வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

February 13, 2016

திணிவு, எடை, நிறை

சாதாரணமாக ஒரு பொருளின் பாரத்தைக் குறிப்பதற்குப் பயன்படும் சொற்கள் திணிவு, எடை, நிறை என்பவையாகும். ஆனால், அறிவியலில் இவற்றிற்கிடையே வித்தியாசம் இருக்கிறது. ‘ஈர்ப்பலை’ (Gravitational Waves) பற்றிய என் பதிவுக்குப் பலரின் சந்தேகங்கங்கள், திணிவு, எடை, நிறை சார்ந்தே இருந்தன. ‘நட்சத்திரங்களும், கருந்துளைகளும் அதிகத் திணிவுள்ளவையாக இருப்பதால் அவை அண்டவெளியை வளைக்கின்றன. அவை ஒவ்வொன்றின் திணிவுக்கேற்ப அந்த வெளிவளைவு இருக்கும்’ என்று எழுதியிருந்தேன். இதில்தான் அதிகமானவர்களின் சந்தேகம் இருந்தது. “விண்வெளியின் காற்று இல்லை. அங்கு இருப்பது வெற்றிடம் மட்டும்தான். அங்கு சென்றால் மனிதனுக்கு கூட எடை கிடையாது. அப்படியிருக்கையில் எப்படிக் கோள்களுக்கும், நட்சத்திரங்களுக்கும் எடை இருக்க முடியும்?” என்று கேட்டிருந்தார்கள். நியாயமான கேள்விதான் அது. ஆனால் அதன் விடை நான் மேலே சொன்ன சொற்களின் அர்த்தங்களில்தான் இருக்கின்றது. இவற்றையெல்லாம் நீங்கள் சின்ன வயதில் பாடசாலைகளில் படித்ததுதான். ஆனாலும் மறந்திருப்பீர்கள். அதனால்தான் இந்தக் குழப்பம்.

முதலில் திணிவு, எடை, நிறை ஆகிய மூன்றும் வேறு வேறானவையா, அல்லது ஒன்றையே குறிக்கின்றனவா? என்று நாம் பார்க்கலாம்.

எடை, நிறை என்னும் இரண்டு சொற்களும் ஒன்றையே குறிப்பவை. ஆனால் ‘திணிவு’ வேறுவகையானது. எடையென்று தமிழ்நாட்டுத் தமிழர்கள் எதைக் குறிப்பிடுகிறார்களோ, அதற்கு ஈழத்தில், ‘நிறை’ என்று சொல்வார்கள். இதுதான் இந்த இரண்டு சொற்களின் வித்தியாசம். தமிழ்நாட்டின் சில இடங்களில் ‘நிறை’ என்ற சொற்பதம் பிரயோகப்படுத்தப்படலாம். அதை நீங்கள்தான் சொல்ல வெண்டும்.

‘எடை’ மற்றும் ‘நிறை’ என்னும் சொற்களுக்கு ஆங்கிலத்தில் ‘Weight’ என்று சொல்வார்கள். ஆனால், ‘திணிவு’ அப்படியல்ல, திணிவை ஆங்கிலத்தில் ‘Mass’ என்பார்கள். திரைப்படங்களில் “நான் மாஸுடா!” என்னும் டயலாக் சரியான விதத்தில் புரிந்து கொண்டுதான் பயன்படுத்துகிறார்களா என்றும் எனக்குத் தெரியவில்லை. அதையும் இயக்குனர்கள்தான் சொல்ல வேண்டும்.





ஒவ்வொரு பொருளுக்கும் ‘திணிவு’ (Mass) இருக்கிறது. இந்தத் ‘திணிவு’ அந்தப் பொருள் எங்கு இருந்தாலும் மாறாது. அது பூமியில் இருந்தாலென்ன, சந்திரனில் இருந்தாலென்ன, விண்வெளியில் இருந்தாலென்ன எங்கிருந்தாலும் அதன் ‘திணிவு’ மாறவே மாறாது.

“அது எப்படி?”

ஒரு ‘ஐதரசன்’ அணுவை எடுத்துக்கொள்ளுங்கள். அதற்குள் உபஅணுத்துகள்கள் இருக்கின்றன. அதில் உள்ள புரோட்டான் ஒன்றின் திணிவு 1. அதை அணுத்திணிவு என்போம். அதாவது ‘ஐதரசன்’, ஒரு அணுத்திணிவு உடையது. அது கிராம், கிலோகிராம், அவுன்ஸ் போன்ற அலகு கிடையாது. ஒன்று என்றால் ஒன்று. அவ்வளவுதான். அதுபோல ஒவ்வொரு தனிமங்களுக்கும் அணுத்திணிவுகள் உண்டு. இந்த அணுக்கள் சேர்ந்து மூலக்கூறுகள் உருவாகின்றன. மூலக்கூறுகள் ஒன்று சேர்ந்து பொருட்களும், நானும், நீங்களும், பூமியும், நட்சத்திரங்களும் ஆகிறோம். அதாவது ஒரு பொருளில் உள்ள அணுக்களின் திணிவின் கூட்டுத்தொகை அந்தப் பொருளின் மொத்தத் திணிவு ஆகிறது. இதில் குறிப்பாக புரோட்டானுக்கும், நியூட்ரானுக்கும் அணுவில் அளக்கக் கூடிய திணிவு இருக்கிறது. மற்ற உபஅணுத்துகள்களின் திணிவுகள் ரொம்பக் கம்மியென்பதால் அவற்றை நாம் தவிர்த்துவிடலாம். இதை எழுதிக் கொண்டிருக்கும் ‘ராஜ்சிவா’ ஆகிய நானும் அணுக்களால் உருவானவனே! என்னுள் எத்தனை அணுக்கள் இருக்கின்றனவோ அவ்வளவு திணிவை உடையவன். நான் சந்திரனுக்குச் சென்றாலும் இதே ராஜ்சிவாதான். என்னில் எந்த மாற்றமும் ஏற்பட மாட்டாது. அப்படி மாற்றமிருந்தால், நான் சரவணனாலவோ, செல்வமாகவோ மாறியிருப்பேன். நான் விண்வெளியில் இருந்தாலும், நட்சத்திரங்களில் இருந்தாலும், எங்கிருந்தாலும் ராஜ்சிவாதான். அதனால், என்னுடைய திணிவு எங்கும் சமமானது. அதுபோல, நான் எங்கு சென்றாலும் எனக்குத் ‘திணிவு’ இருந்துகொண்டே இருக்கும். ஆனால், எடை/நிறை அப்படியல்ல.

