உருவாகியவர் என்றே பைபிள் கூறுகின்றது. அதையே கிருஸ்தவர்களும் நம்புகின்றனர். ஒருவர் தகப்பன் இல்லாமல், தாயின் கர்ப்பத்தில் மட்டுமே உருவாகியிருக்க வெண்டுமென்றால், அவருக்குத் தாயின் வழி வந்த 23 குரோமோசோம்களே கிடைத்திருக்கும். எஞ்சிய 23 குரோமோசோம்களும் எப்படி அவருக்குக் கிடைத்தன? என்ற கேள்வி இங்கு முன்வைக்கப்பட்டது. இந்தக் கேள்வி குறிப்பாக இங்கே முன்வைக்கப்பட்டதன் காரணம், டூரின் துணியில் காணப்பட்ட இரத்தம், மனித வகையைச் சார்ந்த AB வகை என்பதால்தான். "கடவுளின் படைப்பில் எந்தவிதமான அதிசயங்களும் நடக்கலாம்" என்ற கூற்று இந்தச் சந்தேகத்திற்கான பதிலாக இங்கு சொல்லப்பட்டது. ஆனாலும் டூரின் துணியில் இருந்த இரத்தத்தில் உள்ள குரோமோசோம்கள் என்ன சொல்கின்றன? என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. காரணம் இரத்தம் பல நூற்றாண்டுகள் ஆன பழைய இரத்தமாக இருந்ததால், அதிலுள்ள குரோமோசோம்களும் அழிந்துவிட்டிருந்தன. இது மிகப்பெரியதொரு விவாதத்தை இல்லாமல் செய்திருந்தது.


டூரின் துணி இயேசுநாதருடையதுதான் என்று ஒரு சாராரும், இல்லையென்று மறு சாராரும் தங்கள் பக்கச் சார்பாகத் தொடர்ச்சியாக விளக்கங்களைக் கொடுக்க ஆரம்பித்தனர். கார்பன் தேதிப் பரிசோதனை செய்ததில் தப்பு இருக்கிறது என்ற முடிவுக்கு வந்த நிலையில், அதுவே தங்களுக்குச் சார்பான நிலைப்பாடு என்று நம்புபவர்கள் அமைதியாக இருந்து கொண்டார்கள். ஆனால் மேலும் ஒரு கார்பன் தேதிப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று மற்றவர்கள் விரும்பினார்கள். ஆனால், அதற்குக் கத்தோலிக்க மதபீடம் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது. டூரின் துணியின் மேலுமொரு பகுதியை வெட்டியெடுக்க அது சம்மதிக்கவில்லை. இந்த நிலையில் இத்தாலியைச் சேர்ந்த புரொபசர் 'லூயிஜி கார்லாசெல்லி' (Luigi Garlaschelli) என்பவர் டூரின் துணியைப் போலவே அச்சு அசலாக ஒரு துணியை, அதில் உள்ள உருவங்களுடன் உருவாக்கிக் காட்டினார். அதாவது டூரின் துணி இயேசுநாதரின் உருவத்தைக் கொண்டதல்ல என்றும், அதைச் சில நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த யாரோதான் உருவாக்கியிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தான் எப்படி இதை உருவாக்கியிருக்கிறேனோ, அதேபோல அவர்களும் உருவாக்கியிருக்கிறார்கள் என்று அவர் கூறினார். அவர் உருவாக்கிய துணியைப் பார்த்தவர்கள் அதை நம்பவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். அதேபோல, டாக்டர் 'எமிலி கிரெய்க்' (Dr.Emily Craig) என்பவரும் டூரின் துணியில் உள்ள உருவத்தை எப்படி பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரைந்திருப்பார்கள் என்று வரைந்து காட்டினார். இவர்களது இந்த நடவடிக்கைகளால், டூரின் துணி இயேசுநாதருடையதுதான் என்னும் நம்பிக்கை பலமிழக்கத் தொடங்கியது. கார்பன் தூசுகளையும், வேறுசில பதார்த்தங்களையும் கொண்டு துணியில் எமிலியால் வரையப்பட்ட படத்தை, நாஸாவின் 'VP8 அனலைசர்' கருவியின் மூலம் பரிசோதனை செய்தபோது, அதிலும் முப்பரிமாணத் தோற்றம் தெரிந்தது. இது அனைவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. துணியில் உள்ள உருவத்தைப் பரிசோதித்தபோது, அது மையினால் வரையபட்ட எந்த அடையாளத்தையும் கொண்டிருக்கவில்லை. எனவே, எமிலி எப்படி இந்த உருவத்தை வரைந்தாரோ, அதுபோலச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த யாரோ ஒரு ஓவியர் இந்த டூரின் துணியையும் வரைந்திருக்கலாம் என்ற சந்தேகம் உருவாகியது. ஆனால், அந்த அளவுக்குப் புத்திசாலியும், கெட்டித்தனமும் உள்ள ஓவியர் இருந்திருக்க முடியுமா? என்ற கேள்வியும் அப்போது எழுந்தது.


இந்த ஆச்சரியங்களுக்கெல்லாம் விடைதரும் அளவுக்கு அதிபுத்திசாலியாகவும், மிகுந்த திறமைசாலியாகவும் ஒரு ஓவியர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்துதான் இருக்கிறார். அவரின் திறமைகளை அறிய முயற்சித்தால் நாம் வியப்பின் எல்லைக்கே சென்று விடுவோம். அவரால் உருவாக்கப்பட்ட பல மர்மங்களை இன்றுகூட விடுவிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். டூரின் துணியின் மர்மத்துக்குப் பின்னாலும் அவர்தான் இருந்தார் என்று திடமாக நம்புகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அவர் யாரென்று தெரிந்தால், நீங்களும் அதை நம்ப ஆரம்பிப்பீர்கள். சமீபத்தில் கூட இயேசுநாதரை மையமாக வைத்து எழுதப்பட்ட பிரபலமான, வில்லங்கமான நாவலொன்றிற்கு இவரது பெயரே சூட்டப்பட்டிருந்தது. அந்த ஓவியர் வரைந்த ஓவியங்களின் மர்ம முடிச்சுகளை வைத்து 'டான் பிரௌன்' (Dan Brown) எழுதிய 'டாவின்சி கோட்' (The Da Vinci Code) என்னும் நாவல் உலகப் பிரசித்திபெற்றது.




டூரின் துணிக்கு மூல காரணமாகக் கருதப்படுபவர் வேறு யாருமல்ல. பிரசித்தி பெற்ற மொனோலிசா ஓவியத்தைப் படைத்த ' லியனார்டோ டாவின்சி' என்னும் ஓவியர்தான் அவர். அவர்தான் டூரின் துணிக்கான காரணமாக இருப்பவர் என்று சந்தேகிப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அந்தக் காரணங்கள் ஒவ்வொன்றையும் நாம் தெரிந்து கொள்ளும்போது அசந்து போய்விடுவோம். அந்த அளவுக்கு ஆச்சரியமானவை அவை. அந்த ஆச்சரியங்கள் ஒவ்வொன்றையும் அடுத்த பகுதியில் நாம் பார்க்கலாம்.


- தொடரும்




1 comment: