வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

March 25, 2015

வெரோனிக்காவின் முக்காடு - (பகுதி 5)



'அனைத்தையும் அறிய விரும்பிய மனிதன்' (The Man who wanted to know everything) என்றுதான் லியர்னாடோவைப் பற்றி வரலாற்று அறிஞர்கள் சொல்கிறார்கள். 'லியர்னாடோ டா வின்சி', 1452ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் தேதி இத்தாலியிலுள்ள 'ஃபுளோரன்ஸ்' மாநகரத்தில் இருக்கும் 'வின்சி' என்னும் ஊரில் பிறந்தார். வின்சியில் வசித்து வந்த 'பியரோ' என்னும் சட்டத்தரணிக்கும், 'கத்தரினா' என்னும் பணிப்பெண்ணுக்கும் முறையற்ற வகையில் பிறந்தவர்தான் லியர்னாடோ. அதனாலேயே, அவருக்குச் சிறுவயதில் முறையான கல்வி கிடைக்காமல் போனது. ஆரம்பத்தில் கல்வி மறுக்கப்பட்டாலும், தன்னைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு விசயங்களையும் நுணுக்கமாக அவதானிப்பதில் சிறுவன் லியர்னாடோ வல்லவனாக இருந்தான். நீரோட்டத்தின் பாய்ச்சல்களையும், நிலத்தில் ஊர்ந்து செல்லும் ஜீவராசிகளையும், வானத்தில் பறந்து செல்லும் பறவைகளையும் மிகச்சரியான முறையில் அவதானிக்க ஆரம்பித்தான். பறவைகள் பறப்பதிலுள்ள அனைத்து நுணுக்கங்களையும் அவன் கண்டுகொண்டான். இன்றுள்ள 'காற்றியக்கவியல்' (Aerodynamics) துறைக்கு, முன்னோடியான பல கருத்துகளை அப்போதே சொல்லப் போகிறோமென்று அன்று அந்தச் சிறுவன் அறிந்திருக்கவில்லை. பின்னாட்களில் 'ரைட் சகோதரர்கள்' விமானத்தைக் கண்டுபிடித்திருந்தாலும், அதற்கான முதல் படிநிலைகளை லியர்னாடோ டா வின்சியே கண்டு வைத்திருந்திருந்தார் என்பது இன்று உலகமே வியக்கும் விசயம். செயற்கையாக உருவாக்கப்பட்ட மிகநீண்ட இறக்கைகளைக் கைகளால் இயக்குவதன் மூலம், பறவைகள் சிறகடிப்பது போல அசையச் செய்து, காற்றில் பறக்கலாமென்பதை விளக்கங்களுடன் கூடிய படங்களாகத் தன் குறிப்பேட்டில் வரைந்து வைத்திருந்தார் லியர்னாடோ டா வின்சி. வானத்தில் மனிதன் பறப்பது சம்மந்தமாக அவரால் எழுதப்பட்ட குறிப்புகள் பொக்கிசம்போல இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.1490ம் ஆண்டு 'Omithopter' என்னும் தனிமனிதன் சிறகையடித்துப் பறக்கும் மாடல் ஒன்றை உருவாக்கினார் லியர்னாடோ. அதுவே விமானத்தின் சரித்திரத்தின் முதல் காலடியாக இப்போது கணிக்கப்படுகிறது.




