அறிவியலை, ஆன்மீகம் இடறிவிட நினைக்கும் ஒரு இடமுண்டு. “எதையும் அறிவியலால் உருவாக்க முடியும், ஆனால் ஒரு உயிரை அறிவியலால் உருவாக்க முடியாது” என்பதுதான் அது. அறிவியலும், ஆன்மீகமும் மோதும் போது, இறுதி வாதமாக, இது முன் வைக்கப்பட்டு, விவாதம் அந்த நிலையிலேயே முடிவுக்குக் கொண்டு வரப்படும்.
"உயிரை உருவாக்கக் கடவுளால் மட்டுமே முடியும்” என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே, இன்றுவரை உலகமும் இயங்கி வந்து கொண்டிருக்கிறது. அறிவியல் என்றாவது ஒருஉயிரை உருவாக்கிவிட்டால், அனைத்து நம்பிக்கைகளுமே தடுமாறிவிடும். ஆனால், அப்படியொரு நிகழ்வு மனிதனால் நிகழ்த்தப்படக் கூடாது என்பதுதான் என் விருப்பமும் கூட.
க்ளோனிங் முறையில் உயிரினங்கள் உருவாக்கப்பட்டது போல. மனிதனையும் எங்கோ ஒரு இடத்தில் க்ளோளிங் முறையில் இரகசியமாக உருவாக்கியிருப்பார்கள் என்று பலர் நம்புகிறார்கள். அந்தச் செய்தி வெளியில் கசிந்தால், பல சிக்கல்கள் உருவாகலாம் என்பதால் அதை வெளிவிடாமல் வைத்திருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். அதுபோல, ஒரு கலமுள்ள உயிரினத்தையும் மனிதன் உருவாக்கி விட்டான் என்ற வதந்தியும் உண்டு. அறிவியலின் பல கண்டுபிடிப்புகள் சாதாரண மனிதன் முன்னால் சமர்ப்பிக்கப்படாமல், இரகசியமாகவே வைக்கப்பட்டிருப்பது என்னவோ உண்மைதான். அதில் இவையும் ஒன்றாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.
சரி நான் இதை ஏன் இங்கு சொல்கிறேன் தெரியுமா?
சமீபத்தில் விஞ்ஞானிகள் ஒரு புரட்சியைச் செய்திருக்கிறார்கள். அது புரட்சியா? இல்லையா? என்று இதைப் படித்தபின்னர் நீங்கள்தான் சொல்ல வேண்டும். அது வேறு ஒன்றுமில்லை, விஞ்ஞானிகள் ஒரு எலியை 'See-Through' வாக உருவாக்கியிருக்கிறார்கள். அதாவது, எலியைப் பார்க்கும் போது, அதன் உள்ளே உள்ள உறுப்புகள் அனைத்தும் வெளியே தெரிவது போல (கண்ணாடி போல) மாற்றியிருக்கிறார்கள். ‘Tranparent' என்று சொல்வார்களே! அப்படி 'ஒளி ஊடுருவும்' தண்மையுடன் அந்த எலி காணப்படும். அதன் எலும்புகள் தவிர்ந்து, வெளித் தோல், உள்ளே இருக்கும் உறுப்புகள் அனைத்தும், கண்ணாடி போன்றே காணப்படும். நோய்களையும், அதன் காரணிகளையும் இலகுவாக இதனால் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
உங்கள் மனதில் தோன்றும் கேள்வி புரிகிறது. அந்த எலி உயிருடன் இல்லை. "இவை ஆராய்ச்சிக்கானது மட்டுமேயன்றி உயிர் வாழ்வதற்கானதல்ல" என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.
நான் கண்ணாடி முன்னால் நின்று கொண்டு, என்னை ட்ரான்ஸ்பரண்டான உடலுறுப்புகளுடன் ஒரு நிமிடம் கற்பனை செய்து பார்த்தேன். அப்போது மனதில் தோன்றிய உருவம் கொடுத்த அதிர்ச்சி, என் எதிரிக்கும் வரக்கூடாத ஒன்று. நீங்களும் கண்ணாடி முன் நின்று ஒருதரம் கற்பனை செய்து பாருங்கள். இப்போது அந்த எலியின் படங்களைப் பாருங்கள்.
No comments:
Post a Comment