ஒரு பொருளின் எடை/நிறை என்பது அது எங்கு இருக்கிறதோ அதற்கேற்ப மாறுபடும். அதாவது ஒரு குறிப்பிட்ட திணிவுள்ள பொருளை ஈர்ப்புவிசை கீழ்நோக்கி இழுக்கும் போது ஏற்படுவதே எடை/நிறை எனப்படும். அதாவது, ராஜ்சிவாவின் திணிவை புவியீர்ப்பு விசையினால் பெருக்கும்போது வருவதே, ராஜ்சிவாவின் எடை/நிறை. இதே ‘ராஜ்சிவா’ சந்திரனுக்குச் சென்றால், அங்கு ஆறிலொரு மடங்கு எடையையோ/நிறையையோ கொண்டிருப்பார். காரணம் சந்திரனின் சந்திர ஈர்ப்புவிசையானது, பூமியின் புவியீர்ப்பு விசையின் 1/6 பங்காகும். இதே ‘ராஜ்சிவா’ காற்றில்லா விண்வெளியில் இருந்தால் அவருக்கு எடை/நிறை இருக்காது. காரணம் அங்கு ஈர்ப்புவிசை இல்லை. ஆனால் ஒன்றை மறக்க வேண்டாம். விண்வெளியிலும் ராஜ்சிவாவுக்குத் திணிவு இருக்கும்.

“சரி, அப்படியென்றால், ராஜ்சிவாவின் திணிவு எவ்வளவு”

பூமியில் ராஜ்சிவாவின் எடை 78 கிலோ என்றால் (நம்புங்க. இப்போது ‘ராஜ்சிவா’, எடையைக் குறைத்துவிட்டார். முன்னர் இருந்த குண்டான ‘ராஜ்சிவா’ இல்லை இப்போ), அந்த நிறையை பூமியின் புவியீர்ப்பு விசையினால் வகுத்தால் எவ்வளவு வருகிறதோ, அதுதான் ராஜ்சிவாவின் திணிவு. இதுபோல உங்கள் திணிவுகளையும் நீங்கள் கணித்துக் கொள்ளலாம். இதை இயற்பியலில் ஒரு சமன்பாட்டின் மூலம் சொல்வார்கள்

எடையை/நிறையை W என்னும் குறியீட்டாலும், திணிவை m என்னும் குறியிட்டாலும், புவியீர்ப்பை g என்னும் குறியீட்டாலும் குறிப்பிடுவார்கள்.
W=mg என்பதுதான் அந்தச் சமன்பாடு.

அதிகமானோர்களின் சந்தேகம் இதனால் தீருமென்று நம்புகிறேன். மற்றவர்களின் சந்தேகங்களுக்குப் படிப்படியாகப் பதில் தருகிறேன்.


ஈர்ப்பலைகள்

உங்கள் வீட்டில் பலூன் இருக்கிறதா? அப்படியென்றால் அதைக் கையிலெடுங்கள். அந்த பலூனின் இரப்பரை சதுர வடிவத்தில் வெட்டி வைத்துக்கொள்ளுங்கள். அந்தச் சதுரம் இரண்டங்குல நீளம் X, இரண்டங்குல அகலம் Y இருந்தால் போதுமானது. இப்போது, அந்தச் சதுர இரப்பர் துண்டின் எதிரெதிர் பக்கங்களையும் உங்கள் வலது கையினாலும், இடது கையினாலும் பிடித்து இயன்ற மட்டும் இழுங்கள். அதாவது X அகலப் பக்கத்தை பெரிதாகும்படி முடிந்தவரை இழுங்கள். இப்போது நீங்கள் அவதானிப்பது என்ன? நீங்கள், X அகலப் பக்கத்தை இழுத்துப் பெரிதாக்கும்போது, Y பக்கத்தின் நீளம் தானாகவே சுருங்கிக் குறையும்.





“அதுசரி, இப்பொழுது எதற்கு இந்த பலூன் விளையாட்டு?”

சொல்கிறேன். அதற்கு முன்னர், நூறு வருடங்களுக்கு முன், அதாவது 1915ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தைப் பார்த்துவிட்டு வருவோம், வாருங்கள்.




கணித, இயற்பியல் மாமேதையான 'அல்பேர்ட் ஐன்ஸ்டைன்' (Albert Einstein) , ‘பொதுச் சார்புக் கோட்பாடு’ (General theory of Relativity) என்ற புரட்சிகரமான கோட்பாட்டை, 1915ம் ஆண்டு உலகிற்கு அறியப்படுத்தினார். அதுவரை, ‘ஈர்ப்புவிசை’ (Gravity) என்றால், ‘ஒரு பொருள் தன்னை நோக்கி மற்றப் பொருளை இழுக்கும் விசை’ என்றுதான் அறிவியல் நம்பி வந்தது. ஐசாக் நியூட்டன் தலையில் அப்பிள் பழம் விழுந்ததை வைத்து (உண்மையில் அவர் தலையில் அப்பிள் பழம் விழவில்லை), ஈர்ப்புவிசைக்கு இப்படியானதொரு அர்த்தம் கொடுக்கப்பட்டிருந்தது. உதாரணமாக, ‘பூமியானது தனது மையத்தில் காந்தம் போன்ற ஒன்றைக் கொண்டிருப்பதாகவும், அந்தக் காந்தம் பூமியை நோக்கிய திசையில் அனைத்துப் பொருட்களையும் இழுத்துக் கொள்கிறது’ என்றும் ஈர்ப்புவிசை புரிந்து கொள்ளப்பட்டது. ஆனால், ஐன்ஸ்டைன் கூறிய ஈர்ப்புவிசைக்கான விளக்கம், யாருமே எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது. ஐன்ஸ்டைன் கொடுத்த விளக்கத்தின்படி, பேரண்டத்தின் அமைப்புப் பற்றிய பார்வையும் மாறிப் போனது.