லியர்னாடோவின் காற்றியக்கவியல் கருவிகளின் கண்டுபிடிப்பு வெறும் விமானங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அதற்கும் மேலே ஒருபடி போய், அவர் ஆராய்ந்திருப்பதை இப்போதும் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறார்கள். இன்று 'உலங்கு வானூர்தி' என்றழைக்கப்படும் 'ஹெலிகாப்டர்' (Helicopter) என்பதைக் கூட லியர்னாடோ டா வின்சி கண்டுபிடித்திருந்தார். அதைத் தன் குறிப்பேட்டில், அழகான வரைபடங்களாக அதற்குரிய குறிப்புகளுடன் வரைந்திருக்கிறார். உலகில் இப்படியானதொரு சிந்தனையாளர், கண்டுபிடிப்பாளர், அவரது சிறுவயதில் கல்வி மறுக்கப்பட்ட ஒருவரென்று தெரிய வரும்போது வியப்பை அடக்க முடியவில்லை. விமானத்தை மட்டுமோ அல்லது உலங்கு வானூர்த்தியை மட்டுமோ அவர் தனது கண்டுபிடிப்புக் குறிப்பேட்டில் வரைந்திருந்தால், 'சரி, ஏதோ கண்டுபிடித்துவிட்டார். இது ஒரு தற்செயலான விசயம்' என்று விட்டுவிடலாம். ஆனால் லியர்னாடோ டா வின்சி, வானத்தில் பறப்பதற்கு மட்டும் வழியைச் சொல்லவில்லை. வானத்திலிருந்து குதிப்பதற்கும் வழியைச் சொல்லியிருக்கிறார். 'என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?' ஆம்! லியர்னாடோ அப்போதே பாராசூட் (Parachute) என்னும் விண் மிதவையையையும் தனது குறிப்பேட்டில் வரைந்திருக்கிறார். இவர் எப்படிபட்ட மனிதராக இருந்திருக்க வேண்டுமென்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.


பிரமிட் வடிவத்தில் லியர்னாடோவினால் வரையப்பட்டிருந்த பாரசூட், அவர் குறிப்பிட்டிருப்பதுபோலத் தொழிற்பட்டிருக்குமாவென்ற சந்தேகம் இப்போதுள்ள சிலருக்கு வராமலில்லை. அதனால், லியர்னாடோவின் பிரமிட் வடிவப் பரசூட்டைப் பரிசோதனை செய்து பார்ப்பதென்று துணிச்சலான முடிவொன்றுக்கு இரண்டு இளையவர்கள் வந்தார்கள். 'ஏட்ரியன்' (Adrian) என்பவரும் அவருக்குத் துணையாகக் கதரீனா (Katarina) என்னும் பெண்மணியுமே அந்த இருவர். நவீன காலத்துப் பொருட்களில்லாமல், லியர்னாடோவின் காலத்தில் பெறக்கூடிய பொருட்களைக் கொண்டு அந்தப் பாரசூட்டை இவர்கள் தயாரித்தனர். சொல்லப்போனால் அதுவொரு விபரீத விளையாட்டென்றே சொல்லலாம். பத்தாயிரம் அடிகளுக்கு மேலிருந்து, இந்தப் பாரசூட்டுடன் குதிப்பதற்கு ஏட்ரியன் தயாராகினார். அதன்படி குதித்தார். ஏட்ரியனின் இந்தத் துணிச்சலான நிகழ்வு, லியர்னாடோ மிகச்சரியாகவே அனைத்தையும் கணித்து, வடிவமைத்திருக்கிறார் என்பதை நிரூபித்தது. ஏட்ரியன் எந்தச் சிக்கலுமில்லாமல் பாரசூட்டில் மிதந்து பூமியை நோக்கி வந்தார். லியர்னாடோ ஒரு மிகச்சிறந்த கண்டுபிடிப்பாளரென்பதை உலகம் புரிந்து கொண்டது.






