வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

November 13, 2014

‘எண்டாங்கிள்மெண்ட்' (Entanglement)



ஒரு சின்னச் சிக்கலான அறிவியல் விசயம் ஒன்றைச் சொல்கிறேன். ஆனால் அதற்கு முன்னர் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். இதைப் படித்துவிட்டு நீங்கள் குழம்பி விட வேண்டாம். வேறு குழப்பத்திலிருந்தாலும் இதைப் படிக்க வேண்டாம்.


இரவு வானத்தை ஒருதரம் தலை நிமிர்த்திப் பாருங்கள். அங்கே சந்திரன் இருப்பது தெரிகிறதல்லவா? சரி, இப்போது நான் கேட்கும் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்.


"நீங்கள் பார்த்ததால் அங்குச் சந்திரன் இருந்ததா? இல்லை, சந்திரன் இருந்ததால் அதை நீங்கள் பார்த்தீர்களா?"


என்ன…? சுத்தமாகக் குழம்பிப் போய்விட்டீர்களா? இல்லை நான் ஏதும் குடித்துவிட்டு உளறுகிறேன் என்று நினைக்கிறீர்களா?


சந்திரனை விட்டுவிடுவோம். நான் சொல்வதை இப்படி யோசித்துப் பாருங்கள். நீங்கள் வீட்டிலிருக்கும் ஷோபாவில் அமர்ந்திருக்கிறீர்கள். உங்கள் மனைவி உங்கள் முதுகுப் புறமாகப் பின்னால் வந்து நிற்கிறார். இப்போது நீங்கள் தலையைத் திருப்பி உங்கள் மனைவியைப் பார்க்கிறீர்கள். அங்கு உங்கள் மனைவி சிரித்துக் கொண்டிருக்கிறார்.


சரி, இப்போது சொல்லுங்கள், "நீங்கள் பார்த்ததால் அங்கு உங்கள் மனைவி நின்று கொண்டிருந்தாரா? அல்லது மனைவி அங்கு நின்று கொண்டிருந்ததால், அவரை நீங்கள் பார்த்தீர்களா?"


மீண்டும் உளருகிறேனா? இல்லை, இந்தக் கேள்வி ஒன்றும் உளரல் கிடையாது. அறிவியலின் மாமேதையான ஐன்ஸ்டைன் சொன்ன கூற்றுத்தான் நான் மேலே குறிப்பிட்ட சந்திரன் பற்றிய குறிப்பு. ஐன்ஸ்டைனுக்கும், நீல்ஸ் போருக்கும் இடையே நடந்து அறிவியல் போரின்போது, ஐன்ஸ்டைனால் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகள்தான் அவை.


குவாண்டம் இயற்பியலுடன் இணைந்து வந்துகொண்டிருந்த ஐன்ஸ்டைன் என்னும் மாமேதையால், துகள்களின் ‘எண்டாங்கிள்மெண்ட்' (Entanglement) பற்றிய கருத்தை ஒத்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது. ஐன்ஸ்டைன் சறுக்கிய இடமாக இப்போது அறிவியலில் அது கருதப்படுகிறது.


இப்போ மீண்டும் மேலே சொல்லப்பட்ட கூற்றுக்கு வரலாம்.


குவாண்டம் இயற்பியலின்படி, ஒரு துகள் இரண்டு நிலைகளில் இயங்குகின்றன. உதாரணமாக ஒரு எலெக்ட்ரானோ, போட்டோனோ சாதாரணமான நிலையில் அலையாகவே இயங்குகின்றன. ஆனால், அவற்றை நாம் கண்களால் பார்க்கும் அந்தக் கணத்தின்போது, அவை ஒரு திடப்பொருளாக (Particle) மாறிவிடுகின்றன. இது அறிவியலில் இப்போதும் மர்மமாகவே கருதப்படுகின்றது. அதாவது ஒன்றை நாம் பார்க்கும்போது, ‘அது’ கண்ணுக்குத் தெரியக்கூடிய அதுவாகவும், அதைப் பார்க்காதபோது, ‘அது' கண்ணுக்குத் தெரியாத அலையாகவும் மாறிவிடுகிறது. இது சும்மா பேச்சுக்கு எழுந்தமானத்தில் சொல்லப்பட்ட கருத்தல்ல. ஆராய்ச்சிக் கூடங்களில் தெளிவாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதாவது நாம் பார்க்கும் போதுதான் அலையாக இருப்பவை, பொருளாக மாறுகின்றன என்கிறது குவாண்டம் இயற்பியல்.


நான் சொன்னதையெல்லாம் மீண்டும் யோசித்துப் பாருங்கள். அத்தோடு உங்கள் கண்கள் இரண்டையும் நன்றாக மூடிக் கொள்ளுங்கள். இப்போது சொல்லுங்கள், உங்களைச் சுற்றி இதுவரை இருந்த உலகம் உண்மையில் இருந்ததா? இல்லை அவை எல்லாம் நீங்கள் கண்களைத் திறந்ததும் தோன்றிவிடும் மாயையா?





No comments:

Post a Comment