முன்பின், வலதுஇடது, மேலேகீழே என்று முப்பரிமாண வடிவத்தில் நம் கண்களுக்குக் காட்சியளிக்கும் பேரண்டமானது, உண்மையில் முப்பரிமாணம் கொண்டதல்ல. அது கிடையாக விரிக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான, இரப்பரினால் (Rubber) செய்யப்பட்ட பாய்போலக் காணப்படுகிறது. என்ன…, இந்த இரப்பர் பாய் 92 பில்லியன் ஒளிவருடங்கள் அளவு பரப்பளவையுடையது. கற்பனையே பண்ணமுடியாத பிரமாண்டம் அது. இந்தப் பிரமாண்டமான இரப்பர் பாயின் மேலேயே நட்சத்திரங்களும், கோள்களும், காலக்ஸிகளும், கருந்துளைகளும், நியூட்ரான் நட்சத்திரங்களும் அமர்ந்திருக்கின்றன.






இப்போது நான் சொல்வதைக் கற்பனை செய்து பாருங்கள். பத்து அடி விட்டமுள்ள வளையத்தின் விளிம்பில், அதே அளவுள்ள ஒரு மெல்லிய இரப்பர் விரிப்பை, நன்றாக இழுத்துக் கட்டி வையுங்கள். இப்போது அந்த இரப்பர் விரிப்பின் மேல் பாரமுள்ள இரும்புக் கோளம் ஒன்றைப் போடுங்கள். அந்தக் கோளம் வைக்கப்பட்ட இடத்தில் இரப்பர், கீழ் நோக்கி வட்டவடிவத்தில் குழிவாக அமிழ்ந்து போயிருக்கும். அந்தக் குழிவான இரப்பர் மேற்பரப்பில் ஒரு சிறிய கோலிக் குண்டைப் போட்டால், அது அந்தப் பெரிய இரும்புக் கோளம் ஏற்படுத்தியிருக்கும் குழியை நோக்கி கீழே இழுக்கப்படும். இது உங்களுக்குப் புரிகிறதா? அப்படியென்றால், இதுபோலத்தான், பாய்போல விரிந்திருக்கும் அண்டவெளியில், நட்சத்திரங்களும், கோள்களும் அதனதன் திணிவின் அளவுக்கேற்ப, அண்டவெளியைக் கீழ்நோக்கி வளைத்தபடி காணப்படுகின்றன. பூமியும் அப்படியே! பூமியால் ஏற்படுத்தப்பட்ட அதன் குழியை நோக்கி அனைத்துப் பொருட்களும் இழுக்கப்படுவதையே ‘புவி ஈர்ப்புவிசை’ என்று ஐன்ஸ்டைன் வரையறுத்தார். அத்துடன் ஐன்ஸ்டைன் இன்னுமொரு கருத்தையும் சொன்னார். அண்டவெளியில் காணப்படும் நட்சத்திரங்களின் அதிகளவான திணிவினால் ஏற்படும் குழியின் வளைவில் ஒளிகூட வளைந்தபடியே வருகின்றது என்றார். ஆரம்பத்தில் ஐன்ஸ்டைனின் இந்த முடிவுகளை அறிவியல் உலகத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், பின்னர் செய்யப்பட்ட பல பரிசோதனைகள், ஐன்ஸ்டைன் சரியாகவே சொல்லியிருக்கிறார் என்று நிரூபித்தது.




சூரியனுக்குப் பின்னால் மறைந்தபடி, வெகு தொலைவில் இருக்கும் சில நட்சத்திரங்கள், சூரிய கிரகணம் ஏற்படும் நாட்களில் நம் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தன. அதற்குக் காரணம் சூரியனால் ஏற்பட்ட வெளியின் வளைவில், அந்த நட்சத்திரங்களின் ஒளியும் வளைந்தபடி நம் கண்களை நோக்கி வந்ததால், நாம் அவற்றைக் காணக்கூடியதாக இருந்தது. இதுவே விண்வெளி வளைகிறது என்பதற்குப் போதிய சான்றாக அமைந்தது. ‘எதையும் தன் சொந்தக் கண்களால் பார்க்காமல், வெறும் கணிதச் சமன்பாடுகளை மட்டும் வைத்துக் கணித்து, இந்த மனிதன் எப்படி இது போன்ற கோட்பாடுகளைச் சொல்கிறார்?’ என்று உலகமே வியந்தது. இருபதாம் நூற்றாண்டின் அதிசய மனிதராகவே ஐன்ஸ்டைன் கொண்டாடப்பட்டார். ஐன்ஸ்டைன் கூறிய கோட்பாடுகள் உண்மையாகத்தான் இருக்கும் என்னும் நம்பிக்கை அனைத்து விஞ்ஞானிகளுக்கும் ஏற்படலாயிற்று. அத்துடன், ஐன்ஸ்டைன் கூறிய இன்னுமொரு கோட்பாட்டை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டிருந்தாலும், அதனை நிரூபிக்க முடியவில்லை. ஐன்ஸ்டைன் கூறினால் அதில் தவறே இருக்காது, என்ற நம்பிக்கையில் அதற்கான ஆராய்ச்சியில் பல விஞ்ஞானிள் ஈடுபடத் தொடங்கினார்கள். அதற்குப் பலன் நூறு வருடங்களின் பின்னர்தான் கிடைத்தது. கடந்த மாதம் அந்தக் கோட்பாட்டிற்கான சான்று கதவைத் தட்டியது.