பதினான்கு வயதுச் சிறுவனாக இருந்த லியர்னாடோவை, அவரது தந்தை ஃபுளோரன்ஸ் நகரத்துக்கு அழைத்துச் சென்றார். ஐரோப்பிய வரலாற்றில் மறுமலர்ச்சி ஏற்பட்ட காலம் அது. இத்தாலியின் பல நகரங்கள் கட்டடங்களால் மீளக்கட்டமைக்கப்பட்டுப் பெருவளர்ச்சியை நோக்கி நகரத் தொடங்கிய நேரம். இந்தக் காலங்களில்தான் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டார். லியர்னாடோவை நல்லதொரு மேற்படிப்பில் ஈடுபடுத்த முடியாத நிலையில், அவரை ஓவியம் வரையக் கற்றுக் கொள்ளும் கலைக்கூடத்தில் பயிற்சி மாணவராக சேர்த்துவிடுவதற்கு தகப்பனார் முயன்றார். மிகப்பிரபலமான ஓவியரும், சிற்பியுமான 'அந்த்ரே டெல் வெரோக்கியோ' (Andrea del Verrocchio) என்பவரிடம் லியர்னாடோ மாணவராகச் சேர்க்கப்பட்டார். லியர்னாடோவின் தகப்பனாரின் சினேகிதராக வெரோக்கியோ இருந்ததால் அது சாத்தியமாயிற்று. லியர்னாடோவின் வாழ்வில் நடைபெற்ற மிகச்சிறந்ததொரு ஆரம்பமாக அது இருந்தது. தனது இளமைக் காலங்களை வெரோக்கியோவின் கலைக்கூடத்திலேயே கழித்தார் லியர்னாடோ டா வின்சி. உலகத்துக்கு மாபெரும் கலைப்படைப்புகளைக் கொடுக்க வெண்டுமென்ற வெறி இளைஞனான லியர்னாடோவிற்கு இருந்து வந்தது. அந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்யக்கூடிய முதல் சம்பவம் அவரது இருபதாவது வயதில் நடந்தேறியது.




இயேசுநாதர், யோவான் ஸ்நானனிடம் ஞானஸ்னானம் பெறும் காட்சியை, வெரோக்கியோ அழகிய ஓவியமாக வரைந்து கொண்டிருந்தார். அந்த ஓவியத்தின் இடது பக்கத்தில் இரண்டு தேவதைகள் அந்த ஞானஸ்னானக் காட்சியைப் பார்ப்பதுபோல, அந்த ஓவியம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த ஓவியத்தின் முக்கிய உருவங்களை வரைந்தது என்னவோ வெரோக்கியோதான். ஆனாலும், அவர் அந்த ஓவியத்தை முழுமையாக வரைந்து முடிக்கவில்லை. இருபது வயது இளைஞனான லியர்னாடோவை அழைத்து, அந்தத் தேவதைகளில் ஒன்றை வரையும்படி பணித்தார். இது லியர்னாடோவிற்குக் கிடைத்த மாபெரும் அதிர்ஷ்டமென்றே சொல்லலாம். யாருக்கும் வாய்க்க முடியாத ஒரு சந்தர்ப்பம். லியர்னாடோ அந்தத் தேவதையை வரைய ஆரம்பித்தார். ஆனால் வெரோக்கியோ வரைந்ததுபோல அவர் வரையவில்லை. அவர் பாவனை செய்த வர்ணக் கலவைகளையும்கூட அவர் பயன்படுத்தவில்லை. முட்டையின் மஞ்சள் கருவுடன், நிறங்களைக் கலந்து வரைவதையே வெரோக்கியோ வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் அதைத் தவிர்த்துவிட்டு, முதன்முதலாக எண்ணெய் வர்ணத்தைப் (Oil Painting) பயன்படுத்தி அந்தத் தேவதையை வரைந்து முடித்தார் லியர்னாடோ டா வின்சி. இந்த முயற்சி தோற்கும் பட்சத்தில் லியர்னாடோவின் மிகப்பெரிய முட்டாள்தனமாக அது இருந்திருக்கும். ஆனாலும், எந்தக் கவலையும் இல்லாமல், எந்தச் சிந்தனையுமில்லாமல் இளம் லியர்னாடோ, அதை ஆயில் வர்ணங்களினாலேயே வரைவதென்ற முடிவையெடுத்து வரைந்தான். ஓவியத்தைப் பார்த்த வெரோக்கியோ பிரமித்துப் போய்விட்டார். அப்படியொரு அழகான உயிரோடமுள்ள தேவதையை அவர் அந்த ஓவியத்தில் கண்டார். தேவதையின் கூந்தல் அலையலையாக நிற வித்தியாசங்களுடன் இறங்கிவருவது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அனைத்துச் சீடர்களையும் அழைத்துக் காட்டினார். அவரின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லாமல் இருந்தது. அந்த ஓவியம் 'The Baptism of Christ' என்னும் பெயரில் ஃபுளோரன்ஸில் இருக்கும் 'உஃபிட்சி' (Uffizi) கண்காட்சிச்சாலையில் இன்றும் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.



