‘ஆலிஸ் இன் வெண்டர்லாண்ட்’ (Alice in Wonderland) என்னும் கதையை உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். திரைப்படமாகவும், கார்ட்டூன் படமாகவும் அதைப் பார்க்காதவர்களே இல்லையென்று சொல்லலாம். சிறுவர் முதல் பெரியோர் வரை ஆலிஸையும், அவளது அதிசய உலகத்தையும் மறந்திருக்கவே முடியாது. 1865ம் ஆண்டில் லூயிஸ் கரோல் (Lewis Carroll) என்பவரால் எழுதப்பட்ட Alice's Adventures in Wonderland என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சிறுவர் காவியம் இது. பல தடவைகள் திரைபடங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும், கார்ட்டூன் திரைப்படங்களாகவும் இந்தக் கதை வெளிவந்திருக்கிறது.
இந்த ‘ஆலிஸ் இன் வொண்டர்லாண்ட்' கதையின் நாயகியான ஆலிஸ், அதிசய உலகத்திற்குள் நுழையும் போது, ஒரு அதிசயப் பூனையைக் காண்கிறாள். கதையில் 'Cheshire Cat’ என்று அழைக்கபட்ட அந்தப் பூனை, சிரித்துக் கொண்டே ஆலிஸுடன் உரையாடியபடி மறைய ஆரம்பிக்கும். முதலில் வால், அப்புறம் உடல் பின்னர் தலையென, ஒவ்வொரு பாகமாக மறையும். கடைசியில் பூனையின் சிரிப்பு மட்டும் எஞ்சியிருக்கும். பூனையில்லாமல் வெறும் சிரிப்பு மட்டும்.
அப்போதுதான் ஆலிஸ் சொல்வதாக ஒரு வசனம் வரும். "சிரிப்பில்லாத பூனையைப் பார்த்திருக்கிறேன். பூனையில்லாத சிரிப்பைக் கண்டதில்லை”. இது ஒரு மிகப்பிரபலமான வசனமாக, நூற்றாண்டுகளாகச் சிலாகிக்கப்பட்டு வருகிறது. சொல்லப் போனால், ஒரு வித தத்துவமாகவும் பார்க்கப்படுகிறது. நீங்கள் எப்போதாவது இதைச் சிந்தித்திருக்கின்றீர்களா? சிரிப்பில்லாமல் ஒரு பூனையை நீங்களும் கண்டிருக்கலாம். ஆனால் பூனையில்லாமல் சிரிப்பை உங்களால் காண முடியுமா? ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், முடியும் என்று சொல்கிறது நவீன அறிவியல். சொல்வது மட்டுமில்லாமல், அதை நிரூபித்துமிருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ஆம்! இந்தப் 'பூனையில்லாத சிரிப்பு', இன்று அறிவியலின் முக்கிய கண்டுபிடிப்பொன்றுக்கு எடுகோளாக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் 'வியன்னா பல்கலைக் கழகத்தில்' (Vienna University of Technology) கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஆச்சரியமான கண்டுபிடிப்புக்கு ‘Quantum Cheshire Cat’ என்ற பெயரையே இட்டிருக்கிறார்கள். அதாவது, ஒரு சாதாரண நிலையில், ஒரு செயலையும், செயலைச் செய்பவரையும் பிரித்து எடுக்கவே முடியாது. உதாரணமாக, நீங்கள் சிரிக்கும் போது, உங்களை ஓரிடத்திலும், உங்கள் சிரிப்பை இன்னுமொரு இடத்திலுமாகப் பிரித்தெடுக்கவே முடியாது. சிரிப்பு மட்டும் இல்லை. அழுகை, ஆச்சரியம், கோபம், துக்கம் என எந்தச் செயலையுமே!
"செய்பவன் இல்லாமல், செயல் என்பதே கிடையாது". ஆனால் குவாண்டம் நிலையில், இதைச் சாத்தியம் என்று நிரூபித்திருக்கிறார்கள் வியன்னா விஞ்ஞானிகள். கொஞ்சம் சிக்கலானதும், பெரியதொரு விசயமாகவும் இது இருந்தாலும், முடிந்தவரை சுருக்கி விளக்குகிறேன்.
அணுத்துகள்களான, ஒரு ஃபோட்டானை (Photon), அல்லது நியூட்ரானை (Neutron) எடுத்துக் கொண்டு, அந்த நுண்ணிய துகளைக் காந்தப் புலத்தில் ஈடுபட வைக்கும் போது, அதற்கு ஒரு சுழற்சி (polarization) கிடைக்கும். அந்தச் சுழற்சி நிலையால், காந்தப் புலனில் மாற்றங்கள் ஏற்படும். வியன்னா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியின்படி, சுழற்சியில் இருக்கும் நியூட்ரானையோ, போட்டானையோ அந்த இடத்திலிருந்து அகற்றி வேறு இடத்துக்கு மாற்றினாலும், அந்தச் சுழற்சி அதே இடத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. அதாவது செயலைச் செய்பவர் வேறு இடத்திலும், செயல் வேறு இடத்திலுமாகக் காட்சியளிக்கிறது.
சரி, இதை இப்படிப் பாருங்கள். நீங்கள் சென்னையில் உள்ள உங்கள் வீட்டில், ஒரு பாடலைக் கேட்டுக் கொண்டு நடனமாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் உங்களைத் தூக்கிக் கொண்டு ஜேர்மனிக்கு வந்துவிடுகிறோம். ஆனால், உங்கள் நடனம் மட்டும் சென்னையில் உள்ள உங்கள் வீட்டில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. "என்ன பைத்தியமே பிடிக்கும் போல உள்ளதா?" இதைத்தான் ஆலிஸுடன் பேசும், 'Cheshire Cat’ இனது சிரிப்புப் போன்றது என்கிறார்கள். பூனை அந்த இடத்தை விட்டு மறைந்த பின்னரும் சிரிப்பு அங்கே இருந்து கொண்டே இருகிறது.
நவீன இயற்பியலின் கண்டுபிடிப்புகளில் இன்னும் என்ன என்ன அதிசயங்கள் வெளிப்பட இருக்கின்றனவோ தெரியவில்லை.