அண்டவெளியானது நீளம், அகலம் கொண்ட இரண்டு பரிமாணத்தில் பாய்போன்று விரிந்திருக்கிறது. அதன் மேல் நட்சத்திரங்களும், கோள்களும், கருந்துளைகளும் காணப்படுகின்றன. இவையெல்லாம் நிலையாக அண்டவெளியில் நிற்கவில்லை. எப்போதும் அசைந்து கொண்டேயிருக்கின்றன. ஒன்றையொன்று சுற்றிக் கொண்டுமிருக்கின்றன. இவற்றின் உயரமும், அவற்றின் திணிவினால் ஏற்படும் அண்டவெளியின் குழிவும், உயரம் என்னும் மூன்றாவது பரிமாணத்தைக் கொடுக்கிறது. இந்த அண்டவெளி (Space), நேரத்துடன் (Time) இணைந்தே காணப்படும் என்று இயற்பியலாளர்கள் கருதுகிறார்கள். அதிக திணிவுயுள்ள கருந்துளைகள், அண்டவெளியை மிக ஆழமாக வளைத்திருப்பவை. வளைந்த இடத்தில், நேரம் மெதுவாகி, சமயத்தில் நின்றே விடுகிறது என்றும் அவர்கள் கருதுகிறார்கள். அண்டவெளியும், நேரமும் இணைந்து, ‘அண்டவெளி நேரம்’ (Spacetime) என்னும் கூட்டு நிலையில் காணப்படுகிறது என்கிறார்கள். மேற்படி சொன்ன மூன்று பரிமாணங்களுடன், நேரமானது நான்காவது பரிமாணமாக இங்கே இணைந்து கொள்கிறது. பரிமாணங்கள் எப்போதும் ஒன்றுக்கொன்று மிகவும் அருகிலேயே காணப்படுகின்றன.




அண்டவெளியில் அநேகமான நட்சத்திரங்கள், இரட்டை நட்சத்திரங்களாக ஒன்றையொன்று சுற்றிக் கொண்டிருக்கின்றன. நம் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும் 'அல்ஃபா செண்டாரி' (Alpha Centauri) நட்சத்திரங்களும், இரட்டை நட்சத்திரங்களே! நட்சத்திரங்கள் மட்டுமல்ல, சமயத்தில் மாபெரும் திணிவையும், ஈர்ப்புவிசையையும் கொண்ட நியூட்ரான் நட்சத்திரங்களும் (Neutron Stars), கருந்துளைகளும் (Blackholes) கூட, இரட்டைப் பிள்ளைகள் போல சுற்றிக் கொண்டிருக்கின்றன. இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் அல்லது இரண்டு கருந்துளைகள் ஒன்றையொன்று சுற்றிக் கொண்டிருக்கையில், அவற்றின் ஈர்ப்புவிசையின் காரணமாக தம்மைக் கவர்ந்துகொண்டே சுற்றுகின்றன. இந்தக் கவர்ச்சி அதிகரிப்பினால், அவை ஒன்றுடன் ஒன்று இணையும் வகையில், தமக்கிடையேயான தூரத்தைக் குறைத்துக்கொண்டு வருகின்றன. எதோவொரு கட்டத்தில், இரண்டு கருந்துளைகளும் அல்லது இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்களும் மிக அண்மையில் நெருங்கி வந்ததும் சடாரென ஒன்று சேர்ந்து, ஒரு கருந்துளையாகவோ, ஒரு நியூட்ரான் நட்சத்திரமாகவோ மாறிவிடுகின்றன. இரண்டும் ஒன்று சேர்வதற்கு சற்று முன்னரான நிலையில், அவை சுற்றும் வேகம் மிக அதிகமாகக் காணப்படும். ஒளியின் வேகத்தின் அரை மடங்குக்கு அதிகமான வேகமாகக்கூட அது இருக்கும். அந்த அதிவேகத்தினால், அண்டவெளியின் மேற்பரப்பில் அலைகள் போன்ற அதிர்வுகள் ஏற்படும். அதன்பின் இரண்டு கருந்துளைகளும் ஒன்றாகச் சேரும் கணத்தில் அதிர்வலைகள் மிக அதிகமாக வெளிப்படும். இந்த அலைகளை, 'ஈர்ப்பு அலைகள்' (Gravitational Waves) என்று ஐன்ஸ்டைன் குறிப்பிட்டார். மேற்படி, இரண்டு கருந்துளைகள் அல்லது இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்று சேரும்போது உருவாகும் மிகப்பெரிய ஈர்ப்பலையானது படிப்படியாக, அண்டவெளியினூடாகக் கடத்தப்பட்டு பூமிவரை வந்தடையும். தாய்லாந்தின் கடலுக்குக் கீழே பூமிப்பாறைகளின் உராய்வால் ஏற்பட்ட அதிர்வால் உருவான பேரலைகள், படிப்படியாகக் கடல்வழி நகர்ந்து, எங்கேயோ இருக்கும் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பெரும் சுனாமியாக உருவெடுத்து அழித்து ஓய்ந்ததல்லவா. அதுபோல, அண்டவெளியில் ஏற்படும் பிரளயங்களும் ஈர்ப்பலை அதிர்வுகளாக அண்டமெங்கும் கடத்தப்படும். அண்டவெளியில் ஈர்ப்பலையை ஏற்படுத்த, கருந்துளைகளோ, நியூட்ரான் நட்சத்திரங்களோ மட்டும்தான் தேவையென்றில்லை. நீங்களும், நானும் எம்பிக் குதித்தாலும், அண்டவெளியின் பரப்பில் அதிர்வுண்டாகும். அந்த அதிர்வு ஈர்ப்பலைகளை உருவாக்கும். ஆனால், அவையெல்லாம் அளக்கவே முடியாத மிகமிகச் சிறிய ஈர்ப்பலைகள். இந்த ஈர்ப்பலைகளை அளக்க வேண்டுமென்றால், கருந்துளைகள் போன்ற பெரிய கடோத்கஜன்கள்தான் மோதிக்கொள்ள வேண்டும். 'ஈர்ப்பலைகள்' பற்றி ஐன்ஸ்டைன் குறிப்பிட்ட கணத்திலிருந்து, அப்படியொன்று இருக்கிறது என்பதை நிரூபிக்க முடியாமல் தடுமாறியது அறிவியல் உலகம். போகும் போக்கில் கோட்பாடுகளை ஒரு தீர்க்கதரிசி போலச் சொல்லிவிட்டு மறைந்து போனார் ஐன்ஸ்டைன். ஆனால அவரின் கோட்பாடுகளை நிருபித்துக் காட்டுவோமென்று பலர் களத்தில் இறங்கினர். அந்த நிலையில்தான் ரஷ்யாவைச் சேர்ந்த 'மிகைல் கேர்சென்ஸ்டைன்' (Mikhail Gertsenshtein) மற்றும் 'விளாடிஸ்லாவ் புஸ்டோவொய்ட்' (Vladislav Pustovoit) ஆகிய இருவரும் 1962ம் ஆண்டு, இந்த ஈர்ப்பலைகளைக் கண்டுபிடிக்கும் விதத்தைக் கோட்பாடாக வெளியிட்டார்கள். இதைத் தொடர்ந்து 1992ம் ஆண்டு, லேசர்க் கதிர்களின் உதவியுடன் 'இண்டெர்ஃபெரோமீட்டர்' மூலமாக ஈர்ப்பலைகளை அவதானிக்கும் பரிசோதனைச் சாலையை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. அது 'லைகோ' (LIGO - Laser Interferometer Gravitational wave Observatory) என்றழைக்கப்படுகிறது.