எப்போது அந்தத் தேவதையின் முகத்தை லியர்னாடோ டா வின்சி அவ்வளவு அழகாக வரைந்தாரோ, அப்போதிருந்தே அங்கிருக்கும் அனைத்து ஒவியங்களிலுள்ள முகங்களையும் அவரே வரைய வேண்டுமென வெரோக்கியோ கேட்டுக் கொண்டார். அதுமட்டுமில்லாமல், அதன்பின்னர் எந்தவொரு ஓவியத்தையும் வெரோக்கியோ வரையவில்லை. அனைத்தையும் லியர்னாடோவே வரையவேண்டுமென்று முடிவெடுத்தார். லியார்னாடோவின் புகழ்பெற்ற ஓவியங்கள் பிறப்பதற்கான அடிக்கல் அங்கு நாட்டப்பட்டது. தனது முப்பது வயது வரை ஃபுளோரன்ஸிலேயே வாழ்ந்தவர், அதன்பின்னர் 'மிலான்' (Milan) நகருக்குக் குடிபெயர்ந்தார். மிலான் அந்தக் காலங்களில் போருக்கான அறிகுறிகளைக் கொண்டவொரு இடமாக இருந்தது. மிலானின் தலைவனிடம் லியர்னாடோ பணிக்கமர்ந்து கொண்டார். படிப்படியாக, மிலானிலுள்ள பல கட்டடங்களை வடிவமைப்பதற்கும், போர்ச் சாதனங்களை வடிவமைப்பதற்கும் உதவினார். இந்தக் காலங்களில்தான் பல எந்திரங்களை வடிவமைக்கும் தன்மைகளுடன் வரைந்து முடித்தார். கண்ணுக்கும், சூரியவொளிக்குமிடையில் நடைபெறும் நிகழ்வுகளையும் சரியாகக் கணித்துக் கொண்டார். ஒளியானது கண்களுக்குள்ளாக ஊடுருவிப் பின், அது மூளைக்கு அனுப்பப்படுகின்றது என்பதைப் படங்கள் மூலமாகக் குறித்து விளக்கியிருந்தார். அத்துடன் சூரியவொளி கண்ணாடியில் பட்டு நிறங்களாகப் பிரிகிறது என்பதையும் அவதானித்தார். அறிவியலில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்து விசயங்களையும் லியர்னாடோ முயன்று பார்த்திருக்கின்றார். அதில் குறிப்பாக மிலானில் நடைபெற்ற போரின்போது பயன்படுத்துவதற்காக 'யுத்தத் தாங்கி' (War Tank) ஒன்றையும் வடிவமைத்திருந்தார் என்றால் அவரின் கண்டுபிடிக்கும் திறமையைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். மிலானில் லியர்னாடோ டா வின்சி வசித்த காலங்களில், பலவித கண்டுபிடிப்புகளைப் பற்றிய குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறார். 




