வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

March 6, 2015

நியூட்ரீனோ (Neutrino) என்னும் பிசாசு - பகுதி 4



‘பிக்பாங்’ (Bigbang) என்னும் பேரண்டப் பெருவெடிப்பின் கணத்திலேயே உருவாகிய துகள் நியூட்ரீனோவாகும். சுமார் 13.7 பில்லியன் வருடங்களிலிருந்து இன்றுவரை, பேரண்டம் முழுவதும் பிரயாணம் செய்து பரவிக்கொண்டிருக்கிறன நியூட்ரீனோக்கள். பெருவெடிப்பு நிகழ்ந்த கணத்திற்கு 0.01 செக்கனிலேயே பேரண்டம் பிரமாண்டமாக விரிவடைந்திருந்தது. அதற்கு அடுத்து வந்த அதாவது 0.01 செக்கனிலிருந்து 3 நிமிடங்கள் வரையுள்ள நேரத்தில், அணுக்கதிர்த் தொழிற்பாடுகள் நடைபெற்றன. அதன் பின்னர்தான் ஐதரசன் அணுக்கரு, ஹீலியம் அணுக்கருவென வரிசையாகத் தனிமங்களின் அணுக்கருக்கள் உருவாக ஆரம்பித்தன. இந்த மூன்று நிமிட நேரத்தினுள் பேரண்டத்தை நிறைப்பதற்குத் தேவையான அளவு நியூட்ரீனோக்கள் உருவாகியிருக்கின்றன. இப்போதுகூடப் பிரபஞ்சமெங்குமுள்ள ஒவ்வொரு சதுர மீட்டரிலும் 330 மில்லியன் நியூட்ரீனோக்கள் இருக்கின்றன. நியூட்ரீனோக்கள் எட்டாத இடமே பிரபஞ்சதில் இல்லை என்று சொல்லலாம். நீங்கள் இப்போது இருக்கும் அறையின் ஒரு சதுர அங்குலத்தில், பிக்பாங்கின் போது உருவான 100 நியூட்ரீனோக்கள் இப்போதும் இருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதாவது அப்போது பயணிக்க ஆரம்பித்த நியூட்ரீனோக்கள், உங்கள் அறை வழியாகச் சென்றுகொண்டேயிருன்க்கின்றன.

இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி தோன்றலாம். ஒரு சதுர அங்குலத்தில் 100 நியூட்ரீனோக்கள் செல்வதாகச் சொல்கிறேன். அதேநேரத்தில் ஒரு செக்கனில் 50 ட்ரில்லியன் நியூட்ரீனோக்கள் நம் உடலினூடாகச் செல்கிறது என்றும் சொல்கிறேன். இது இரண்டும் ஒன்றுக்கொன்று ஒத்துப் போகவில்லையே! என்று நீங்கள் நினைப்பீர்கள். இரண்டுமே உண்மைதான். நம் உடலினூடாகச் செல்லும் பெரும்பான்மையான நியூட்ரீனோக்கள் அனைத்தும் ஒரு மிகப்பெரிய அணுக்கதிர்த் தொழிற்சாலை ஒன்றிலிலிருந்து நம்முடலை நோக்கி வருபவை. அந்தத் தொழிற்சாலையிலிருந்துதான் ட்ரில்லியன் ட்ரில்லியன் நியூட்ரீனோக்கள், நொடிக்கு நொடி நம்மை வந்து சேர்கின்றன. அந்த அணுக்கதிர்த் தொழிற்சாலை எது தெரியுமா? அதுதான் நம் சூரியன். சூரியன்தான் அந்தளவு பெரும்பாலான நியூட்ரீனோக்களை உருவாக்கி பூமியை நோக்கி அனுப்பிக் கொண்டிருக்கிறது.

13,7 பில்லியன் வருடத்துக்கு முன்னர் உருவான பிக்பாங்கில் தோன்றிய நியூட்ரீனோக்கள் இன்னும் நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனவென்றால், அவற்றின் பயணத்தின் ஆற்றலை நினைத்துப் பாருங்கள். நியூட்ரீனோக்களின் பயணத்தை நிறுத்தி அவற்றைக் கைப்பற்ற வேண்டுமென்றால், நான்கு ஒளியாண்டுகள் நீளமுள்ள ஈயத்துண்டை (Lead) எடுத்து, அதனூடாக நியூட்ரீனோவைப் பயணிக்க விட்டால், அதன் வேகம் பூச்சியமாகி, அதைச் சேகரித்துக் கொள்ளலாம். நான் இப்போ சொன்னதைச் சரியாகக் கவனியுங்கள். நான்கு ஒளியாண்டுகளென்றால், நான்கு வருடங்கள், ஒளி செல்லும் தூரம். அதாவது, 4X300000X60X60X24X365 கிலோமீட்டர்கள் நீளம். இதை இன்னும் விளக்கமாகச் சொன்னால், பூமிக்கும், அல்ஃபா செண்டௌரி (Alpha Centauri) நட்சத்திரத்துக்கும் இடையிலுள்ள தூரமளவு நீளமான ஈயத்துக்கூடாக நியூட்ரீனோக்களைப் பயணிக்கச் செய்தால், அவற்றைக் கைப்பற்றலாம். இது சாத்தியமேயில்லாத ஒன்று.

இது சாத்தியமேயில்லாத செயலென்றால், எப்படி நாம் நியூட்ரீனோவை தமிழ் நாட்டில் கைப்பற்றப் போகிறோம்?

பிற்குறிப்பு: நான் கடந்த பகுதியில் நியூட்ரீனோவின் குறியீடாகத் தந்த எழுத்தை ஆங்கில V என்று பலர் நினைக்கிறார்கள். அது ‘நியூ' என்னும் v எழுத்தாகும்.


- தொடரும்


No comments:

Post a Comment