வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

August 7, 2014

இயேசு கிரிஸ்து பல்லி



கிருஸ்தவர்களுக்கு இயேசு கிருஸ்துநாதரின் சரித்திரம் நன்றாகத் தெரிந்திருக்கும். கிருஸ்தவர் அல்லாவதவர்களுக்கும் கூட அவரைப் பற்றித் தெரிந்திருக்கும். ‘ஈஸா நபி’ என்னும் பெயரில், அவரை ஒரு தீர்க்கதரிசியாக, முஸ்லிம்களும் கொண்டாடுகின்றனர். பைபிளில் இயேசுநாதர் செய்த பல அற்புதங்கள் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் நீங்கள் அறிந்த விசயங்கள்தான்.


ஆனால்……..!


ஒரு பல்லிக்கு, 'இயேசு கிருஸ்து’ என்று பெயர் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?


‘ஸ்டாப்...! ஸ்டாப்…! ஸ்டாப்…! இயேசுநாதரில் பக்தியுள்ளவர்கள் யாரும், 'நான் இயேசுநாதரைப் பல்லியுடன் ஒப்பிட்டுச் சொல்வதாக' என்னைத் தப்பாக நினைத்துவிடாதீர்கள். இது உண்மையான தகவல். அதனல் இதை முழுவதுமாகப் படியுங்கள். இயேசுநாதரை யாரும் தவறாகச் சொல்லிவிடவில்லை.


இயேசுநாதரின் சீடர்கள் படகுகளில் சென்று கொண்டிருந்த போது, தூரத்தில், நீரின் ஆழமான பகுதியினூடாக, ஒரு ஒளி வருவது போலக் கண்டார்கள். அந்த ஒளியைச் சரியாகக் கவனித்துப் பார்த்த போது, அது ஒரு மனித வடிவாகத் தெரிந்தது. அந்த மனித வடிவானவர் கிட்டே நெருங்கிய போது, அது இயேசுநாதர் என்பது தெரிந்தது. இயேசுநாதர் தண்ணீரில் நடந்தபடி (அதாவது நிலத்தில் நடப்பது போல, ஆழமான தண்ணீரின் மேற்பரப்பில் நடந்தபடி) படகை நோக்கி வந்து கொண்டிருந்தார். அந்த அதிசயத்தைக் கண்ட சீடர்கள் வியந்து போனார்கள். இது பைபிளில் இயெசுநாதரின் அற்புதங்களைப் பற்றிச் சொல்லும் ஒரு கதை.


மத்திய அமெரிக்காக் காடுகளிலும், ஆற்றங்கரையோரங்களிலும் வாழும் ஒரு பல்லியினம் உண்டு. நம் வீடுகளில் வாழும் பெரிய பல்லிகளைப் போல அவை இருக்கும். கொஞ்சம் பெரியதாகவும் இருக்கலாம். இந்தப் பல்லிகள் ஆற்றங்கரையில் உள்ள பூச்சிகளைப் பிடித்து உண்டு வாழ்பவை. ஆனால் அதேயிடம்தான் அந்தப் பல்லிகளின் எதிரிகள் வாழும் இடமாகவும் இருக்கும். பல்லிகளைப் பிடிப்பதற்கெனப் சிறியவகைப் பாம்புகளும் அங்கே சுற்றித் திரியும். ஆற்றின் கரையில் இருந்தபடி பூச்சிகளை வேட்டையாடும் போது, பாம்புகள் வந்துவிட்டால், அவற்றின் பிடியிலிருந்து தப்புவதற்கு, இந்தப் பல்லிகள் ஆற்றின் மற்றப் பகுதிக்கு ஓடும். ஓடும் என்றால், எப்படி ஓடும் என்று நினைக்கிறீர்கள்?


ஒரு மனிதன் ஓடுவதைப் போல ந்மிர்ந்த நிலையில், முன்னிரண்டு கால்களையும் உயரத் தூக்கியபடி, பின் கால்கள் தண்ணீரின் மேற்பரப்பில் மிதந்தது போலப் படும்படியாக ஆற்றின் அடுத்த கரைக்கு விரைந்து ஓடிச்செல்லும். சாதாரண பல்லிகளைப் போல, தண்ணீரில் நீந்திக் கொண்டு சென்றால், பாம்புகள் அதை விட வேகமாக நீந்தி, இந்தப் பல்லிகளைப் பிடித்துவிடும். அதனால்தான் இந்த ஓட்டம். ஒரு வினாடிக்கு ஒன்றரை மீட்டர்கள் வேகமாக அதன் வேகம் இருக்கும். இப்படி அந்தப் பல்லி தண்ணீரின் மேல் செல்வது, இயேசுநாதர் தண்ணீரில் நடந்ததைப் போல இருப்பதால், அந்தப் பல்லிக்கு, ‘இயேசு கிரிஸ்து பல்லி’ (Jesus Christ Lizard) என்று பெயர் வந்தது.


யூட்யூப்பில் (Youtube) இந்தப் பல்லி தண்ணீரில் ஓடும் காணொளிகள் உண்டு. பாருங்கள், வியந்து போவீர்கள். அறிவியலின் அதிசயங்களை விட, இயற்கையின் அதிசயங்கள் அநேகம்.




No comments:

Post a Comment