2002ம் ஆண்டு 'லூசியானா' மாநிலத்தில் இருக்கும் 'லிவிங்ஸ்டன்' (Livington Louisiana) நகரில், உலகிலுள்ள பல நாடுகளின் கூட்டு முயற்சியாலும், ஆயிரத்துக்கு அதிகமான ஆராய்ச்சியாளர்களுடனும், பலநூறு மில்லியன் டாலர்கள் செலவில், 'லைகோ' ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சி நிலையம் 2010ம் ஆண்டுவரை எந்தவிதமான ஈர்ப்பலைகளையும் கண்டுபிடிக்கவில்லை. அதன்பின்னர் 2015ம் ஆண்டு, மிகவும் நவீனமான முறையில் புதிய ஆராய்ச்சி நிலையங்களாக 'லைகோ' மாற்றியமைக்கப்பட்டது. இம்முறை வாஷிங்டனில் உள்ள ஹான்ஃபோர்ட் ( Hanford, Washington) நகரிலும் இரண்டாவது 'லைகோ' ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது. இந்த இரண்டு ஆராய்ச்சி நிலையங்களின் இடைவிடாத அவதானிப்புகளால், ஈர்ப்பலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.





ஒன்றுக்கொன்று 90 பாகைக் கோணத்தில் அமைந்த மிக நீண்ட இரண்டு குழாய்கள் லைகோவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை இரண்டும் சந்திக்குமிடத்தில் லேசர் கதிர்கள் செலுத்தும் கருவியும், அந்த லேசர் கருவிகள் குழாய்கள் வழியே சென்று, அங்கிருக்கும் கண்ணாடியில் தெறிப்படைந்து மீண்டும் திரும்பி வரும்போது, அதைக் கிரகித்துக் கொள்ளும் கருவியும் அமைக்கப்பட்டுள்ளது. குழாய்கள் இரண்டும் நான்கு கிலோமீட்டர்கள் நீளத்துடன், நேர்கோட்டில் அமைந்தவை. குழாயின் வழியாகச் செலுத்தப்படும் லேசர் கதிர்கள், அந்தக் குழாய்கள் வழியாகச் சென்று, அவற்றின் முடிவில் அமைந்திருக்கும் கண்ணாடிகளில் பட்டுத் தெறித்து, அதே பாதையில் மீண்டும் திரும்பிவரும். இப்படி இரண்டு குழாய்களிலிருந்து வரும் கதிர்கள், சென்று திரும்ப எடுக்கும் நேரம் துல்லியமாகக் கணிக்கப்படும். இரண்டு குழாய்களும் ஒரே நீளமுள்ளவையாக இருப்பதால், இரண்டினூடாகவும் லேசர் கதிர்கள் சென்றுவர ஒரேயளவு நேரமே எடுக்கும். 2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 14ம் தேதி 9:51 மணியளவில், உலகமே அதிசயிக்கும் அந்த அறிவியல் ஆச்சரியம் நடந்தது. வாஷிங்டன் மற்றும் லூசியானா இரண்டு 'லைகோ' ஆராய்ச்சி நிலையங்களின் கணணித் திரைகளும் ஒரே நேரத்தில் அதிர்வுகளால் துடித்தன.


லைகோவிலுள்ள லேசர் அவதானிப்புக் கணணிகளில் முதல் முறையாகச் சலனங்கள் தோன்றின. லேசர் கதிர்களின் நேர அளவுகள் இரண்டு குழாய்களிலும் சமமாக இருக்குமென்று சொன்னேனலவா? அந்த அளவுகளில் வித்தியாசம் காணப்பட்டது. ஈர்ப்பலையதிர்வுகள் அந்த இடங்களைக் கடந்து சென்றதாகக் கருவிகள் காட்டின. ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் துள்ளிக் குதித்தனர். 'நூறு வருடங்களுக்கு முன்னர் ஐன்ஸ்டைன் கூறிய கோட்பாடு உண்மையே!' என்று நிரூபனம் கிடைத்தது. ஆனால் உடனடியாக அவர்கள் அதை வெளியிடவில்லை. காரணம், அந்த அதிர்வுகள் உண்மையாகவே விண்வெளியிலிருந்துதான் வந்தனவா? அவை நிஜமான அண்டவெளி ஈர்ப்பலைகள்தானா? அவை எவ்வளவு தூரங்களிலிருந்து வந்தன? எதனால் அந்த அலைகள் ஏற்பட்டன? என்பது போன்ற ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டன. கிடைத்த தகவல்களோ ஆச்சரியமானவை. சாதாரண மக்களால் நம்பவே முடியாதவை. அந்தக் காரணங்களை ஆராய்ந்து ஒரு மாதத்தின் பின்னர் கடந்த வாரம், "ஈர்ப்பலைகளைக் கண்டுபிடித்துவிட்டோம்" என்று உலகிற்குச் சத்தமாகச் சொன்னார்கள்.






