வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

July 17, 2014

பூமியினூடாக ஒரு பயணம்



புவியின் ஈர்ப்பிவிசை பற்றிய விளக்கம் உங்களுக்கு உள்ளதல்லவா? பூமி தன் மையத்தை நோக்கி, தன் மேற்பரப்பின் மேலிருக்கும் அனைத்துப் பொருட்களையும் ஈர்ப்புவிசையால் இழுத்துக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். இப்போது இதைப் பாருங்கள்.


பூமியின் வட துருவ மேற்பரப்பிலிருந்து குழாய் போன்ற அமைப்பிலான மிக நீண்டதொரு குழியை, பூமியின் தென் துருவ மேற்பரப்பு வரை தோண்டுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். வைத்துக் கொள்ளத்தான் முடியும். காரணம் பூமியின் மையப்பகுதி மிகவும் கடுமையான இரும்பால் உருவான கோளமாகும். அதனால் உண்மையாகக் குழி தோண்ட முடியாது.


சரி, ஒரு பேச்சுக்கு ஒரு குழாய் போல குழியைத் தோண்டிவிட்டோம். இப்போது. வட துருவத்திலிருந்து ஒருவர் குழிக்குள் விழுந்தால், அவருக்கு என்ன நடக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்? அவர் குழியில் நேராக விழுந்து, தென் துருவத்தினூடாக வெளியே வருவாரா? அல்லது பூமியின் மையத்தில் நின்று விடுவாரா?


நீங்கள் இதுபோல, எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா? சரி, குழிக்குள் விழுந்தவருக்கு என்ன நடந்தது என்று பார்க்கலாம் வாருங்கள்.


குழிக்குள் விழுந்தவர், பூமியின் மையம் நோக்கி ஈர்ப்புவிசையால் மிகை வேகத்தில் இழுக்கப்படுவார். மையம் வரை ஈர்ப்பு விசை இருப்பதால் அதிக வேகத்துடன் வந்து, அந்த வேகத்தின் தாக்கத்தால் வேகம் பூச்சியமாகும் வரை தொடர்ந்து குழிக்குள் விழுந்து கொண்டேயிருப்பார். சரியாகத் தென் துருவ மேற்பரப்பை அடையும் வரை அவர் விழுந்து கொண்டிருப்பார். தென் துருவ மேற்பரப்பு விளிம்பை அவர் அடைந்ததும், மீண்டும் புவியின் மையம் நோக்கிய எதிர்த் திசையில், வட துருவம் நோக்கி விழ ஆரம்பிப்பார். இப்படி மாறிமாறி வட தென் துருவங்களுக்கிடையில் கடிகாரத்தின் பெண்டுலம் போல ஆடிக்கொண்டிருப்பார். பூமிக்கு வெளியே அவர் வரவே மாட்டார். எனவே யார் குழி கிண்டிவிட்டுக் குதிக்கச் சொன்னாலும் குதித்து விடாதீர்கள்.


நீங்கள் முன்னரே இதை நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதற்கான விளக்கமும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். எழுத்தாளர் சுஜாதா கூட, இதை ஒரு கேள்வி பதிலில் விளக்கியிருப்பார். அதை நீங்கள் படித்துமிருக்கலாம். ஆனாலும் இந்தத் தகவலிலும் நீங்கள் தவறவிட்ட செய்தியொன்றும் கூடவே இருக்கிறது. அதைச் சொல்லவே இந்தப் பதிவு.


அது என்ன தெரியுமா……?


“எரிசக்திக்குப் பதிலாக, பூமியின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி, ஏன் சுலபமாகப் பிரயாணங்களை மேற்கொள்ளக் கூடாது?” என்று விஞ்ஞானிகள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர். நான் மேலே சொன்னது போல, பூமியின் மையத்தினூடாக சுரங்கம் அமைக்க முடியாவிட்டாலும், ஓரளவு சரிந்த நிலையில் சுரங்கங்களைக் கிண்டி, ஈர்ப்பு விசையின் உதவியால், ஓரு இடத்திலிருந்து இன்னுமொரு இடத்துக்குச் செல்லலாம் என்னும் முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் இப்போது வந்திருக்கின்றனர். இப்படிப் பயணம் செய்வதை கிராவிட்டி ட்ரெய்ன் (Gravity Train) என்கிறார்கள்.


நியூயார்க்கிலிருந்து பாரீஸுக்கோ, பாரிஸிலிருந்து ஜப்பானுக்கோ, ஜேர்மனியிலிருந்து சென்னைக்கோ இதன் மூலம் நாம் பயணங்களை மேற்கொள்ளலாம். அதற்கேற்ற வகையில் சாய்வான சுரங்கப் பாதைகளை மட்டுமே அமைக்க வேண்டும். ஜேர்மனியில் ஒரு மூடிய பெட்டி போன்ற அமைப்பினுள் நான் உட்கார்ந்தால், அது புவியீர்ப்பு விசைகளால் செலுத்தப்பட்டு, சென்னையை வந்து சேரும். அங்கு அந்தப் பெட்டியைத் திறந்து நான் வெளியே வந்தால், சென்னை. எல்லாமே புவி ஈர்ப்பு விசையினால்தான் நடைபெறும். இப்படி ஒரு பிரயாணம் சாத்தியமானால், அதில் ஒரு ஆச்சரியமும் காத்திருக்கும்.


நீங்கள் பூமியின் எந்த இடத்திலிருந்தும், வேறு எந்த இடத்துக்கும், ஈர்ப்பு விசையைப் பயன்படுத்திப் பயணம் செய்யும் போது, அந்தப் பயணத்துக்கு 42.2 நிமிடங்கள் மட்டுமே பிரயாண நேரமாக அமையும். அதாவது நியூயார்க்கிலிருந்து பாரிஸுக்கும் 42.2 நிமிடங்கள்தான். ஜேர்மனியிலிருந்து சென்னைக்கும் 42.2 நிமிடங்கள்தான். சென்னையிலிருந்து மலேசியாவுக்கும் 42.2 நிமிடங்கள்தான். நான் மேலே சொன்ன வட துருவத்திலிருந்து தென் துருவத்துக்கு குழியின் மூலமாக விழுவதற்குக் கூட அதே 42.2 நிமிடங்கள்தான் எடுக்கும். எவ்வளவு தொலைவு அல்லது அண்மை என்றாலும், அனைத்துப் பயணங்களுக்கும் எடுக்கும் நேரம் அதே 42.2 நிமிடங்கள் மட்ட்டும்தான்.


என்ன ஆச்சரியமாக இல்லையா?


பிற்குறிப்பு: இந்தப் பதிவை பகிர்ந்து கொள்ள விரும்புபவர்கள் தாராளமாகப் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், இதைப் பகிரும் போது, இந்தப் பதிவு பற்றிய உங்களின் சிறு விளக்கத்தையும் கொடுத்து இந்தப் பதிவைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.







No comments:

Post a Comment