மிலானுக்குத் தலைவனாக இருந்தவன், மிகப்பெரிய வேலையைச் செய்யும்படி லியர்னாடோவிற்குக் கட்டளையிட்டான். அதுவே இன்று மிகவும் பிரபலமாகவும், மர்மங்கள் நிறைந்ததாகவும் சொல்லப்படும் படைப்பாக இருக்கிறது. 1494ம் ஆண்டளவுகளில், இயேசுநாதரின் 'கடைசி இராப் போசனம்' (The Last Supper) என்னும் ஓவியத்தை அங்குள்ள மண்டபத்தின் சுவரில் வரையும்படி லியர்னாடோவுக்குச் சொல்லப்பட்டது. கிட்டத்தட்ட 9 மீட்டர்கள் நீளமும் நான்கரை மீட்டர்கள் உயரமும் கொண்ட மிகப்பெரிய ஓவியமாக அந்த இராப் போசன ஓவியத்தை வரைவதற்கு முடிவெடுத்தார் லியர்னாடோ. மிகத்திறமையாகவும், அழகாகவும், தத்ரூபமாகவும் அந்த ஓவியத்தை வரைந்து முடித்தார். ஆனால், எத்தனையோ திறமைகள் வாய்ந்த செயல்களை முன்கூட்டியே கணித்துச் செய்திருந்த லியர்னாடோ, சறுக்கிவிட்ட இடமாக அந்த ஓவியத்தைச் சொல்வார்கள். மிலானிலுள்ள 'சாந்தா மரியா' தேவாலயத்தின் சுவரில் வரையப்பட்ட அந்த ஓவியத்தின் ஸ்திரத்தன்மையைப் பற்றித் தவறான கணிப்பை, லியர்னாடோ போட்டுவிட்டாரென இப்போது விமர்சிக்கிறார்கள். வழமையாக ஓவியங்கள் துணிகளிலேயே வரையப்படுகின்றன. ஆனால், இந்த ஓவியமோ சுவரில் வரையப்பட்டது. இத்தாலியின் காலநிலை மாற்றங்களினால் சுவர்களில் ஏற்படும் மாற்றங்கள் ஓவியத்தையும் பாழடித்துவிடும் என்பதைக் கணிக்கத் தவறிவிட்டார் லியர்னாடோ. இதுபோன்ற பல சுவரோவியங்களை அவர் வரைந்திருந்தாலும், குறிப்பிட்ட இந்தச் சுவரில் வரைந்த ஓவியம் அதிகக் காலம் தெளிவாக இருக்கவில்லை. ஓவியம் வரைந்த நான்கைந்து ஆண்டுகளிலேயே அது பழுதடையத் தொடங்கிவிட்டது. இப்போது மிகவும் மோசமான நிலையில் அந்த ஓவியம் இருந்தாலும், கூடியவரை அதற்கான பாதுகாப்புக் கொடுத்துப் பார்த்துக் கொள்கிறார்கள். கடைசி இராப் போசன ஒவியம் பழுதடைந்தாலும், அது ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. இந்த ஓவியத்தின் அடிப்படையிலேதான், டான் பிரவுன், 'டா வின்சி கோட்' என்னும் நூலை எழுதிக் கத்தோலிக்க மதத்தினரின் நம்பிக்கையில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினார். லியர்னாடோ அந்த ஓவியத்தில் பல மர்மங்களைக் குறியீடுகளாகத் தெரிவித்திருக்கிறார் என்று தன் புத்தகத்தின் மூலம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.. பன்னிரண்டு சீடர்களும் மூவர் மூவராகப் பிரிக்கப்பட்டு அந்த ஓவியத்தில் காணப்படுகிறார்கள். அங்கு காணப்படுவது பன்னிரண்டு சீடர்களல்ல, பதினொரு சீடர்கள் மட்டுமேயென்றும், பனிரெண்டாவதாக இருப்பது ஒரு பெண்ணென்றும். அவர்தான் மரிய மக்டலேனா என்றும் சந்தேகங்களை இந்த ஓவியத்தின்மூலம் எழுப்பியிருக்கிறார். இந்த மர்மங்கள் லியர்னாடோவின் மேலும் பல ஓவியங்களிலும் இருப்பதாகவே சொல்லப்படுகின்றது. அத்துடன், ஏன் மூவர் மூவராக சீடர்களைப் பிரித்து வரைந்தார்? என்ற கேள்வியும் கேட்கப்படுகிறது.


கேட்கப்படும் கேள்விகளுக்கும், சொல்லப்படும் மர்மங்களுக்கும் இயன்றவரை விரிவான விளக்கத்தை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.


- தொடரும்


No comments:

Post a Comment