1.3 பில்லியன் வருடங்களுக்கு முன்னர், ஒன்றையொன்று சுற்றிக்கொண்டிருந்த இரண்டு கருந்துளைகள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு கருந்துளையாக மாறியபோது ஏற்பட்ட ஈர்ப்பலைகளையே நாம் கண்டுபிடித்திருக்கிறோம். அந்த இரண்டு கருந்துளைகளும், கிட்டத்தட்ட 30 சூரியனின் அளவையுடயனவாக இருந்திருக்கின்றன. ஒவ்வொன்றும் 150 கிலோமீட்டர்கள் குறுக்களவுள்ளவையாக இருந்திருகின்றன. அதாவது, சென்னையை விடப் பெரிதானவையாக இருந்திருக்கின்றன. மோதும் கணத்தில் அவை ஒளியின் அரை மடங்கு வேகத்தில் சுற்றியிருக்கின்றன. அவ்வளவு வேகத்தில் சுற்றிய இந்தக் கருந்துளைகள் இரண்டும் மோதியதால் ஏற்பட்ட ஈர்ப்பலைகள், 1.3 பில்லியன் வருடங்களாகச் சுனாமி அலைகள் போலப் படிப்படியாக அண்டவெளியெங்கும் நகர்ந்து, நம் பூமியைத் தாண்டிச் சென்றிருக்கிறது. நீங்கள் குளத்தில் கல்லெறியும் போது, அது ஏற்படுத்தும் வட்டமான அலைகள் தூரத்தில் மிதந்து கொண்டிருக்கும் இலைச் சருகை, அசைத்துவிட்டுச் செல்லுமே அதுபோல, கருந்துளைகளால் ஏற்படுத்தப்பட்ட ஈர்ப்பலைகளும் பூமியைத் தாண்டும்போது, பூமியை சற்றே அசைத்துவிட்டுப் போயிருக்கிறது. அசைவு மிகச் சிறியதுதான். ஒரு புரோட்டான் அணுவின் பத்தாயிரத்தில் ஒரு பங்குதான் அந்த அசைவு. அதுவே நமக்குப் போதுமானது. அந்த அசைவை 'லைகோ' குழாய்கள் உடனே கண்டுபிடித்துவிட்டன. 'அதுசரி, எப்படிக் கண்டுபிடித்தார்கள்?'


இப்போது, நாம் ஆரம்பத்தில் கூறிய பலூன் துண்டை இழுத்துப்பிடித்த சம்பவத்துக்கு வரலாம்.


பலூனில் சதுரமாக வெட்டிய சிறிய இரப்பர் துண்டை, இருபக்கமும் பிடித்து இழுத்தோமல்லவா? அப்படி இழுக்கும்போது, அதற்குச் 90 பாகையில் அமைந்த மற்ற இரண்டு பக்கங்களும் சிறியதாக மாறின அல்லவா? இதுபோலத்தான், அண்டவெளியும் ஒருபுறம் அழுத்தப்பட்டால் மறுபுறம் விரிவடையும். லைகோவில் 90 பாகையில் அமைக்கப்பட்ட இரண்டு குழாய்களைத் தாண்டிச் செல்லும் ஈர்ப்பலைகள் அங்கேயிருக்கும் அண்டவெளியைச் சற்றே இழுக்கும். அதே சமயத்தில் அண்டவெளியின் மறுபக்கம் சிறியதாகும். எல்லாமே மிகமிகச் சிறிய அளவுகளில்தான் நடைபெறும். இதனால், ஒரு குழாயினூடாகச் செல்லும் லேசர் கதிர்களின் நீளம் சற்றே கூட, மறு குழாயினூடாகச் செல்லும் லேசர் கதிர்களின் நீளம் சற்றே குறையும். இந்த லேசர் கதிர்களின் அளவு வித்த்தியாசத்தைக் கணணிகள் உடனடியாகக் கணித்துக் கொள்கின்றன.


முடிவில் மாபெரும் புரட்சியாக 'கிராவிட்டேசனல் வேவ்ஸ்' என்று சொல்லப்படும் ஈர்ப்பலைகளை நாம் கண்டுபிடித்துவிட்டோம். அறிவியலுலகை மாற்றியமைக்கப் போகும் கண்டுபிடிப்பு இது. இதன்மூலம் ஈர்ப்புவிசை பற்றிய முழுமையான தெளிவும், ' இணையண்டம்' (Parallel Universe), 'பல்பரிமாணங்கள்' (Dimesions), 'பல அண்டங்கள்' (Multiverse) போன்ற கோட்பாடுகளுக்கான விடைகளையும் காணக்கூடிய வழி கிடைத்திருக்கிறது. இவற்றை ஆராய்வதற்கு மேலும் ஆறு 'லைகோ' ஆராய்ச்சி நிலையங்கள் உலகெங்கும் அமைக்கப்படவிருகின்றன. விண்வெளியின்கூட ஒன்று அமைக்கப்படலாம். இதில் முக்கியமான ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன். 14.09.2015 அன்று மனித வரலாறின் மிகமுக்கிய சம்பவமாகப் பதிவு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்குக் காரணமாக இருந்த, 1.3 பில்லியன் வருடப் பழைய ஈர்ப்பலைகள் என்னையும், உங்களையும் தொட்டுவிட்டே தாண்டிச் சென்றிருக்கின்றன. அந்தக் கருந்துளைகள் மோதியபோது ஏற்பட்ட அதிர்வுகளின் ஒலி, மனிதக் காதுகளால் கேட்கும் அதிர்வுகளையே கொண்டிருந்தன. அந்த ஒலியும் ஆராய்ச்சியாளர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. முதன்முதலாகப் பேரண்டத்தின் பேச்சு ஒலியை மனிதன் தன் காதால் இந்தச் சம்பவத்தின் மூலமாகக் கேட்டிருக்கின்றான். இறுதியாக ஒன்று:


'லைகோ' ஆராய்ச்சி நிலையமொன்றை இந்தியாவிலும் அமைப்பதற்குக் கோரிக்கைகள் விடப்பட்டிருக்கிறது. இந்திய அணு ஆராய்சிக் கழகத்தினால் இன்னும் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. யார் கண்டது அது தமிழ்நாட்டில் கூட அமைக்கப்படலாம்.


February 9, 2016

உண்மையெல்லாம் உண்மையல்ல - 2


கடந்த பதிவில் நாம் உண்மையென்று நினைக்கும் எதுவுமே உண்மையில்லையென்று எழுதியிருந்தேன். அதன்படி, நாம் உண்மையென்று நம்பும் அடுத்த பொய் இது. இதுவும் சூரியக் குடும்பம் சாந்ததுதான்.


சூரியக் குடும்பத்தில் இருக்கும் அனைத்துக் கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்றே நாம் நம்புகிறோம். பாடசாலைகளில் பிள்ளைகளுக்கும் கற்பித்து வருகிறோம். இயற்பியலில் நல்ல அறிவும், புரிதலும் உள்ளவர்களுக்கு இவை மிகவும் தவறான கூற்றுகளே!


சூரியனை எந்தக் கோள்களும் சுற்றுவதில்லை என்பதுதான் பெரிய உண்மை. குறிப்பாக வியாழக் கிரகம் சூரியனைச் சுற்றுவதே இல்லையென்று சொல்லலாம்.


"இது என்ன புதுக் குழப்பம்?"


என்னவெல்லாமோ நம்புகிறோம் அதுபோல இவற்றையும் நம்பிவிட்டோம். ஆனால், உண்மை வேறு வடிவிலானது.


புரிய வைக்க முயல்கிறேன்......!


நியூட்டனுக்குப் பின்னர் நாம் ஈர்ப்புவிசைபற்றித் தெரிந்து கொண்டது ஒன்று. ஐன்ஸ்டைனுக்குப் பின்னர் ஈர்ப்புவிசைபற்றித் தெரிந்து கொண்டது வேறொன்று. ஐன்ஸ்டைனின் ஈர்ப்புவிசைக் கொள்கையின்படி, திணிவு உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஈர்ப்புவிசையிருக்கும். அதன் திணிவைப் பொறுத்து, அது வெளியை வளைக்கும்.


உதாரணமாக ஒரு வேட்டியின் நான்கு மூலைகளையும் நான்குபேர், அதைத் தொய்ந்து விடாமல் இறுகப் பிடித்தால், அந்த வேட்டி, ஒரு சமதளம் போலக் காணப்படுமல்லவா? அல்லது சிறுவர்கள் குதித்து விளையாடும் ட்ரம்பொலலைனையும் (Trampoline) நீங்கள் உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம். இப்போ நீங்கள், "ட்ரம்பொலைன் என்றால் என்ன?" என்று என்னிடம் கேட்டால், நான் அம்பேல். அதனால், நாம் வேட்டியுடனே நின்று கொள்வோம். அது கிழிந்தாலும் பரவாயில்லை.


சமதளம்போலக் காணப்படும் வேட்டியின் மேல் டென்னிஸ் பந்து ஒன்றை விட்டால், அந்தப் பந்து இருக்குமிடத்தில் வேட்டி, சற்றுக் கீழே அமிழ்ந்து குழிபோல காணப்படுமல்லவா?


அதுபோலத்தான், சமதளமாக இருக்கும் விண்வெளியில், சூரியப் பந்து இருக்கும்போது, அது வெளியை ஆழக்குழிபோல வளைக்கும். அந்தக் குழியை நோக்கிப் பொருட்கள் இழுக்கப்படுவதையே, 'ஈர்ப்புவிசை' என்றார் ஐன்ஸ்டைன். உண்மையில் ஈர்ப்புவிசை அப்படித்தான் தொழில்படுகிறது. குறைந்தபட்சம் இப்போதுள்ள அறிவியல் அறிவுப்படி இதுதான் சரியானது. பின்னர் இதுவும் மாறலாம், யார் கண்டது?


நாம் மீண்டும் வேட்டிக்கே வரலாம். வேட்டியில் ஒரு டென்னிஸ் பந்தைப் போட்டபோது, வேட்டி அதன் திணிவுக்கேற்ப வளைந்ததல்லவா? இப்போது வேறொரு சிறிய பந்தையும் வேட்டியின் மேல் போடுவோம். இப்போது இரண்டு பந்துகளின் திணிவுக்கேற்ப வேட்டி கீழ்நோக்கி வளையும். முன்னர் ஒரு டென்னிஸ் பந்தை மட்டும் போட்டபோது, வளைந்த வேட்டியின் மையப்புள்ளி, அந்தப் பந்தின் மையத்தை நோக்கியே இருந்திருக்கும். ஆனால், இரண்டாவது பந்து வந்ததும், இரண்டின் திணிவுக்கேற்றவாறு பொது மையப்புள்ளியும் மாறும். எது அதிகத் திணிவுள்ள பந்தோ, அதற்கு மிக அருகில் பொது மையப்புள்ளி இருந்தாலும், அந்தப் பந்தின் மையத்தில், பொதுவான மையம் இருக்காது.


இப்போது, வேட்டியில் மேலும் ஒன்பது சிறிய பந்துகளைப் போடுங்கள். இப்போது வேட்டியின் மொத்த வளைவு வேறுவிதமாக மாறி, அவற்றின் மொத்தமான பொது மையப்புள்ளியும் வேறு இடத்துக்கு மாறும்.





இதுபோலத்தான் சூரியக் குடும்பமும். சூரியக் குடும்பம் என்பது சூரியன் என்னும் மிகப்பெரிய நட்சத்திரத்தையும், பல கோள்கள், உபகோள்களையும் கொண்டது. சூரியக் குடும்பம் மொத்தமும் ஒரு தனியான 'அமைப்பு' (System). இந்த அமைப்புக்கென்று மொத்தமான ஒரு திணிவு உண்டு. அந்த மொத்தத் திணிவுக்கேற்ப சூரிய அமைப்புக்கு ஒரு மையம் இருக்கிறது. அந்த மையத்தை 'பரிமையம்' (barycentre) என்கிறோம். இந்த பரிமையம் சூரியனின் மையப்புள்ளி அல்ல. அது அநேகமாகச் சூரியனுக்கு வெளியே இருக்கும். சூரியன் அதிக எடை உள்ளதாக இருப்பதால், இந்த பரிமையமும் சூரியனுக்கு அருகில்தான் இருக்கும்.


சூரியக் குடும்பத்திலுள்ள எல்லாக் கோள்களும், சூரியன் உட்பட, இந்த பரிமையத்தையே சுற்றுகின்றன. சூரியனை அல்ல. அதனால் பூமி, சூரியனைச் சுற்றிவருகின்றதென்பது உண்மையல்ல. வியாழக் கிரகம், பெரியதாகவும், அதிக எடையுள்ளதாகவும் இருப்பதால், சூரியனை அது எப்போதும் சுற்றுவதேயில்லை. சூரியக் குடும்பத்தின் கோள்கள் அடிக்கடி இடம் மாறுவதால், பாரிமையமும் மாறிக்கொண்டேயிருக்கும். சில சயங்களில். கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும்போது, பரிமையம் சூரியனை ரொம்பவும் தாண்டியிருக்கும்.


இப்போது நாம் கொஞ்சம் தர்க்க ரீதியாகப் பார்த்தால், எல்லாக் கோள்களும் பூமியைச் சுற்றுகின்றன என்று சொன்னாலும் அதுவும் உண்மையாகலாம்.


இதுவரை, நான் புரிய வைத்தது நிச்சயம் உங்களுக்குப் புரிந்திருக்குமென்றே நினைக்கிறேன். உங்களுக்கு இது புரியவில்கையென்றால், புரிய வைக்க முடியாமல் போன என் தவறுதான். உங்கள் தவறு அல்ல.


'இந்த உண்மை மட்டுமல்ல, எந்த உண்மையும் உண்மை அல்ல"


உண்மையெல்லாம் உண்மையல்ல - 1

நாம் இதுதான் உண்மையென்று நினைத்துக்கொண்டிருக்கும் எதுவுமே உண்மையில்லை என்பதுதான் மிகபெரிய உண்மை. 


இப்போது சொன்ன கருத்தும், சிலசமயங்களில் உண்மையில்லாமல் போய்விடலாம்.


உண்மைகள், உண்மைகளில்லை என்பதுபற்றி நான் இதற்கு முன்னரும் பல தகவல்களில் எழுதியிருக்கிறேன். அதுபோன்ற ஒன்று இப்போதும் உங்களுக்காக....


நமது பூமியானது, நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருவதாகவும், சூரியனை அது ஒரு சுற்றுச் சுற்றி மீண்டும் அதே இடத்துக்குத் திரும்பி வருவதற்கு 365.25 நாட்கள் எடுக்கிறது என்றும் நம்பி வருகிறோம். ஆனால் இந்தக் இவை எவையும் உண்மையில்லை என்கிறது நவீன அறிவியல்.


பூமி சூரியனைச் சுற்றுகிறதோ இல்லையோ, உங்கள் தலை இப்போ சுற்றுகிறதல்லவா?


சரி, சுற்றும் தலையை நிறுத்தலாம் வாருங்கள்.


பூமி தன்னைத்தானே மணிக்கு 1600 கிலோமீட்டர்களுக்கு அதிகமான வேகத்தில் சுற்றுவதோடு, சூரியனையும் கிட்டத்தட்ட மணிக்கு 100 000 கிலோமீட்டர்கள் வேகத்தில் சுற்றிக்கொண்டு வருகிறது. இந்தச் செயலில், சூரியன் ஒரு நிலையான இடத்தில் இருந்தால் மட்டுமே, பூமி ஒரு நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றிவருகிறது என்றெடுக்கலாம். ஆனால், சூரியன் நிலையாக ஒரு இடத்தில் இருப்பதில்லை. அதுவும் மணிக்கு 800 000 கிலோமீட்டர்கள் வேகத்தில் பால்வெளி மண்டலத்தைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதிவேகம் அது. ஓடிக்கொண்டே இருக்கும் சூரியனைப் பூமி எப்படி ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்ற முடியும்? புரியாவிட்டால் இதை ஒரு உதாரணத்தின் மூலம் பார்க்கலாம்.





நீங்கள் ஒரு மைதானத்தில் மெதுவாக நேர்கோட்டில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களைப் பலமுறைகள் சுற்றியபடி, உங்கள் மகள் ஓடி வந்துகொண்டிருக்கிறாள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த மைதானத்தைப் பொறுத்தவரை உங்கள் மகள் ஓடிவந்த பாதை, ஒரு 'சுருள்கம்பி' (Spring) வடிவத்தில் இருக்கும். இதுபோலத்தான் பூமியின் சுற்றுப்பாதையும் கம்பிச்சுருள் வடிவத்தில் இருக்குமேயல்லாமல், நீள்வட்டப்பாதையில் இருக்காது.


இந்தப் பேரண்டவெளியில், நாம் இந்த நொடியில் இருக்கும் இடத்துக்கு இனி எப்போதும் மீண்டும் வரவே மாட்டோம். நாம் மட்டுமல்ல, பூமியும், சூரியனும் அதிகம் ஏன், இந்தப் பால்வெளி மண்டலம்கூட, இந்த நொடியில் இருக்கும் இடத்திற்குத் திரும்பி வரவே போவதில்லை. அவ்வளவு விசேசம் வாய்ந்தது இந்த நொடியும், நீங்கள் இருக்கும் அமைவும். எல்லாமே அதி வேகத்தில் தங்கள் இடங்களை நீங்கி ஓடிக்கொண்டே இருக்கின்றன.


"வானத்தில் ஒவ்வொரு நாள் இரவும் பார்க்கும்போது, அதே நட்சத்திரங்களைற்றானே பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அப்படியென்றால் ஒரே இடத்தில்தானே இருக்கிறோம்" என்று இப்போது நீங்கள் யோசிக்கலாம். அது அப்படியல்ல. நீங்கள் வாழ்ந்த இவ்வளவு வருடங்களில் மட்டுமல்ல, பூமியின் பல ஆயிரம் வருடங்களில், பூமி பல கோடி கிலோமீட்டர்கள் தூரம் நகர்ந்திருந்தாலும், அண்டவெளியின் பிரமாண்டத்துடனும், நட்சத்திரங்களின் தூரங்களுடனும் ஒப்பிடும்போது, அது ஒன்றுமேயில்லை என்பதுதான் நிஜம். அண்டவெளியின் பிரமாண்டமான அமைப்புடன் ஒப்பீட்டளவில் பார்த்தால் ஒரு செமீ அளவு தூரத்தைக்கூடக் கடந்ததாக எடுத்துக்கொள்ள முடியாது. அதனால்தான் நாம் சிறிய வயதில் பார்த்த நட்சத்திரங்கள் இன்றும் அதே இடத்தில் இருப்பதுபோலத் தெரிகிறது. நிஜத்தில் நாம் நம்பவே முடியாத தூரத்தைக் கடந்து வந்துவிட்டோம்.


என்ன புரிகிறதா?


அடுத்த தகவல் உண்மையின் நம்பகத்தன்மையை விமர்சிக்கும் வேறொரு தளத்தில் இருக்கும். இரண்டையும் ஒன்றாகத் தரவே இருந்தேன். பதிவு நீண்டுவிட்டதால்.....